Blog Archive

Tuesday, May 10, 2022

May 2010 ஒரு நாள் முழு மின்வெட்டு.!

Vallisimhan




அது ஒரு பகல் காலம் 2010 இல் ஒரு நாள்
+++++++++++++++++++++++++++++
வெய்யில் போதுமா!! வருடா வருடம் நாம் கேட்கும் கேள்விதான். இருந்தாலும் இந்த வருடம்
ரொம்பவே அதிகமாக இருக்கு.
இதில் ஒரு நாள் முழு மின்வெட்டு.!
மின்சாரம் போவதைவிட அதோட பின் விளைவுகள் படு மோசம்.
முதலில் வருவது காத்து. .வருவதுன்னு சொல்லக் கூடாது.வராம,ஒரு இலை அசையாமல்
மரமெல்லாம் மௌனம் சாதிக்கிறது.
முன் காலம் போல வாயில் கதவெல்லாம் திறந்து வைத்து,அழியை மட்டும் போட்டுக்
கொண்டு தலைக்குசரம் வைத்துக் கொண்டு படுக்க முடியுமா. கேட்' டை யாரொ திறப்பது
போலவே தோன்றுகிறது.
கொஞ்ச நெரம் பெஞ்சில் படுத்தாச்சு. அதுவும் வியர்க்கவே தரைக்கு வந்து படுத்தால்
எறும்பார் வரிசையாகப் போகிறார்.
ஓஹோ லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறைவிடவில்லை.
சரி, இடத்தை மாத்திக் கொண்டு படுக்கலாம்னால், ஒரு தொலைபேசி. ரிங்.
தரையிலியே நீந்தும் திமிங்கலமாக என்னைக் கற்பனை செய்துகொண்டு, நகர்ந்து போய்ப்
போனை எடுத்தால் பக்கத்து வீட்டு அம்மா,'கரண்டு எப்ப வரும்னு தெரியுமோ' இப்ப மேகலா
முடிஞ்சிருக்குமே என்கிறார்.
அந்த நிமிஷத்தில் நான் தற்பெருமையில் ,சுய மதிப்பீட்டில் உயர்ந்து விட்டேன்.
நான் சீரியலே பார்ப்பதில்லையேம்மா, கரண்ட் 6 மணிக்குத்தான் வருமாம்ன்னு சொல்லி ,
அந்த அம்மாவின் ஆ!!! கேட்டுக்கொண்டே வைத்துவிட்டேன்.
உண்ட மயக்கத்தில் வந்த தூக்கமும் போச்சு.
இவரையாவது கேட்டு, அவர் அக்கா வீட்டுக்குப் போகலாமான்னு கேட்க வந்தால்,
ஒரு மினி பாட்டரி விசிறி காற்றில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
அக்காவீட்டில் மின்வெட்டு இல்லை என்று தெரிந்துதான் இந்த யோச்னையே வந்தது.🙂
''இருந்த ஒரு வேப்ப மரத்தையும் கார் நிறுத்துவதற்காக வெட்டியாச்சு. இப்போ அது இருந்தா
எவ்வளவு நிழல் இருக்கும். ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,ஊர்வம்பு புத்தகத்தை
நாலாவது தடவையாகப் படிக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். இல்லை வாய்விட்டுச்
சொன்னேன்.
அதுவரை ,இவர் யோக நித்திரையில் தான் இருந்திருக்கிறார்.:)அதுதான் நான் சொன்னது
காதில் விழுந்துவிட்டது.
'கட்டிடம் கட்டினவர், வேப்ப மரத்தின் வேர் பற்றி சொன்னதுனாலதானே எடுத்தோம். அது
கூட மறந்து போச்சா? உனக்கு ஏதாவது கிடைச்சா போதும் என் மண்டையை உருட்டிடுவே
என்றபடி தன் மரநாய் ,(சிற்பம்)செதுக்கப் போனார். அப்போதுதான் அந்த மின் உளி
இயங்காது என்று நினைவு வரவே ,அவரும் மின்வெட்டு பற்றிக் காரசாரமாக நான்கு
வார்த்தைகள் சொல்லிவிட்டு ,மாமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு
எத்தனையோ இருக்கு தோட்டத்தில் செய்ய. !!!!!!!


நமக்கு அப்படியா!!!படி தாண்டி அறியோமே:0)
இவ்வளவு அலுப்பும் மணி மதியம் இரண்டு வரைக்கும் தான்.
கிட்டத் தட்ட 100 வீடுகளுக்கு ஆவின் பாலைக் கொடுத்துவிட்டு, 
பால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ,நம்வீட்டின் பின் பக்கத்தில் உட்கார்ந்து,கணவனுக்குக் கொண்டு வந்திருந்த சாப்பாடைக் கொடுத்துவிட்டு
 தானும் சாப்பிட்ட எங்க வீட்டு ராணியைப் (உதவி செய்பவர்) பார்த்ததும் 'சே' ன்னு போய்விட்டது. 
இதற்கப்புறம் இன்னும் இரண்டு வீட்டு வேலையை அவள் பார்க்கப் போகணும்.
என்னை நினைத்து எனக்கே  என் மீது இனம் தெரியாத கோபம் வந்தது!
எல்லோரும் வாழ வேண்டும்.

இதை நீங்கள் முக நூலில் படித்திருக்க வாய்ப்புண்டு.

19 comments:

ஸ்ரீராம். said...

மின்வெட்டு எப்போதுமே சிரமம்தான்.  இப்போது வீட்டில் இன்வெர்ட்டர் இருந்தாலுமே மின்சாரம் திரும்பி வந்தால்தான் ஒரு நிம்மதி பிறக்கிறது.

ஸ்ரீராம். said...

பழைய வீட்டில் வாசல் அப்டியில் தலை வைத்துப் படுத்தால் காற்று அமோகமாய் வரும்.  மாடி வீடு என்பதாலும், கீழே இரும்பு கேட்டை பூட்டி விடுவோம் என்பதாலும் கவலை இருக்காது.  ஆனால் அக்னி நட்சத்திரத்தில் கடற்காற்று செட் ஆகவில்லை என்று நீண்ட நேரம் காற்றடிக்காமல் கழுத்தறுக்கும்!

ஸ்ரீராம். said...

// ஒரு இலை கூட அசையாமல் மரமெல்லாம் மௌனம் சாதிக்கிறது.//

ஹா..  ஹா.. ஹா  அதுவும் அரசாங்கத்துடனும் மின்சாரத்துடனும் கூட்டுச்சதி செய்கிறது!  கண்களை சுழற்றி வரும் தூக்கம் கூட காற்றில்லாததால் அரைகுறையாய் காணாமல் போகும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

இன்வர்ட்டர் இருந்தாலும் அதுவும் சில நேரம் காலியாகிவிடும்.

ஏதோ தண்ணீர் விடணுமே.அது மறந்துவிடும். டிஸ்டில்ல்டு வாட்டர்?
கண்ட நேரத்தில் திடீர்னு கத்தும்:)
ஆமாம் மின்சாரம் வந்தால் தான் நிம்மதி.

வல்லிசிம்ஹன் said...

கடல்காற்று செட்டாகவில்லை என்றால் கொடுமை மா.
நாங்கள் மைலாப்பூர் தானே. நேரே நடந்தால் சாந்தோம்
வந்துவிடும்.
அப்போழுதும் காற்றில்லாமல் புழுங்கிய நாட்கள்
உண்டு. சாயந்திரமாக வரட்டுமா வேண்டாமா என்று கேட்கும்.


பஸ் போகும் சாலை என்பதால், கதவைத் திறந்து வைப்பதும்
அவ்வளவு உசிதம் இல்லை.

இப்போது வீட்டில் எல்லாம் மாறி விட்டது. உயரக் கட்டிய காம்பௌண்ட்:)

வல்லிசிம்ஹன் said...

உங்கள் பழைய வீட்டை நீங்கள் நிறைய
மிஸ் செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது!!

''கண்களை சுழற்றி வரும் தூக்கம் கூட காற்றில்லாததால் அரைகுறையாய் காணாமல் போகும்!''

இதுதான் நிஜம். சில நேரம் இரவுகளில் கூட கரண்ட்
போய்விடும். உடலை மறந்து தூங்கினால்
உண்டு.
மிக நன்றி ஸ்ரீராம்.

மாதேவி said...

வெய்யிலில் அருமை நிழலில் என்பதுபோல்தான் மின்சாரவெட்டும். எங்களுக்கு பல மாதங்களாக வெட்டுதான்இப்பொழுதும் பகல் இரண்டு மணித்தியாலம் இரவு ஒன்றரை மணித்தியால வெட்டு உண்டு.

மின்சார வெட்டுடன், பெற்றோல்,டீசல்,கெரோசின், சமையல் எரிவாயு இல்லை . சிறு வயது முதல் ஐந்தாறு கறிகளுடன் மதியம் சாப்பிட்டு பழகிய நாங்கள் இப்போதெல்லாம் எரிவாயு பிரச்சினையால் இரண்டு கறியுடன் பசிக்கு சாப்பிடுகிறோம்.அதுதான் நாட்டு மக்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள் வயித்தில் அடித்தால் யார்தான் அமைதியாக இருப்பார்கள்.

வீடுகளில் கதைப்பதை கேட்டு நான்கு வயது பேரன் தானே இயற்றி பாடுகிறான்
பெற்றோல் இல்லை
டீசல் இல்லை
கரோசின் இல்லை
கரண்ட் இல்லை
காஸ் இல்லை
சாமான்விலை ஏற்றம்
சாப்பாடு இல்லை
ஒன்றும் இல்லை.
என பாடுகிறான் எப்படி குழந்தைகள் மனதில் பதிகிறது பாருங்கள்.

Geetha Sambasivam said...

அது அதாவது 2010 ஆம் ஆண்டெல்லாம் நல்ல மின்வெட்டுக்குப் பெயர் போன காலமாச்சே! நாங்கல்லாம் மின்வெட்டு எனில் "ஆற்காடு" வந்துட்டார் என்போம். இப்போ இங்கே காற்றுக் கொட்டுகிறது. பருவக்காற்றுத் தான் வீச ஆரம்பித்து விட்டதோ என்னும்படிக் காற்று. இங்கே ஹாலில் (கூடமெல்லாம் போயாச்சு) ஃபேனைக் கூடச் சின்னதா வைச்சுட்டு உட்கார்ந்திருக்கேன். பின்னாடி இருந்து/வாசல் வழியானு காற்றுக் கொட்டுகிறது. இரண்டு நாட்களாகவே இப்படித் தான் இருக்கு. இப்போல்லாம் நாங்க எங்கே போனாலும் திரும்ப எப்போடா நம்ம ஸ்வர்கத்துக்கு வரப்போறோம்னு இருக்கு! :))))

Thulasidharan V Thillaiakathu said...

மின் வெட்டையும் அந்த கஷ்டத்தையும் கூட ரசனையோடு எழுதிட முடியும் என்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.

இங்கே கேரளத்திலும் உண்டுதான் ஆனால் நாங்கள் இருக்கும் பகுதி மலையும் மலைசார்ந்த பகுதி. வீட்டிலும் முன் பக்கம் பெரிய தோட்டம். பின் பக்கம் ரப்பர் தோட்டம் நடுவில் வீடு என்பதால் அவ்வளவாகத் தெரிவதில்லை. என்ன மொபைலில் சார்ஜ் போகும்., டிவி பார்க்க முடியாது.

துளசிதரன்

கோமதி அரசு said...

//தரையிலியே நீந்தும் திமிங்கலமாக என்னைக் கற்பனை செய்துகொண்டு, நகர்ந்து போய்ப்//

இந்த வரி நினைவு இருந்தது பதிவை படிக்கும் போது இந்த வரியை எதிர்பார்த்து படித்தேன்.

கடலையை கொறித்து கொண்டு புத்தகம் படிக்கும் போஸ்ட் ஒன்று இருக்கே!
பதிவு அருமை.

கோமதி அரசு said...

மாதேவி சொன்னதை தொலைக்காட்சியில் பார்த்தேன். கவலையாக இருந்தது இலங்கை மக்களின் நிலை கண்டு.
விரைவில் சரியாக இறைவன் அருள வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹா அம்மா மின் வெட்டைக் கூட இப்படி எழுதமுடியுமா ரசனையோடு!! ரசனையான எழுத்து.

பக்கத்துவீட்டு மாமிக்கு மேகலாவா ஹாஹாஹாஹா இந்த சீரியல்தான் ஒவ்வொருவரையும் எப்படிக் கட்டிப்ப் போட்டிருக்கிறது!

சென்னையில் இருந்தவரை மின் வெட்டை ரொம்ப அனுபவித்திருக்கிறோம் அதுவும் நாங்கள் இருந்த பகுதியில் அடிக்கடிப் போய்விடும் ட்ரான்ஸ்ஃபார்மர் அது இது என்று. தண்ணியும் இல்லாமல் கஷ்டப்பட்ட நாட்கள் உண்டு. இரு நாட்கள் கூட.

இங்கு பங்களூரில் அந்தப் பிரச்சனை இல்லை. மின்வெட்டு எப்போதேனும். இருந்தாலும் காலநிலை இங்கு பிரச்சனை இல்லாததால் ஓடிவிடுகிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மாதேவி உங்கள் பாடு ரொம்பக்கஷ்டம்தான் எப்படிச் சமாளிக்கின்றீர்கள்? உங்கள் பகுதி எல்லாம் ஒருகாலத்தில் எவ்வளவு செழிப்பாக பச்சையாக இருந்தது. வேதனையான விஷயம்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
உன ஊர் பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் சங்கடப் பட்டு துடிக்கும். விடிவே வராதா என்ற வருத்தம்.

''மின்சார வெட்டுடன், பெற்றோல்,டீசல்,கெரோசின், சமையல் எரிவாயு இல்லை . சிறு வயது முதல் ஐந்தாறு கறிகளுடன் மதியம் சாப்பிட்டு பழகிய நாங்கள் இப்போதெல்லாம் எரிவாயு பிரச்சினையால் இரண்டு கறியுடன் பசிக்கு சாப்பிடுகிறோம்.அதுதான் நாட்டு மக்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள் வயித்தில் அடித்தால் யார்தான் அமைதியாக இருப்பார்கள்.''

ஆமாம் உண்மை. முதுகில் அடி தாங்கிக் கொள்கிறோம் என்று தானே
சொல்வார்கள்.!! இப்படிக்கூட கொடுமை உண்டா.
என்ன நடந்தாலும் அரசியல் வாதிகள் நன்றாகத் தானே
இருக்கிறார்கள். மக்களுக்குத் தான் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை.
தங்களின் பேரன் பாடுவதில்
என் வருத்தம் இன்னும் அதிகரிக்கிறது.

சின்னம் சிறார்கள் வாடும்படியான நிலைமை வரலாமா.
ஈசா காப்பாற்று. வளம் மீண்டு வர என் பிரார்த்தனைகள்
அன்பு மாதேவி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. மின்வெட்டு காலங்கள் சிரமங்கள்தான். முன்பு சென்னையில் இந்த சிரமங்கள் உண்டு. பின் மதுரை திருமங்கலத்தில் மாதம் ஒரு முறையோ என்னவோ,காலையில் எட்டு மணிக்கே போன கரண்ட் மாலைக்கும் அப்புறமாகத்தான் வரும்.நாம் என்றாவது பேப்பரில் பார்த்து சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து விட்டோம் என்ற பெருமை கொள்ளும் போது, மதியமே கரண்ட் வந்து நம்மை மட்டந்தட்டி மகிழ்ச்சி கொள்ளும். சரியென்று நாம் அந்த அனுபவத்தை நினைத்தபடி அடுத்த தடவை மின் இயந்திரங்களில் (கிரைண்டர், மிக்ஸி) நிறைய வேலைக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தால்,எப்போதும் மாலை வரும் கரண்ட் கூட வராமல் இரவு பத்து மணி சுமாருக்குதான் வந்து கடுப்பேற்றும்.

/முதலில் வருவது காத்து. .வருவதுன்னு சொல்லக் கூடாது.வராம,ஒரு இலை அசையாமல் மரமெல்லாம் மௌனம் சாதிக்கிறது.
முன் காலம் போல வாயில் கதவெல்லாம் திறந்து வைத்து,அழியை மட்டும் போட்டுக்
கொண்டு தலைக்குசரம் வைத்துக் கொண்டு படுக்க முடியுமா. கேட்' டை யாரொ திறப்பது
போலவே தோன்றுகிறது.
கொஞ்ச நெரம் பெஞ்சில் படுத்தாச்சு. அதுவும் வியர்க்கவே தரைக்கு வந்து படுத்தால்
எறும்பார் வரிசையாகப் போகிறார்.
ஓஹோ லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறைவிடவில்லை./

மின் வெட்டைப்பற்றி மிக ஸ்வாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.ரசித்தேன். எனக்கும் முன்பு தங்கியிருந்த ஊர்களின் இடங்களில் இந்த வியர்வை பிரச்சனை வேறு..இப்போது இங்கு பெங்களூர் வந்த பின் அந்த மின் வெட்டு நாட்களில், இந்த பிரச்சனை இல்லை. பாக்கி பிரச்சனைகள் தொடர்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள். உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கவே
இனிமையாக இருக்கு.

ஆற்காட்டார் வந்து விட்டார்:)
நினைவு இருக்கிறது!!!!

''இங்கே ஹாலில் (கூடமெல்லாம் போயாச்சு) ஃபேனைக் கூடச் சின்னதா வைச்சுட்டு உட்கார்ந்திருக்கேன். பின்னாடி இருந்து/வாசல் வழியானு காற்றுக் கொட்டுகிறது. இரண்டு நாட்களாகவே இப்படித் தான் இருக்கு. இப்போல்லாம் நாங்க எங்கே போனாலும் திரும்ப எப்போடா நம்ம ஸ்வர்கத்துக்கு வரப்போறோம்னு இருக்கு! :))))"

நிஜமாகவா. ஸ்ரீரங்கம் வெய்யில் என்றல்லவா நினைத்தேன்!!!
அட. இனிப்பான செய்தி மா.
நாங்கள் மன்னார்புரத்தில் இருக்கும் போது அனல்காற்று
வீசும் மலைக் கோட்டையிலிருந்து!!!

போகப் போக நல்ல காற்று ஆகும்.

நல்ல செய்திக்கு நன்றிமா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,

நலமுடன் இருங்கள்.
இன்று எல்லோரும் நல்ல செய்திகள் சொல்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

''இங்கே கேரளத்திலும் உண்டுதான் ஆனால் நாங்கள் இருக்கும் பகுதி மலையும் மலைசார்ந்த பகுதி. வீட்டிலும் முன் பக்கம் பெரிய தோட்டம். பின் பக்கம் ரப்பர் தோட்டம் நடுவில் வீடு என்பதால் அவ்வளவாகத் தெரிவதில்லை''

கேட்கவே இனிமை அப்பா.
மொபைல் இல்லாவிட்டாலும் ,லாண்ட்லைன் இருக்கும்
என்று நினைக்கிறேன்.
கற்பனை செய்யவே இனிதான வீடு.
அடுத்தாற்போல் ''கத்தும் குயிலோசை கிட்டே வந்து
காதில் பட வேண்டும்" என்ற பாரதியின் பாஃபல் தான் நினைவில் வருகிறது:)

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா, வாழ்க வளமுடன்.

அம்மாடி, இவ்வளவு நினைவு இருக்கிறதா
உங்களுக்கு?

கடலை கொறித்தபடி புத்தகமா.!!!!
ஆஹா. அந்த நாளும் வந்திடாதோ!!!

2010 இல் நல்ல கனமான ஆள் நான்:)
அதுதான் திமிங்கல நினைவு வந்ததுமா ஹாஹா.

உங்கள் அபரிமிதமான நினைவாற்றலுக்கு
நன்றி.
இது போல மைனர் இடர்பாடுகளைச் சிரித்துத்தான்
கடக்க வேண்டும்.
மீண்டும் நன்றி அன்பு தங்கச்சி.

மாதேவி said...

அன்புடன் விசாரித்து ஆதங்கப்பட்ட கோமதிஅரசு, கீதா, வல்லிசிம்ஹன் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் பிரார்த்தனைகளும் ஈடேறும் என நம்புவோம்.நன்றி.