Thursday, July 12, 2007

199,Bern புகைப்படப் பதிவு

இந்தப்பதிவில் நான் பதிய நினைத்த சமாசாரங்கள் எல்லாம் புகைப்படங்களில்
இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.









இந்தப் பூனை ஜிகெக்கு உறவாம்.












இந்தக் கரடிகள் இப்போது மரத்தில் உருப்பெற்று வருகின்றன.





இது பெர்ன் நகர ஆறு. இதன் கரைகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுவதும் வெளியேறுவதும் வழக்கம்.ஆனாலும் மிகுந்த பழமை வாய்ந்த இந்த
வீடுகளில் வசிப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கே இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்.









பெரன் நகரம் ஒரு ஓவர் வியூ. கதவு சின்னதாக இருக்கும். உள்ளேபோனால் விரிவாக வீடு அமைந்து இருக்கும். கூரையில் இருக்கும் ஆட்டிக் அறைகள் வெகு அழகு.கூரையில் ஒரு பால்கனி அதில் இரண்டு நாற்காலிகள். சூரியக் குளியலும் அதில்தான். மாலை நேர மதுஅருந்தும் இடமும் அதுதான்.
அவர்கள் சமைக்கிறார்களா என்றே எனக்குச் சந்தேகமாயிருக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் எப்போதும் கூட்டம்.
ஆனந்தமாக ஃப்ரீ யாக இருப்பதுபோலக் கலகலப்பு எப்போதும்.
அப்படியே இருக்கட்டும்.










Wednesday, July 11, 2007

198,என் தோழி இவள்






இந்தப் படங்கள் எடுக்கப்பட்ட ஊரில் தான் என் தோழி இருந்தாள்.அவள் வாழ்க்கைப்பட்ட இடம். இப்போது இடம் மாறிவிட்டாலும் எங்கள் இருவர் மனசிலும் அழகான நட்பு உருவாகக் காரணமான இந்த யேற்காடு எனக்கு மறக்காது.


திருமணமாகிக் கையும் குழந்தையுமாக எங்கள் வாழ்க்கை துவங்கினது சேலத்தில். அப்போது அறிமுகமானவர்கள் இந்தத் தோழியும் அவளது கணவரும்.

இருவருமே எங்களை விடப் பத்து வயது மூத்தவர்கள்.

மதப்பற்று மிகுந்தவர்கள். ஞாயிறு அன்று காலை உணவு முடிந்ததும் சர்ச்சுக்குப் போய் விடுவார்கள்.


தோழியின் கணவர் .நல்ல உயரம் அதற்கேற்ற திடமான உடற்பாங்கு. இரண்டு பேரையும் சேர்த்து நிற்க வைத்துப் பார்த்தால்

அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

அவர்களுக்குச் சென்னையிலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு இருந்தது.

எங்க மாமியாருக்கு அவரிடம் நிறைந்த மரியாதை. சிங்கத்திடம் நம்ம வீட்டில செய்த பலகாரம் எல்லாம் கொடுத்து அனுப்புவார். அந்த யானைக்குக் கொடுடா.ரசிச்சுச் சாப்பிடட்டும் என்று வேறு சொல்லி அனுப்புவார்.

தோழியும் கணவரும் சாப்பிட்டுவிட்டுப் பலகாரம் அனுப்பிய கூடை நிறைய அவங்க எஸ்டேட்ல விளைந்த ஆரஞ்ச்,மலை வாழைப்பழம் எல்லாம் போட்டு அனுப்புவார்.

மாமியாரும் அவரும் (திரு.தாவித்) பேசிக்கொள்ளும் பாங்கு ரசிக்கும்படி இருக்கும்.

எங்களையெல்லாம் வீட்டுக்குள்ளெயே அனுமதிக்க மாட்டடங்க உங்க ஜனங்க, நீங்க என்னடான்னா உங்க வீட்டுப் பாத்திரத்தயே எங்களுக்கு அனுப்பறீங்கனு அவர் கேலி காட்டுவார். அதற்கு மாமியார் ,நீ தான் பழமாக் கொடுக்கிறியே, அதற்காகத்தான் உனக்கு இதெல்லாம் அனுப்புறேன்னு பதில் சொல்லுவார். மதங்கள் ,கட்டுப்பாடுகள் இதையெல்லாம் மீறி எங்கள் இரண்டு குடும்பங்களும் பழகி வந்தன.


அவர்கள் சென்னையில் இருக்கும் நாட்கள் மிக சந்தோஷமாகப் போகும்.

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்னு ரெண்டு பேரும் படித்துப் பேசி வைத்தது போல ஒரு சேர உறவினர் நண்பர்கள் என்ற ஒரு ராஜ்ஜியத்தையே அன்பால் ஆண்டு வந்தார்கள்.


அவர்கள் வீட்டை த் தாண்டித்தான் நான் பஸ் நிலையத்துக்கே போக வேண்டும். அவர் வீட்டிலிருந்து பார்த்துவிட்டால் போதும்,

உடனே மனைவியை அழைத்து உன் சினேகிதி போறாங்க, ஆளை அனுப்பி என்ன விஷயம்னு கேளு, வெய்யில்ல நடக்க வேண்டாம்,கரண்டு பில்லோ எந்த பில்லோ போன் பில்லோ நம்ம டாமினிக்கை அனுப்பு, அவன் கட்டிட்டு வருவான் என்று சொல்லுவார்.

மனைவியும் (திருமதி கருணா தாவீத்) உடனே வெளியெ வந்து,

இந்தா எங்கப் போற இந்த வெய்யில்ல, உள்ள வந்து காப்பி குடி,
அப்புறம் வீட்டைப் பார்க்கப் போய்க்கலாம்னு அழைத்துச் சென்றுவிடுவார்.கருணாவும் பத்து வகுப்பு வரை படித்துக் கல்யாண பந்தத்தில் புகுந்தவள்.
சித்திரம் போன்ற அழகு. அடக்கம்,அதிராத பேச்சு.
ஏற்காடு மலையில் வீட்டு நிர்வாகம் ஓயாத வேலை. மிகப் பெரிய மலைத் தோட்டம்.
அத்தனையையும் இரண்டு ஆட்களை வைத்துச் செய்து முடிப்பாள்.
காலையில் எழுந்து ,முதல் வேலை பைபிளை ப் பிரித்துப் படிப்பதுதான். பிறகு சேலத்துக்கு செல்லும் கணவருக்கு வாய்க்கு ருசியாக மணக்க மணக்க அவங்க வகைக் கறியும் குழம்பும் சுடச் சுட செய்து அனுப்புவாள்.


கைவேலை,உப்புக் கண்டம் தயாரிப்பது,வடகம் செய்வது என்று நாள் முழுவதும் வேலை.சித்திரம் வரைவதும் ஒரு பொழுதுபோக்கு. தபால் வழியாக வரும் அனைத்து ஆங்கிலப் புத்தகங்களையும்,பத்திரிகைகளையும் படித்து அதில் வரும் சமையல் குறிப்புகளை எழுதிவைத்துக் கொண்டு வரும் விருந்தினருக்குச் சமைத்துக் கொடுப்பதில் ஒரு சந்தோஷம்.


எங்களுக்கும் ஒரு ஓசி மலைவாசஸ்தலம் கிடைத்தது. அதுதான் இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் கருணாவை நினனத்துக் கொள்வேன். கடிதங்களில் எல்லா விவரமும் கேட்டுக் கொண்டு இங்கிருக்கும் தேவாலயங்களைப் படம் எடுத்து அனுப்பினால் அதில் பரம ஆனந்தம்.
ஏதோ ஒரு நோய் 25 வருடங்களுக்கு முன் வந்து திரு.தாவீதை (அவளுடைய நாற்பைதைந்து வயதில்) அழைத்துக் கொண்டபோதுகூட இறைவனை நோகவில்லை. எப்போதும் போல் நிதானம்,பிரேயர் என்று தான் இருக்கிறாள்.
உன்னதமான ஒரு மங்கை.அவளைப் பதிவில் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியதால் பதிந்து விட்டேன்.






Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Monday, July 09, 2007

197,ஃபங் ஷுவே பகுதி 2










சீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.
தஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.
ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))
எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மமத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.
அது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.
சாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.
திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.
மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.
இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.
பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.?
எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.
பித்தமும் தெளிந்தது.
ஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))





Thursday, July 05, 2007

196,ஃபங்ஷுவேயும் நானும்....1










வாஸ்து டால்ஃபின்


Add caption



Feng shui எனும் ஃபங் ஷ்வே என் வாழ்க்கையில் புகுந்தது எப்போதுனு யோசித்தேன்...உட்காரப் போனேன்.உடனே


ஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ!!!
 தெற்கே பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அம்மா சாமி கும்பிடுதுனு மினிம்மாவும் விடை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.

ஒரு ச்சின்ன ஸ்டூல். அதில ஒரு கண்ணாடி பௌல். தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கல்லு,கொஞ்சம் எண்ணை,ஒரு ஃப்ளோட்டிங் தீபம், கொஞ்சம் பூக்கள் உதிர்த்துப் போட்டுக் கண்திருஷ்டிக்கு ஒரு வேப்பிலை, பக்கத்திலேயே ஒரு சிங்கப்பூர் சாம்பிராணி.. இன்ஸ்டண்ட் மாயாலோகம்.

த்யானம் செய்ய வசதியா, ஒரு நாற்காலி,போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.
கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.......

இது ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வீட்டுக்கு நலம்னு நான் கத்துக்கிட்ட சீன வாஸ்து.
வீட்டில ஏதவது நல்லது நடக்கணும்னால் இது போல தீபம்,தியானம் ,சி (chi) சக்தி,,சிவப்பு ,பச்சை,கறுப்பு,மஞ்சள் நிறங்களோட மகிமை,
யின் அண்ட் யாங், நான் எலியா,புலியானு ஆராய்ச்சி....


அதாவது இந்த வருஷம் பிறந்தா இந்த மிருகம்னு சைனீஸ் ல இருக்கும்
அது பிரகாரம் நான் எலினு தெரிஞ்சுது., எங்க வீட்டுக்காரர் முயல்னோ வேற ஏதொ போட்டு இருந்தது. எலியும் பூனையும்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்.
எலியும் முயலும் சினேகமா இருக்குமான்னும் அப்போது திடீர்னு சந்தேகம். ஆனால் நாங்க சகித்துக் கொள்கிற சதிபதியா இருந்ததால எலியும் முயலும் தோழமை சக்திகள்தானு உறுதிப் படுத்திக் கொண்டேன். :)))


அப்படி ஒரு வாஸ்து பிரமை ஒரு பத்து மாதம் வரை ஆட்டி வைத்தது. வாஸ்து சாஸ்திரம் தப்பு என்றோ சைனீஸ் மட்டம் என்றோ சொல்ல வரவில்லை. நான் வாஸ்து விஷயத்தில் நடந்து கொண்டவிதம் கொஞ்சம் விபரீதம்..



நம்ம வீட்டுக்கு வரவங்க போறவங்களுக்கெல்லாம் வாஸ்து அறிவுரைகளை வாரி வழங்குவோம்.
தாராளமாக வழங்கப்படும்.இந்த அறிவுரைகளைக் கேட்டு,அவர்கள் சுற்றிய ரீலோடு அது திருப்பி எனக்கேஇன்னும் சொல்லப் போனனல் வரவங்க எல்லார் மூலமாவும் எனக்கு ஹிண்ட்ஸ் வர ஆரம்பிச்சுது..


"ஏங்க இந்த டைனிங் டேபிள் கிழக்கு மேற்கா இருக்கலாமே,


தெற்கு பார்த்து சோஃபாவைப் போடலாமே. சம்பந்தம் பேச வரவங்களுக்கு மேல்கையா நீங்க இருக்கணும்.(அப்போது எங்க பையன்களுக்குத் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தநேரம் )


இதென்ன ரம்மியா, நான் ட்ரம்ப் கார்டு விளையாட.

காம்பவுண்ட் சுவருல பிள்ளையார் வரஞ்சிடலாம். தெருவில இருந்து கண் போடறவங்க கிட்டே இருந்து தப்பிக்க வழி.


வீடு கட்டின விதமே சரியில்லீங்க, ஒரு மாதிரி அகல நீளமெல்லாம் ஆராயம கட்டிட்டாங்க."


இதெல்லாம் சொன்னவங்க, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வரவங்க,ஏசிக்காக சுவரில இடிச்சுக் கட்டினவங்க, குளிக்கிற அறையில டைல்ஸ் போட்டவங்க,காண்ட்ராக்டர்.....இவங்களைத் தவிர புதிசா வீடு கட்டினவங்களும் அடங்கும்.


நாங்களா கேப்போம்.....??என்னிக்காவது கேட்டு இருந்தாத்தானே.......


அதற்குப்பதில் மௌண்ட்ரோடுக்குப் படையெடுத்தேன்,அப்ப ஒரு புகழ்பெற்ற ஃபங்ஷுவே கடை அங்கே இயங்கிக்கொண்டிருந்தது.(இப்ப மூடிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். :)))

ஆஹா, அந்த அனுபவத்த இப்ப நினைச்சாலும் கலங்கறது மனசு.
எவ்வளவு பெரிய முட்டாளை எங்க அம்மா அப்பா உலகத்துக்கு
வாரி வழங்கி இருக்காங்கனு.


அங்க இருந்த கடை சொந்தக்காரங்க நான் உள்ள நுழைந்ததும் ஒரு நல்ல நாற்காலியில் உட்கார வச்சாங்க. நானும் சுத்திமுத்திப் பார்த்தேன்.
கொஞ்சம் இருட்டு,வாசனை மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுத்தன.

அத்தனூண்டு சின்னக் கடைக்குள்ள,மணிகள்,விண்ட்சைம்ஸ்,விதவிதமான ஆமை,டிராகன்,தவளை,சிரிக்கிற, குண்டா இருக்கிற புத்தா பொம்மைகள், மாலைகள்,வர்ணம் நிறம்பிய கூழாங்கற்கள்,திபேத்தியன் இசையோடு,சாம்பிராணி வாசனையோடு,பக்கத்திலேயெ சிவலிங்கம், குட்டி மீன்கள்,மோதிரங்கள்......


ஒருமாதிரி அம்மனொ சாமியோ(இப்பத்தி மொழிப்படி மந்திரிச்சுவிட்ட ஆடு) நிலைமைக்குப் போகும்போது
அந்த அம்மா உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைனு என்கிட்ட சொன்னா நான் தீர்த்துவைக்கிறேன்.

இடிக்க வேணாம்,கட்ட வேணாம். ரெய்கி,சைனீஸ் வாஸ்து இதில சொல்லப் படாத நிவாரணமே இல்லை.அப்படின்னு சொல்லி விதமான மணிமாலைகள்,மோதிரங்கள்,சிகப்பு வெல்வெட் பைகள்,விசிறிகள்,பறக்கிற வாத்துகள் படம், பெரிய பொம்மைமீன் சிகப்புக் கண்ணோட,டர்ட்டில் டோவ் இன்னும் சில பொருட்கள் மறந்துவிட்டது. (எல்லாப் பொருட்களையும் ஒரு கணிசமான
விலைக்கு வாங்கிக் கொண்டேன், வாங்க வைக்கப் பட்டேன்:))))
அதற்கும், அதாவது என் மறதிக்கும் ஏதோ மந்திரிச்சுக் கொடுத்தாங்க.)
அப்புறம் என் நடவடிக்கையே மாறிவிட்டது.

சும்மா இருந்த வீட்டு வரவேற்பறை வண்ணக்குவியலாக மாறியது
வீட்டு வாசலைப் பபர்த்து வெங்கடாசலபதி படம்,பக்கத்துலேயே பிள்ளையார்
அவங்க படத்துக்குக் கீழே ஒரு சிகப்பு வெல்வெட் சக்கரம்,அதுக்கும் கீழே மஞ்சள்தங்கக் கலரில் ஓம்,
பேரனுக்காகக் கட்டின ஊஞ்சலில் மயிலிறகுக்கொத்து.அத்ற்கு மேலெ காற்றில் ஆடினால் சத்தம் செய்யும் விண்ட்சைம்.
அது சரியா,சிங்கம் வந்து உட்கார்ந்து டிவி ஃபான் போட்டதும் கிளின்க் க்ளாங் சத்தம் போட ஆரம்பிக்குமா.டிவீல டை ஹார்ட் பார்ப்பாரா,
இந்தக் கசமுசாவைக்கேட்பாரா.....
அதுக்கு ஒரு ரப்பர்பாண்ட் போட்டுவிட்டார். விஷயம் தெரியாத நான்கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு கூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு.

இந்த கட்டறதும்,அவுத்துவிடறதும் ஒரு நான்கு நாட்கள் நடந்ததும் நான் அந்த விண்ட்சைம்ஸை மாடிக்கு மாற்றினேன்.
அடுத்தாற்போல இந்த ஆசைகளை எழுதி கயிற்றில்கல்லோடு சேர்த்துக் கட்டி சுவர்மூலையில் தொங்கவிடுவது,அதுவும் தெற்குமூலை இரு பசங்களுக்கும் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி ஒரு கத்திரிப்பூ கலர் தாளில் சுற்றி அதில் ஒரு அமெதிஸ்ட் கல்லையும் கட்டி பட்டு நூலில் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்தேன். மீதியை நாளை பார்க்கலாம்































Tuesday, July 03, 2007

195,தண்ணீர் விட்டே துவைத்தோம்

முன்னால போட்ட பதிவில இருந்த குழம்பு ஒண்ணும் ஆபத்தான விளைவுகள் ஏற்படுத்தி இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஏனெனில் அதைவிட ஆபத்தில மாட்டிக்கொண்டேன் இன்று.-))



இந்த ஊரில் வாடகை அதிகம் தெரியும். பையன் முதலில் இருந்த இடம் சிறியது. திருமணம் ஆனதும் சற்றே பெரிய இரண்டு படுக்கை அறைகளும் இரண்டு குளிக்கும் அறைகளும் கொண்ட வீட்டுக்கு வந்ததும் சௌகரியம் தான்.



ஆனால் துவைப்பதற்கு ஒரு ப்ளாக்கிற்கு(BLOCK) ஒரு துவைக்கும் யந்திரமும் உலர்த்தும் டிரையரும் ,ஏகப்பட்ட கொடிகள்(துவைத்ததை உலர்த்தத்தான்) கட்டிய இரண்டு அறைகள்.



ஆறு வீடுகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை . நம்ம டர்ன் அடுத்த வாரம் முதல் நாள் வரும்.

ஆடைகள் நிறைய சேர்ந்து போச்சே.

கைக்குழந்தைக்காரியைத் தொந்தரவு செய்யக் கூடாது, என்ன ஒரு பெரிய கம்ப சூத்திரமா,

அப்படின்னுட்டு, நாமே செய்யலாம்னு ஒரு நல்ல(¨¨!!!!) யோசனை வந்ததால், மகனிடம் செய்முறையெல்லாம் கற்றுக்கொண்டேன்.

அவனும் சொல்லிக் கொடுத்துவிட்டு அலுவலகம் கிளம்பினான்.



அவன் சொல்லும்போது புரிந்தது.

அப்புறம்தான் கொஞ்சமே கொஞ்சம் ஸ்டெப்ஸ் கன்ஃப்யூஸ் ஆகிட்டது. இப்பப்பார்க்கலாம்...


முதல்லே இந்தப் பூத மெஷினுக்கு ஒரு அடைப்பான்.
இது எதுக்குனு தான் தெரியலை. நம்ம ஊர் மாதிரி கதவைத் திறந்தோமா,துணியைப் போட்டாமா,கதவைச் சாத்தினோமோ,பட்டனைத் தட்டினோமா கிடையாது.

தோய்க்கிறதுக்கு ஒரு கார்ட்.

ஒரு ஃபுல் லோடு தோய்க்கிறதுக்கு இரண்டு fரான்க்.மொத்தமா பணம் கட்டி வாங்கிட்டு, சலவைக்குச் சலவை அந்த மீட்டரில் போட்டு எடுக்கணும்.
மஷினோட வாயில எல்லாத்துணியும் போட்டு விட்டுக் கதவைச் சார்த்தி, உஷ்ணம்,துணிமணிகளோட வகைக்கேத்தமாதிரி ஏதோ ஒரு ஜெர்மன் வார்த்தை...அதில இந்தக் குமிழி யைத் திருப்பணும்.

அப்புறமா கார்டு போட்டு........இங்கதான் தப்பு வந்திது.
நம்ம ஊர் மின்விசிறி மாதிரி ஸ்விட்ச். அதை வலது பக்கம் திருப்பும்படி இன்ஸ்ட்ரக்ஷன். நான் செய்தா அது ஆன் ஆனாத்தானே. ????
தண்ணி வர சத்தமும் கேக்கலை
சரிடா எதுக்கும் கார்டை இன்னோருதடவை போடலாம்னா அது கீ கீ கீனு அலற ஆரம்பித்தது. சாமி சரணம்னு அவசரமா வெளில எடுத்தேன்.சத்தம் நின்னது.
ஆனால் காலில் சில்லென்னு தண்ணீர்.

இங்கேதான் எல்லாம் சுத்தக்காரங்களாச்சே. இது எங்கேருந்து வருதுனு பார்த்தால் அந்த அடைப்பான் கார்க் இருக்கே அதுவழியாச் சும்மா கலகலனு சிரிச்சுகிட்டு தண்ணீர்.

நாந்தான் அதைச் சரியா மூடவில்லைனு புரிந்தது. கையில தோய்க்க எடுத்துப் போன சிங்கத்தோட டர்க்கிடவலை அப்படியே அங்க போட்டுப் பிழிஞ்சேன் பிழிஞ்சேன் அப்படி ஒட்டப் பிழிஞ்சப்புறம்தான் ,நிம்மதி ஆச்சு. இல்லைன்னால் மகனுக்கும் மருமகளுக்கும் யார் பதில் சொல்றது.

நம்ம அசட்டுக் கௌரவம்தான் என்னாவது.

அடுத்தாற்போல நாளைக்குத் தோய்க்க வரப் போற மேல்வீட்டு இத்தாலிக்காரம்மா பெல் அடித்து"you did not dry the place"னு சொல்லிக் காமிப்பாங்க.

ஏற்கனவே சிங்கம் செய்யற கரடிக்கு (!!!) ஆபத்து வந்து விலகி இருக்கு.
( அது இன்னோரு கதை:))))...மரத்தில சிற்பம் செதுக்கறதுல நம்ம ஐயா
எக்ஸ்பர்ட். மரத்தில செதுக்கணும்னா உளி மரத்தில பதியணும். அதுதானே முறை? இவரு செதுக்க ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துல மேல் வீட்டிலேருந்து டும்டும்டும்னு தலைமேலவிழற மாதிரி ஒரு டமால்னு சத்தம்.
"I am waiting for the other shoe to fall"னு சொல்லாத குறையா மேலேயே, நாங்க அத்தனை(பேத்தி,மருமவ,மகன்,நான்,சிங்கம்) பேரும் பார்க்கறொம்.
டக்டக்னு செருப்பு சத்தம். படில அத்தனை வேகமா அந்தம்மா இறங்கிப் போறாங்க.......


அப்புறம் ஒண்ணுமே இல்லை. கொஞ்ச நேரம் கழித்து மகன் மெயில் எடுத்துவர கீழே போய்விட்டு வரும்போது ஒரு நோட்டீஸ் ஒட்டீருக்குப்பா. யாரோ ஒருத்தர் காலைல எட்டு மணிக்குச் சத்தம் போட ஆரம்பிக்கிறார்.
"எனக்குத் தூக்கமே வரலை. நிறுத்தச் சொல்லுங்க. " அப்படினு பிரிண்ட் செய்து ஒட்டிட்டாங்கனு சிரிக்கிறான்.


இந்த ஊர்ல அதான் வழக்கமாம். நேர முகத்தைப் பார்த்துக் கம்ப்ளெயினிங் எல்லாம் கிடையாது. ஆன்னா,ஊன்னா போர்டில போயி முட்டிப்பாங்க போல....
வேற வழியில்லாம சிங்கம் உளியைக் கீழ வச்சுட்டாரு பையனுக்கு மனசாகலை. இந்த வீட்டெல்லாம் பார்த்துக்கிற யாசிலின் அப்படீங்கற நல்ல மனுஷர்கிட்டச் சொல்லித் தனி அறை(Storage cellar) ஒண்ணை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான்.


அது இருக்கட்டும். இப்ப நம்ம கதை தண்ணீரிலத் தத்தளிக்கீறது இல்லயா
இங்க வரலாம். உடனே மேல வந்து சிங்கத்தைச் சத்தம் போடாம கீழே வரச்சொல்லி அந்த ஸ்டாப்பரைத் திருகி மூடச்சொன்னேன். அசட்டுக்கு அறு பது நாழியும் வேலைனு நினச்சிருப்பாரோ என்னமோ.
 பாவம் .. நல்லா அழுத்தி மூடினப்புறம்,அதிசயமாக உடனே மெஷின் ஒட ஆரம்பித்துவிட்டது.
என்ன உடனே உனக்கு உன் நண்பர்களுக்கெல்லாம் சொல்லணுமே நான் வேணா அடுத்த லோட் போடட்டுமானு கேட்டார்.
சரின்னு சொல்லி இருப்பேன். என்ன இருந்தாலும் வேலை முடிக்காமல் கம்ப்யூட்டர் பக்கம் வரக் கூடாதுனு சபதம் போட்டு இருக்கோமே நானும் என் மனசாட்சியும். அதனாலே பெருந்தன்மையா விட்டு விட்டேன்..:)))

இனிமே  எனக்குத் தெரியும்னு சொல்லிட்டுத்தான்   முடித்தேன் கதையை.

Friday, June 29, 2007

194,காரக்குழம்பு.. எங்க ஊர் வகை



 அம்மா வழிப்பாட்டி மகா ஆச்சாரம்.பூண்டு,வெங்காயம் பக்கம் போக மாட்டார்.

அப்பா வழிப்பாட்டி என்னை மாதிரி மாடர்ன்.:)))
ச்சின்ன வெங்காயம்,முருங்கை எல்லாம் கீரையோட சேர்த்து மண்சட்டியில் சமைப்பார். வாசனை ஊரைத்தூக்கும்.

அவங்க செய்யற இந்தக் காரக்குழம்பு, கெட்டியாக, நான்குநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

படித்து சமைச்சுப் பாருங்க. நல்லா இருந்தா சரி. இல்லாட்ட இப்பப் பாட்டிகிட்ட கேக்க முடியாது.


செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள்,
சின்ன வெங்காயம், ........2 கால்கிலோ பாக்கெட்
கொஞ்சம் பூண்டு,.......... 25 பல்லு
மிளகு........100கிராம்
புளி...........பெரிய எலுமிச்சம் அளவு
தனியா.......100கிராம்
மிளகாய் வற்றல்...100 கிராம்
தேவையான அளவு உப்பு.
இந்தக் குழம்பில் போடக்கூடிய தான்,அதாவது காய்கறிகள்...
முருங்கைக்காய்,.
கத்திரிக்காய்,
அவரைக்காய்,
சௌ சௌ,
கொத்தவரங்காய்,
உருளைக்கிழங்கு.
1,
புளியை முதலில் ஊற வைக்கவேண்டும்,
2 ,வாணலியில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணை விட்டு
3..தனியா,மிளகாய்வற்றல்,மிளகு,10பூண்டு,சின்னவெங்காயம் கால்கிலோ (பொடியாக நறுக்கினது)எல்லாவற்றையும் வறுத்து மையாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
4,நறுக்கின காய்கறிகளையும் வதக்கிக் கொண்டு,
புளியைக்கரைத்தத் தண்ணீரை மஞ்சள்பொடி உப்பு போட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
புளிவாசனை போனதும் , காய்கறிகள் வெந்த பிறகு இறக்கிவைத்துவிட்டு,
கொஞ்சம் தாரளமாக எண்ணைவிட்டுக் கடுகும் சீரகமும் சின்னவெங்காயம்,மிச்சமான பூண்டு இவற்றை வதக்கிச் சேர்க்க வேண்டும்.
இதுவும் கொதித்தவரும் போது அரைத்தகலவையைப் போட்டுக்
கொதிக்க விடவேண்டும்.
குழம்பு ரெடி.
எண்ணைத் தனியாகத் தெரிய வேண்டும்.அதுதான் இந்தக்குழம்பின்
இலக்கணம்.:))))
கருவேப்பிலை,பெருங்காயத் தண்ணீர் விட்டு இறக்க வேண்டியதுதான்.
பி.கு.
செல்வநாயகி சுட்டிக் காடியதால் தான் காய்கறிகளைச் சேர்த்தேன்.
இல்லாவிட்டால் அவை வாடிப் போயிருக்கும்:))))
நன்றிப்பா.






Tuesday, June 26, 2007

193,அப்பா என்ற ஒரு மனிதர்

இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோடி இங்கே..

http://kurungudi-valli.blogspot.com/2006/05/appa30th-may-1921-3rd-february-1996.html
இந்த மாதம் முடிவதற்குள் மூன்று அப்பா பதிவுகள் பார்த்தாச்சு


அந்த வகையில் பார்த்தால் அப்பாக்களுக்குத் தனியிடம்.


அதென்னவோ பெண்கள் ஒடுவது தந்தையிடம் தான


ப்ஃப்ராய்டு தியரிக்கு எல்லாம் அப்பாற்பட்டது இ



முதலில் இந்தத் தியரியில் எனக்கு நம்பிக்கையும் இல்லை


அம்மா கண்டிப்பு,அப்பா பாசம் இரண்டுமே இல்லை என்றால் நாமெல்லாம் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

எங்க அப்பா ரொம்பச் சாதாரண மிடில் க்ளாஸ் தந்தை.

தனக்குக் கிடைக்காத எல்லா சௌகரியங்களும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டி சகல முயற்சிகளையும் மேற்கொண்டவர்.

திருக்குறுங்குடி ஸ்ரீனிவாச நாராயணன்...



பேருக்கேற்ற நெடிய உருவம். சாத்வீகமான கண்கள்


சிரித்த முகம்.நல்ல உழைப்பாளி. காணி சோம்பல் கோடி நஷ்டம் என்ற கொள்கைப்படிவளர்ந்தவர். அப்பாவின் அப்பா ,அம்மா இருவருமே உறவினர்கள்.

தாத்தா சிறுவயதில் பெற்றோரை இழந்து சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர்.


அவருக்குச் சிற்றன்னையின் குழந்தைகள் மூத்த அண்ணா என்பதைக் குறிக்கும் முத்தண்ணா என்றே பெயர் நிலைத்தது.





அந்த முறையில் பிற்காலங்களில் தங்கை மிகப் பெரிய தொழிலதிபரின் மனைவியாகி இருந்தாலும் மேற்கொண்டு தனக்கு ஆதாயம் தேடிக்கொள்ளாத மகா அறிவாளி.கண்டிப்புப் பேர்வழி. நேர்மைவழியிலிருந்து சிறிதும்


மாறாத குணம்படைத்தவர்.





தோட்டியிலிருந்து தொண்டமான் வரைனு ஒரு பழமொழி பாட்டி சொல்லுவார்.


அத்தனை பேரும் சினேகிதர்கள். தாத்தா ஸ்ரீவைகுண்டம் தபால் அலுவலக மேலாளர். அங்கேதான் அப்பாவும்,அவரின் மூத்த சகோதரிகளும் தம்பிகளும் வளர்ந்தார்கள்.படித்தார்கள்.

அந்த காலத்திலேயே மேல்சாதி,மற்ற சாதி என்ற வேறுபாடுகள் கிடையாது

தாத்தாவுக்கு. பிற மதத்தவருக்கும் வீட்டில் சாப்பாடு உண்டு.மாட்டுவண்டியில் வந்துபோகும் பக்கத்து ஊர் தபால் ஊழியர்கள் எல்லோருக்கும் வீட்டில் இருப்பது பகிர்ந்து கொடுப்பார் பாட்டி, என்று என் தந்தை சொல்லுவார்.


ஐந்து குழந்தைகள் படிக்க வைக்க முடியும் என்ற நிலையில் தாத்தாவின்


பணநிலைமை இருந்திருக்காது.


அத்தைகளுக்குக் கல்யாணம் ஆன கையோடு பிள்ளைகளைப் பாளயங்கோட்டையில் படிக்க வைத்துத் திருநெல்வேலிக்கு வந்து

வண்ணாரப்பேட்டையில் முதலியார் ஸ்டோர்ஸ் என்ற வரிசைவீடுகளில் ஒன்றில் புதுக் குடித்தனம் ஆரம்பித்தார்களாம்.


கல்லூரிப் படிப்பு தொடர்ந்தது.

முதலில் படித்து முடித்தகையோடு அப்பாவுக்கு டி.வி.எஸில் வேலை, கிடைத்து

ஸ்ரீகாகுளம் என்ற இடத்துக்குப் போகச் சொன்னதும்,

தாத்தா மறுத்துவிட்டாராம்.

தனக்கு அறுபது முடியும் வேளையில் பையனை அத்தனை தொலைவு அனுப்ப மனமில்லை.அப்பாவும் மறுபேச்சுப் பேசவில்லை.தாத்தா சொல்படி தபால் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக


வேலைக்கு 40 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்துவிட்டார்.1941 என்று நினைக்கிறேன். அடுத்த வருடம் வெள்ளயனே வெளியேறு போராட்டத்துக்குப் போஸ்டர் ஒட்டியதாகவும் (சுவற்றில் எழுதி இருக்கலாம்) ஒரே ஒரு நாள் ஜெயில் வரை போய் வந்ததையும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.



அதற்குமேலாக ஏதும் செய்ய தாத்தாவின் அனுமதி இருந்திருக்காது.



20 வயதில் வேலைக்குச் சேர்ந்தவர் 1978 டிசம்பர் வரை அலுப்புத் தட்டாமல்



வேலைசெய்தார்.அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறேன் என் இன்னோரு பதிவில். அது பதிவு செய்வதற்காக எழுதப்பட்ட எழுத்து. ஒரு பின்னூட்டமும் இருக்காது. ப்ளாக்தேசம் பக்கம் போகிறவர்கள்குறைவு என்று நினைக்கிறேன்.



இப்பவும் ரவிகண்ணபிரான் தான் காரணம் இந்தப் பதிவுக்கு. நாங்கள் மூவர் பிறந்தோம் அம்மாஅப்பா குழந்தைகளாக. எனக்கு மூத்த குழந்தை ரங்கராஜன் என்ற பேரோடு 10 மாதங்கள் மட்டுமே பூமியை ஸ்பரிசித்துவிட்டுப் போனது.



அந்தக் குழந்தையைப் பற்றி இருவரும் என்ன கனவு கண்டார்களோ



இவ்வளவு பாசம் அப்பா மேல் நாங்கள் வைக்கக் காரணம் அம்மாவின் இம்மிகூடப் பிசகாத விஸ்வாசம்தான். ஒருவருக்கொருவர் இவ்வளவு புரிதலோடு இருந்த தம்பதிகளை நான் பார்த்ததில்லை. நான் பெரிசு நீ பெரிசு ஈகொவே கிடையாது.



சில நாட்கள் முன்னால் சிகாகோவில் பெண்ணின் வீட்டுக்கு வந்திருந்த ஒரு முதியவர்,பேச்சுவாக்கில் தபால் துறையின் பொன்னான நாட்களில் எங்கள் நாட்கள் ஓடின. இப்போது அந்த மதிப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை உன்னைப் பபர்த்தால் என் பழைய நண்பர் நினைவுக்கு வருகிறார் என்று விசாரித்து இருக்கிறார். எங்க தாத்தாவும் போஸ்ட்மாஸ்டர்தான் என்று சொல்லவும்.,"நாராயணன் சார் பேத்தியா நீ.



அவரை மாதிரி உண்டா.எங்களுக்கெல்லாம் நம் நாட்டுக் கொடிமேல் பற்று வர அவர்தான் காரணம்.சுதந்திர,குடியரசு தினங்களில் கொடி ஏற்றிப் பாட்டு பாடி, பேசவும் செய்து உற்சாகம் கொடுப்பார்.



E.D. Packers(கடைநிலை ஊழியர்கள்)அத்தனை பேருக்கும் ஊக்கம் கொடுத்து தேர்வு எழுதி முன்னுக்குவரச் செய்தார்."நல்ல மனுஷர்மா..



என்று பெருமையோடு சொல்லவும் மகள் எனக்கு உடனே தொலைபேசிவிட்டாள்.அநேகமாக குழந்தைகளுக்குத் தாத்தாவின் அருமை தெரியும் என்றாலும் அவருடைய தொழிலின் மீது அவருக்கு இருந்த பக்தி,கோட்பாடுகள் எல்லாமே நேர்மை வழியில் ஏற்பட்டவை.

எங்களுக்கும் ஏதாவது கொஞ்சமாவது நல்ல குணங்கள் வந்தன என்றால் அது அப்பா நடந்து கொள்வதைப் பார்த்துத் தான்.

அனாவசியமாக யாரைப் பற்றியும் வார்த்தைகள் விட மாட்டார். "words have a way of returning to you sometimes in your life. so be very careful

when you think of talking."

இதுதான் அவர் எப்பவும் சொல்வது.

அப்பாவின் கடவுள்பக்தி அளவிடமுடியாதது. ஸ்ரீராமன் பாதம் திண் சரணாகக்கொண்டவர். தன் தந்தை சொன்ன ஒரு வார்த்தையைக் கூட விடாமல் ,மறக்காமல் நிறைவேற்றியவர்.

சில காலம் எங்கள் வாழ்க்கையில் சில பல தொந்தரவுகள் வரும்போது அசராமல் உதவி செய்வார். நான் வருத்தப் படக்கூடாது என்று

ஒரு கை தருவது இன்னோரு கைக்குத் தெரியாமல் உதவுவார்.

பிள்ளைகள் படிப்புக்காக மட்டுமே பாங்கில் கடன் வாங்கி அடைத்தவர்.

மற்றபடி கடன் என்ற வார்த்தைக்கே இடம் கொடுக்காதவர்.

என் சம்பளத்தைவிட என் பென்ஷன் அதிகம் அம்மா என்று சிரிப்பார்.

ராமேஸ்வரம் புயல் அடித்த 1967ஆம் வருடம் அங்கே வந்த அத்தனை தந்திகளையும் ,அந்தக் கடுங்காற்றில் கைவிட்டுப் பறக்கும் குடை சகிதம் தன் மகனுடைய உதவியோடு கொண்டு போய்க் கொடுத்து எல்லாருடைய நன் மதிப்பையும் பெற்றவர்.

அவர் மேற்பார்வையில் இருக்கும் அலுவலகத்தில் தூசி தும்பு பார்க்கமுடியாது. அழகப்பாநகர் ,காரைக்குடியில் அந்தத் தபால் அலுவலகத்துக்குப் பரிசு கிடைத்தது.இப்படி எத்தனையொ.

ரிடையர் ஆகி வீடு கட்டி வத பிறகு அப்பா சும்மா இருந்தநாட்களே கிடையாது. கொலு பொம்மைகள் செய்வார். காஸ் அடுப்பைப் பழுது பார்த்து வண்ணம் அடிப்பார். வரைவதிலும் ,கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும்....எங்களுக்காகச் செய்வார்.

அவரைப் பற்றி ச் சொல்ல ஒரு பதிவு போதாது.

இருந்தாலும் எனக்கு அவரிடம் ஒரே ஒரு குறை உண்டு.என் மகள் திருமணத்திற்கு பார்த்த சத்திரத்திற்கு வார் அறுந்த செருப்போடு வந்து பணம் கட்டியவர்

அடுத்த நாள் உடல்நலம் சீரில்லாமல் போய் அதற்கு அடுத்த நாள் மறைந்தார்.அவருக்குப் பிடித்த பெருமாள் பாதங்களைத் தேடிப் போயிருப்பார். இது கூட எனக்குத் தொந்தரவாகச் செய்யவில்லை. திருமணம் நல்ல படியாகத்தான் நடந்தது. எல்லாம் அப்பா சொல்படி இறைவன் சித்தம்.

இந்த நீண்ட பதிவைப் படித்தவர்களுக்கு என் நன்றி.


அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...