Blog Archive

Thursday, September 06, 2018

பொறுமையில் பூமாதேவி போல ,1934இல் ஒரு கதை

Vallisimhan
எல்லோரும் இனிதே வாழ என் பிரார்த்தனைகள் 

செப்டம்பர் மாதம் 6, 1934.
 
''கண்ணந்தான் வரப் போகிறான் நம்ம சரோஜாக்கு.
 
 
மாப்பிள்ளையோட லட்சணமும் ,சரோஜாவோட கலரும் இருந்தால் எத்தனை அழகா இருக்கும் அந்தக் குழந்தை' என்றபடி கனவில் ஆழ்ந்தாள் கிருஷ்ணம்மா.
 
பெண்ணுக்கு ஏழு மாதம் பூர்த்தியாகி எட்டு பிறக்கப் போகிறது.


கோகுலாஷ்டமிக்கு மாப்பிள்ளையும் பெண்ணையும் வரச் சொல்லி இருவரையும் உபசரித்துத் திருநெல்வேலியிலிருந்த வந்திருந்த தன் பெரியம்மாவின் உதவியோடு ,
தேங்காய் எண்ணெயில் செய்த முறுக்கு,தட்டை இன்னும் பலப்பல பட்சணங்களைக் கொடுத்து அவர்களை அன்பினால் திணற அடித்தாள்.

ஹைக்கோர்ட்டிலிருந்து கணவர் திரும்பி வரும் நேரம். அவருக்கும் சர்க்கரைப் பட்சணங்களைத் தவிர்த்து, மற்ற பண்டங்களை
ஒரு தட்டில் அடுக்கி வைத்தாள்.
அதற்குள், மாட்டுவண்டி வாயிலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.


இனம் தெரியாத பரபரப்புடன் சரோஜம் எழுந்தாள்.
அவள் கணவர் ''அவசரப் படாதேம்மா
. வண்டி வந்தால் பரவாயில்லை,இருட்டுவதற்குள் போய் விடலாம்' என்றான்.
இல்லை அத்தை சீக்கிரம் வரச் சொல்லி இருக்கார் என்றபடி , அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டாள்.
கிருஷ்ணம்மாவுக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும் கருவுற்று இருக்கும் பெண்ணைக் கலவரப் படுத்தக் கூடாது என்று,
'ஒரு நிமிஷம் இரும்மா என்றபடி பெண்ணின் கூந்தலில் ஒரு வேப்பிலைக் கொத்தைச் சொருகினாள்.


''ம்ம், அடுத்தாற்போல் ஸ்ரீமந்தத்துக்குப் பார்க்கலாம்'' சௌக்கியமா இருங்கோ இரண்டு பேரும். அப்பா உங்க வீட்டுக்கு வந்து விவரம் கேட்டுக் கொள்ளுவார். கவலையில்லாமல் இரு''
கரு நீலக் கலரில் தங்க ஜரிகை ரெட்டைப் பேட்டுப் போட்டு,அதற்கேற்ற ரூபியா உயர்தர் வாயில் துணியில் ரவிக்கையும் அணிந்து கண்கொள்ளா அழகோடு காட்சி கொடுத்தப் பெண்ணைப் பார்த்துப் பூரித்துப் போனாள் கிருஷ்ணம்மா.
ஒன்பது கஜம் எத்தனை விதரனையாகக் கட்டிக் கொள்ளக் கற்றுக் கொண்டாள் தன் பெண் என்று பெருமை வேறு.
அவர்கள் வண்டி நகரவும் கணவரின் குதிரை வண்டி வரவும் சரியாக இருந்தது.
யார் வந்துட்டுப் போறது, நம்ம சரோஜாவா, என்ற கேள்விக்கு
'ஆமாம் ,அதற்குள் அவள் மாமியார் சம்மன் அனுப்பிட்டார். பாவம் பொண்ணு அவசரமாக் கிளம்பிப் போகிறது.'
 
சரிசரி ,சஹஸ்ரநாமம் சொல்லணும். விளக்கேத்தியாச்சா என்றபடி அனந்தன்
கைகால் அலம்ப உள்ளே சென்றார்.
அடுத்த நாள் ஆரம்பிக்கப் போகிற மகா சோதனையைப் பற்றித் துளியும்
அறியாமல்....  தொடரும் 

இது  ஒரு  மீள் பதிவு  என் கணவரின் அம்மாவின் நினைவு நாளை ஒட்டி  மீண்டும் பதிகிறேன் .
அவர் எனக்கு அத்தையும் ஆவார்.







No comments: