Blog Archive

Monday, May 28, 2018

வாழ்க்கையின் குரல் 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சுந்தரம் பைக்கை உதைத்து வீட்டுக்கு வந்து, உடை மாற்றி
வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொண்டான்.

 கிளப்பிற்குச் செல்லக் கால்கள் துடித்தாலும்
நிதானிக்க ஆசைப்பட்டான்.
12 மணி வரை காத்திருந்து ,பள்ளிக்கூடத்துக்கு
விரைந்தான்.
மதிய உணவு இடைவேலைக்காக வந்த பெண்களை, வாசல் காவலாளியின்
அனுமதியுடன் சந்திக்க விரைந்தான்.

அங்கே சந்தோஷமாக இருக்கும் பல குழந்தைகளின் நடுவே, பலத்த
சிந்தனையோடு சாப்பிடாமல் இருக்கும் தன் மகள்களையும் பார்த்தான்.
எப்போது இவ்வளவு பெரியவர்கள் ஆனார்கள்.
மிதிலா அப்படியே சந்திரா மாதிரியே இருந்தாள்.
மைதிலியின் பிடிவாத முகத்தில் தன்னையே கண்டான்.
தயங்கித் தயங்கி அவர்கள் அருகில் அவன் போன போது
அவர்கள் மிரண்டதைக் கண்டு மனம்  சலனப்பட்டது.

அப்பா, எங்களிடம் பணம் இல்லை. எதற்காக வந்தீர்கள்.
என்ற வார்த்தைகளைக் கேட்டதும் இன்னும் நொந்தான்.
வீட்டில் நீங்கள் இல்லையே
எங்கே இருக்கிறீர்கள் என்றான். எங்கள் தோழி நிகிலா சங்கர் வீட்டில்
அம்மா விட்டு விட்டுத்தான் போனார் என்றாள் மைதிலி.

அம்மா எப்போது வருவாள் என்று கேட்டதும்
இரண்டு வாரங்கள் ஆகும் அப்பா. அங்கேயே
வேலை தேடிக் கொள்வதாகச் சொன்னார்.
அப்படிக் கிடைத்தால் நாங்களும் அங்கே போய்விடுவோம்.
வீட்டில்  நிம்மதியாகப் படிக்க முடியவில்லை.
அம்மா வருத்தப் படுவதைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.
அன்று சாயந்திரம் வந்த காசி என்கிற ஆளைப் பார்த்து அம்மா
பயந்தவிதமும் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

எதற்காக அப்பா நாங்கள் சிரமப் படவேண்டும்.
நீங்கள் செய்யும் தப்பிற்கு நாங்கள் பலியாக முடியாது.
அம்மா உங்களிடம் சொல்வாரோ மாட்டாரோ
உங்கள்  நடத்தை மாறவில்லையானால்
வாழ்க்கை நடக்கும் என்று தோன்றவில்லை.
 இதுதான் முதல் தடவை எங்களை நேருக்கு நேர்
பார்க்கிறீர்கள். இனி நீங்கள் தான் சொல்லவேண்டும் என்று
முடித்தாள் மிதிலா.
சிலை போலக் கேட்டுக் கொண்டிருந்தான் சுந்தரம்.
திடீரென்று அங்கேயே உடைந்து அழுதுவிடுவோமோ
என்று பயம் தோன்றியது.

என்னால் உங்களுக்குத் தொந்தரவு வராது அம்மா.மீண்டும் பார்க்கலாம்
என்று  அவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு
கிளம்பினான்.
விக்கித்து நின்ற பெண்கள் இருவருக்கும்
கண்ணில் நீர் நிறைந்தது..
அடுத்த நாள் தேர்வு ஆரம்பம் .மனபாரத்தை க் குறைத்துக் கொள்ள
அம்மாவுக்கு ஃபோன் செய்தார்கள்.

சந்திரா எதிர்பார்த்த நிகழ்வுதான். குழந்தைகளுக்கு ஆதரவு சொல்லித்
தான் வந்து அழைத்துக் கொள்வதாகச் சொன்னாள்.
அவர்கள் மறுத்தனர்.
நீ வெளியே வரவேண்டாம் அம்மா என்று சொல்லிவிட்டு
,முகம் கழுவிக் கொண்டு வகுப்பறைகளுக்குச் சென்றனர்.




6 comments:

ஸ்ரீராம். said...

பிரச்னையை மிகவும் திறமையாகக் கையாள்கின்றனர். ஆனால் மாறும் மனநிலைக்கு வந்திருக்கும் சுந்தரத்தைப் பாராட்ட வேண்டும்.

Geetha Sambasivam said...

மன முதிர்ச்சி அடைந்த குழந்தைகள். சுந்தரம் இனியாவது திருந்தணும்.

வல்லிசிம்ஹன் said...


இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
மாறத்தான் வேண்டும். வயதும் கூடுகிறது. இனி
தனக்குத் துணை தேவை என்பதை
ஒரு சந்தர்ப்பம் வருகிறது. கெட்ட சகவாசம் விலகினாலேபோதும்.

கோமதி அரசு said...

படிக்கும் போது மனது கனத்து போகிறது. குடுமத்தில் கணவன், மனைவி யார் பிரிந்து சென்றாலும் குழந்தைகள் நிலை ! மனதை என்னவோ செய்கிறது.

வல்லிசிம்ஹன் said...

தவறை உணரும்போது திருந்த வழி பிறக்கும் கீதாமா. பத்து வருடங்கள் பழகிய கைகள். விடவேண்டும் என்றால் பெரு முயற்சி எடுக்க வேண்டும்.

சற்றே பொறுமையாக இருந்தால் குழந்தைகளுக்காகவாவது அவன் மாற
வாய்ப்பு உண்டு. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பழக்கம் சட்டென்று பிடித்துப் போகிறது.
அதை விடுவது மிகக் கடினம்.
ஆனானப் பட்ட தர்ம ராஜாவையே பீடித்த நோய் இந்த சூதாட்டம்.

மனங்கள் கசந்த நிலையில் சேர்வது கடினம் என்றாலும், குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பது, பெண்களின் குணம் தானே.
நல்லதே நடக்க நம் பிரார்த்தனை.