Blog Archive

Thursday, January 24, 2019

.முதுமை சீர் 4

Vallisimhan

எல்லோரும் இன்பமாக வாழவேண்டும்.

  அடுத்த நாள், பத்மா தன் பெரியம்மா,சித்திகளை அழைத்து வந்தாள்.
என்னடி வஞ்சி, இப்படி தளர்ந்து போய் விட்டாய்
என்று ஆதங்கப் பட்ட அவர்களை
வரவேற்று,
அம்மாவுடன் பேசவிட்டாள்.
வெளியே போய் அண்ணாவுக்குத் தொலைபேசினாள்.

மருத்துவர் சொன்ன புத்திமதிகளை அவனிடம் சொன்னதும் கலவரப்
பட்டான். என்ன செய்வது பத்து. இங்க வசதி போதாதுதான்.
அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சொல்லவில்லைடா அண்ணா.
அங்கே போக வேண்டும்  என்ற நினைப்பில தான்
வந்திருக்கிறாள்.

அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. அங்கே படி இறங்கும் போது
விழுந்துவிட்டால்  என்ன செய்வாய் நீ. இந்த வாரம்
டிசம்பர் லீவு ஆரம்பிக்கிறது. நீ மன்னியோடும், குழந்தைகளுடனும்
வா.  உன்னைப் பார்த்தாலே அவளுக்குத் தெம்பு வந்துவிடும்.

மாப்பிள்ளைகூட உன்னுடன் பேச ஆசையாகக்
காத்துக் கொண்டிருக்கிறார்.
ஓய்வும், நல்ல தூக்கமும், மருத்துவரின் கண்காணிப்பும் அவளுக்குத்
தேவை டா.
அவளுடன் துணைக்கு இருக்க, உதவி செய்ய ,பேச
சிதம்பரத்திலிருந்து  அம்மாவின் சித்தி பெண்ணை
வரச் சொல்லி இருக்கேன்.
 திருப்பி ஃபோன் செய்கிறேன். நீ சாதாரணமாக
அம்மாவிடம் பேசு என்று வைத்துவிட்டாள்.

உள்ளே ஒரே உற்சாகமான பேச்சுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
அம்மா, அக்கா தங்கையைப் பார்த்தால்
உனக்கு எத்தனை சந்தோஷம்மா
உனக்கு. எங்களைக் கூட மறந்து விடுவாய்
 என்று கேலி செய்தவள். கையோடு
கொண்டு போன காப்பி, பலகார வகைகளை வைத்தாள்

அம்மா இந்தா உன் சாக்ரின் மாத்திரை என்று
அம்மாவிடம் கொடுத்தாள்..
டீ பத்மா, எங்களோடு அனுப்பி வையேன். இராத்திரி இருந்துவிட்டு வருவாள்
என்று பெரியம்மா சொன்னதை அன்பாக மறுத்தாள்.
அம்மாவுக்கு ஓய்வு தேவை பெரியம்மா. இன்னும் இரண்டு
நாள் போகட்டும் அழைத்து வருகிறேன்.
 அம்மாவுக்கு பிள்ளைக்கு மாகாளிக்கிழங்கு, சுண்டைக்காய்,
நார்த்தங்காய் எல்லாம் வாங்க வேண்டுமாம்.

ஸரிதான். எங்களுக்கெல்லாம் இல்லாத உடம்பு உனக்கு எப்படி வந்தது.
என்று கேட்ட அவர்களிடம் ,பத்மா பதில் சொன்னாள்.
ராஜாமணி மாமாவுக்கு இருந்ததாமே. பொன்னா பாட்டிக்கும் இருந்துதானே
அம்மியில் அரைத்துக் கொண்டிருந்த போதே
பகவான் கிட்டப் போனா என்று கேட்டாள்.

அதென்ன அதிசயமோ. வனஜாப் பாட்டி எதற்கும் அலுக்கவில்லை.
எல்லாம் சரியாகிடும் .நீங்க போயிட்டு வாங்கோ.
நாளைக்குப் பார்க்கலாம் என்று  ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டாள்
 வெள்ளி சாயந்திரம் பஸ்ஸில் வந்துவிட்டது நடராஜன் குடும்பம்.

கால்களைக் கழுவின அடுத்த நிமிடம் அம்மாவிடம் சென்ற அந்தக் குடும்பத்தை
மகிழ்ச்சியுடன் வரவேற்றால் வனஜாப் பாட்டி.
நால்வரும் அவளை கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள்.
அம்மா,பாட்டி  என்று குரல்கள் சூழ அதீதப் புன்னகையுடன்
கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.
உள்ளே வந்த மாப்பிள்ளை,பத்மா, அவள் குழந்தைகளைக்
கண்டு இன்னும் சத்தம் அதிகமானது.
பசங்களா வெளியில் போய் விளையாடுங்கள்
என்று விரட்டிவிட்டு,
அம்மா நீயும் கூடத்துக்கு வா. புதுசா எம்.எஸ் அம்மாவோட
 ரெகார்ட் வந்திருக்கு.
வா கேக்கலாம் என்று கைபிடித்து அழைத்து வந்தாள் பத்மா.
ஒரு வாரத்தில் அம்மாவுக்கு  என்ன ஆச்சு இப்படி இளைத்திருக்கிறாரே என்று
கலங்கினாள்
நீலா,  நடராஜனுக்கோ பிரமை பிடித்தால் போல ஆச்சு.
ஆனால் அம்மா மகிழ்ச்சியாக இருந்தாள்.
 தெளிவாக இருந்தாள்.
நடராஜனை அருகே வைத்துக் கொண்டு விவரங்களை விசாரித்தாள்.

நீலாவிடம் பெரிய குளத்தில் என்ன வம்பு. பக்கத்து 
அகத்து விசாலி, கடைசி அகத்து  ஐய்யங்கார் மாமி 
என்று ஒவ்வொன்றாக விசாரிக்க நிலமை தெளிந்தது.

இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, பத்மா
 தன் அண்ணாவிடம்
 அம்மாவின் இதயம் கொஞ்சம் பலவீனமாக  இருப்பதால் டாக்டர்
மருந்துகள் அதிகரித்திருப்பதாகச் சொன்னாள்.
அதில்தான் உடம்பு இளைத்திருப்பதாகவும் இன்னும்
 இரண்டு மாதங்களில் முன்னேற்றம் இருக்கும் என்றும் 
சொன்னாள்.
கிரஹித்துக் கொள்ள நடராஜன்,நீலாவுக்குக் கொஞ்சம்
நேரம் ஆச்சு.

பத்மாவின் கணவர் வெங்கட், அவனுடன் உட்கார்ந்து
அன்புடன் பேசினார்.
நீதான் அம்மா இங்கே இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லணும் பா.
இங்கே இருப்பதே தப்பு என்று யோசனை அவருக்கு என்றார்.

அம்மாவை அவள் அறையில் பார்த்த நடரஜனுக்கு,
அவள் முகத்தில் நிலவிய அமைதி தெம்பு கொடுத்தது.

அடுத்த நாள் அம்மாவை ,தங்கள் திட்டத்துக்குச் சம்மதிக்க
வைக்க அக்கா,தம்பிக்கு சுலபமாகிற்று.
இன்னும் இரண்டு மாதங்களில் தனக்கே மதுரைக்கு மாற்றலாக
சந்தர்ப்பம் வரும் என்றும்.
பங்குனி மாத முடிவில் 
குடும்பத்தோடு  பக்கத்திலேயே வீடு பார்த்துக் கொண்டு
வந்துவிடுவதாகச் சொன்னான்.
அம்மா இங்கயும் அங்கேயுமாக இருக்கலாம் 
என்று அம்மாவை அணைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் கிளம்பும்போது
கூடவே வந்தது, அம்மா போட்டுக் கொடுத்த சுண்டைக்காய், மாகாளி,
நார்த்தங்காய் ஊறுகாய்கள்.
டேய் நீ வரும்போது, மாவடு 15 படி வாங்கிண்டு வந்துடு. எல்லோருக்கும் 
வேண்டும் இல்லையா என்ற அம்மாவைப் பார்த்து மனம்
பொங்கச் சிரித்தார்கள் நீலாவும் நடராஜனும். மங்களம் எங்கும் தங்கட்டும்..
   சுபம்.

No comments: