Blog Archive

Sunday, May 02, 2021

நட்புகள் புத்தகங்கள். ,மற்றும் வெங்காய போண்டா.


வல்லிசிம்ஹன்




கொண்டு வந்த ,வாங்கின புத்தகங்களை எல்லாம்
பத்து தடவையாகப் பாராயணம் 
செய்தாகி விட்டது.
ஜானகிராமனும்,அகிலனும்,சுஜாதாவும், ஐயா ராச நாராயணனும்,
பிவிஆரும்,ஜெயகாந்தனும்,லக்ஷ்மியும்,காலச்சக்கிர நரசிம்மாவும்
என் கைகளையும் கண்களையும்
கண்டு அலுத்துப் போய் 

புத்தக அலமாரிக்குப் பக்கம் நான் வந்தாலே சுருங்கிக் கொள்கிறார்களோ
என்று தோன்றி விட்டது.:)))))))))

இங்கே வந்த பிறகு மகளின் தோழிகள்
அனைவரும் என் தோழிகள் ஆகிவிட்டார்கள்.

அதில் ஒருவர் திருமதி லதா ராஜேந்திரன்.
வாழ்க வளமுடன். அவர் இங்கிருக்கும் நூலகத்தில்

நல்ல வேலையில் இருக்கிறார்.
நல்ல புத்தக அறிவு உண்டு.
என்னை சில நாட்கள் முன்னால் ''மாமி,பொன்னியின் செல்வன்
வந்திருக்கிறது .உங்களுக்குக் கொண்டு வந்து தரட்டுமா
என்றதும் தலைகால் புரியவில்லை.

தொற்று காரணமாக லைப்ரரி போவதையும் அங்கிருந்து
புத்தகங்கள் எடுப்பதையும் நிறுத்தி
15 மாதங்கள் ஆகிறது.
அப்பவும் ஆங்கில புத்தகங்கள் தான் 
எங்கள் டிஸ்ட்ரிக்ட் லைப்ரரியில் கிடைக்கும். 
அன்பு லதா வேலை செய்யும் இடத்தில்
தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதாகச் சொன்ன நேரம்
நாங்கள் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுவிட்டோம்.

அஞ்சாமல் புத்தகங்களைப் படிக்கலாமே...
என்று நானே பாடிக் கொண்டேன்:)ஒரே ஒரு சந்தேகம் .சிறிய எழுத்தாக இருந்தால் படிக்க முடியாது!!!அதனால் ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொன்னேன். 
பொன்னியின் செல்வன் சின்ன எழுத்து:(

வரிசையாக ஆசிரியர்களை நிற்க வைத்துப்
பெயர்களைப் படித்தார்.
அதில் தேறியது 6 புத்தகங்கள்.
சுகிசிவம்,
கல்கியின் பார்த்திபன் கனவு,
பட்டுக்கோட்டை பிரபாகரின் சில புத்தகங்கள்,
எஸ்.ராவின் இடக்கை.
தொலைபேசியில் சொல்லி முடித்த பத்தாவது நிமிடம்,
அவர் வண்டி வாசலில்,
புத்தகங்களை வாயில்படியில் வைத்துவிட்டு
சென்றுவிட்டார்.
24 மணி நேரம் காத்திருந்து,உள்ளே கொண்டுவந்து
நன்றாகத் துடைத்துவிட்டு பார்க்கும் போது மனம் நிறைய
ஆனந்தம்.
இதோ நாலு புத்தகங்களை முடித்தாகிவிட்டது.
ஒன்று பிடிக்கவில்லை. பார்த்திபன் கனவு கனஜோராகப்
போய்க் கொண்டிருக்கிறது. 
அன்பு லதாவிற்கு மனம் நிறை நன்றி.

புத்தகங்கள் படிக்கத் துணைக்கு ஏதாவது கொறிக்க வேண்டாமா?

கோதுமை மாவு+அரிசிமாவு+தயிர் கலந்து போண்டா.
வெங்காயம் கலக்காமல் இருந்தால் நல்ல 
உருண்டையாக வந்திருக்கும். கலந்ததால் மாவு இளகி
கொஞ்சம் வடையாகி விட்டது.
உளுத்தம் பருப்பு ஊற வைத்து வடை போடும்போது
''ஹை..... போண்டாவா'' என்று பசங்க கேட்கும் நினைவு வர
சிரிக்கத் தான் தோன்றியது.
பேரன் சாப்பிட்டுவிட்டு ''பாட்டி, பஜ்ஜி வெரி நைஸ்''
என்றதும் எல்லோருமே சிரித்தோம்.

ரோஜாவை எந்தப் பெயர் வைத்து அழைத்தாலும் அது ரோஜா தான்.
அதைப் போல மாவு எத்தனை வடிவம் எடுத்தாலும்
ருசிதான் முக்கியம் என்பதே தத்துவம்!!!!







16 comments:

ஸ்ரீராம். said...

பிடிக்காத புத்தகம் க்ரைம் நாவலா?  படித்த புத்தகத்தை மறுபடி மறுபடி படிக்க முடிகிறதா?  அதுசரி, PDF ல நிறைய படிக்கலாமே...  எழுத்துகளையும் பெரிசாக்கிக் கொள்ளலாம்.

கோமதி அரசு said...

பார்த்திபன் கனவு 29 வது பக்கம் போர் முரசு படித்து கொண்டு இருக்கிறேன்.

படிக்க முடியாத போது கண்களை மூடிக் கொண்டு சுஜாதாவின் சிறு கதை "குரல்" மற்றும் தேவனின் "தீபாவளி வியாபாரம்" படித்தேன் இன்று.
ண்ஹன்றாக இருந்தது. முதல் கதை நெகிழ்வு, அடுத்த கதை சிரிப்பு.
பட்டுக்கோட்டை பிரபகர் கதை படித்து இருக்கிறேன்.
சுகி. சிவம் அவர்கள் பேச்சு சில நேரங்களில் கேட்கிறேன்.
இடக்கை படிக்கவில்லை.

//பேரன் சாப்பிட்டுவிட்டு ''பாட்டி, பஜ்ஜி வெரி நைஸ்''//

பஜ்ஜி செய்முறைகுறிப்பும் படங்களும் அருமை.


//இங்கே வந்த பிறகு மகளின் தோழிகள்
அனைவரும் என் தோழிகள் ஆகிவிட்டார்கள்.//

அதுதான் வேண்டும்!

புத்தகம் கொடுத்த தோழி வாழ்க வளமுடன்.






Geetha Sambasivam said...

கடலைமாவுக்கு அங்கே தடாவா? அதனால் என்ன? பரவாயில்லை. வெங்காயத்தை இத்தனை பொடியாக நறுக்காமல் நீள நீளமாக நறுக்கிச் சேர்த்துப் பச்சைமிளகாய்(ஒத்துக்கும் என்றால்) கருகப்பிலை, கொத்துமல்லி, பிடித்தால் புதினாவும் சேர்த்து மாவைக் கொஞ்சம் கெட்டியாக வைத்துக் கொண்டு போட்டு எடுத்தால் வட இந்திய பஜியா! இதோடு பிடிக்குமானால் உ.கி.யும் வில்லை வில்லையாக நறுக்கிச் சேர்க்கலாம். இங்கே அடிக்கடி இது தான். வெந்தயக்கீரை, குடமிளகாய் இருந்தால் அதையும் சேர்ப்பேன். சில சமயங்களில் என்ன கீரை கைவசம் இருக்கோ அதுவும்.

நெல்லைத்தமிழன் said...

வெங்காய போண்டா அழகு... நானும் இன்று செய்யலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

புத்தகங்களைப் போலத் துணைவன் வேறு ஒன்றும் கிடையாது. அதுவும் நன்றாக எழுதப்பட்டிருந்த புத்தகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
படித்த புத்தகங்களை மீண்டும் படிக்கும்
போது எப்பொழுதும் புது வார்த்தைகள்
செய்திகள் கிடைக்கும் மா.
மிகத் தெரிந்த நட்பை நன்றாக அறியும் சந்தர்ப்பம்.

க்ரைம் நாவல் மிக விறுவிறுப்பு. 'இடக்கை'
ஈர்க்கவில்லை. முயற்சிக்கிறேன்:)

ஸ்ரீராம். said...

ஆமாம்.  எஸ்ராவின் சில புத்தகங்கள்தான் நன்றாய் இருக்கும்.  நீங்கள் சொல்வதுபோல சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்கும்போது புதுப்புது எண்ணங்கள் தோன்றும்.  எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி வாழ்க வளமுடன்.
ஆமாம் மகளின் நட்புகள் அனைவருமே இனிமையானவர்கள்.

அடிக்கடி சமையல் செய்முறைகளில் சந்தேகம் கேட்டுத் தெளிந்து கொள்வார்கள்.

நம்க்கும் செய்முறைகள் அனுப்புவார்கள்.

இந்த லதா மிக இனிமையான பெண். உண்மையில்
நல்ல பாக்கியம் இந்தப் புத்தகங்கள் கிடைத்தது.
ப.பிரபாகர் முன்பு படித்ததில்லை.

இப்பொழுதும் படிக்கும் போது அச்சுப் பிழைகள் நிறைய இருந்தாலும்
சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க முடிந்தது.
நீங்களும் பார்த்திபன் கனவு
படிக்கிறீர்களா? என்ன ஒரு ஆச்சரியம்.!!
சுஜாதாவின் சில கதைகளைக் கேட்கிறேன்.
கண் நோவு வந்தால் தொடர முடியவில்லை.
தேவனின் சௌந்தரம்மாள் , அப்படியே என் மாமியாரைப்
பார்ப்பது போல இருக்கும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ,அன்பு கீதாமா,
இதற்குத்தான் உங்கள் பின்னூட்டத்தைக் கவனிக்க வேண்டும்.
அருமை அருமை. கரெக்டாகச் சொன்னீர்கள்,
இங்கே எண்ணெய்,இனிப்பு,கடலை மாவு எல்லாம் மாதம் ஒரு முறைதான்:)))

இந்தமாவில் நிறைய கொத்தமல்லி,கருவேப்பிலை ,
காரமில்லாத பச்சைமிளகாய் சேர்த்தேன். பசலைக் கீரையும் சேர்த்திருக்கலாம்.
இந்த ஊர் வெங்காயம் தித்திக்கிறது.
மாவும் நீர்த்து விட்டது. நீங்கள் சொல்லி இருப்பது போல
நீட்ட வாக்கில் நறுக்கி இருக்கலாம்.
தோன்றவில்லை.
மிக மிக நன்றிமா.
காய்கறிகள் சேர்த்தால் வெஜிடபிள் போண்டாவாகப் பரிமளித்து
விடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
உண்மைதான்.
புத்தகங்கள் என்றும் நம்மை விட்டு அகலாத நண்பர்கள்.
நல்ல எழுத்து ஒரு அரிய பொக்கிஷம்.

தினசரி ஒரே மாதிரி செய்வது அலுத்துப் போகிறது.
ஏதாவது ஒரு மாற்றத்துக்கு இதை செய்யலாம்.
சின்னப் பேரனுக்கு வெங்காயம் இல்லாமல்
செய்து கொடுத்தேன்!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நீங்கள் கூறிய அணிவகுத்த புத்தகங்கள் அனைத்தும் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கும்.நானும் க்ரைம் நாவல் என்றால் உடனடியாக படித்து முடித்து விடுவேன். ப. பிரபாகர், ராஜேஷ் குமார் நாவல்கள் நன்றாக இருக்கும்.முன்பெல்லாம் சிறு வயதில் அம்மா வீட்டிலிருந்த போது தமிழ்வாணனின் சங்கர்லால் பிடித்தமான ஒன்றாக இருந்தது. திருமங்கலத்தில் இருக்கும் போது கூட லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்தபின் நேரம் என்பது கிடைப்பதேயில்லை. ஆனால் ஆர்வம் நிறைய உள்ளது. இப்போது கிடைக்கும் நேரத்தில் பதிவுலகத்தில் ஆர்வமாக வாசம் செய்கிறேன். தங்களது படிக்கும் ஆர்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.இப்போதுள்ள கால கட்டத்தில், மனம் அலையாமல் இருக்க இது போன்ற புத்தகங்களின் துணை அவசியம்தான்.

படிக்கத் துணைக்கு கொறிக்க செய்திருக்கும் பட்சணம் அருமையாக உள்ளது. செய்முறைகளும், படங்களும் நன்றாக உள்ளது.தங்களுக்கு உதவி செய்யும் உங்கள் மகளின் தோழிக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

காமாட்சி said...

எல்லாம் அருமையாக இருக்கும். அன்புடன்

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தகங்கள் புத்துணர்ச்சி தரும்
நூலகம் படம் மனம் கவர்கிறது சகோதரி

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நன்றி.
சென்னையில் என் பத்தக அறை என்ன ஆயிற்றோ
தெரியவில்லை.
ஆளில்லாத இடத்தில் அரித்துக் கொட்டும் ஜீவன் கள்
உள்ளே வந்திருக்கக் கூடாது..
படிக்கும் காலம் சிலசமயம் வாய்க்கிறது. நீங்கள் முதலிலிருந்தே
படித்து வருவது மிக மகிழ்ச்சி மா.
நாமெல்லாம் பருப்பு, மிளகாய் மளிகைப் பொருட்களைச் சுற்றி வந்த
காகிதங்களைக் கூட விடாமல் படித்தவர்கள் தானே.

உங்களுக்கும் மீண்டும் நேரம் வாய்க்கும்.
நீங்கள் சொல்வதே உண்மை.
வாழ்க்கையின் செய்திகள் பயமுறுத்தும் போது
புத்தகங்கள் ,அதுவும் நல்ல எழுத்து நல் வழி இருக்கிறது என்றே சொல்கிறது.

நம் இணைய எழுத்தும் சுவையே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு காமாட்சி மா. ஆமாம் எல்லாம் நன்மை
ஆகவே இருக்கும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
ஆமாம் பா. அந்த நூலகத்தில் என்னை இறக்கி விட்டு மகள் தன்
வேலைகளைக் கவனிக்கச் செல்வார்.

அமைதியாக உட்காந்து படிக்க,
காப்பி குடிக்க ஏதுவான இடம் நூலகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், புத்தகங்கள் ,ஜானகிராமன், ஜெயகாந்தன், பிவிஆர எல்லோருமே மிக மிக சுவாரஸ்யமாக்க் கதையை நகர்த்திக் கொண்டு
போகிறார்கள்.
அலுப்பதே இல்லை.அதுதான் மீள் வாசிப்பின் பெருமை.நன்றி மா.