Blog Archive

Friday, May 27, 2022

பழைய கதை.2012 ஜூன்.



Wednesday, June 06, 2012
வளரும் உறவுகள்

கொடுக்காப்புளி ருசித்த காலம் 2 nd part



தபால் சேலத்திலிருந்துதான்.  (COMPLAINTS   FROM MR.C.S.Narasimhan)

குழந்தை பிறக்கணும்னால்   மதுரைக்குத்தான்
போகணுமா. இங்க வைத்துக் கொள்ளக் கூடாதா.
பாண்டில் பட்டன் இல்லை.
சட்டையில் க்ரீஸ் போகலை.

தோய்க்கிறவன் சரியாச் செய்ய மாட்டேன் என்கிறான்.
நெஸ்கபே  பிடிக்கலை.
சாப்பாடு  ஒத்துக்கவில்லை  இத்யாதி இத்யாதி.

இத்தனைக்கும் உள்ளூரிலியே சித்தப்பா இருந்தார்.
போனால்   அழகாக ஒருவேளைச் சாப்பாடாவது
சரியாக இருந்திருக்கும்.
பதில் கடிதத்தில் தயிர் தோய்ப்பது எப்படி.
சாதம் குக்கரில் செய்வது எப்படி என்றேல்லாம் எழுதினால்
எவனுக்கு நேரம் இருக்கு.
வொர்க்க்ஷாப் முதல் சைரனுக்கு நான் அங்க இருக்கணும்னு
அப்பதான் தொழிலாளிகளுக்கு  எல்லாம் டிஜிப்லின் வரும்னு பதில்.

இப்படியே   நாட்கள் தள்ளிவிட்டோம்

நடுவில் லக்ஷ்மியும் வந்தாள்.
பரோடாவிலிருந்து   போபாலுக்கு மாறிவிட்டதாகவும்
உலகமே   அதிசயமாக   இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதுக்குள்ள எதுக்கு முதல் குழந்தை.

இரண்டு வருடமாவது  எஞ்சாய் செய்ய வேண்டாமா. நாங்கள் பார் பாங்கில்  லீவு வரும்போதெல்லாம் காஷ்மீர்,டெல்லி என்று போய் விட்டு வந்துவிடுவோம்.
உங்க ஆத்துக்காரர் ராத்திரி 12 மணிவரை வேலை செய்வாராமே.
நீ தனியாக   உட்கார்ந்திருப்பியா.
இல்லையே   எனக்குத் துணைக்கு ஆள் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன். அழகாக ரேடியோ வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
அவர் வரும் வரை கேட்பேன்.
ராத்திரி விழித்தால் என்ன . பகலில் தூங்கிக் கொள்கிறேன்.
அவர் வேலை அப்படிப்பட்டது  என்றேன்.

உனக்குப் புத்தகம் இருந்தால் போதும்,  எனக்கு அப்படி இல்லைமா.
என்று மேலும்  வளவளத்த பிறகு, குழந்தை பிறந்ததும் பார்க்க வருவதாகச் சொல்லிப் போனாள்.

பிறகு அவளுக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

எனக்கும் மூன்றாவதாகப் பையன் பிறந்தான்.
எங்கயோ இந்தூரிலிருந்து என்னை சென்சார் செய்து கடிதம் போட்டாள். ரெண்டு போறும்னால் கேட்கலியே  என்று பொறுமினாள்.:)

எனக்குக் கஷ்டமே இல்லை  லக்ஷ்மின்னால் ஒத்துக் கொள்ள மாட்டாள்!!

நாற்பது வருடங்கள் கழித்து இப்போது பார்த்தபோது நிறைய சேதிகள். மதுரைக்குத் திரும்பி விட்டதாகவும் பிள்ளைகள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே ஒரு வருடம் இங்கே ஒரு வருடம் இருப்பதாகவும் சொன்னாள்.

அப்பா  இறைவனடி சேர்ந்தது.,தம்பிகளும் அமெரிக்காவில் இருப்பது என்று நீண்டு போன பேச்சில் ஒன்றைக் கண்டுபிடித்தேன். குற்றமே சொல்லவில்லை. என்ன  இப்படி  சாதுவாயிட்டியேலக்ஷ்மி  என்று ஆச்சரியப் பட்டேன்.



பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே  என்று முடித்தாள்:)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்









at June 06, 2012 27 comments:  
Email This

வளரும் தேயும் நிலைக்கும் உறவுகள்  1
++++++++++++++++++++++++++++++++++++++++++










அக்கா பெரியக்கா
என் பெரியக்காவும்  இது போலத்தான் . இன்பம் வந்தால் தலைகால் தெரியாது. நானும் தெரிய மாட்டேன்.
சிறிது ஏறுக்கு மாறாக ஏதாவது காதில் விழுந்தால் புலம்புவாளோ அப்படிப் புலம்புவாள்.
எஸ்டிடி  போட்டுப் புலம்புவாள்.

உனக்கென்ன என்று ஆரம்பித்தால் தெரிந்துவிடும். ஏதாவது தகறாரு
மாமியாருடன்   என்று,
நான் என்ன செய்யட்டும். என் மாமியாரும் எண்பது தொண்ணூறு வயது இருந்தால் நானும் சந்தோஷம்தான் பட்டிருப்பேன்.
அருமையான  மனுஷி.

இவள் இந்த  லக்ஷ்மி இருக்கிறாளே, அப்பா  செல்லம். 
வரைந்த சித்திரம் போல அழகு. 
பதினெட்டு வயதிலியே கண்கள் நாலும் பேசும்.
மதுரை   வசந்தநகர்  வீட்டுக்கு யாராவது ஏதாவது காரணத்தைக் கொண்டு வருவார்கள் போவார்கள்.
பாதி நபர்களுக்குச் சின்னம்மாவைப் பார்ப்பதுதான். வேலை. இவளும் ஊஞ்சலை விட்டு நகராமல்,நீண்ட கூந்தலைப் பின்னித் தளர்த்தி
இந்தக் கையில் ஜயகாந்தன் புத்தகம் வைத்துக் கொண்டு  அசையும் ஓவியமாய்க் காட்சி தருவாள்:)
அப்பா   சீதாலக்ஷ்மி மில்லில் நல்ல வேலையில் இருந்தார்.
எப்பவாவது  நம்  வீடு வழியாகப் போகும்போது   லக்ஷ்மியை இற்க்கிவிட்டுப் போவார்.
சாயந்திரம்    வரை கதை அளந்துவிட்டுப் புதிதாகக் கற்றுக் கொண்ட எம்ப்ராய்டரிக் கலையில் பட்டாம்பூச்சியையை ஏற்றிய  
துணியைத் தைக்க தயார் செய்வோம்.

ஒருநாள்   காலையில் பெரியப்பா வந்தார்.
லக்ஷ்மிக்குப்  பரோடாவிலிருந்து வரன் வந்திருக்கிறது. அவர்களும் 
மதுரைக்காரர்கள் தானாம்.

மாப்பிள்ளை மானேஜர் வேலையில் இருக்கிறார் வசதியான  குடும்பம்.
இவர் ஒரே    பையந்தான். படமும் அனுப்பி இருக்கிறார்கள் .
நல்ல உயரம் , சேப்பா நன்றாக இருக்கிறார்.
உன் மனைவி கலர் இருப்பார்' என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார்.
அம்மா  உள்ளே  டப்பென்று எதையோ   வைக்கிற சத்தம் கேட்டது.:)

அப்பா  படத்தைப் பார்த்துவிட்டு, நல்லதாப் போச்சு   கோவிந்தா,
லக்ஷ்மியைக் கேட்டியா,அவள் சம்மதம் இல்லாமல் செய்யாதே
என்றார்.
அதெல்லாம் நேற்றே  ஆச்சு.
அவளுக்கு எப்படியாவது இந்த மதுரையைவிட்டுப் போனால் போதும் என்றிருக்கு, அவள் அம்மாவுக்குத்தான் இவ்வளவு தூரத்துக்குப் பெண்ணை அனுப்பணுமே.அடிக்கடி  பார்க்க முடியாதே. உன் பெண்ணாவது இங்கே புதுக்கோட்டையில் இருக்கிறாள்.

இதோ கல்யாணமாகி ஆறு மாதத்தில் கருவும் தரித்தாச்சு.
மாப்பிள்ளையும் வாராவாரம் மோட்டார்சைக்கிளில் வந்துவிடுகிறார் பார்க்க. 

நாங்கள் அப்படி செய்ய முடியாதே   என்று ஜானகி
கவலைப் படுகிறாள்  என்று முடித்தார் பெரியப்பா.

இது நடந்தது ஒரு ஆவணியில். அதற்குள் எங்அளுக்குச் சேலம்  மாற்றம் கிடைத்துப் போய்விட்டோம். திருமணத்துக்கு வரமுடியவில்லை.
சென்னையில் எங்களுக்குச் சீமந்தம் முடிந்த அம்மா கையோடு என்னை மதுரைக்கு அழைத்துவந்துவிட்டார்.
அதற்குள்  லக்ஷ்மி  திருமணம் முடிந்து பரோடா போயிருந்தாள். அம்மா
அந்தக் கல்யாணப் பெருமைகளைச் சொல்லி முடிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டார்.!!

எனக்குத்தான் கதை கேட்கப் பிடிக்குமே,பிரசவத்துக்குத் துணயாக வந்திருந்த பெரிய பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெரிய  பாட்டி  என் கல்யாணத்தையும் அவள் கல்யாணத்தையும்
ஒத்து நோக்கிக் கொண்டே, 
பாப்பா    உனக்கும்  உங்க ஆத்துக்காரருக்கும் சாம்ர்த்தியம் போதாது போ.
அவனைப் பார்த்தியா. ஊர்ப் பெரிய மனுஷாளையெல்லாம் கூப்பிட்டு  
பந்தல் நிறையப் பரிசாக அடுக்கிவைத்திருந்தான் பார்,

மதுரை ஜங்க்ஷனே கொள்ளாமல்   வண்டிகள், ஃபர்ஸ்ட்    க்ளாஸ்
குப்பியாமே  அதில் இவா மட்டும் போகிறமாதிரி

ஏற்பாடு. மாமியார் மாம்னார் தனியா ஃஃபர்ஸ்ட் க்ளாஸில் போனார்கள்
என்றதும் எனக்குச்  சிரிப்புத் தாங்கவில்லை.
பெரியம்மா அது குப்பி இல்லை  கூபே. இரண்டு பேர் மட்டு போகக் கூடிய ஃபர்ஸ்ட் க்ளாஸ்  .தேன்நிலவுத் தம்பதிகள் இல்லியா 
என்று குறும்பாக முடித்தேன்.

என்னவோடிம்மா.நாங்கள் எல்லாம்  ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்க்கவே நாலு மாசம் ஆகும்;''

ஆமாம் அதுக்குள் பாப்பா மட்டும்    சீக்கிரம் வந்துடும் என்று சிரித்த என்னை அம்மா அடக்கினாள். வாயாடாதே.
இல்லம்மா இப்பா எல்லாம் மாறியாச்சு. நம்ம லக்ஷ்மி சந்தோஷமா இருக்கட்டும்.  
அவர், அவளோட கணவர் எப்படி இருந்தார்.கலகலப்பா  இல்லைன்னா வேற மாதிரியா  என்று கேட்டேன்.வம்பு வேண்டாமா:)
அய்யோ  அதையேன் கேட்கறே. அவர் சிரிச்சே நான் பார்க்கலைடிம்மா.

நம்ம லக்ஷ்மி குணத்துக்கும் அவர் குணத்துக்கும் ஒத்து வருமோ என்று யோசனையில் ஆழ்ந்தாள் பெரியபாட்டி
கன்னத்தில் கைவைத்தபடி.
என்ன இருந்தலும் நம்மகத்து மாப்பிள்ளை போல வராது.
என்று  பெருமிதப் பட்டுக் கொண்டாள். அதற்குள் 
போஸ்ட்  வரவே அவசரமாக எழுந்த என்னை,
அமர்த்தியபடியே அம்மா போய்   வாங்கி வந்து கொடுத்தாள். தினம் எழுத என்ன இருக்கிறது உங்கள்  இரண்டு பேருக்கும்  
என்று  பரிகாசம் செய்தபடி  உள்ளே சென்றாள் அம்மா.

தொடரும்.
கதையின் மறுபாகம் உடனே வந்தாலும் வரும். இல்லை    ,நாட்களானாலும் ஆகும்.
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

Geetha Sambasivam said...

மிக அருமை. ஏற்கெனவே படிச்சிருக்கேனோ? அப்படித் தான் நினைவு சொல்கிறது. என் அம்மாவின் பிறந்தகத்தின் பெண் வயிற்றுப் பேத்திகளிலும் எனக்குத் தான் முதலில் கல்யாணம். சீக்கிரமே புக்ககம் போயாச்சு. நினைச்ச நேரமெல்லாம் வர முடியாது. ஆகவே நானும் பிறந்தக வழியில் அண்ணா/தம்பி கல்யாணங்கள் தவிர்த்து எதிலும் கலந்து கொள்ள முடியாத நிலைமை. எல்லாமும் சொல்லிக் கேள்வி தான் எனக்கும். உங்கள் நினைவுகள் அருமை. நல்ல நினைவில் வைச்சிருக்கீங்க. உங்க பெரிய பாட்டி மாதிரி எங்க வீட்டிற்கும் என் அப்பாவின் அத்தங்கா ஒருத்தர் இருந்தார். எல்லாவற்றிற்கும் அவர் நம்ம வீட்டிலேயே தங்கி உதவி செய்து கொண்டிருந்தார். அதோடு அந்தக் கால கட்டத்தில் குடி இருந்த வீட்டுக்கார மாமி/மாமானு எல்லோருமே உதவுவார்கள்.

கோமதி அரசு said...

மிக அருமையான நினைவலைகள்.
நான் முன்பே படித்து இருக்கிறேன்.
இருந்தாலும் வரி வரியாக ரசித்து படித்தேன்.
அந்த காலத்தில் புத்தகம், ரேடியோ கேட்டல்தான் பொழுது போக்கு.

சாதுவாயிட்ட காரணம் அருமை.




மாதேவி said...

அன்றைய உறவுகள் மனதை தொட்டது. அதுவும் ஒரு காலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் இது மீள்பதிவு தான்.
முன்பு எழுதினது வசதியாக இருக்கிறது.

பெரிம்மா என்கிற பெரிய பாட்டி என் அம்மாவின் பெரியம்மா.
நிறைய பேசப் பிடிக்கும்.
அவரது கணவர் பேசவே மாட்டார். பாவம் ,அதனால் எங்கள் வீட்டுக்கு வரும் போது
எல்லா விஷயங்களையும் தெரிந்து
பேசுவார்.

எங்களுடைய அந்த நாளைய தினமணி அவர்:)

ஒரு பிரசவம் என்றால் அத்தனை பெரியவர்களும் உதவிக்கு வருவார்கள்.
உங்களுக்கும் அது போல மனிதர்கள் இருந்தது இறைவன் கருணை.
இந்த நலம் நீடிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

பழைய பதிவுகளை மீண்டும் புதுப்பிக்கறேன். ஒரு காலத்தில் நல்லபடியாக
எழுத முடிந்தது என்று
எனக்கே நிரூபித்துக் கொள்ளத்தான் இந்த மீள்பதிவு.:))))

''இருந்தாலும் வரி வரியாக ரசித்து படித்தேன்.
அந்த காலத்தில் புத்தகம், ரேடியோ கேட்டல்தான் பொழுது போக்கு.

சாதுவாயிட்ட காரணம் அருமை.''

நன்றி அன்பு தங்கச்சி.
ஆமாம் பழைய லக்ஷ்மிக்கும் இந்த லக்ஷ்மிக்கும் ஏக வித்தியாசம்.

பாவம் இப்போது எப்படி இருக்கிறாளோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.

அன்னாளைய உறவுகள் மிகவும் இனித்திருந்த காலம்.
பொருள் நிறைய இல்லாவிட்டாலும்
கருணை நிறைந்திருந்த நேரம்.
நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவின் கதை விஷயங்கள் நன்றாக உள்ளது.உறவுகளின் மதிப்பு அந்த காலத்தில் பெரிதாகவிருந்தது. ஒரு குழந்தை பிறக்கும் நேரம் உதவ பெரியவர்கள் அருகிலிருந்து ஆலோசனைகள் கூற,உதவ என்ற தேவையிருந்தது.எங்கள் பாட்டிதான் என் இருகுழந்தைகள் பிரசவத்தின் போது மிகவும் உதவியாக இருந்து கவனித்து கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு வயது எண்பதுக்கும் மேலாகி விட்டது. தங்களின் பெரியப்பா மகள் உரிமையாக உங்களைப் பேசினாலும், இறுதியில் அவர்கள் மகன்களுக்கு திருமணம் ஆனவுடன் அமைதியாகி விட்டார்கள் போலிருக்கிறது. உங்களின் சுவாரஸ்யமான எழுத்துக்களை ரொம்பவே ரசித்துப் படித்தேன். நடந்த விஷயங்களை சுருக்கமாக ஆனால் புரியும்படி சொல்லிச் செல்லும் கலையை உங்களுடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.


அன்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.

இந்தப் பெரிய பாட்டி பெயர் நாச்சியார்.
நாங்கள் நாச்சிப் பெரியம்மா என்று அழைப்போம்.

இது போல பாசத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள்.

உங்களுக்கும் பாட்டி அருகில் இருந்து கவனித்தது தான்
மகிழ்ச்சி. "அப்போது அவர்களுக்கு வயது எண்பதுக்கும் மேலாகி விட்டது"

எங்கள் பாட்டியும் 94 வயது வரை இருந்தார்.
அவர்களுக்கெல்லாம் எப்போதாவது நன்றி சொல்லி இருக்கிறேனோ
தெரியாது:(


உங்கள் பாராட்டுக்கு உரித்தானவளா என்று தெரியவில்லை.
நடந்ததை நடந்தபடி எழுதிவிடுவேன்.
உங்கள் வார்த்தைகள் மென்மேலும் ஊக்குவிக்கின்றன.
நல்ல வார்த்தைகளுக்கு அத்தனை மகிமை.

நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சூப்பர்!!!! அருமையாக எழுதியிருக்கீங்க. பாட்டி சூப்பர் - குப்பி ஹாஹாஹ் எங்கள் பாட்டியும் இப்படித்தான் சில வார்த்தைகளைப் பேசுவார் நாங்கள் கலாய்ப்போம்.

என்னதான் சொல்லுங்கள் பாட்டி தாத்தாக்களின் அன்பில் திளைப்பது என்பது சுகம். நான் என் பாட்டிகளை தாத்தாவை நினைத்துக் கொள்கிறேன்.

கடைசி வரி யை வாசித்து சிரித்துவிட்டேன் இரண்டாவது உட்னே வந்தாலும் வரும் இல்லை நாட்களானாலும் ஆகும்!!! ஹாஹாஹாஹ் நானும் இதே கேஸ்தானே!!!

ரசித்து வாசித்தேன் உங்கள் கதையை..

அடுத்த பாகம் வந்துவிட்டது போல!! வாசிக்கிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கம்ப்ளெயின்ட் லெட்டர்!!! ஹாஹாஹாஹாஹா...அப்பா எழுதியிருந்ததை நினைத்துச் சிரித்துவிட்டேன்!!!

லஷ்மி அம்மாவும் நீங்களும் உரிமையோடு பேசிக் கொண்டது தெரிகிறது பல வரிகளில். குறிப்பாக லஷ்மி உங்களிடம் உரிமையோடு...

ரசித்து வாசித்தேன். நல்ல நினைவுகள் அம்மா. இது நல்ல விஷயம்.

கடைசியில் //. குற்றமே சொல்லவில்லை. என்ன இப்படி சாதுவாயிட்டியேலக்ஷ்மி என்று ஆச்சரியப் பட்டேன்.

பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே என்று முடித்தாள்:)//

ஹாஹாஹாஹாஹா...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
அந்த வாரம் பேரன் பேத்திகள் வருவதாக இருந்தது அம்மா.
அதனால் எழுத முடியுமோ என்று ஒரு சந்தேகம்.:)

பிறகு இதை முடித்து விடலாம் என்று எழுதினேன்.

காலப் போக்கில் லக்ஷ்மியுடன் எழுதுவது
பேசுவது நின்று விட்டது அம்மா.
அவரவர்க்கு அவரவர் கவலை:)
நீங்கள் ரசித்துப் படித்ததே எனக்கு மகிழ்ச்சி.

தாத்தா பாட்டிகள். பெற்றோரை விட ஒரு படி மேல்.

அவர்களது கருணைக்கு அளவே இல்லை.

மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா கீதா. தினமும் கடிதம் எழுதி விடுவார்.
முதல் தடவையாக அவரைத் தனியே விட்டு வந்தது
அவருக்குப் பிடிக்கவில்லை.

அப்பாவுக்குத் தனியாக இருக்கவே பிடிக்காது.
என்னைத் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டார்.

வெங்கட் நாகராஜ் said...

தினமும் ஒரு கடிதம் - ஆஹா… எத்தனை இனிமையான நினைவுகள். உங்கள் நினைவுகளை இங்கே மீண்டும் பதிவு செய்தது சிறப்பு. மிகவும் ரசித்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் ,
என்றும் நலமுடன் இருங்கள்,.

தாமதமாகப் பதில் எழுதுகிறேன்.
ஆமாம் மா. இப்போதும் என்னால் அந்த
நல்ல நினைவுகளை மறக்க முடியவில்லை.

இனிமையான காலம். வந்து படித்ததற்கு மிக நன்றிமா.