Blog Archive

Wednesday, June 19, 2019

மனம் வசப்பட்டால் வாழ்க்கை நேராகும் 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.

மனம் வசப்பட்டால் வாழ்க்கை நேராகும் .



ராமேஸ்வரம் விரைவு வண்டி,
பாம்பன் பாலத்தைக் கடந்த போது, ஜன்னல் வழியே அலைகளை வெறித்த
வண்ணம் அமர்ந்திருந்த அகிலம்
மனமும் அலை பாய்ந்தது. இந்தக் குழந்தைகள் மட்டும் இல்லாவிட்டால்
இப்படியே குதித்து விடுவேனே.
அப்பாவும் நேரில்லை. அம்மாவும் இறந்து விட்டாள்
என்றால் அந்தக் குழந்தைகளின் கதி என்ன ஆகும். மாமியார் மாமனாருக்கு
மகாதேவன் கடைசிப் பிள்ளை.
 மாமனார் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

அவர் இவ்வளவு தூரம் தன் மேல் பாசம் வைத்திருப்பதால்
ஏதோ தீர்வு காண விழைகிறார்.
நான் நினைத்தது போல எதையும் செய்ய முடியாது.
பொறுத்துதான் பார்க்க  வேண்டும்.
அந்தப் பொறுமையை அம்பாள் தான் அளிக்க வேண்டும்.
உடனே பெற்றொர் நினைவு வந்து  கண்களில் நீர் வடியத் தொடங்கியது.

கூடவே வரும் யாத்திரீகர்கள் நினைவு வந்து ஜன்னலை நோக்கித் திரும்பிக்

கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
கடைக்கண்ணால் அவள் செய்கையைக் கவனித்த மகாதேவன் மனம்
சிறிதே கலங்கியது.குற்ற உணர்வு மேலிட இனி வரும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்க ஒன்றும் புலப்படவில்லை.

உலகத்தில் இதெல்லாம் புதிது இல்லையே. கோவலன்
 காலத்திலிருந்து நடப்பதுதானே.
இவளுக்கு என்ன குறை வைத்து விட்டேன்.
வீடு,நல்ல பெற்றோர்,குழந்தைகளுக்கு நல் வாழ்வு
பாதுகாப்பு எல்லாம் இருக்கிறதே.
எல்லாம் சரியாகி விடும் என்னால் நவனீதத்தைக் கைவிட முடியாது.
நற்குலத்துப் பெண்டிரை விட உயர்ந்தவள்.
அப்பா மனம் மாறும் என்று தீர்மானத்துடன்
அகிலத்தை நோக்கி// நாம் இறங்கணும்// என்று சுருக்கமாகச் சொல்லி
ராமேஸ்வரம் நிலையத்தை எதிர் நோக்கினான்.
அங்கு சுழன்றடித்துக் கொண்டிருந்த காற்றுக்கு
நடுவே அவன் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
அகிலத்தின் பெற்றோர் கனிவு கண்களில் மின்ன
இவர்களை வரவேற்றனர். அகிலம்,மகாதேவன் இருவருக்குமே
அதிர்ச்சி. அகிலம் ஒரு நிமிடத்தில் தன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி  தன்  அம்மாவை அணை த்துக் கொண்டாள் .

எப்படிம்மா இங்கே நீங்கள் என்று திணறினாள்

சம்பந்தி குழந்தைகள் அங்கே பரிகாரம் செய்ய
வருகிறார்கள் என்று  தொலைபேசியில் சொன்னார் அம்மா.
//////உங்களுக்குத் துணையாக எங்களை வரச்சொன்னார்.
நேற்று இதே ரயிலைத்  திருச்சியில் 

 பிடித்து  இங்கே வந்தோம் . ஆடிக்காற்றின்  பொது
ரயிலைப் பாம்பனிலேயே நிறுத்தி விடுவார்களாம்.
அப்படி ஒன்றும் நேராமல் நீங்கள்  வந்து சேர்ந்தது நிம்மதி. சங்கர மடத்தில் தங்க
ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று கோவிலுக்குப் போய்விட்டு வந்து விடலாம். நாளை சமுத்திர ஸ்நானம்
முடித்துக் கொண்டு தேவிப் பட்டினம் போய் வரலாம்.

அடுத்த நாள்  நீங்கள் புதுக்கோட்டைக்குத் திரும்பலாம்.
நாங்களும் உங்களுடன் திரும்புகிறோம்
சரியா மாப்பிள்ளை//// என்றார் அகிலாவின் அப்பா .
திகைப்பிலிருந்து மீளாத மகாதேவனுக்குத்  தலை ஆட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அடுத்த பதிவில்  பூர்த்தி செய்து விடலாம்.



13 comments:

ஸ்ரீராம். said...

அகிலம் அம்மாவின் பெற்றோர் அங்கு வந்திருப்பது ஏதோ மறைமுக திட்டம் இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

பாடல் மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி அக்கா.
அகிலம் மாமனார் நம்பிக்கை வீணா போகாது என்று நினைக்கிறேன்.

அவர்களுக்கு மாப்பிள்ளையின் விஷயம் தெரிந்தும் அப்படி நடந்து கொள்கிறார்களா? அல்லது தெரியவில்லையா என்றும் தெரியவில்லை.

தெரிந்து இருந்தால் அகிலம் பெற்றோர்கள் மாப்பிள்ளையிடம் மரியாதையாக நடந்து கொள்வது அவர்கள் பெருதன்மையை காட்டுது.

நலமே விளைய ஆசை.

KILLERGEE Devakottai said...

ஸ்ரீராம்ஜியின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
முடிவில் அற்புதமான பாடல். "நாலு வேலி நிலம்" அருமை அம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய மாலை வணக்கம்..
அகிலாவின் பெற்றோர்களிடம் மகனைப்
பற்றி ஒன்றும் சொல்லவில்லை
அந்தப் பெரியவர். செய்ய வேண்டிய பரிகாரங்களைப் பற்றி
ஒன்றும் தெரியாது அவர்களுக்கு.
உதவி செய்யுங்கள் என்று சம்பந்தியிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த தம்பதியைக் காபந்து செய்யவே அகிலத்தின் பெற்றோரை
வரவழைத்தார்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
நம்பிக்கை ஒன்று தானே நம்மை நடத்துகிறது.
அகிலத்தின் பெற்றோர்களுக்கு ஒன்றும் தெரியாது.

மாப்பிள்ளையின் மீது மிகவும் பாசத்தைக்
கொண்டவர்கள்.
அந்த அன்பை நம்பியே மகனையும் மருமகளையும்
பொறுப்புடன் கவனிக்கத் தன் சம்பந்தியை அணுகினார் பெரியவர்.
எனக்கும் மிகப் பிடித்த பாடல்.
நம்பினால் தானே நல்வாழ்வு கிடைக்கும்.
என்றும் வாழ்க வளமுடன் கோமதி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டை ஜி,
நாலு வேலி நிலம் நல்ல படம்.
முதலில் நாடகமாக மேடைகளில் வந்து பின் மல்லியம் ராஜகோபால்
அவர்களால் திரைக்கு வந்தது என்று நினைவு.
பாடல்களில் இது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது.
நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் என்பதில்
எந்த ஒருமாறுபட்ட கருத்தும் இல்லைமா.

KILLERGEE Devakottai said...

இப்படத்தில்தான்
"ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கயிலே"

என்ற பாடல் இருக்கிறது அம்மா.

Geetha Sambasivam said...

அகிலத்தின் பெற்றோர் விஷயம் தெரிந்தே முள்ளில் இருந்து சேலையை நாசூக்காக எடுக்க வேண்டும் என வந்திருக்கிறார்களோ? எப்படியோ நல்லபடி முடியணும்னு பிரார்த்திக்கிறேன். உங்களிடம் தான் எத்தனை கதைகள்! எத்தனை மாந்தர்! எத்தனை விதங்கள்!

Geetha Sambasivam said...

நாலு வேலி நிலம் திரைப்படமாகவோ, நாடகமாகவோ பார்த்த நினைவு இல்லை. ஆனால் பாடல் கேட்டிருக்கேன். நல்ல பாடல், பிடித்த பாடலும் கூட!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
அந்தப் பாடலும் மிகவும் பிடிக்கும்.
எல்லாம் ரேடியோ சிலோன் உபயம் தான். கிராமமணத்துடன்
எத்தனை அழகான பாடல் மா அது
மிக மிக நன்றி.இப்போது கேட்டேன்.
தம்பதிகளின் பிரேமை தெளிவாகத் தெரியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. நானும் படம் பார்த்ததில்லை.

பாடல் மிகப் பிடித்தது. நம்பிக்கை தளராமல் இருக்கக் கேட்பதுதான்.

நல்லது நடக்க நாட்களானது.
ஆனால் நடந்தது.
மகனை விட்டுக்கொடுக்கவில்லை தந்தை.அவர்கள் பத்திரமாகப்
போய் வரவே சம்பந்தியை வரச்சொன்னார்.

கதைக்கு குறைவே இல்லை மா.. சுற்றிலும் நிகழ்வதுதான்.

அதில் சில நம் எண்ணங்களையும் கலந்து விட்டால்
கோர்வையாகிறது. உங்கள் ரசனை என்னை உற்சாகப் படுத்துகிறதுமா.

Thulasidharan V Thillaiakathu said...

(முந்தைய பகுதியையும் வாசித்துவிட்டேன். - துளசி)

அகிலத்தின் பெற்றோர் அங்கு வந்திருப்பது மருமகன் பற்றி தெரிந்தா இல்லை தெரியாமலா என்று சஸ்பென்ஸாக இருக்கிறதே. ஒரு வேளை பெரியவர் சொல்லியிருப்பாரோ. பிரச்சனையைத் தீர்க்கச் சொல்லி. பூடகமாக ஏதேனும் நாடகம் ஆடி சுமூகமாக யார் மனதும் புண்படாமல் செய்யச் சொல்லி?

சஸ்பென்ஸாக இருக்கிறதே...அம்மா

துளசிதரன்., கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,கீதா,
மருமகளுக்குத் தங்கள் மகனால் சங்கடம் வரக்கூடாது என்றே
பெரியவர் சம்பந்தியிடம் அவர்களுக்குத் துணையாகப்
போகச்சொன்னார்.
அவர்களுக்கு சமாசாரம் தெரியாது. மா.