Blog Archive

Tuesday, November 07, 2017

அம்மா அப்பா கதை இரண்டாம் பாகம் 1946////48


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
கயத்தாறு கிராமமாக இருந்த காலம். கட்டபொம்மன்
கதை கூடப் பிறகுதான் அம்மாவுக்குத் தெரியுமாம்.
கூடவே கொண்டு வந்திருந்த பாட்டுப் புத்தகத்திலிருந்து
தான் கற்ற கீர்த்தனைகளைப் பாடிப் பழகுவாராம்.
அப்பா படிக்கக் கொண்டு வரும் புத்தகங்களைத் தவிர
அப்போது கல்கியில் வந்து கொண்டிருந்த கதைகளை அம்மாவின் அம்மா
சீனிம்மாப் பாட்டி இன்லண்ட் லெட்டரில்
எழுதி அனுப்புவாராம். கல்கியின்
அலை ஓசையும், அமரதாராவும் அம்மாவுக்கு மிகப் பிடித்த
தொடர் கதைகள்.
அம்மா முதலில் கருவுற்றது இங்கே தான்.
ஐந்தாம் மாதம் அம்பி மாமா வந்து அழைத்துப் போனாராம்.
தாத்தா அப்போது நலமாக இருந்தார். புரசவாக்கம் எம் சி.டி எம்
பள்ளியில் சயின்ஸ் மாஸ்டர்.
எட்டாம் மாதம் சீமந்தம் திரு நெல்வேலி வண்ணாரப் பேட்டை வீட்டில் நடை பெற்றதும்
மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்..
அதற்குள் அப்பாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றல் ஆகி இருந்தது.
அப்போதெல்லாம் வீட்டில் தான் பிரசவம் நடக்கும்.
ஆங்கில இந்தியப் பெண்மணி மருத்துவம் பார்க்க வருவார். அப்படி
அழகாக முதலில் பிறந்த பிள்ளை ரங்கராஜன். சுருட்டை,முடியும்
வெள்ளை வெளேர் என்ற நிறமும் கருவண்டு விழிகளுமாய்
வந்த குழந்தைக்கு ஆயுசு பகவான் எழுதவில்லை.
ஆறு மாதமே இருந்தது. .ஏதோ கரப்பு என்ற நோயாம்.
அந்தக் குழந்தையைப் பற்றி அம்மா என்னிடம் சொன்னதே இல்லை.
மாமா சொல்லிதான், எனக்கு தெரியும் .அதுவும் நான் மிக வளர்ந்த பிறகு.
//எப்படி இருப்பான் தெரியுமா.வெள்ளிக்கட்டியாட்டம்.
கொடுத்துவைக்கவில்லையே நமக்கு /////என்று சொல்வார்.
18 வயதில் இது பெரிய சோகம் தான்.

தாத்தாவுக்கு இந்த வருத்தத்தில் ரத்த அழுத்தம் வந்துவிட்டது.
அருமைப் பெண்ணின் மேல் அத்தனை பாசம்.
தானே திரு நெல்வேலிவரை கொண்டு வந்து விட்டுப் போனாராம்.

1948 இல் இரண்டாவது பிரசவம். இந்தப் பெண் குழந்தை
சுகமாக இருந்ததில் குடும்பம் ஆனந்தப் பட்டது. நிம்மதியாகக்
ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் பெயரை வைத்துக். கூடவே ரேவதி என்றும்
நாமகரணம் ஆகி   மாமா,துணைக்கு வர,குழந்தைக்கான ஸீர்களுடன்   வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் தாயும் ஆண்டாளும்.

13 comments:

ஸ்ரீராம். said...

இன்று புதிதாய்ப் பிறந்தீர்கள்! இன்லெண்ட் லெட்டரில் தொடர்கதை எழுதி அனுப்புவார்களா? என்ன பொறுமை... என்ன ஆர்வம்... என்ன அன்பு...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறான பதிவுகளைப் படிக்கும்போது அவரவர் தம் இளமைக்காலத்திற்குச் சென்றுவிடுவர்.

பூ விழி said...

பாருங்க அந்த காலத்திலேயே லெட்டரில் கதையை எழுதி அனுப்பும் திறமையோடு சூப்பர்ம்மா

நெல்லைத் தமிழன் said...

அன்றைக்கே படித்துவிட்டேன். பின்னூட்டம் போட்டேன் என்று நினைத்தேன்.

இன்லான்ட் லெட்டரும், போஸ்ட் கார்டும் எத்தனை விஷயங்களை கம்யூனிகேட் செய்யப் பயன்பட்டன. நான் துபாய் வரும்வரை (93), இன்லான்ட் லெட்டர் உபயோகப்படுத்தியிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், ஸ்ரீராம் எழுபதுக்கு இன்னும் ஆறு மாதங்கள்தான்
இருக்கு.ஹாஹா.
கடிதங்களே உயிர் மூச்சு அம்மாவுக்கு. தம்பிகள் நால்வரும் தனித்தனியே
எழுதுவார்கள். இனிய பாசம் மிகுந்த காலங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் திரு ஜம்புலிங்கம் ஐயா. எனக்கே தடுமாறிவிடுகிறது. நினைவுகள் ,கனவுகள், இன்றைய நிலை எல்லாம் கலந்து சிலசமயம் திகைத்துப் போகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூ விழி, வேறு வழி கிடையாது. தொலைபேசி இல்லை.
முக்கியமான நிகழ்வுகளை ஏந்தி வரும் கடிதங்கள் எத்தனையோ.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அதனால் என்னம்மா. நெல்லைத் தமிழன்.
எத்தனையோ நல்ல சம்பவங்களை மறந்து போயிருந்தேன். இது நல்ல பயிற்சி.
அம்மாவும் அப்பா தம்பிகள் வரும் வரைக் கடிதங்கள் இருந்தது. அவர்கள் சென்னை வந்ததும் தொலைபேசி. வாழ்க வளமுடன் மா.

கோமதி அரசு said...

என் அம்மாவிற்கும் முதலில் பையன் சுப்பையா கொடுத்து வைக்கவில்லை ஏழு மாதமே இருந்து இருக்கிறான் அண்ணன் அந்தக் காலத்தில் முதல் குழந்தை தங்குவதே பெரிய விஷயமாய் பேசபடுமாம்.

என் அம்மா நினைவு வருகிறது உங்கள் பாட்டி தன் மகளுக்கு கதை அனுப்புவைதை படிக்கும் போது. என் அம்மா சமையல் குறிப்பு, கோலங்கள் அனுப்புவார்கள்.

நினைவுகளை அழகாய் சொல்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அண்ணன் சுப்பையா வேறு குழந்தையாக
வந்திருப்பார் அம்மா கோமதி.
பாவம் அம்மா. எத்தனை வருத்தப் பட்டாரோ.
என் அம்மாவும் எனக்குக் கோலப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போனார்.
அம்மா உடல் ,மனம் எல்லாமே குழந்தைகளுக்கான அன்பு ஊறிக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன் அன்பு கோமதி.

ராமலக்ஷ்மி said...

நினைவுப் பெட்டகத்திலிருந்து நீங்கள் பிறந்த கதை அறிந்தோம்.

மருத்துவ வசதிகள் இந்த அளவு வளராததாலும் பிரசவங்களில் சிக்கல், குழந்தைகள் தவறிப் போதல் அப்போது அதிகம்.

கடிதங்களின் பொற்காலம் அது.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: இனிய நினைவுகள்! வாசிக்கவே இனிமையாகவும் இருக்கிறது. அப்பொதெல்லாம் ஏன் என் இளம் காலம் வரை கூட இன்லென்ட்டும் கார்டும் எனக்கு நிறைய இனிய நினைவுகளைத் தந்தது! இப்போது விட...தொடர்கிறோம் அம்மா

கீதா: உங்கள் நினைவுகளிலிருந்து வரும் உங்கள் வாழ்க்கைக் கதை அனுபவங்கள் எல்லாம் இனிக்கின்றன. அதுவும் நீங்கள் சொல்லும் விதம்...ஹப்பா இன்லென்ட் லெட்டரில் கதையா!!! ஆ!!! எத்தனை அன்பிருந்தால், அம்மாவும் பெண்ணும் எவ்வளவு இணக்கமாக இருந்திருக்கிறார்கள்..எவ்வளவு பேசியிருப்பார்கள்!! இல்லையா வல்லிம்மா...இப்போதெல்லாம் இப்படியான ஓர் பிணைப்பை, அன்பை பார்க்க முடிகிறதா அதாவது பிறந்த நாள் என்றால் பரிசு அந்த் டே இந்த டே என்று பரிசுகள் பரிமாறப்படுகின்றன.... தவறே இல்லை. நிச்சயமாக அதுவும் உறவுப்பாலம் தான். ஆனால் தாங்கள் வாசிப்பது எல்லாம் பகிரும் அளவு !!!! நான் என் வட்டத்தில் அறிந்தவரை அப்படி ஒன்று இல்லவே இல்லை...மேபி வேறு பலர் இருக்கலாம்...என் அறிவிற்கு எட்டிய வரை..இல்லை....உங்கள் பாட்டி அம்மாவின் அன்புப் பாலத்தை அறியவே இனிமையாக இருக்கு! மகிழ்வாகவும் இருக்கு வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

மிக மிக உண்மை. துளசி தரன் , கீதா.
வருடத்துக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வார்கள்.
அப்பாவும் சகோதரர்களுடன் கிளம்பும் நாட்கள் வரை பேச்சு இருக்கும்.
பாட்டி 92 வயது வரை ரா கி. ரங்கராஜன் கதைகள் படித்தவர்.

ஆர்தர் ஹெய்லி, டானியல் ஸ்டீல் கதை எல்லாம் எனக்கும் சொல்வார்.
அவர்களுக்கு எல்லோரிடமும் பேச விஷயம் இருக்கும்.
மிக நன்றி கீதா மா.