அட


மாமியார் என்று யார் பெயர் கொடுத்து இருப்பார்கள்?
இந்த மாமி யார்? அவங்களோட மனைவி.
இவங்களோட அம்மா.
இவங்களோட பொண்ணு.(இது அந்தக் காலம்).
ஆரம்ப கால மாற்றுப்பெண் அடக்கத்துடன்,
அழகாகக் கோலம் போடுபவள். அடுக்களைக் கதவு
பின்னாலிருந்து
எட்டிப் பார்த்து(முதுகுப் புடவை போர்த்தி)
அவர் வீட்டில இல்லீங்களே என்று சொல்வதோடு சரி.
கணவனோட அம்மா அப்பா,பெரியவர்கள்,
எல்லோருடைய அனுமதியோடு வெளிலே
கணவனோட போலாம்.
ஆனால் குழந்தைகள் மத்திரம் சீக்கிரம் பிறந்து விட வேண்டும்.
அதற்குள் இன்னோரு ஓரகத்தி வந்துவிடுவாள்.
அவளும் இவளும் சண்டை போடாமல் சமையலறையில் வேலை செய்ய வேண்டும்.
மாமியாருக்கு அடுத்த இடம் முத்ல் மாற்றுப் பெண்ணுக்குத் தான்.
சில வீடுகளில்.
எப்பவுமே இறுதி வரை மாற்றுப் பெண்ணாகவே இருந்து
காணாமல் போனவர்களும் உண்டு.
இதில் அந்த மாமியாரும் அடங்குவார்.
இது மிகவும் சகஜம்.
ஏன் என்றால் மாமியாருக்கு ஒரு வயதான (புக்கக அத்தை, சித்தி)
இருந்தால்...
அவள் குரலும் அடங்கித் தான் ஒலிக்கும்.
அப்படி இருந்தவள் எங்க அம்மாவோட அம்மா.
பாட்டி என்று அழைக்க முடியாது என்று சொல்லி
அவளை நான்தான் ' சீனிம்மா ' என்று பெயர்
வைத்தேன்.
இப்போது அவளை நினைக்கக் காரணம்,
எங்க இரண்டாவது பேரன் கிருஷ்ணா.
இந்த ஊருக் குளிர், மற்றும் நமது வயது,
உடலுக்கு உண்டான உபாதைகள்
எல்லாம் என்னை யோசிக்க வைத்தன.
இறந்த காலம், நம் முன்னோர்கள்
எல்லோரையும் நாம் எப்போதும் நினைக்க
வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் இது போல் முக்கியமான சில சமயம் ஆனந்தமான
சிலசமயம் சிரமமான நேரங்களில் அவள் நினைவு என் அம்மா நினைவோடு சேர்த்து வரும்.
இப்போது நான் அலுத்துக் கொள்வது போல் அவளுக்கு
சொல்லிக் கொள்ள நேரம் கிடையாது.
வேலையை நிறுத்தினால் தானே
யோசிக்க நேரம்.?
ஒரு பெண், நான்கு மகன்கள் அவளுக்கு.
தன் 37 வயதில் தன்னைவிட 18 வயது மூத்த
கணவரை, பாரிச வாயுக்குக் கொடுத்துவிட்டு,
,மறுபடி வாழ்க்கையை ஆரம்பித்தவள்.
கலைமகள்,கல்கியிலிருந்து
அன்றைய தினமணி வரைத் தனக்கு
கிடைக்கும் ப்ரேக் டைமில் முடித்துவிடுவாள்.
அப்படி ஒரு வாசிக்கும் ,தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
அவள் படித்தது 4ஆம் வகுப்புத்தான் என்று நினைக்கிறேன்.
அழகான முகம்,
நரை படியாத, தலைமுடி.
(அப்போ 'லோரியால்' கிடையாது)
அவளும் அதைப் பற்றி யோசித்திருக்கமாட்டாள்.
நல்ல எண்ணைதடவி சிடுக்கு எடுத்து பந்து போல முடிந்து கொள்வாள்.
இரண்டு நூல் புடைவைகள்
அனேகமாக ஒரு காவிக்கலரில் இருக்கும்.
ஒரு வெள்ளை காடா ரவிக்கை.
அதுவும் முதுகு போர்த்தி இருக்கும்.
அவள் புடைவை கலைந்தோ அழுக்காகியோ
நான் பார்த்தது இல்லை.
இத்தனைக்கும் காலை மூன்று மணிக்குச்
சென்னைக் குடிநீர் வரும் நேரத்தில் பாத்திரங்கள்
கழுவ எழுந்து இருப்பவள்,
வாயில் கௌசல்யா சுப்ரஜா ராமாவோடு,
இடையிடையே கண்ணினுண்
சிறுத்தாம்பு '' என்று வாய் முணுமுணுக்க
அடுப்பு மெழுகிக் கோலம் போட்டு,
காப்பி மஷினில் காப்பிகொட்டை அரைத்து
வாசனையாக டிகாக்ஷன் இறக்கி
வைத்துவிடுவாள்.
அதற்குத் தனி உமியும் சிராய்த்தூளும் போட்ட அடுப்பு.
அழகான வளைந்த நுனிகொண்ட கெட்டில்.
அதில் தண்ணி நிரப்பிக் கொதிக்க வைத்து
ஃப்ல்ட்டரில் இதமாக விட்டு ம்ம்ம்ம்ம்.
அத்தனை மணம் கொண்ட காஃபியை நான் இதுவரைக்
குடிக்கவில்லை.
அப்போது ஆரம்பிக்கும் வேலைகள் குளித்த பிறகு தொடரும்.
வேலைக்குப் போகும் இரு பையன்கள். பள்ளிக்குப் போகும் இரு பையன்கள்.
பிரசவத்துக்கு வந்திருக்கும் மகள்(என் அம்மா),
அவளுடைய முதல் இரண்டு புத்திர ரத்தினங்கள்:-)
(நானும் என் தம்பியும்)
எல்லோருக்கும் வரிசையாகக் காப்பியோ,
கஞ்சியோ வயதுக்கு ஏற்ற மாதிரி கிடைக்கும்.
எட்டரை மணிக்கு மேடையில் இருக்கும் விறகு அடுப்பில்
தயாரித்த சாதமும் பருப்பும் ஸ்வாமிக்குக் கைகாட்டி பிறகு
குழம்பு ,ரசம் ,கூட்டுடன்
தாமரை இலையில் தைத்த சரகுத்தட்டில்
தயாராக இருக்கும்.
அவரவர் வேலைகளை முடித்து, சாப்பிட்டுக் கிளம்பியதும், 11 மணி
வாக்கில் சீனிம்மா சாபிட உட்காரும் அழகே தனி.
கூடவே இருந்து பார்க்கும் எனக்கு அதிசயம் தாங்காது.
ஒரு துளி மிச்சம் வைக்காமல்,
(மிளகாய் வற்றல் தவிர)
அத்தனை சின்ன இலையில் சாப்பிட்டு முடிப்பார்.
ஏன் சீனிம்மா உனக்கு மத்திரம் இலை?:
எங்களுக்கெல்லாம் தட்டு? என்று கேட்டால்
அதெல்லாம் ஒண்ணும் இல்லையே, எனக்குப் பிடிக்கும் இப்படிச் சாப்பிட என்பார்.
வருடங்களுக்கு அப்புறம் தான் அவர் இருந்த
தவம் புரிந்தது.
கணவனுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வராமலேயே
எல்லாரிடமும் உறவு காத்துத் தன் குழந்தைகள் மூலமே எல்லா
வேலைகளையும் செய்து முடித்தார்,.
அவர் பெற்ற புத்திரர்களும் அவர் போலவே
இருந்ததால் ஒன்றுமே தவறி நடக்கவில்லை.
அவரைத்தேடி எல்லோரும் பார்க்க வருவார்கள்.
ஒரு பெரிய லேடிஸ் க்ளப் நடத்தலாம்.
மாசி, புரட்டாசி மாதங்களில் அப்பளம் மாவு இடிக்கப் பட்டு
ஏழு எட்டு அம்மாக்களும் பாட்டிகளுமாக
ஊர்க்கதை பேசிக்கொண்டு அப்பளம் இடுவார்கள்.
மாங்காய் சீசனில் ஒரு நாலு ஐந்து அண்டாக்கள் நிறைய
துண்ட மாங்காய், ஆவக்காய், அடை மாங்காய்,கீத்து மாங்காய்
என்று வகை வகையாய்.
இதைத் தவிர சனி ஞாயிறுகளில்
முறுக்கு,தட்டை என்று ஒரு யாகம் நடக்கும்.
இத்தனைக்கும் அவர் கை நிறையக் காசு வைத்தவர் அல்ல.
மனம் நிறைய அன்பு. எல்லாவற்றையும் சாதித்தது
என்று நினைக்கிறேன்.
எங்கள் திருமணம் முடிந்து அடுத்துப் பிறந்த
மூன்று குழந்தைகளுக்கும்
எங்க அம்மாவீட்டுக்கு வந்து எல்லோரையும்
கவனித்துக் கொண்டு இடையிடையில்
ஒரு கோணல் கண்ணாடியையும் மாட்டிக்கொண்டு
எல்லப் புத்தகங்களையும் படிப்பார்.
சுவைபட பழைய காலக் கதைகளைச் சொல்லுவார்.
கண் முன்னாலே நடப்பது போல ஒரு பிரமை தோன்றும்.
எல்லா நூற்றுக்கணக்கான உறவுகளையும்
(ஓட ஓட) நினைவு வைத்திருப்பார்.
எப்போதோ யாரையோத் திருமணம் செய்து
காசிக்கு ஓடிவிட்டவரைப் பத்தி சொல்லி சிரிக்க வைப்பார்.
மனசு நொந்து நான் நிறைய பார்த்ததில்லை,.
எந்த விழாக்களிலும் அவர் திரை மறைவில் தான்.
யார் முன்னாலும் வரமாட்டார்.
எனக்குத் தான் வருத்தமாக இருக்கும்.
இவளும் இருந்தாள். மறைந்தாள் என்று இல்லாமல் அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.
''சீனிம்மா கொஞ்சம் சிக்காகோ வரியா??''
,