Blog Archive

Wednesday, January 17, 2018

அம்பி, மன்னி என் தம்பி முரளி. 7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
  அம்பி, மன்னி என் தம்பி முரளி.
+++++++++++++++++++++++++++++++++++++++++
1970 இல் என் தம்பி முரளி இந்திய தொழில் நுட்பக்
கல்லூரியில் பி டெக் படித்து முடித்த கையோடு, பாட்டா
 செருப்புகள்  செய்யும் மெயின் அலுவலகத்தில்
உதவி இஞ்சினீயராக


 வேலை கிடைத்தது.
கல்கத்தாவில் அந்தக் கம்பெனி இருந்தது.
முதலில் பயிற்சி தில்லி அருகில் ஃபரீடாபாதில்.
வீட்டை விட்டுக் கிளம்பும் அவனுக்கு
போதிய ஏற்பாடுகள் செய்து அனுப்பினாலும்,
அம்மா அப்பாவிற்கு ஆறுதல் சொன்னது
அம்பி மாமா தான். நான் அவனுக்கு கார்டியனாக இருக்கிறேன்.
நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்ற உறுதி மொழி அவர்களுக்கு
மிக இதம் கொடுத்திருக்க வேண்டும்.
அவன் ஃப்ரீதாபாதில் ஒரு வங்காள இளைஞனுடன் அறையெடுத்துத் தங்கினான்.
சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. வார இறுதியில் தில்லிக்கு மாமாவீட்டுக்குச் சென்றுவிட்டான்.
இப்படி இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்
அந்த இளைஞன் திடீரென தற்கொலை
செய்து கொள்ள தம்பிக்கு ஜுரமே வந்து விட்டது.
தில்லியைப் பார்க்க விரைந்து வந்துவிட்டான்.பாவம் குழந்தை.
ஆறு மாதம் ஆன நிலையில் ,மாமா அவனுக்கு ஆறுதல் சொல்லி
சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
பிறகு கல்கத்தாவுக்கே சென்றுவிட்டான்.
நிறைய வருடங்கள் அம்பி மாமா குடும்பத்தைப் பார்த்த நினைவில்லை.
 என் மாமனார் மறைந்த போது, வீட்டுக்கு வெளியே நின்று ,சீனிம்மாப் பாட்டியும் அவரும் வந்து ஆறுதல் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அடுத்தாற்போல முரளியின் திருமணம், அப்பாவின் அறுபதாவது வயது பூர்த்தி, தம்பி ரங்கன் திருமணம் எல்லாவற்றிலும் அம்பி மாமா ,மன்னி இல்லாமல்
அம்மாவால் ஒன்றும் செய்திருக்க முடியாது.
எந்த விழா வீட்டில் ஆரம்பித்தாலும் அக்காவும்,தம்பியும்,மன்னியும் ஒன்றாக உட்கார்ந்து காய்கறிகள்  நறுக்கவதும், ,பெரியம்மா,சித்தி இவர்களுடைய
மக்கள்களைப் பற்றிப் பேசுவதும் நினைவில் நிழலாடுகின்றன.
1983 இல் அம்மா,அப்பா தில்லி சென்று நெடு நாளைய அபிலாஷையான
பத்ரி நாத் பயணத்தை அம்பியுடன் மேற்கொண்டனர்.
பத்ரி நாத் குளிரில் அப்பாவுக்குக் காய்ச்சல் வந்துவிட, நிமிடத்தில் ஏழெட்டுக் கம்பளிகள்
கொண்டுவந்து ,காத்தது மாமாதான். பிறகு அங்கிருக்கும் வென்னீர் ஊற்றில் குளித்தது
எல்லாம் அப்பா விவரமாகச் சொன்னார்.
இது போல ஒரு நல்ல ஆட்மா தனக்கு மச்சினனாக வாய்த்ததைச்
சொல்லிக் கொண்டே இருப்பார்.
 1992 இல் தம்பி முரளிக்கு 42 வயதில் ஹார்ட் அட்டாக்.
 அவன் முழு குணம் பெற அம்பி மாமா ராமாயண சுந்தர காண்டம் 68 சர்க்கத்தையும்
 ஒரே நாளில்
 இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல் படித்து
அக்ஷதையும் அனுப்பினார். இந்த அனுகூலம் யார் செய்வார்.
தம்பியும் பிழைத்தெழுந்தான்.
 அதற்குப் பிறகு 25 வருடங்கள் வாழ்க்கை கடவுள் அருளினார்.
கடந்த மே 22 அவன் இறைவன் திருவடி அடைந்த போது
85 வயது தள்ளாத நிலையிலும் தன் அன்பு மருமானைக்
கடைசியாக வந்து பார்த்து விட்டுத்தான் போனார்.  தொடரும்.

11 comments:

ஸ்ரீராம். said...

​நினைவுகளில் வாழ்கிறார்.

Anuprem said...

அன்பு மனம் ...

நெல்லைத் தமிழன் said...

வல்லிம்மா... இவைகளைக்கொண்டே நல்ல நாவல் எழுதலாம்.

பொதுவா வாழ்க்கையிலே சுருக்கக் கதையைப் படிக்கும்போது, அவர்களுடைய குணத்தைப் பொறுத்து, நல்ல ஆத்மாவாயின், நல்ல குணமே நம் மனதில் தங்குகிறது. அவ்வளவு நல்லவர்களில்லையாயின் அவர்கள் செய்த குற்றங்களே மனதில் தங்கிவிடுகிறது.

நீங்கள் வருடங்கள் பற்றி எழுதும்போது, அப்போது நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். .பாசம் எங்களைக் கட்டி வைத்தது. பரிபூரண
அன்பு ,குற்றம் கண்டுபிடிக்காத தன்மை எல்லாமவரால் முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு அனுராதா.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் 1970 வாக்கில் பிறந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்
நெல்லைத் தமிழன். இன்னும் சின்னவராகக் கூட இருக்கலாம்.

நீங்கள் சொல்வதை என் குழந்தைகளும் சொல்கிறார்கள்.
இன்னும் சுவை கூடினால் நாவலாகத் தகுதி வரும்.
இவை எல்லாம் bare facts.

அப்பாவின் மாமா பெயர் சேஷன், இன்னோரு சித்தப்பா பெயர்
சேஷாத்ரி.
முன்னவருக்கு 150 வயதிருக்கலாம்.பார்த்ததே இல்லை.
பின்னவர் 17 வருடங்களுக்கு முன் மறைந்தார்.
நீங்கள் சொல்வது போல் சில நபர்களை அவர்கள் குண நலன்கள்
நம்மை விட்டுப் பிரித்தும் சேர்த்தும் வைக்கின்றன.

நெல்லைத் தமிழன் said...

ஒருவரைப் பற்றி நாம் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயத்தை அவரிடம் சொல்லாமலேயே இருந்துவிடுகிறோமோ? பெரும்பாலும் கெட்ட அபிப்ராயத்தை (அல்லது ஒருவரின் குணக்கேடுகளை) நாம் வெளிப்படையாச் சொல்லிடுவோம்னு நினைக்கிறேன். எல்லோருமே, குணக்கேடுகளைச் சொல்லாமலும், குண நலங்களை மட்டும் வெளியில் சொல்லும்படியாகவும் இருந்தால், அதுவே பெரிய பாசிடிவ் எனெர்ஜியைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

நான் 70ல் 2ம் வகுப்பு படித்திருப்பேன் என நினைக்கிறேன்.

பூ விழி said...

தொடர்கிறேன் உங்கள் நினைவுகளை .................அருமையா கோர்க்கரீங்கம்மா (நடுவில் விட்டு போனதை வேறு கவர் பண்ணனும்)

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
உண்மையே. ஒருவரிடம் இருக்கும் குண நலன் களை
உடனே பாராட்டி விடவேண்டும்.
பிறிதொரு நேரம் வரும் பிறகு சொல்லலாம் என்று
ஒத்திப் போடக் கூடாது.
நாம் தேர்ந்தெடுத்துப் பேசுவது ,பிறரின் அவ்வளவு பிடித்தமில்லாத
நடவடிக்கைகளை.
பேசாமல் விலகிச் செல்வதே நலம்.
தன் முதுகு ஒரு போதும் தனக்கேதான்
தெரியாது என்பது போல. நீங்கள் நல்ல நண்பர் நெல்லைத்தமிழன்.
அப்போ 1982 காலேஜ் சேர்ந்திருப்பீர்கள்.சரியா.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி, வருகைக்கு மிக நன்றி மா.
நடந்ததை எழுதுவது எனக்கு ஒரு தெரபி.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல உள்ளங்கள்!!! மகிழ்ச்சி தரும் போது இடையே வேதனைகளும் வந்துவிடுகின்றனதான் இல்லையா....தொடர்கிறோம் வல்லிம்மா

கீதா