Blog Archive

Monday, May 16, 2022

சதுரங்கம்...நீயும் நானுமா? 2008.

வல்லிசிம்ஹன்


Saturday, July 26, 2008



சதுரங்கம்...நீயும் நானுமா?


புதிதாக மகன் வாங்கி வைத்திருக்கும்  மடி கணினிசாப்பாட்டு மேசையில் இருப்பது மகா சௌகரியம்.

மடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு தமிழ்மணம் மேயலாம். 
இதிலென்ன சங்கடம் என்றால் பாப்பாவுக்கும் கணினி மேல் ஆர்வம் வந்து விட்டது.

கண்முன்னால் பாட்டி கை மட்டும் போய்ப் போய் வருதே பாட்டி எங்க என்று மேலே முகத்தை நிமிர்த்துகிறது.
இல்லாவிட்டால் கைவளையலைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இப்ப என்ன பண்ணுவேங்கிற மாதிரி.:)

அப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.
நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.

இதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
இதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.
அது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)
பார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும். ஏன்னா
அடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும்,
 பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)
சப்பாத்தி செய்யறதுதான்..

இதெல்லாம் செய்தது ஒண்ணும் பெரிசில்லைம்மா. இப்ப இந்தக் கணினியில் செஸ் விளையாட்டு இருக்கு.அதுகிட்ட நம்ம வீரம் பலிக்க மாட்டேன் என்கிறது
நானும் ஏதோ எங்க அப்பா கத்து கொடுத்த
மூவ்ஸ் வச்சு சுலபமா என் பேரனை ஜெயிச்சுடுவேன். சே:)...................................

இந்த கல்லுக் குண்டு கணினி என்னைத் தோற்கடிப்பதிலியே இருக்கு. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம்தான் இல்லைன்னு சொல்லலை.
ஆனா இது ரொம்ப மோசம். என்னோட சுய மதிப்பீட்டையே கவுத்துடும் போல இருக்குப்பா..

முதல் ஐம்பது கேம் வரை தோற்பது பிரமாதமாகப் படவில்லை.
என்ன இருந்தாலும் ஒரு கணினிகிட்டத் தோற்கிறதில பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல.:)))
அப்புறம் கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டு விளையாடியதில் நான்கு முறை ஜெயித்துவிட்டேன்.

பிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது. நான் ஜெயிப்பது போன்ற நிலைமை வந்தால் ''நௌ தெ கேம் இஸ் அ ட்ரா'' என்கிறது.
செக்மேட் வைத்து வெற்றி பெறப்போகிறோம் என்கிற நிலைமையில் என்னைச் செக் செய்துவிடுகிறது.

பின்னூட்டம் வரலைன்னால் கூட இவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்காது.
இப்ப என்னடா என்றால் இந்தப் பொட்டிகிட்ட தோற்கிறோமே 
என்ற தாழ்வுணர்ச்சி பயங்கரமாக இருக்கிறது, காரம் அதிகமானா ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுவதைப் போல ,வெறும் ஃப்ரீசெல்லும்,ஸ்பைடரும்,சாலிடேரும் விளையாடி மனதை சமாதானப் படுத்திக்கொள்கிறேன்.:(

அடிமனதில் எப்படியாவது இந்த வெற்றி விகிதத்தைச் சமமாக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)
இதுக்காக MaGrudi book shop போயி ''ஹௌ டூ'' புத்தகம் வாங்கறதாக இல்லை.:))))))))))))))))))))))))))))))))))))))))))))))

29 comments:

ஸ்ரீராம். said...

ஒரே சமயத்தில் பல வேலைகள்...   அது ஒரு காலம்.  இப்போதுதான் திருமதி வெங்கட் பதிவில் நிறைய புத்தகங்கள் படிப்பிப்பது பற்றி படித்து பெருமூச்செறிந்துவிட்டு வருகிறேன்.  ஆடியோ புக் பற்றி சொன்ன உங்கள் ஞாபகமும் வந்தது.  ஆனாலும் நாம் படிப்பிப்பது போல வராதே..  என்னவோ ஒரு தடை, கண்ணும் சரியில்லை, படிக்கவும் ஓடமாட்டேன் என்கிறது...

ஸ்ரீராம். said...

அம்மாடி...  பயங்கர செஸ் பிளேயரா நீங்க?  நானெல்லாம் மற்றவர்களை வெற்றிபெற வைத்து சந்தோஷப்படுபவன்!

ஸ்ரீராம். said...

என் இளையவன் செஸ் பிரியன்.  இப்போது செல்லில் அவ்வப்போது செஸ் விளையாடுவான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

புத்தகம் கையில் வைத்துப் படிப்பதுதான்
சுகம்.
எல்லாப் புத்தகமும் படிச்சாச்சு மா.
இனிமேல் புதிதாக வாங்கணும்.
பாரதி பாஸ்கர், பவா செல்லதுரை, ஜெமோ
கதை இவற்றை ஆடியோவில் சுருக்கமாகக்
கேட்கலாம். அதுதான் பிடித்திருக்கிறது.
அதனுடன் அவர்களுடைய எண்ணங்களையும்
கேட்க முடிகிறதே.

வல்லிசிம்ஹன் said...

பயங்கர ப்ளேயர் லாம் இல்லமா.
2008 இல் ஆன்லைன் செஸ் பிடித்தது. இப்போது ஆன்லைனில்
எதுவுமே கேம்ஸ் விளையாடுவதில்லை.
ஏதோ பயம்.

ஆதி வெங்கட் நிறைய படிக்கிறாரா.
மிக மகிழ்ச்சி.புத்தகம் பெரிய நல்ல நண்பன் ,தோழி.

உங்களுக்கும் நிறைய நேரம் கிடைத்து
நீங்களும் படிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
விடக் கூடாது.
சின்னவன் செஸ் விளையாடுவது சந்தோஷம்.
அத்தனூண்டு செல்லில் எப்படித்தான் விளையாடுகிறார்களோ.!!!

மிக மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

அஷ்டாவதானி என்ற சொல் நினைவுக்கு வருகிறது..... ஒரே சமயத்தில் பலவேலைகளில் ஈடுபடுவது எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. செஸ் விளையாடுவதில்லை. கணினியில் விளையாட்டு அதிக ஈடுபாடு வந்துவிட்டால் விடுவது கடினம்.

KILLERGEE Devakottai said...

ஆம் ஒரு கணினி பெட்டியிலும் தோன்றும்போது கஷ்டமான விசயம்தான்.

நெல்லைத்தமிழன் said...

ஆஹா... பெரிய செஸ் ப்ளேயரா நீங்கள்?

88ல் முதன்முதலாக கணிணியில் செஸ் விளையாட்டைப் பார்த்த நினைவு வருகிறது.

Geetha Sambasivam said...

எங்க குழந்தைகளுக்கு நான் தான் செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தேன். பின்னர் அவர்கள் மேம்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நான் அத்தோடு விட்டு விட்டேன். :( தொடர்ந்திருக்கலாம். கணினியிலோ அல்லது அலைபேசியிலோ எந்த விளையாட்டும் விளையாடுவது இல்லை. அந்த நேரத்துக்கு எடுத்து வேலைகளை முடிச்சுட்டுப் பின்னர் ஷட் டவுன் பண்ணிடுவேன். ஏனோ மனம் அதில் பதிவதில்லை.

Geetha Sambasivam said...

ஆனால் ஒரே சமயம் பல வேலைகள் அஷ்டாவதானியாக இப்போவும் சில சமயங்கள் செய்யறாப்போல் ஆயிடும். :(

Geetha Sambasivam said...

நல்ல வேளையா உங்களோட கருத்துப் பெட்டி மட்டும் மாறாமல் இருக்கே! அதுவே பெரிசு. :)))))

Thulasidharan V Thillaiakathu said...

அப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.
நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.//

ஹாஹாஹாஹாஹா அம்மா ஹைஃபைவ் ஹைஃபைவ்!!!! நானும் இப்படித்தான்....ஆனால் வீட்டில் செம திட்டு விழும். இப்போது கணினியில் எல்லாமே.

ஆஹா நீங்க செஸ் Queena!!!!!!!! oooh Wow! நானும் ஒரு காலத்தில் விளையாடியிருக்கிறேன்...ஆமாம் நாம் வின் பண்ணுவது போல இருந்தால் அது ட்ரா சொல்லிவிடும்...இல்லை என்றால் தன் டெக்னிக்கை மாற்றிக் கொண்டுவிடும்.

அம்மா சாலிட்டேர், இப்போ பிரமிட் எல்லாம் நன்றாக இருக்கிறது அதுவும் மூளைக்கு வேலைதான் ஆனால் நான் ஜஸ்ட் மீடியம் லெவலொடு நிறுத்திவிடுவேன் ஹிஹிஹிஹி அதுக்குமேல போனா மூளைய ரொம்பப் பயன்படுத்தணும் நேரம் இல்லையே!!

கீதா


Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் எழுத்தை ரொம்ப ரசித்து வாசித்தேன் அம்மா. செம எழுத்து நடை. ஜாலி நடை!! மடிக்கணினி பாப்பா....தோசை- புத்தகம் குழவி, செஸ் விளையாட்டு எல்லாம் சிரித்துவிட்டேன். செம எழுத்து!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நீங்கள் வல்லியம்மா-சகலகலாவல்லி என்று தெரிகிறது! சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

துளசிதரன்

Bhanumathy said...

நானும் உங்களைப்போல் புத்தகம் வாசித்தப் படியே வேலைகள் செய்ததுண்டு.
கணிணியில் செஸ் விளையாடி சில முறை ஜெயித்திருக்கிறேன் என்றால் யார் நம்புகிறார்கள்? கருத்து செல்கிறதா என்று பார்க்கலாம்.

மாதேவி said...

செஸ் எங்கள் பிள்ளைகள் சிறுவயதில் விளையாடியபோது விளையாடியது பின்பு இல்லை.

ஒரே சமயம் பலவேலைகள் நீங்கள் செய்ததை ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
என் பெற்றோருக்கு ஒரே வேலை. ஒரே குறிக்கோள்.

வேற நோக்கமே கிடையாது. என் பெரிய தம்பி கூட சொல்வான்.
நீ ரொம்ப மாறிவிட்டாய்னு.
வலைத்தளம் ஆரம்பித்ததே
அவனுக்குப் பிடிக்கவில்லை:)

அஷ்டாவதானியாக இப்போது எல்லாப் பெற்றோரும்
குழந்தைகளும் அவதாரம் எடுத்திருக்கிறார்கள் மா.

ஆரம்ப காலத்தில் அந்த செஸ் எல்லாம் இருந்தது.
இப்போது இணைய தளம் விரிந்து விட்டது.
நன்றிமா.

Anonymous said...

யூ ட்யூபில் 3 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் puzzles நிறைய இருக்கின்றன. Try பண்ணிப் பாருங்கள்.

Vaishnavi

Anonymous said...

யூ ட்யூபில் 3 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் puzzles நிறைய இருக்கின்றன. Try பண்ணிப் பாருங்கள்.

Vaishnavi

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம். கணினி நல்ல விஷயங்களுக்கு
மட்டுமே உபயோகமாக வேண்டும்.
அதில் அளவுக்கு அதிகமாகப் பிணைத்துக் கொண்டோமானால்
மனதின் ஆரோக்கியம் கெடும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமா. உங்கள் பயணத்தைப் பற்றி நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வது.?
வலைப்பூ ஆரம்பித்து விடுங்களேன்.

எங்கள் தந்தைக்கும், பாட்டி வீட்டிலும் செஸ் விளையாடுவது
வெகுவாகப் பழக்கத்தில் இருந்தது. இப்போது கூட
என் மாமா பசங்க செஸ் விளையாட்டில்
Arbitrator ஆக இருக்கிறார்கள்.
எனக்கு இப்போது பழக்கம் விட்டுப் போனதுமா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமா. உங்கள் பயணத்தைப் பற்றி நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வது.?
வலைப்பூ ஆரம்பித்து விடுங்களேன்.

எங்கள் தந்தைக்கும், பாட்டி வீட்டிலும் செஸ் விளையாடுவது
வெகுவாகப் பழக்கத்தில் இருந்தது. இப்போது கூட
என் மாமா பசங்க செஸ் விளையாட்டில்
Arbitrator ஆக இருக்கிறார்கள்.
எனக்கு இப்போது பழக்கம் விட்டுப் போனதுமா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நானெல்லாம் பழைய அஷ்டாவதானி.
இப்போது ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை செய்ய மட்டுமே
தெம்பு.
சமையல், மற்றும்+ மற்ற வேலைகள்.
காலை +மாலை சில நேரம். கணினி எப்போதும்
ஆன்லைனாகக் காண்பிக்கிறது என்று மகன் சொல்வார்.
அது ஏன் என்று தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நிறைய ப்ளாகில் கருத்துப் பெட்டி மாறி விட்டதாகச் சொல்கிறார்கள். நமக்கு
வேர்ட் ப்ரஸ் எப்பவுமே
பயன் படாது. எபிக்கு ஒரு தடவைக்கு இரண்டு தடவை
முயற்சிக்க வேண்டி இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
சகல கலாவல்லியா.ஹிஹி!!!


நன்றி நன்றி மிக நன்றி அப்பா.
நான் சொன்ன அந்தப் பேத்தி இப்போது
கணினி Code எழுதிகிறாள்.

எனக்கும் அந்த வயதில் முடிந்தது. இப்போதெல்லாம்
அவ்வளவு ஆர்வமும் இல்லை.
உங்கள் எல்லோருடைய நட்புமே போதும்..
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

அப்போ இருந்த மன வளம் தனி அம்மா.
நல்ல வேளையாக நீங்கள் இப்போ படிக்கிறபடி இருக்கிறது.

2008இல் சின்னவனின் மகளுக்கு
நான் தாத்தி, அப்பா தாத்தா:)
அங்கே போய் விட்டால் அவளுக்குப் பெற்றோர் கூட வேண்டாம்:)
நீங்கள் இவ்வளவு ரசிப்பதைப்
பார்த்தால் மீண்டும் எழுதலாம் என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா
என்றும் நலமுடன் இருங்கள்.
செஸ் க்வீன் எல்லாம் இல்லம்மா.
நாங்கள் அங்கே போன நேரம்
வெளியே அவ்வளவாகப் போக முடியவில்லை.
குழந்தை என்னிடம் தான் இருப்பாள்.

அதனால ஒரு மாறுதலுக்கு யூடியூபில்
பாட்டு,
அவளுக்குப் பிடித்த கார்டூன், கூடவே என் செஸ்
என்று பொழுது போக்குவேன்.
அதில் வந்த பதிவு இது.
உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

டியர் வைஷ்ணவி,
குறிப்புக்கு நன்றி மா. நீங்கள் சொல்லும் மூன்று வித்யாசம்
ஐபாடில் இருக்கிறது. ஐந்து வித்யாசமாக.
தாங்க் யூ மா.