Blog Archive

Sunday, July 21, 2019

இருவர் மனம் ஒரே வழி.5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்

இருவர் மனம் ஒரே வழி.
 தரையில் நெடுகப் படுத்தபடி,தம்பி ஸ்ரீனிவாசனின் இரண்டாவது பேரனுடன் கொஞ்சிப் பேசி 
சிரிக்க வைத்துக் கொண்டிருந்த கணவரைப் பார்த்து
ஜானுவுக்கு சிரிப்பு வந்தது. அந்த மூன்று மாதக் குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து கிளு கிளுவென்று சிரிப்பைக் கொட்டியது..

இதை எல்லாம் விட்டுவிட்டு கிளம்பி விடுவாரா இவர். ரிஷிகேசத்துல எந்தக் குழந்தையைக் கொஞ்சுவார். ஏன் இப்படி ஒரு ஏக்கம் இவருக்கு.
பாவமாக இருந்தது அவளுக்கு.
அகஸ்மாத்தாகப் பார்வையை உயர்த்திய ராகவன்,
கண்ணாலையே கேள்வி எழுப்பினார்.
முகத்தில் புன்னகை மலர்ந்தது.

இன்னும் உனக்கு சந்தேகமா. நம்மால் முடியாது என்று நினைக்கிறாயா.//

அதுதான் டாக்டர் உங்களுக்கு செர்டிஃபிகேட் கொடுத்துவிட்டாரே
அதைப் பற்றிக் கவலை இல்லை.
இந்த சுற்றுச் சூழல் அங்கே இருக்குமா. வெறும் யோகா, நடை, மற்ற
வயோதிகர்களூடன் பேச்சு, கங்கைக் குளியல்,புத்தகம்
மாலை நேரத் தொலைக் காட்சி இது போதுமா.

ஒன்றை விட்டுவிட்டாயே. நீயும் இருப்பியே.

//உண்மைதான். குழந்தைகள் இரண்டு நாட்களில் வருகிறார்கள்.//
ஆமாம், உன் பெண்கள் 51 வயதுக் குழந்தைகள்,
உன் பையன்கள் 47 வயது பாப்பாக்கள். உன் பார்வை இன்னும்

45 வருடங்களுக்கு முன் தான் இருக்கிறது.

மன வேகம் குதிரை வேகம்.

நாங்கள்  ஸ்விஸ் பேத்தியுடன்.

சரி.அப்படியே இருக்கட்டும். அவர்கள் நம் வீட்டை, வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள உங்கள் அனுபவத்துணை வேண்டாமா.


எனக்கு யார் வந்து புத்திமதி சொன்னார்கள். இருவரும் 
இந்தக் கம்பெனிப் பொறுப்புகளில் புகுந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
 இதோ பார், அவர்கள் வந்ததும் நீ  தெளிவில்லாமல் இருக்காதே.
உன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லு.
உனக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன்
என்று அவள் அருகில் அமர்ந்து சொன்னார்.

இப்படிப் பேசிப் பேசியே என்னை நீங்கள் மடக்கிவிடுகிறீர்கள்.
என்று சிரித்தபடி அவருக்கு காப்பி 
கொண்டு வரப் போனாள் ஜானு.
மீண்டும் பாப்பா அருகே உட்கார்ந்து கொண்டார் ராகவன்.

அடுத்த இரண்டு நாட்களில் பரபரப்பாக் இருந்தது
ஸ்ரீனிவாசன் இல்லம்.
பெற்றோருக்குத் தள்ளாது,
அங்கே மருத்துவ வசதி போதாது.
சட்டென்று உடல் நலம் பார்த்துக்கொள்ள தில்லி வரவேண்டி இருக்கும்

இப்படி நீண்டது அவர்கள் வாதம்.
ராகவன் அசைந்து கொடுப்பதாக இல்லை.
அம்மாவை அசைத்துப் பார்த்தார்கள்.
அவள் அப்பா எங்கெயோ அங்கே நானும்.. என்று விட்டாள்.

ஆவணி பிறந்ததும் தான் ரிஷிகேசம் கிளம்புவதாகவும்,
யார் வேண்டுமானால் அங்கே வரலாம். எல்லோருக்கும் இடம் உண்டு
என்று அவர் சொன்னதும் ஜானகியின் மனம் சிலிர்த்தது.

பழைய திண்மையும், குரல் உறுதியையும் பார்த்தாள்.
இவருடன் செல்வதில் எனக்கென்ன தயக்கம்.
என் வாழ்வு ஆரம்பமானது இவருடன் தானே,.
அன்றிலிருந்து இன்று வரை அந்த நேசத்துக்கு  ஒரு குறை இல்லாமல் தான் 
நடந்திருக்கிறார்.
யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.
இனி இருடிகேசன் வழி காட்டுவான். நம்பிக்கையுடன் அடுத்த அடியை அவருடன் வைப்பேன்
என்று மனதோடு உறுதி சொன்னாள்.

சட்டென்று லேசான மனத்துடன், ஏன்னா அங்கே இப்போது
குளிருமா என்று கேட்டவளை ஆதுரத்துடன் பார்த்தார் ராகவன்.

பிறகென்ன, புதுக்கோட்டை சென்று ,தேவையான உடைகள்,
மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுப் பொறுப்பை மருமகள்களிடம் 
ஒப்படைத்துக் கிளம்பியே விட்டார்கள்.
அடுத்த ஒரு வாரத்தில் சென்னை /தில்லி எக்ஸ்ப்ரசில்
இருவரும் ஏறியாச்சு. ஒரே ஒரு மாற்றம்,ஸ்ரீனிவாசனும் அவர்களுடன் வந்தான்.
அத்திம்பேர் ,அக்காவை ஒழுங்காக செட்டில் செய்துவிட்டு
வந்துவிடுவதாக அவன் திட்டம்.
சென்ட்ரலுக்கும், கூடி இருந்த தங்கள் மக்களுக்கும் 
மகிழ்ச்சியுடன் கை ஆட்டி விடை கொடுத்தபடி
இருவரின் புதுப்பயணம் ஆரம்பித்தது.
வானப்ரஸ்த ஆஸ்ரமம்  ரிஷிகேஷ்.

சுபம்.














20 comments:

வெங்கட் நாகராஜ் said...

ரிஷிகேஷில் வானப் பிரஸ்தம் ஆரம்பம்.

ஹரித்வார், ரிஷிகேஷ், பிருந்தாவன், மதுரா போன்ற இடங்களில் இப்போது நிறைய ஃப்ளாட்டுகள் கட்டி இப்படி வருபவர்களுக்கு விற்கிறார்கள். நிறைய வந்து விட்டது இப்படி.

ஸ்ரீராம். said...

சுபமா?

அங்கு எப்படி செட்டில் ஆனார்கள் என்ற விவரம் எல்லாம்?

எப்படியோ..

'இனியெல்லாம் சுகமே..' என்றிருக்கட்டும்.

ஸ்ரீராம். said...

பாடல் சுவையான பாடல். புகழ்பெற்ற படம்!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட். இன்று என்ன சமையலோ.

இது போலக் குடில்கள் இருப்பதை பத்து வருடங்கள் முன்பே கேள்விப்பட்டேன்.

அங்கே இருந்துவிட்டுத் திரும்புபவர்களும் இருக்கிறார்கள்.
நலமாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம் மா.
ராகவனின் பொறுப்பு பெண்டாட்டியைப் பார்த்துக்
கொள்வது. எதற்கும் ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு இன்னோரு கதை எழுதுகிறேன்
சரியாம்மா.

சுபமாக இருக்கட்டும்.
எல்லோருக்கும் உண்டான இன்பம், துன்பங்கள்
பட்டாகிவிட்டது. இனி சுகமாக இருப்பார்கள்.
அவர்கள் பையன், பெண் எல்லாம் அங்கேயும் வருவார்கள்.
இப்பொழுது ரயிலில் போக வேண்டாம்.
பறந்து விடலாம். இன்னும் சுலபம்.நன்றி ராஜா.

கோமதி அரசு said...

//என் வாழ்வு ஆரம்பமானது இவருடன் தானே,.
அன்றிலிருந்து இன்று வரை அந்த நேசத்துக்கு ஒரு குறை இல்லாமல் தான்
நடந்திருக்கிறார்.
யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.
இனி இருடிகேசன் வழி காட்டுவான். //


இருவரின் புதுப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.
எனக்கு நீ, உனக்கு நான் என்று ஒருத்தருக்கு ஒருவராக பழங்கதை பேசி , இயற்கையை ரசித்து வாழட்டும்.
வரும் உறவுகளுடன் மகிழ்ந்து இருக்கட்டும்.

பாடல் பொருத்தம்.
நல்ல வழி காட்டுவான்.
ஸ்ரீராம் சொன்னது போல் இனி எல்லாம் சுகமே!

KILLERGEE Devakottai said...

இனி எல்லாம் நலமாகட்டும் வாழ்க நலமுடன்...

ஜீவி said...

இனிமேல் தானே கதை அரம்பிக்கப் போகிறது?
அதற்குள் சுபம் போட்டால் எப்படி?
இங்கேயோ, அங்கேயோ இருக்கப்போவது நாம் தானே?
-------------------

நானாயிருந்தால் ஒரு கற்பனை:

"காலம்ப்ற டிபன் என்னப்பா?"
"இட்லி, சட்னி.."
"தொட்டுக்க மிளகாய் பொடி, நல்லெண்ணை கிடைக்குமா?"
"இங்கே எல்லாம் தீபத்திற்குத் தான் ஸார் நல்லெண்ணை யூஸ் பண்ற வழக்கம்."
"அதிலேந்து தான் கொஞ்சம் எடுத்து வாயேன்.."
அவன் தலையைச் சொரிய்...
"ஓக்கே.. ஓக்கே... புரிஞ்சது.. நீ எடுத்து வா..."

Thulasidharan V Thillaiakathu said...

ஓ இருவரும் ரயில் ஏறியாச்சா...இருவரும் அங்கு சந்தோஷமாக இருந்தால் நலமே.

ரிஷிகேஷ் இப்படியஆன இடங்களில் டெம்ப்ரரியாகத் தங்கல், பெர்மனென்ட் தங்கல் என்று பல வந்துவிட்டன பல வருடங்கள் முன்பே. சிலர் ரெசார்ட் கூட வாங்கிப் போட்டிருக்காங்க அவ்வப்போது போய்த் தங்கி விட்டு வராங்க. அல்லது உறவினர்கள் வரும் போது ஹரித்வார் ரிஷிகேஷ் என்று சென்று அங்கு தங்கி ட்ரெக்கிங்க், ராஃபிட்டின் என்றும் செய்து வராங்க.

இவர்கள் வனப்ப்ரஸ்தம். நலமுடம் இருக்கட்டும். ஜானு கணவர் என்று போயிருந்தாலும் அவள் மனதில் குழந்தைகளைப் பற்றி எண்ணங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் என்று தோன்றுகிறது அதுதான் அம்மா!!!! தாய் மனம்.

அடுத்து என்ன என்று சொல்லுங்கள் அம்மா...என்னவோ தெரியவில்லை அவர்கள் அங்கு சென்றாலும் கொஞ்சம் நாள் இருந்துவிட்டு மீண்டும் குழந்தைகளுடன் இருக்க வர வேண்டும் என்றே தோன்றுகிறது. குழந்தைகளுடன் இல்லை என்றாலும் அட்லீஸ்ட் அவர்களின் அருகேயேனும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

முந்தைய பகுதி இப்பகுதி பாடல்கள் எல்லாம் சூப்பர்/...

கீதா

மாதேவி said...

புது பயணம் நலமாகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
முடிந்தவரை நன்மை செய்வோம். பிறகு தள்ளி இருக்கலாம்
என்ற திட்டத்தை மாமியாரே சொல்வார்.

மக்கள் மனை என்று ஒட்டிக் கொள்பவர்கள்
சில மகிழ்ச்சி சில அல்லாதவைகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.

சிலருக்குக் குடும்பமும் குழந்தைகளும் ஒட்டி இருப்பது பிடித்திருக்கிறது.
ராகவன் ஒதுங்கிக் கொள்ள நினைத்தார்.
ஜானு மாவுக்கு ஏக்கம் இருக்கத்தான் செய்யும்.
வாழ்வில் சில நேரங்களில் நமக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.
அவளால் அவரைத்தனியே விட்டுவிட மனம் இல்லை.
தவறாமல் படித்துப் பின்னூட்டமும் இட்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தேவகோட்டை ஜி.
நல்ல நேரமாக அவர்களுக்கு வாழ்க்கை அமையட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
விருந்தாளிகள் வருகையால் தாமதமாகி விட்டது.
ஆமாம் புதுக்குடித்தனம் ஆரம்பம்.
அங்கேயும் உடல் சுகத்துடன் இருக்க வேண்டும்.
ராகவனுக்கு அங்கு போய் புதுத் தெம்பு வந்து விட்டது என்றே
சொல்ல வேண்டும்.
ஜானுமாவின் கணினிப் பயிற்சி ஆரம்பித்துப்
பேரன் பேத்திகளுடன் தொடர்பு கொண்டிருந்தாள்.
ஆஹா உங்க கற்பனை இதயத்துடன் ஒட்டிப்
போகிறதே. அதற்கென்ன, ஜானு
சமையலறையைக் கைவிடவில்லையே.

அவள் சமையலில் இன்னும் சுவை கூடியது.
கங்கைக் கரையும், நல்ல காற்றும்
அவர்களுக்கு இனிமையாகத் தான் இருந்தன.

தம்பிகளும், அவர்கள் மக்களும் முறை வைத்துக் கொண்டு
வந்து பார்த்தார்கள்.
சொல்லப் போனால் இன்னும் பத்துவருடங்களில்
அவர்கள் கூட அங்கே வரச் சான்ஸ் இருக்கிறது..
ராகவன் மீண்டும் இடம் பெயர்வாரோ ஹாஹா.
நல்ல கற்பனைதான். உங்கள் கருத்துகள் இந்தக் கதைக்கு வளம் கூட்டின.
மிக மிக நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மா தேவி நல்லதே நடக்கட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நீங்கள் சொல்வது மிகப் பெரிய உண்மை.

அன்னை உள்ளம் எப்பொழுதும் மாறாது. ஆனாலும் முதுமை வந்தபிறகு
கணவர் பிரதானமாகிறார்.
ஆக வேண்டும்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதுவும் அம்மாவின் ஆதரவில் இருந்துவிட்டு
அது திடீர் என்று விலக்கப் பட்டால்
பெண்கள் முக்கியமாக மிக அவதிப் படுவார்கள்.

அம்மா இல்லாமல் ஒரு பிறந்தகம் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது

யாருக்குத் தெரியும். ராகவனே மனம் மாறி மீண்டும்
சென்னைக்கு வரலாம். காலம் பல மாயம் செய்யும் மா.
நன்றி ராஜா. ஆமாம் பாடல்கள் வசதியாக அமைந்தன.
நன்றாக வளமுடன் இருங்கள் அம்மா.

துரை செல்வராஜூ said...

பதிவுகளைப் படித்து விடுகின்றேன்.. ஆனால்
எல்லாவற்றுக்கும் கருத்துரை இடுவதற்கு இயலாத சூழ்நிலை... மன்னிக்கவும்...

ஸ்ரீ ராகவன் தம்பதியர்க்கு -
என்ன ஒரு ஞான வைராக்யம்!...

அன்பும் அருளும் என்றும் நிறைந்திருக்கட்டும்...

திண்டுக்கல் தனபாலன் said...

சுபம்...

மகிழ்ச்சி...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வரஜு,
அதனாலென்ன பரவாயில்லை மா. நீங்கள் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி. வேலைப் பளு, வெய்யில்,
இணையம் கிடைக்காதது என்று எத்தனையொ
பிரச்சினைகள் அங்கே. வாழ்க நலமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நன்றி.
அங்கே நீர்வளம் எப்படி இருக்கிறது.