Blog Archive

Tuesday, November 02, 2021

சந்திப்போமா இனி...

வல்லிசிம்ஹன்



பழைய புத்தகம் ஒன்றில் படித்தது. 
எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை.
எங்கெங்கோ போடப் பட்ட முடிச்சுகளின் பிரகாரம்

சந்திப்புகளும் எதிர்காலங்களும் நிச்சயம் செய்யப் படுகின்றன.

நானும் சிங்கமும் சந்தித்ததும் அது போலத்தான்.
பசுமலை மதுரையில் அப்பா இருந்த காலத்தில் 
நாலைந்து தடவைகள் மதுரை டவுனுக்கு சென்றிருப்போம். நானாகச் சென்றது
இரண்டு தடவை.
அதுவும் சிறு பிராயத்திலிருந்து பழகின
என் சித்தப்பா மகளைக் கண்டு வம்பு அரட்டை
செய்யப் போனது ஒருமுறை.

அந்த சித்தப்பாவுக்கு என் அப்பாவை வம்புக்கு இழுப்பது
பிடிக்கும். அவளுக்கும் வாய் ஜாலத்தில் 
குறைந்தவள் இல்லை.

திருமணம் என்ற சிந்தையே இல்லாத என் மனதில்
ஒரு எண்ணத்தை வரவழைத்து என்னையே கடிதம் எழுத வைத்து
செலுத்தப் பட்ட பூமராங்காக நிகழ்ச்சிகள்
நிறைவேறின.

இன்னமுமே இப்படி நடந்ததா என்று நினைக்க வைக்கும் நிகழ்வு.
கடிதம் சென்ற இரண்டு வாரங்களில்
இருவரும் சந்தித்து இவர் தான் இவள் தான் என்று தீர்மானித்து
ஐப்பசியில் ஆரம்பித்து தையில் 
திருமணமும் நடந்தாச்சு.

அந்த நாள் இந்த அக்டோபர் 31 ஒரு ஞாயிற்றுக் கிழமை.
நிகழ்வு.
மற்றதெல்லாம் வேறு கதை.
நல்லவர் கிடைக்க எனக்கு புண்ணியம் இருந்தது.
இறைவன் நல்லவன் தான்.
அனைவரும் வாழ்க நலமுடன்.








16 comments:

Geetha Sambasivam said...

எத்தனை தரம் படித்தாலும் உங்கள் கல்யாணத்திற்கான நிகழ்வுகள் எனக்கு அலுக்கவே அலுக்காது. அருமையாகவும் எழுதி இருப்பீர்கள். அதையும் மறுபடியும் பகிர்ந்து கொள்ளுங்கள். நினைவு கூர்ந்ததும் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

நெல்லைத்தமிழன் said...

நிறைவான வாழ்க்கைக்குத் தொடக்கப் புள்ளியாக எங்கோ ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது.

இன்னும் பத்து பதினைந்து வருடங்களாவது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்வின் முக்கிய நாள்...

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்.

இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று! வரிகள் நினைவுக்கு வந்தன.

ஸ்ரீராம். said...

சுருக்கமாய்ச் சொன்னாலும் சுவாரஸ்யமாய் சொல்லி விட்டீர்கள்.    பூடகமாய்ச் சொல்லி சில விஷயங்களுக்குப் புன்னகைக்க வைத்து விட்டீர்கள்!

கோமதி அரசு said...

//எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை.
எங்கெங்கோ போடப் பட்ட முடிச்சுகளின் பிரகாரம்//

உண்மை அக்கா.


//திருமணம் என்ற சிந்தையே இல்லாத என் மனதில்
ஒரு எண்ணத்தை வரவழைத்து என்னையே கடிதம் எழுத வைத்து
செலுத்தப் பட்ட பூமராங்காக நிகழ்ச்சிகள்
நிறைவேறின.//

அந்த அழகான ஆரம்ப கதையை உங்கள் பதிவுகளில் முன்பு படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

மிக அழகாய் சுவையாக சந்திப்பு நிகழ்ச்சிகளை சொல்லி இருப்பீர்கள். உங்கள் எழுத்து திறமையை வியந்து பாராட்டி கை தட்டி பாராட்டுவது போல இருக்கிறது சாரின் படம்.
மற்ற [படங்களும் அருமை.

அக்டோபர் 31 நினைவுகளின் இனிமை பகிர்வு அருமை.

இறைவன் இரண்டு அன்பு உள்ளங்களை இணைத்த நாள் இறைவனுக்கு நன்றி.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. உங்கள் கணவரின் நினைவுகளோடு உங்கள் சந்திப்பு நாளையும் குறித்து அருமையாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படமும் அருமை. உங்கள் கணவர் கைத்தட்டி மகிழ்வது போல் எடுத்திருக்கும் படமும் அருமை. இதற்கு சகோதரி கோமதி அரசு அவர்கள் கருத்துரையில் சொன்ன விளக்கத்தை ரசித்தேன். என் கருத்தும் அதுதான். திருமணம் ஆயிரங்காலத்துப்பயிர். இறைவனால் அந்தப் பயிரின் செழுமைகளை காத்து வளர்க்கப் படுவதுதானே இயல்பு...!உங்கள் அன்பான மனதுக்கேற்ற துணையை இறைவன் சேர்த்து வைத்திருக்கிறார். இறைவனுக்கு நன்றி. எப்போதும் நீங்கள் தரும் உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

இனிய நினைவுகள். என்றும் உங்கள் நினைவில் கூடவே இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

இந்த நாள் பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.
நிறைய முறை சொல்லிவிட்டேன்.

அலுக்காமல் நீங்களும் படித்துக் கருத்து சொல்கிறீர்கள்.
நன்றி மா.வேறென்ன சொல்வது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
மிக நன்றி மா. எண்பது வயது வரை எல்லோரும்
இருக்கிறார்கள். நான் அதிகம் நினைத்தது நம்பியது எல்லாமே

அந்த இலக்கை நோக்கித்தான்.
சட்டென்று மறைந்தது பாரமாகி விடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன், வந்து படித்ததற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
மிக மிக உண்மையான சொல். எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை.
இறைவனின் சதுரங்கக் காய்கள் நாம்.
அதன்படி நடக்கிறோம்.
இல்லாவிட்டால் நடத்திக் கொள்கிறான்.
எங்கேயோ இருந்தவர்களை இணைப்பவன் அவன் ஒருவனே.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

மிக மிக நன்றி மா.
புன்னகைக்க வைத்தது மதுரை நிகழ்வா:)
சித்தப்பா அதாவது என் அப்பாவின் கசின்,
கொஞ்சம் சீண்டும் குண நலன் கொண்டவர்.
எப்படி சமாளிக்கிறான் அண்ணா என்று
யோசனையில் செய்தது. நன்மையில் முடிந்தது.

தனி மெயில் தான் போட வேண்டும்:)
யார் என் பதிவைப் படிக்கிறார்கள் என்பதே தெரியாமல் போகிறது:))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

உண்மையும் அதுதான்.
என்ன உறவென்று என் அத்தைக்கு நான் எழுதினேன்? வாழ்வில் இரண்டு முறைகள் மட்டுமே பார்த்திருந்த அத்தைக்குக் கடிதம் எழுத துணிவு யார் கொடுத்தார்கள்.
எல்லாமே முன்பே போடப்பட்ட முடிச்சு என்றே
சொல்வேன்.

முன்னர் எழுதி எழுதி அனைவருக்குமே தெரிந்த விஷயம் இது.
நீங்கள் மீண்டும் படித்துப் பாராட்டுவதே மகிழ்ச்சி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

நலமுடன் இருங்கள்.
வாழ்த்துக்கள் சொல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள
கோமதியே காரணம்.
அன்பின் கோமதி அருமையாக , உங்களைப் போலவே கவனித்துப்
பாராட்டுவார்.

கணவரின் படங்களைத் தேர்ந்தெஉத்துக் கொண்டிருந்த போது
இந்தப் படம் கண்ணில் சட்டென்று பட்டது.
அதையே பதிந்தேன்,.
சந்தோஷ நாட்களை நினைக்க வேண்டும்.
அதற்குத்தான் இந்தப் பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி அரசு, கமலா ஹரிஹரன்
இருவருக்கும் அளவில்லாத நன்றி.



"மிக அழகாய் சுவையாக சந்திப்பு நிகழ்ச்சிகளை சொல்லி இருப்பீர்கள். உங்கள் எழுத்து திறமையை வியந்து பாராட்டி கை தட்டி பாராட்டுவது போல இருக்கிறது சாரின் படம்.
மற்ற [படங்களும் அருமை."

இந்த வரிகள் கோடி பெறும். நன்றி.