Thursday, April 11, 2013

யுகாதி தின வாழ்த்துகள்

யுகாதி நந்நாள் வாழ்த்துகள்
மீண்டும் மலர்கள்

 எந்த சுபதினம் வந்தாலும்   கொண்டாடாமல்    விட மாட்டார்  பாட்டி.
அதுவும் யுகாதி மேல் அத்தனை  பிரியம்.
இரண்டு நாட்கள் வீடு  அல்லோலகல்லோலப் படும்.

முதலில் வாயிலில் மாவிலை கோர்ப்பதிலிருந்து
கிணற்றுச் சகடைக்கு எண்ணெய் பூசி
கிணற்றுப் பிடிச்சுவரிலும்  பூக்கள்  நிறைய வைக்கச் சொல்வார்கள்.
சாயந்திரவேளை வந்ததும்   அந்த மலர்களோடு நீரும் சேர்த்து  கிணற்றுக்குள்
சேர்த்துவிடுவார்கள்.கிணற்றின் மேல் தீபமும் ஏற்றி வைக்கச் சொல்வார்கள்.

யுகாதி புதிய உடைகளும் உண்டு.
பூரன் போளியும்,பச்சடியும்  முக்கியம்.

வெங்கடாசலபதிக்குத் தனி மாலை!
எனக்கு எல்லாம் அதிசயமாக  இருந்தது முதலில்.

பிறகுதான் பாட்டியின் அணுகு முறை புரிந்தது.

அவர்கள் சம்பந்தம் செய்து கொண்டது   ஒரு  மைசூர்
வைஷ்ணவக் குடும்பத்தில்.

அங்கே கர்நாடக  பழக்கவழக்கங்கள்,பண்டிகைகள்
எல்லாம்   பாட்டியின் பெண் பழகிக்கொள்ள  அவைகள் இங்கேயும் வந்துவிட்டன.

என்னவாக இருந்தால் என்ன?
சந்தோஷமாக இருப்பது மனிதர்களின் முதல் உரிமை.
இருக்கவே இருக்கிறது எதிர்பாராத   திருப்பங்கள்.
சந்தோஷ வங்கியை நாம் நிரப்பிக்கொள்ளவரும்

தினங்களில் நிரப்புவோம்.
பிறகு செலவழிப்போம்.

அனைவருக்கும்  யுகாதிப் பொன்னாள்   நல்வாழ்த்துகள்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, April 10, 2013

நன்றி அன்பு உள்ளங்களுக்கு.

சாய்வதற்கு முன்    என்னைப் பிடி!
இறைவனுக்கு நன்றி  இந்த மலரின் அழகுக்கு
வேறு விதமான லில்லி
லில்லி மலர்
அம்மாவுக்கு

 அன்பு ஒன்றே தான் காரணம். முகமறியாத  ஒரு   அம்மாவுக்கும்,அக்காவுக்கும்,
தோழிக்கும்,தங்கைக்கும்   பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லி  என்னை நாள் முழுவதும் உருக வைத்த இணைய நட்புகளுக்கு என்


நன்றிகள்.ஆயிரம்,பல்லாயிரம்,கோடி  வணக்கங்கள்.
வாழ்க வளமுடன்.




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, April 08, 2013

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மயிலை வரை.

மாதா பிதா குரு தெய்வம்  1994
நீயல்லால்  வேறு தெய்வம் ஏது
காப்பவன்
என்  இளையவர்கள்..............................திருமங்கலம்
சாமிக்கு முன்னால்  ஆசாமியுடன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, April 06, 2013

புதுக்கட்டிடங்களும் பழைய கட்டிடங்களும்

பழைய வீடு ஒன்று

சென்னையைப் பிடித்திருக்கும் பேய் ,   நிலங்களை
அழித்து வீட்டாக்கியது.
இப்பொது இருக்கும் வீடுகளை அழித்து புது   எட்டடுக்கு மாளிகைகள், (நீச்சல் குளத்தோடு ஒன்று வரப் போகிறது. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள்   தாண்டி.

அடுத்தவீட்டு அம்மாவின் தூக்கம்  போய்ப் பல நாட்கள் ஆச்சு.


நாங்கள் எல்லோரும் இங்கே    வந்த போது அவர்களும் வந்தார்கள்.
நல்ல பலமான கட்டிடம்.
அவர்களுக்கு அடுத்த ப்ளாட்
  பழைய பரம்பரை வக்கீலின்

எட்டு க்ரௌண்ட்       நிலம்..
அவரதுகாலம் முடிந்து 50 வருடங்களுக்கு அவரது மகள் இருந்து வந்தார். இப்போது அவரும் மறையவே   அவரது மகன்   வரப்போக இருந்தவருக்கு  இந்த பங்களாவைப்   பராமரிப்பது சிரமம்  ஆனது. இடிக்க ஆரம்பித்து வடநாடுக் கம்பெனி ஒன்றுக்கு காண்ட்ராக்ட்   கொடுத்திருக்கிறார்.
சிங்கத்துடன்  தோழமை உண்டு.

அவர் இருப்பது டில்லியில்.


இப்போது இந்த நிலத்தில் புது ப்ரீமியம் வீடுகளைக் கட்டப் போகிறார்கள்.


மண்தோண்டும் இயந்திரம் வந்து   இரவு பகலாக வேலை செய்கிறது.

அவர்கள் இறக்கும் இரும்புத்தூண்கள் பக்கத்தில் இருக்கும் வீட்டை  ஆட்டம் காண வைக்கிறது.

காலை இல்லை இரவு இல்லை எப்பவும் வேலை.


எனக்குப் போன் செய்தார்கள்   அந்த அம்மா.
உங்களுக்குச் சத்தம் கேட்கிறதா  என்று. நான் தள்ளி இருக்கிறேனே.கொஞ்சமாகக் கேட்கிறது என்றேன்.

ஒரு நாள்  மாடி ,கீழ் எல்லாம்   ஆடுவதைக் கண்டு
அதிர்ந்துவிட்டார் .வயதானவர்.
ஆனாலும்  அந்தப் பத்துமணிக்கும்   அவர்கள் பக்கம் இருக்கும் ஜன்னலைத் திறந்து அவர்களைப் பார்த்து க்  கண்டித்தார் .
எல்லாம் வட இந்தியர்கள். தங்களுக்கு  இடப்பட்ட  கடமையைச் செய்பவர்கள்.
ஒன்றும் புரியாமல் நிறுத்தி விட்டார்கள்.
மறுநாள்   இன்னும் இரண்டு பெரியவர்களுடன்   அங்கே சென்று   கட்டிட  மேஸ்திரியிடம் விவாதித்து இருக்கிறார். அவரும் கட்டிட இஞ்சினீயருடன் பேசுவதாக

உறுதி அளித்த பிறகே  என் சிநேகிதி திரும்பி வந்தார்.

அது ஒரு சினிமாக் கம்பெனியின் படப்பிடிப்பு  நடக்கும்
இடமாக இருந்தது. சினிமா எடுப்பவரும் கேரளாவுக்கே திரும்பி விட்டாரோ என்னவோ!

நான் கேரளா ஜுவல்லரி வரலாம் என்று  வேடிக்கையாகச்  சொன்னது, இப்போடு நல்லி   துணிக்கடையாக  வர   செய்திகள் பறக்கின்றன.


எங்களுக்கு என்ன குறை சொல்லுங்கள்!!!

தானே(மும்பை)  இடிபாடு  வேறு புதிதாகப் பயமுறுத்தி இருக்கிறது.

ஏனோ ரமணா படம் நினைவுக்கு வந்தது:(
இனிமேல்    என்னவெல்லாம் வரப் போகிறதோ.








 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, April 04, 2013

எதிர்பாருங்கள் நடக்கும். நம்பிக்கையின் சாரம்




ரொம்பப் பழைய பாட்டு.  ஒன்று.சிட்டுக் குருவி சிட்டுக் குருவி  என்று வரும்.

எலிமெண்டரி பள்ளிக்கூடக் கலை நிகழ்ச்சிகளில்
இரண்டு குட்டிப் பெண்கள் வந்து ஆடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஒரு மனைவியின் எதிர்பார்ப்புகள் அந்தப் பாட்டில் அழகாக அமைக்கப்பட்ட வரிகளில் பளிச்சிடும்.



எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் இருக்கும் என்று புரிய நிறைய அனுபவங்கள் வந்தாலும், பட்டுத் தெரியும் அறிவு வர, மனது தெளிய நிறைய நாட்களும் வருடங்களும் ஆகும்.




நியாயமான எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்ல வரவில்லை இங்கே.
இந்த குட்டி குட்டி(!!!) ஆசைகள்.
பெண்களும் பிறந்தகமும் பிரிக்க முடியாத பந்தங்களில் எப்போதும் இருக்கும்.
என்ன வயதாகட்டுமே. எம்பது வயசுப் பாட்டி ஆகட்டும்,
அவர்களைக் கேட்டால் ''எங்க அப்பா அம்மா மாதிரி வருமா. தலையால வர்ஷித்துக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.
இந்தக் காலம் மாதிரியா.
பைசா பைசாவாப் பார்த்துச் செலவழித்த காலம்.
எங்க அப்பா நாலு பொண்ணையும் கரையேத்தினார்,. முத்து முத்தா மாப்பிள்ளை பார்த்து,
சம்பந்திகளைக் கவனித்து,வருஷ சீர் செய்து, வரிசையா பேரன் பேத்திகளுக்குச் செய்து அப்புறமும் ஓயலை.
என் அறுபதுக்கு அறுபது வரை கூடச் சீர் செய்தார்னா பார்த்துக்கொள்ளுங்கோ''
சரி...இதுவரை சரி. தந்தையும் பரலோகித்தார். அப்புறம் வித்தியாசங்கள் வருமா அப்படீன்னு நாம் கேட்கலாம்.
வரலாம். வராமலும் இருக்கலாம்





அதான் இந்தப் பாட்டிக்கு எழுபதும் மேல ஐந்தும் ஆச்சே, கொஞ்சம் விவரம் விவேகம் வந்ததா என்று பார்க்கப் போனால் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
பாட்டியின் வசதிக்குக் குறைவில்லை. இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள் என்று, குழந்தைச் செல்வத்துக்குக் குறைவில்லை.
பெரிதாகக் கட்டிய வீடு. விசுவாசமிக்க வேலையாட்கள்.
அடிக்கடி வந்து விசாரித்துக் கொள்ளும் மகன்களும் மகள்களும்.
நேற்று நான் பாட்டியைப் பார்க்கப் போயிருக்கும்போது ஊஞ்சலில் ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு எங்கேயோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.








தாத்தா படு ஸ்மார்ட்டாக அப்பத்தான் பார்க்கில் அரட்டை அடித்துவீட்டு வந்திருந்தார். ஒரே உற்சாகமான வரவேற்பு.
பாட்டியிடம் சத்தமில்லை.
என்னப்பா ஆச்சு என்று பெரியவரைக் கேட்டேன்.
நாளைக்கு அவள் பிறந்த வீட்ல ஒரு கல்யாணம். என்று நிறுத்தினார்.
பாட்டி போகலியா என்று ஆச்சரியமானேன்.









''எங்கடி, அவர்கள் வந்து நேரயா கூப்பிட்டார்கள். ஒரு அழைப்பிதழ் வந்தது.
வந்துடுங்கோ ன்னு ஒரு போன் கால்.
போறுமா.
நான் யார்!! வீட்டுக்குப் பெரிய மனுஷி.
இவர் யார். எம்பது ,சதாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறவர். என்னை விடு. இவரை மதிக்க வேண்டாமோ!!!!

நான் ஏன் போவேன் அந்தக் கல்யாணத்துக்கு. வேண கல்யாணம் பார்த்தாச்சு. வேணது சாப்பிட்டாச்சு. இனிமே வாயைக் கட்ட வேண்டியதுதான்.
இதைத்தான் அவர்கள் எனக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஓரங்கட்டியாச்சு. எங்க அப்பா அம்மா இருந்திருந்தா இப்படிச் செய்வர்களா, என்று கலங்கிய அந்த மூதாட்டியைப் பார்த்து நிஜமாகவே கஷ்டமாக இருந்தது.

இது என்ன பிறந்துவீட்டுப் பந்தம்.!! தனக்கு ஒரு குடும்பம் ,அவர்களுக்கு ஒரு குடும்பம் ஆகிவிட்டது.

இன்னும் என்ன எதிர்பார்ப்பு! எதிர்பர்ப்பும் ஏமாற்றமும் தாண்டி வர வேண்டாமா.

ஆசை அதிகமானால் வருத்தமும் அதிகம் தானே.
என்று விட்டு விடுதலையாகிப் போவது???

என்று யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். உடனே திருமண மண்டபத்துக்குத் தொலை பேசி, திருமணம் செய்து வைக்கும் என் சினேகிதியைப் பிடித்தேன்.


ஏன்பா பாட்டியை நேர்ல கூப்பிடல.
உடனே ஒரு வண்டியை அனுப்பி கூட இருந்து அழைத்து வர ஏற்பாடு பண்ணும்மா, என்றேன்.
அவளும் சிறிது சலித்துக் கொண்டாலும் அனுப்புவதாக ஒத்துக் கொண்டாள்.
பார்க்கலாம்!!! இன்று திருமணத்துக்குப் போனால் பாட்டி எப்படி வந்து இருகிறார் ,மனசு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்:)

நானும்   இவரும் அழைக்கப் பட்டிருந்தோம் . மாப்பிள்ளைப் பையன் எங்கள் மகனின்  தோழன் என்று பிறகுதான் தெரிந்தது.
  ,படு ஆரம்பமான   அந்தக் கல்யாண மண்டபத்தில் எங்கள் சின்னக் காரை நிறுத்திவிட்டு  உள்ளே  நுழைந்த பொது  ஊஞ்சல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது .
மாப்பிள்ளைக்கு முன்னாள் பாட்டி நின்று கொண்டிருந்தார், பிடிசுத்தி போட்டுக் கொண்டு. பாட்டியின் முகத்தில்  ஒளி  வெள்ளம்.  ஒன்பது கஜ  கொட்டடி . கழுத்தில பவழ மாலை. இடுப்பில ஒட்டியாணம். அமர்க்கள அழகு
 மெதுவாகப் பாட்டியைப் படம் எடுத்துக்  கொண்டேன்.

பிறகு  நாங்கள்  கிளம்பி விட்டோம்.
அடுத்த நாள் காலையில்   பாட்டியிடம் இருந்து   தொலைபேசி.
ஒரே   சிரிப்பும் கும்மாளமும்.
என்ன ஆச்சு  மாமி.  என்று கேட்டதற்கு,
அந்தப் பொண்ணு என்னைக் கூப்பிட்ட பொது போனே அடிக்கலையாம்.
ரொம்ப    நல்ல குழந்தை டி. நீங்க இல்லாமல் கல்யாணமா அத்தை .
கார்த்தால   விரதத்திலிருந்து நீங்கதான் நம்ம வழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கணும்.நு  கேட்டுக் கொண்டாள் .
அதே போலாச்சு. ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை.
ஆன்னா ஊனா வீடியோ   எடுத்துக்கப் போயிடருதுகள் .
அவளுக்கே ஒன்பது கஜம் நான்தான் கட்டி விட்டேன்.

என்னமோ போ   இப்பவாவது சமத்து  வந்ததேன்னு  இவரிடமும் சொன்னேன் என்று முடித்தார்

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, April 03, 2013

அனஸ்டேசியா தொடருகிறாள்.

Kopenhagen  palace

புதிய இளவரசியைக் காண க் கூடும் கூட்டம்
எத்தனை அழகு என் பேத்தி!
பாட்டியை எதிர்நோக்கும் அன்னா
உனது வாழ்க்கையைத் தேர்ந்தெடு
பாட்டியும் பேத்தியும் இணைகிறார்கள்

 பாரீசில்    உள்ள  முக்கியஸ்தர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறான்

போனீன்.  அவர்கள் சொல்லும்  அபிப்பிராயத்தை வைத்துதான்  லண்டன் பாங்க்    இளவரசிக்கு  உண்டான  பணத்தைக் கொடுப்பதை உறுதி செய்யும்.

இதன் நடுவில் மறந்த நினைவுகளுக்கும்  மீதி நினைவுகளுக்கும் நடுவில் திண்டாடுகிறாள்  ஆன்யா.

ஒரு புறம்  போனீன்  செயல்கள் அவளைத் துன்புறுத்தினாலும் அவன் மேல் ஒரு ஈர்ப்பும் வருகிறது.

இருவரும்   ரஷ்யாவின்  ட்சார் வம்சப் பாட்டி  டோவேஜர்(ஹெலன் ஹேய்ஸ்)
யைச் சந்தித்தால்தான்   பிரச்சினை முடிவுக்கு வரும்
என்று    கோபென்ஹேகனுக்குப் புறப்படுகிறார்கள்.

பாங்க் கணக்கை மூட மூன்று நாட்களே இருப்பதாகச் சொல்கிறது.

கோபன்ஹேகன் சென்றதும்   தனக்குப் பரிச்சயமான  ஒரு  தோழியை
அணுகுகிறான். அவள் தான் பாட்டியின்  உற்ற துணை.

அவள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துதருவதாகச் சொல்லி

ஒரு    ஆப்ரா நிகழ்ச்சிக்கு வரும்படியும் அங்கே எதிரெதிர் பெட்டிகளில் பாட்டியும் பேத்தியும் ஒருவரைஒருவர் தூரத்திலிருந்து பார்க்கலாம் என்றும்

யோசனை சொல்கிறாள்.

அந்தப் பெரிய    இடத்தில்    அந்த ஊர் இளவரசன்  பால் என்பவரையும் சந்திக்கிறாள்  ஆன்யா.

சிறுவயதில்  அவனைக் கண்ட நினைவு வருகிறது.
அவனும் இவள் அழகை ரசிக்கிறாளே  தவிர

இவள்தான் இளவரசியா எனும் சந்தேகத்தை விடவில்லை.

இசை நிகழ்ச்சியில்   பாட்டி பேத்தியைப் பார்த்துச் சிறிதே  சலனம் அடைகிறாள்.

ஜெனரல்போனீன் ,  ஹர் ஹைனஸ்  டோவேஜர்  எம்ப்ரஸ்  மரியா   ஃப்பியோட்ரோவ்னா(பாட்டிம்மா)  வைச் சந்தித்துத்  தான் அழைத்து வந்திருக்கும்  பெண்ணைப் பார்க்க  பேட்டி க்  கேட்கிறான்.

இதைப் போல  நிறைய   அனஸ்டேஷியாக்களைப் பார்த்தாச்சு.
என் மனம் வதைப் படுகிறேன். நான் இவளைப்  பார்க்க

முடியாது   என்று சொல்லிவிடுகிறார்.
நடுவில் ஒரு நாள்   இளவரசன் பால்  உடன் ஒரு   சந்திப்பு. அதில் அதில்கமாக  ஷாம்பெயின் அருந்தி விடுகிறாள்.  ஆன்யா.. பாலின் நெருக்கத்தைத் தடுக்க முற்படுகிறாள்


  போனீன்  மனதில்  பொறாமை தோன்றுகிறது. இவள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு மனைவியாகும் தகுதி இவளுக்கு இருக்கிறது என்று   நினைக்கிறான்.
குடித்தது போதும்,விடுதிக்குக் கிளம்பு என்று அவளை இழுக்காத குறையாக

அழைத்துச் செல்கிறான்.
அங்கு அவளின்''நீ ஏன் என்னைக் காதலிக்க  மறுக்கிறாய்''? புலம்பல்களைக் கேட்டபடி அமைதி காக்கிறான்.

அடுத்த நாள் காலையில் ஒரு  எதிர்பாராத விசிட்டர்.
ஆமாம் மஹராணி மரியாவெ  வந்துவிடுகிறார்.

பாட்டியைச் சந்திக்கும் ஆன்யாவின் மனதில் பாசமும் அழுகையும் மகிழ்ச்சியும் போட்டியிடுகிறன்றன.

பாட்டியோ இவள் சொல்லும் நிகழ்ச்சிகளை   நம்ப மறுக்கிறாள்.
ஆன்யாவுக்கோ
பாட்டி நம்ப மறுக்கும் துக்கம்   இருமலாக வெளிவருகிறது.

திகைப்படையும் மஹாராணி மரியா'' உனக்கு உடம்பு சரியில்லயா?"ஏன் இருமுகிறாய் என்று கேட்க,
ஆன்யா தான்  அதீதமாக   அச்சப்படும்போது இந்த இருமல் வந்துவிடுவதாகவும் எந்த மருத்துவரும் இதைக் குணப்படுத்த முடியவில்லை

என்றும் பதிலளிக்கிறாள்.
இதைக் கேட்ட  பாட்டியின் மனம் பழைய  நினைவுகளில் ஊசலாடுகிறது.
சிறுமியாக இருக்கும்போதும் இதே போல் ஆன்யா  பயம் வரும்போது இருமியபடி தன்னை வந்து கட்டிக் கொள்வது நினைவுக்கு வர,

பேத்தியை இறுக அணைக்கிறாள்.

அடுத்த நாளிளவரசியின் இருத்தலைப் பற்றிய பிரகடனம். கூடவே இளவரசர் பாலுக்கும் ஆன்யாவுக்கும்    மணநாள் நிச்சயம் செய்யும் தினமாக அறிவிக்கப் படுகிறது.
இடையில் போனீன்  தான் கிளம்புவதாகப்   பாட்டியிடம் சொல்கிறான்.

துருவித் துருவிக் கேள்வி கேட்பவளிடம்  எனக்கு ஆன்யாவின் பணம் வேண்டாம்.  என்று மட்டும் சொல்கிறான்.
அவன் மனநிலையை உணர்ந்த மஹராணி  அவனை அந்த அறையிலேயே
காத்திருக்கச் சொல்கிறாள்.



சர்வ அலங்காரங்களுடன் பாட்டியைப் பார்க்க வரும்

ஆன்யா உணர்ச்சியில் தடுமாறுகிறாள்.
தான் போனீனைக் காதலிப்பதையும்    குறிப்பால் உணர்த்துகிறாள்.


பாட்டிக்குப் பேத்தியைப் பிரியும் துன்பம்  வந்தாலும்  அவளிடம் சொல்கிறாள்.
என்  இறந்தகாலம் இனிதானது. வருங்காலத்தைப்   பற்றி நான் யோசிக்கவில்லை..
உன்னுடைய நிகழ்காலத்தை இழந்துவிடாதே.

உனக்காக அவன்  காத்திருக்கிறான் அவனுடன் செல் என்று உத்தரவிடுகிறாள்.
பாட்டியைப் பிரிய மனமில்லாமல்  பிரிகிறாள் இளவரசி அனஸ்டேசியா.

அங்கு வந்த இளவரசன் பாலின் கைகளைப் பிடித்துக் கொண்டு படிகளில் இறங்குகிறாள்  மஹாராணி.
அவள் சொல்லும்   ஒரே   வார்த்தை  ''இந்த நாடகம் முடிந்தது''




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, April 02, 2013

உறவினர் நலம் பெற்று வருகிறார்



 என் பெரு மதிப்புக்குரிய நல்ல மனிதர்.
திடீரென   தன் செயலிழந்து மூர்ச்சை ஆனது இரண்டு நாட்களுக்கு முந்திய இரவில்.

அவர் மனைவிக்கும் 80 வயது.

நல்லவேளையாக   அவர்களுக்கு ஆதரவாக
இருப்பவர்கள்    பக்கத்திலியே இருக்கும் மருத்துவர்கள். பெரியவர் உடல் நலம் சீரில்லை என்று தெரிந்ததும்
உடனே வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.


சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட உதவி   பெரியவரின் நிலையைச் சீராக வைத்திருக்கிறது,.

நேற்று   காலையிலிருந்து அங்கேதான் இருந்தோம்.
கண்திறந்து எங்களை அடையாளம் கண்டுகொண்டார்.
இறைவனுக்கு நன்றி..

இன்று அவர்கள் பெற்ற செல்வங்கள்   வெளிநாடுகளிலிருந்து
வந்துவிடுவார்கள்.
வயது முதிர்ந்த நிலையில் இந்த  பாதிப்பு வந்திருப்பதால்
முன்னேற்றம் சிறிது   மெதுவாக தான் இருக்கும்.
எப்படியும் எந்த நிலையிலும்
அவர் நலம் இறைவனால் காக்கப் படும்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

















 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...