Blog Archive

Wednesday, July 11, 2018

ஜெனிவா ஏரிக்கரை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 ஒரு மாதமாகத் திட்டம் போட்டு ஒரு வழியாக  விடுமுறை கிடைத்து, பெரியவனுக்கு  டியூயூட்டி இல்லாமல், சின்னவனுக்கு ஹோம் வொர்க் இல்லாமல், மகளுக்கும் ,மாப்பிள்ளைக்கும்
வேலை இல்லாமல் இரண்டு நாட்கள் கிடைத்த பொது, பக்கத்து மா நிலம் விஸ்கான்சின் இல் இருக்கும் ஜெனிவா ஏரிக்குச் செல்லலாம் என்று முடிவாகியது.

வீட்டிலிருந்து இரண்டு மணி நேரத்தொலைவு.
விமான நிலையத்துக்குப் போய் வரும் தூரம் தான்.
 நம் வண்டியிலே போய் வரலாம் என்று முடிவெடுத்தவுடன் சின்னவன் அங்கே பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டான்.

ஏரியில்  பெரிய  படகில் சுற்றி இருக்கும் இடங்களை பார்ப்பது.  பலப்பல பணக்காரர்கள் /மொத்தம் 680 பெரிய படகுகளை எண்ணினோம். எல்லாம் அவரவர் வீடுகள் முன்னால்  பெரிய கூரைக்கு அடியில் நிற்க  வைக்கப் பட்டிருந்தன.

இந்த  cruise  நடத்துனர் ஒரு பத்தொன்பது வயது பையன். இந்த வருஷம் கல்லூரியில் சேர போகிறான்.
நான்கு  வருடங்களாக இந்த வேலை செய்கிறானாம்.
ஒரு மணி நேரம், ஏரியைப்  பற்றியும்
அதைச் சுற்றிக் கட்டப் பட்டிருக்கும் பெரிய பெரிய
பங்களோக்கள் பற்றியும்  சொன்னான்.

பாதிக்கு மேற்பட்ட வீடுகள் நூற்றாண்டின் அதாவது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப் பட்டவை.
ரிக்கிளிஸ் சூயிங்கம் செய்பவர், விக்ஸ் கம்பெனி ஆரம்பித்தவர், இன்னும் பங்குகள் ஆரம்பித்தவர்கள், தியேட்டர் கட்டியவர்கள்,
விடுதிகள் கட்டியவர்கள் என்று நீண்டது அந்த லிஸ்ட்.

ஒரு வீடு இரண்டாக்கியது. மகனுக்கு ஒரு வீடு, விருந்தாளிகளுக்கு ஒரு வீடு என்று பலப்பல கட்டிடங்கள். ஒவ்வொன்றும் மிகப் பெரிய அளவில் ஏரியைப் பார்த்த வண்ணம் வீற்றிருந்தந.

ஒரு பெரிய படக் கம்பெனி முதலாளி தன அறுபதாவது பிறந்த நாளுக்காக விருந்தினர்களை 60 செவர்லே கார்வேட் வண்டிகளில்
அழைத்து வந்தாராம். அவர் வீட்டு  முன்னால்  நிறுத்த இடமும் இருந்தது.  சீய்ச்சீ  இந்தப் பழம் புளிக்கும் என்று நான்
ஏரித்தண்ணீரின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .


எப்பொழுதும் அலுக்காத இயற்கை. வியூகம் வகுத்ததை போல கடல் பறவைகள். ஏரியில் இறங்குவதும் மீனைப் பிடிப்பதும் மேலே
எழுவதுமாக  வேடிக்கை காட்டின.

அங்கிருந்து புறப்பட்டு, சாப்பாடாக  Subway sandwiches  AND   Starbucks coffee
வாங்கி கொண்டு  அடுத்த  நடைப்
பயணத்துக்கு விரைந்தோம். வெய்யில் உரைக்காத வண்ணம் ஏரிக்கரைப் பூங்காற்று வீசிக் கொண்டு  இருந்தது.

பாதியில் நடக்க முடியாமல்   ஒரு பெரிய  வீட்டு மதிலில் உட்கார்ந்து கொண்டேன்.
துணைக்குச் சின்னவன். நீ தனியாக இருக்கக் கூடாது பாட்டி
என்று எனக்கே அட்வைஸ் செய்தான்.

ஏண்டா. எனக்குப் பயமெல்லாம் கிடையாது ப்பா. நீ அவர்களோடு பெரிய பெரிய மரங்கள் எல்லாம்
பார்த்துவிட்டு வா என்றேன்,
உன்னை நம்ப முடியாது பாட்டி. நீ முன்பின் தெரியாதவர்களிடம் பேசுகிறாய். அது சரி இல்லை என்றான்.
என்ன செய்தென் என்று யோசித்தேன் .
ஓஹோ.
காலையில் கிளம்பும்போது  வழியில் க்ளென்வியு ஹனுமாரை சேவித்துவிட்டுப் போக ஏற்பாடு.
அங்கே இருந்த அனுமனைத் தரிசனம் செய்து  வீட்டுக் கீழே இருந்த சாப்பாடு அறைக்குச் சென்று இட்லி வடை சாப்பிடும் பொழுது நம் ஊர்க்காரர்கள்  பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.
ஒருவர் வயதானவர். தில்லியில் இதய அறுவை சிகித்சையில் பத்துவருடங்களாகப் பணியாற்றியவராம். கிட்டத்தட்ட 80 வயது இருக்கும்.
அவருடன் ஆப்ரிக்காவில் வேலை செய்துவரும் இன்னொரு டாக்டர் ,
அவர் மனைவி இருவரும்
ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள் .

அவர்கள் திருமலா திருப்பதி நெருக்கடி தரிசனத்தைப் பற்றிப் பேசியதையும் கேட்டேன்.

தான் இப்போது, காலையில் சுப்ரபாதம் கேட்டு யோகா செய்வதாகவும், வரிசையில் நின்று தரிசனம் செய்ய முடியாமல் ஏமாந்து திரும்பியது மிக வருத்தத்தைக் கொடுத்ததால் இந்தக் கோவிலில் இருக்கும்,
பட்டாபிஷேக ராமர், திருமலை ஸ்ரீநிவாசன், சிவன் பார்வதி குடும்பம், பிள்ளையார் முருகனைக் காண எல்லா சனிக்கிழமையும் வருவதாகச் சொன்னார்.
 எனக்கு உண்டான ஒரு பலவீனம் நம் மக்களை பார்த்தால் பேச வேண்டும் என்கிற ஆர்வத்தை அடக்க முடியாது.

ஒரு சின்னக் குருவிபோல் உட்கார்ந்திருந்த
அந்தப் பெரியவரிடம் நமஸ்தே சொல்லி
பேச ஆரம்பித்து ஹனுமான் சாலிசா வரை வந்து விட்டோம்.
மக்கள்,எனக்குச் சைகை காட்டினாள். அம்மா நாம் போக வேண்டும்  என்று.
மன தில்லாமல் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
அதைத்தான் இந்த வாண்டு சொல்கிறது.

பிறகு என்னையே சமாதானப் படுத்திக்க கொண்டேன் இங்கிருப்பவர்களுக்குத் தானே இந்த ஊர் மனிதர்களை நன்றாகத்
தெரியும்.
நானும் அவனும் கல்விளையாட்டு ஆடி முடிக்கும் முன்னர் சென்றவர்கள் வந்து விட்டார்கள் .
அடுத்த நாளும்   மியூஸியம், பால் பண்ணை என்று பார்த்துவிட்டு ஏரிக்கு பை பை  சொன்னோம்.
கருப்பு பங்களோ ஒன்றுதான் பார்க்கவில்லை. வாசலிலேயே நிறுத்திவிட்டார்கள்.

பெரியவனுக்கு வேறு போலன் அலர்ஜி த் தும்மல் வர ஆரம்பித்ததும் சட்டெனக் கிளம்பிவிட்டோம்.
மணி 6 ஆகிவிட்டது. வீட்டுக்குப் போய் சமைக்கச் சரியாக இருக்கும்.
எட்டு மணிக்கு  வீட்டுக்கு வந்தாச்சு.
சாதத்தைப் பார்த்ததும் தான் மனம் அமைதி யாயிற்று.
நல்ல தொக்குமல்லி தொக்கு., பீன்ஸ் பொரியல்.

அமிர்தம் . என்ன இருந்தாலும்  ஹோம்  சுவீட்  ஹோம்










17 comments:

ஸ்ரீராம். said...

​// உன்னை நம்ப முடியாது பாட்டி. நீ முன்பின் தெரியாதவர்களிடம் பேசுகிறாய். அது சரி இல்லை என்றான்//

ஹா... ஹா... ஹா... எவ்வளவு அக்கறை? அன்பு?

ஸ்ரீராம். said...

படங்கள் அழகு. அந்த இடத்தின் அழகை எங்களுக்கும் சொல்கின்றன. ஆனால் ஹோ என்று அமைதியாக இருக்கிறதே...!

கோமதி அரசு said...

ஏரிக்கரை காற்றை அனுபவித்து, பேரனின் பரிவில் நனைந்து, நம்மவர்களுடன் உரையாடி பயணம் இனிதாக நடந்து இருக்கு, மகிழ்ச்சி.

KILLERGEE Devakottai said...

அழகான படங்கள் நிகழ்வை சொன்ன விதம் அருமை அம்மா.

நெல்லைத் தமிழன் said...

படங்களைவிட, நிகழ்வு மிக ரசிக்கும்படி இருந்தது. எனக்கும் 'திருநெவேலி பாஷை' பேசுகிறவர்களை எங்கு பார்த்தாலும் நின்று விசாரித்துவிட்டுச் செல்வேன் (சிலர், நாங்க நாகர்கோவில் பக்கம் என்றெல்லாம் சொல்வார்கள்). லண்டனில், ஈஸ்ட்ஹேம் இரயில் நிலையத்தில், 3 பேர் தமிழில் பேசுவதைக் கேட்டு, அவர்களிடம் போய் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன். இந்தக் குணம் அனேகமா தமிழர்களிடம் உள்ள குணமா அல்லது இந்தியர்களிடமா?

Avargal Unmaigal said...

பகலில் நாம் ஊரை சுற்றி இயற்கையை ரசித்து வந்தாலும் இரவு நேரத்தில் நம் சொந்த இடத்திற்கு வந்து சாப்பிட்டு தூங்குவதற்கு இணை ஏதும் இல்லைதான்

Avargal Unmaigal said...

அம்மா font sizeயை மாற்றுங்கள் படிக்க மிகவும் சிரமமாக இருக்கும் அதிலும் பொன் மூலம் படிப்பவர்களுக்கு

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
எப்பவும் ஒழுங்கா வரும் . ஸாரி மா. அடுத்த பதிவில் பார்த்து எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே துரை. என்னதான் தரமான விடுதியாக இருந்தாலும்
நம் வீடு போல வராது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த.,
அதை ஏன் கேட்கிறீர்கள்.
இங்கு ஒரு ரெடிமேட் கடையில், பெண் ஆங்கிலத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்த போது, புடவை கட்டின மாமியைப் பார்த்ததும்
தமிழான்னு கேட்டுவிட்டு, அவர் திருதிருவென விழிக்க

தெலுகு என்று புரிந்த கொண்டு அவர் மாட்லாட நான் மாட்டிக் கொள்ள, சினேகமாகப் பிரிந்து விட்டோம். என்ன செய்ய.
லண்டனில் லைப்ரரியில் ஒரு வயதான வீல் சேர், மனிதர்
என்னை அருகில் வந்து பார்த்து தமிழரா என்றார்.
ஆம் என்றதும், உங்கள் பரம்பரையோடு,இந்தப் புடவை, பொட்டு வைத்துக் கொள்ளுதல் எல்லாம் நின்று விட்டது என்று சோகமாகச் சொன்னார்.
பாதி ஒத்துக் கொண்டேன்.
ஸ்விட்சர்லாண்டில் நிறையப் பெண்களைப் பொட்டும்
பூவுடனும் பார்த்திருக்கிறேன் என்றேன்.
வளமுடன் வாழ்க என்று விட்டுப் போனார்.
எனக்கு ஏனோ வருத்தமே மிஞ்சியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையாரே,
தொடர்ந்து படித்து வருவதற்கு மிக மிக நன்றி.
கணினி தொடர்பில்லாமல் கழித்த இரண்டு நாட்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. பாவம் அந்தப் பிள்ளை. அழகாகப் பெற்றோருடன் போயிருக்கலாம்.
சின்ன வயசிலேயே மிக அக்கறையும் பாசமும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம் . அவர்கள் அப்படி வளர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
அனாவசியமாகப் பேசக் கூடாது என்று.நல்ல குழந்தை.

சத்தம் இல்லையே. மனிதர்களைப் படம் எடுக்க வில்லை.
ஒரே சத்தம் தான். மோட்டார் போட், வாட்டர் ஸ்கூட்டர், ஹார்லி டேவிட்சன்
, Cruise ship horn என்று ஒரே ஆர்ப்பாட்டம். கலகலன்னு இருந்தது மா.

Geetha Sambasivam said...

அழகான இயற்கைக் காட்சிகள். நாங்களும் இந்தியர்களைப் பார்த்தால் பேசுவோம். படங்கள் அழகு எனில் ஏரியின் அழகு இன்னமும் அருமை. ஆனால் அங்கே நம் போல் சாமானியர்கள் இருக்க முடியாது என்பது வருத்தமாக உள்ளது.

Anonymous said...

அன்பு கீதா, நம்மால் அங்கே இரண்டு நாட்களுக்கு
அப்புறம் இருக்கமுடியாது.
கூடவும் கூடாது. அவர்கள் சாப்பாடு நமக்கு ஒத்துக் கொள்ளாது.
கண்ணுக்கு விருந்து . வயிறு காலி. கைப்பணம் காலியாகும்.

Thulasidharan V Thillaiakathu said...

துணைக்குச் சின்னவன். நீ தனியாக இருக்கக் கூடாது பாட்டி என்று எனக்கே அட்வைஸ் செய்தான்.ஏண்டா. எனக்குப் பயமெல்லாம் கிடையாது ப்பா. நீ அவர்களோடு பெரிய பெரிய மரங்கள் எல்லாம்பார்த்துவிட்டு வா என்றேன், உன்னை நம்ப முடியாது பாட்டி. நீ முன்பின் தெரியாதவர்களிடம் பேசுகிறாய். அது சரி இல்லை என்றான்//

ரொம்ப அன்பான ஸ்வீட் பேரன்!! காட் ப்ளெஸ்!

இயற்கைக் காட்சிகளுடன் ஆன படங்கள் அழகு. நல்ல விவரணம் அம்மா. வீடு சொர்கம் தான். ரசித்தோம் பதிவை.

துளசிதரன், கீதா

கீதா: ஜெனிவா என்று பார்த்ததும் ஸ்விஸ் போனீங்களா அதுவும் 2 நாட்களில் போய் வருவது என்பது அதுவும் அங்கு உங்கள் ஒரு மகன் இருக்கிறார் இல்லையா?

அப்புறம் தெரிந்தது விஸ்கான்சின்ல் ஏரியின் பெயர் ஜெனிவா என்று....

Thulasidharan V Thillaiakathu said...

'திருநெவேலி பாஷை' பேசுகிறவர்களை எங்கு பார்த்தாலும் நின்று விசாரித்துவிட்டுச் செல்வேன் (சிலர், நாங்க நாகர்கோவில் பக்கம் என்றெல்லாம் சொல்வார்கள்). // ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....நெல்லை இது யாரையோ இடிக்கறா மாதிரி இருக்கே ஹா ஹா ஹா இதைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன்...இன்னும் சிரிப்பு ஓயலை...ஹா ஹா ஹா

ஆமாம் நெல்லை வெளியூரில் எங்கென்றாலும் இந்தியர் என்றால் கண்டிப்பாக ஸ்மைல் பண்ணி ஹலோனாவது சொல்வோம் அதுவும் நம்ம பாஷை என்றால் கண்டிப்பாகப் பேசுவோம்...பக்கத்து மாநிலம் போனாலே யாராவது தமிழ் பேசினா உடனே பேசிடறது உண்டு...

கீதா