Blog Archive

Saturday, July 20, 2019

ஒப்பந்தம் கையெழுத்தானது ....

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்

ஒப்பந்தம்  கையெழுத்தானது ....
+++++++++++++++++++++++++++
திருமணமான  ஐந்து வருடங்களுக்குள்   நான்கு  குழந்தைகள்

பிறந்தாகிவிட்டது ஜானு விற்கு. முதல் இரண்டும் இரட்டை
பிறவிகள் .
 பிறகு பிறந்தவர்கள்  மாதவனும் கோவிந்தனும்.
கணவரின் துணையில் குழந்தைகளை வளர்ப்பதில்
சிரமமே இல்லை. ராகவனின் அம்மா, ஒரு குழந்தையையாவது சென்னையில் தன்னிடம் வைத்துக் கொள்வதாகச் சொல்லியும்
இருவருக்கும் மனம் வரவில்லை.
அப்பொழுது ராகவன் தனியார் தொழிற்சாலை ஒன்றில்
 400 ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தார்.
ஆண்டுக்கொரு முறை போனஸ், பதவி உயர்வு
என்று மெச்சப்பட்ட காலத்தில்
அவரது தாத்தாவின்  உயில் பிரகாரம் 15 ஏக்கர் நிலம்,
தஞ்சை பாபனாசம் அருகே கிடைத்தது.

தந்தை சொல்படி அந்த நிலத்தைக் குத்தகை பார்த்தவருக்கே விற்றதில்
கிடைத்த பணத்தில் சிறிய பட்டறையாகத் தன் தொழிற்சாலையை
ஆரம்பித்தார்.

கடின உழைப்பும் ,நிறைய வாடிக்கைக்காரர்கள் சம்பந்தமும்
சேர்ந்து திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,சேலம் என்று விரிந்து
வளர்ந்தது.
இருபது வருடங்களில் பெண்கள் திருமணம் நடந்தது.

அடுத்த நான்கு வருடங்களில் புதல்வர்கள் திருமணம் முடிய
வாழ்க்கையின் அடுத்த ஒப்பந்தம் ஆரம்பித்தது.
மாப்பிள்ளைகள் ,மருமகள்கள் இவர்களுடன் குடும்பம் நடத்துவது
ராகவனுக்கு அவ்வளவு சுல்பமாக இல்லை.

கடமையைச் செய்துவிட்டு அளவாகப் பேசும் வழக்கம் அவருக்கு.
சத்தம் பிடிக்காது. பேரன்கள்,பேத்திகள் மட்டும் ஏகப் பிரியம்.
தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு பல இடங்கள் சென்று வருவார்.
வீடு முழுவதும் விளையாட்டுப் பொருட்கள் இறைந்து கிடக்கும்.

நான் வேண்டாம், நான் பெத்தது வேணுமா என்று
ஒரு மருமகள் சொல்வதைக் கேட்டு ஜானு வாய்விட்டுச் சிரித்திருக்கிறாள்.
அவரைப் புரிந்து கொண்டவள் அவள் ஒருத்திதான்.

 ராகவனின் எழுபதாம் வயது பூர்த்திக்கு  வந்திருந்த குடும்பத்தினர் அனைவரும்
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது,,

கோவிந்தனின்  மகன் வெளியே நின்றுகொண்டிருந்த
ஸ்கூட்டர் ஒன்றில் ஏறி விளையாடும்போது ஸ்கூட்டர் சரிய
குழந்தைக்கு அடிபடாமல் இருக்க,
ஜானு வண்டியைப் பிடித்தபடி விழுந்து விட்டாள். அவள்
காலில் அடிபட்டதும்,
ராகவன் துடித்துப் போனார்.
அவர் போட்ட சத்தத்தில்  குடும்பமே நடுங்கியது.

ஜானு எவ்வளவோ சொல்லியும் கேளாமல்
அவளை அப்படியே  தூக்கித் தன் வண்டியில் வைத்துக் கொண்டு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று
மாவுக்கட்டு போட்ட பின்னரே ஓய்ந்தார். பெண்களும் மருமகள்களும்
நன்கு ஒத்துழைத்து பீமரத சாந்தியும் நன்றாக நடந்தேறியது.

அப்பொழுது நினைவுக்கு வந்தது தங்கள் காசி,ரிஷிகேஷ் பயணம்.
ராகவனுக்குத் தான் பார்த்து ரசித்த கங்கைக்கரை,ஜானகிக்கு மிகப் பிடித்த
கோவில்கள்,ரிஷிகேஷ் ஆஸ்ரமம், தான் 10 லட்சரூபாய் மதிப்பீட்டில்
வாங்கி வைத்த வசதிகள் நிறைந்த குடில் எல்லாம் அக்கரைப் பச்சையாக
மனதில் வலம் வந்தன.
நிறைவேறாமல் செய்தது திடீரென்று வந்த வயிற்று வலியும் தொடர்ந்த சிகித்சைகளும்.



குடும்பத்திலிருந்து விலகி மனைவியுடன் வானப்ரஸ்த வாழ்க்கைக்கு
வழிதேடுகிறார் ராக்வன். ஜானுமா விடுபடுவாளா. பார்க்கலாம்.







22 comments:

ஸ்ரீராம். said...

நிகழ்வுகள்... நிகழ்வுகள்... ஒரு குடும்பத்தின் நிகழ்வுகள்... சுவையாய்ப் படித்து வருகிறேன். மனைவிமேல் கணவனுக்கு அந்த வயதில் 100 சதவிகித அக்கறை.

ஸ்ரீராம். said...

முதல் பாடல் - நமக்குத் தெரியாமல் இப்படியொரு எஸ் பி பி பாடலா என்று பார்த்தேன். பார்த்தால் அது மலேஷியா வாசுதேவன். பிராப்தம் பாடல் எப்போதுமே சுகம்.

கோமதி அரசு said...

அன்பின் சோலைவனம் பாடல் அருமை.
மகிழ்ச்சியான குடும்ப உறவுகள் . உறவுகளில் விரிசல் வராமல் அன்பாய் வானப்ரஸ்த வாழ்க்கை வாழலாம்.

நிறைய கதாபாத்திரங்களில் சார், அம்மா, அப்பா நீங்கள் வந்து போவதை (தெரிவதை) தடுக்க முடியவில்லை.

வயது ஆக ஆக ஆண்மகன் மனைவி குடும்ப சுமையில் மூழ்கி போவது பிடிப்பதில்லை . அவளை காப்பாற்றி எங்காவது நிம்மதியாக வாழ வைக்க விரும்புகிறான். மனைவி கணவன், குழந்தைகள் என்று அதிலிருந்து மீள விரும்புவது இல்லை.

ஜானுமா விடுபடுவாரா என்பதை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
ஆமாம் நானும் கவனித்தேன். வாணி ஜயராம், மலேஷியா
வாசுதேவன்.
மூன்று குடும்ப நிகழ்வுகளை ஒவ்வொன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நீங்கள் படித்துக் கருத்து சொல்வது மனசுக்கு உற்சாகம்.
சீக்கிரத்தில் முடிவேனா என்கிறது.ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
வேலைகளுக்கு நடுவில் வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி மா.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
எனக்குத் தெரிந்ததெல்லாம் இவரும் அம்மா அப்பா,எங்கள்
மாமியார், அவரது ஓரகத்திகள்.
இந்த சொந்தங்களின் கதைகளைப் பிணைப்பதில்
மனம் ஆறுதல் அடைகிறது.

எத்தனை அழகாகக் கருத்து சொல்கிறீர்கள் அம்மா.
பாடல்களைக் காட்சி இல்லாமல் இணைத்தால்
மனம் டிஸ்ட் ராக்ட் ஆவதில்லை.
நமக்கு வானொலி கேட்டே வழக்கமாகி விட்டது இல்லையா.

ஜானுவின் ஆசையா,ராகவனின் ஆசையா இதுதான்
தீர்மானிக்க வேண்டும்.பார்க்கலாம்.

KILLERGEE Devakottai said...

பொருத்தமான பாடல்களுடன் சொல்லி வரும் நினைவலைகள் அழகு அம்மா.

ஜீவி said...

// அடுத்த நான்கு வருடங்களில் புதல்வர்கள் திருமணம் முடிய வாழ்க்கையின் அடுத்த ஒப்பந்தம் ஆரம்பித்தது.//

ஓகோ! இந்த ஒப்பந்தமா?.. வாழ்க்கை ஒப்பந்தம்.
வழக்கமான கணவன்-மனைவி என்றாகும் திருமண பந்தந்தைத் தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்று பகுத்தறிவாளர் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொண்டவர்கள் அன்று அழைத்தார்கள்.

அந்த ஒரே ஒரு ஒப்பந்தந்தோடான நீட்சி அதோடு முடிந்து விடாமல் அடுத்து பையனோடு, பெண்ணோடு, மருமகளோடு, மருமகனோடு என்று எப்படியெல்லாம் நீளுகிறது என்பது உன்னிப்பான பார்வை.

எவ்வளவு யோசனையுடன் தொடருக்கான தலைப்பை வைத்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆழ்ந்த பார்வை. சுவாரஸ்யமாக இருக்கிறது. தொடருங்கள்.

ஜீவி said...

//கடமையைச் செய்துவிட்டு அளவாகப் பேசும் வழக்கம் அவருக்கு. சத்தம் பிடிக்காது. //

இரண்டே வரிகளில் ஒரு கேரக்ட்டரை எவ்வளவு அழகாக
படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள்.

இந்த மாதிரி ரத்ன சுருக்கமாக எழுத முடியாத இயலாமையை உணர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகளுடன் பாடல்கள் சுவாரஸ்யம்...

Geetha Sambasivam said...

அருமையான பாசப்பின்னல்கள். அதை சிக்காமல் தடுக்க முயலும் ஜானு ஜெயிப்பாளா? அல்லது தனித்துப் போக நினைக்கும் ராகவனா? எனக்கு நாங்க இந்த ஊருக்கு வரும்படி நேர்ந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து கஷ்டப்படவில்லை எனில் அம்பத்தூரில் தான் இருந்திருப்போம். ஆனால் ரங்கன் இங்கே அழைத்து விட்டான். "அங்கே சுத்தி இங்கே சுத்தி ரங்கனைச் சேர்!" என்பார்கள். அது போல் ரங்கன் நிழலுக்கு வந்துட்டோம். ஜானுவுக்கு என்ன ஆகிறதோ, பார்க்கலாம்.

நீங்கள் எழுதும்போது நிகழ்வுகள் கண் முன்னே நடப்பது போலவும் அந்தப் பேச்சுக்கள் எல்லாம் காதுகளில் விழுவது போலவுமே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
எங்கள் எல்லோருடைய குடும்பங்களும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான்
வாழ்வும் சுலபமாகச் சென்றது. மனம் நிறை நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவீ ஸார்.

நம் சப்தபதியை விடப் பெரிய ஒப்பந்தம் எது.
அதைப் பின்பற்றினாலே போதும்.

சுருங்கச் சொன்னால் கதை கதையாகப் பரிணமிக்காது.
இது ஒருபக்கக் கதை இல்லையே.
எனக்கு வாழ்க்கை என்னும் மகா பெரிய கப்பலை
கவனமாகச் செலுத்தும் மாலுமியிடம் மரியாதை உண்டு.
என் தந்தையும்,இவரும் ,மாமனாரும் குறைவாகப் பேசுபவர்கள்.
அது மனதில் பதிந்ததால் வந்த வார்த்தைகள்தான்
ராகவனைப் பற்றிய விளக்கம்.
இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து நீங்கள் கருத்து
பதிவது மிக மகிழ்ச்சி சார்.
நீங்கள் எழுதுவது சுருக்கமாக இருந்தால் ரசிப்பது எப்படி.

அநுத்தமா,லக்ஷ்மி இவர்களைப் படித்து வளர்ந்த மனம்
அதே சாயலில் கதை எழுதுகிறது.இனிய மாலை வணக்கம் சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். எழுதுவதில் நான் இங்கிருப்பது மறந்து அவர்களுடன் சென்று விடுகிறேன்.
அப்போது கேட்ட பாடல்களும் இணைகின்றன். மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
உடல் நலமாப்பா.


கட்டிய சொந்த வீட்டை விட்டுப் பிரிவது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் உங்களுக்கு.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
என் பெற்றோரை நினைத்துப் பார்க்கிறேன்.
அவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து எடுத்துத் தம்பிகளுடன் கட்டிய வீடுகளில் அவர்களுக்கென்று ஒரு அறை கிடைக்கவில்லை.

அது மட்டும் இல்லை.ஓய்வாக உட்கார்ந்த நேரம் குறைவு.
அம்மாவுக்கு இதய நோய் வந்த போது மட்டும் அப்பா ,அம்மாவைவிட்டு நகராமல்
பார்த்துக் கொண்டார்.
அம்மாவுக்கு வீட்டு வேலை பேத்தியைப் பார்த்துக் கொள்வது எல்லாம் இருந்தது.
வெளியில் செல்லும் அத்தனை காரியங்களையும் அப்பா கவனித்துக் கொண்டார்.

அப்பாவின் திடீர் மூப்பை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லைமா.
பல நிகழ்ச்சிகளின் கோர்வை இந்தக் கதையாகிவிட்டது.
உங்கள் நினைப்புகளும் இதில் சேருவதில் மகிழ்ச்சி.
என்றும் நலமாக இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நிகழ்வுகள்... நினைவுகள்... பல விஷயங்களை மறக்க முடிவதில்லை இல்லையாம்மா....

வானப் பிரஸ்தம் போக முடிந்ததா எனத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

அவ்வப்போது தொடரை மேய்கிறேன். முழுவதும் முடித்தபிறகு ஒரே மூச்சில் படிக்க எண்ணம்.

நீங்க எழுதினா, உங்க அனுபவம், கேட்ட கதைகள் எல்லாம் சேர்ந்து கலந்து கட்டிய ரசனைக் கோர்வையா இருக்கும்.

நீங்க சொல்றீங்க, உங்க அப்பாவுக்கு அவர் சேர்ந்து கட்டிய வீட்டில் ஒரு அறைகூட இல்லை என்று. அதனால் ஒரு குறையும் நேர்ந்திருக்காது.அவர் மனது விசாலமாக இருந்திருக்கும். அவ்வளவுதான்.

மாதேவி said...

ஜானு....ராகவன்...விதி....பொறுத்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, ஆமாம்
விதி செல்லும் வழி நன்மையில் முடியட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட்.
நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும் இல்லையா மா.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,

ஆமாம் இதுவே எனக்கு ஆதாரமாகிறது மா.
வேறு பொழுது போக்கு இல்லை. எழுதுவது
மனதை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

Something to look forward to.
அப்பா,
நீங்கள் சொல்வது போலத்தான் இருந்தார்.
பலவித சங்கடங்கள் அவர்களுக்கும் கூட இருந்தவர்களுக்கும்.
அப்பொழுது தான் நான் நினைத்தேன் ,இன்னும் ஒரே ஒரு ரூம் இருந்திருக்கலாம்.
அவர்களுக்கென்று ஒரு இடம் இருந்திருந்தால்
பேசிக்கொள்ள ,சில விஷயங்களில் முடிவெடுக்க
எத்தனையோ உதவியாக இருந்திருக்கும்.
அவருக்கு விசாலமான இதயம் தான்.
எல்லோரையும் பொறுத்துக் கொண்டார். என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

உங்களுக்கா எழுத வரவில்லை எழுதத் தெரியவில்லை ஆழ்ந்து கருத்து சொல்லத் தெரியவில்லை?!!!!!!!!!!!!!!!!! இனிமேல் இப்படிச் சொன்னீங்கனா அப்புறம் எனக்கு ரொம்பக் கோபம் வந்துரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!சொல்லிப்புட்டேன்! ஹா ஹா ஹா ஹா ஹா....இவ்வளவு அழகா எழுதிட்டு...முன்னாடியும் ரொம்ப அழகா சொல்லுவீங்க ஒவ்வொரு கதையும் ரசித்துப் படிப்பேன். அந்த அன்பு, வாத்சல்யம் என்று கதையில் அன்பு ததும்பும் ஒரு நல்ல குடும்பம் என்று ரொம்ப பாசிட்டிவான நகர்தலுடன் என்று மனதை ரொம்ப ஹேப்பியாக வைக்கும்..

செம செம செம கதை!! சுருக்கமா அதே சமயம் என்ன தெளிவா கதாபாத்திரங்கள் மனதுள் பளிச்சிடுகின்றன....வாவ்! ராகவனுக்கு ஏனோ குடும்பத்துடன் இருப்பதில் அசௌகரியங்கள் அதை ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள். (நானாக இருந்தால் நீட்டி முழக்கியிருப்பேன் ஹா ஹா ஹா) எனவே மனைவியுடனாக தனிமையை விரும்புகிறார். ஆனால் ஜானுவோ தன் மக்களை விட்டு வெகு தூரம் போவதில் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

மருமகளின் கமென்டை ரசித்தேன்.

ஒப்பந்தம் தலைப்பின் சாரம்ஸம் வெளியாகும் நேரம் வந்துவிட்டது போலத் தெரிகிறது..பார்ப்போம் ஜானு ராகவனுடன் என்ன ஒப்பந்தம் செய்யப் போகிறாள் என்று...ஆவலுடன் வெயிட்டிங்க்!

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அம்மா. எல்லாம் கண் முன்னே நடப்பது போல...

கீதா



வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
அப்பாடி எப்படித்தான் ரசிக்கிறீர்கள்.
சாதாரண மனிதர்கள். ஆனால் சென்சிடிவ் கணவன்.

வயதானால் குழந்தைகள் ஆகும் பெரியவர்கள்.
ஏதோ ஒரு கட்டத்தில் மனைவியை மிஸ் செய்துவிட்டார். அது அவரது வேலையோ
இல்லையானால் குடும்பமோ.

இப்பொழுது அந்த வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறார்.
தெம்பிருக்கும் வரை ,உடல் நலம் கெடாத வரை
அவர் இஷ்டப்படி இருக்கட்டுமே.

இதோ பேத்தி திருமணத்துக்கு வருவார்கள்.
பேரன் உப நயனம் .நல்ல படியாகத் தொடரட்டும் வாழ்க்கை.