Monday, May 11, 2026

பழைய அனுபவம்.

வல்லிசிம்ஹன்

Wednesday, September 27, 2006இல் எழுதியது.
       அம்மா சரணம்.

நடந்த கதை 1974
வேறு யாரும் துணை இல்லாத போது..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டிசம்பர் மாதம் மிகவும் பிடித்தமாதம் எனக்கு.


படிப்பு, திருமணம் ,குழந்தைகள் பிறந்து அவைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் லீவு நாட்களும்
இனிமையாகக் கழியும்.

அதனால் ஒரு டிசம்பர் சோதனையாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை.
அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம்.

சிறு குழந்தைகள். ஒரு நாள் சாயந்திரம்
இவர் வீட்டுக்கு வரும் போதே கடும் காய்ச்சலுடன் வந்தார்.
எப்போதும் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஆசாமி
சுருண்டு படுப்பதைப் பார்த்து
பயமாகி விட்டது.
சரி ஜுரத்துக்கு மருந்து கொடுப்போம் என்று ரசம் சாதமும்
பிறகு பாராசிடமால் ஒன்றும் கொடுத்து
தூங்கலாம் என்று பார்த்தால் இரவு 10.30 மணி வாக்கில் உடல் நெருப்பாகக் கொதிக்க சப்தமாக முனக ஆரம்பித்து விட்டார்.
குழந்தைகள் அரண்டு விட்டன.
அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் ஏதொ அலுவலாக வெளீயூர் போயிருந்தார்கள். 
நாங்கள் இருந்த மன்னார்புரம்
அப்போது அவ்வளவாக ஜனநடமாட்டம்
இல்லாத இடம்.

வெளியே டெர்ரஸில் வந்து மலைக்கோட்டைப் பிள்ளையாரை (விளக்குகள் தெரியும்) வேண்டிக்கொண்டு,

கீழே போய், ரோடு தாண்டினால் இருக்கும் ஒரு காலேஜ்
ஹாஸ்டலில் மாணவர்களிடம் (நேஷனல் கல்லூரி) டாக்டர் கிடைப்பாரா 
என்று தெரிந்து கொண்டு
அவரை அங்கிருந்த போனிலேயே
எங்க வீட்டுக்கு வரச்சொல்லி
வேண்டிக்கொண்டேன்.
அப்போதுதான் அங்கிருந்த காலண்டரில்
நம்ம சமயபுரம் அம்மா இருந்தது தெரிய வந்தது.

சாமி ஞாபகம் வருவது நமக்கு எமர்ஜென்சி டயத்தில் தானே. 
உடனே அவளைக் கைகூப்பிக் காப்பாத்து
என்று சொல்லி விட்டு,
வீட்டுக்குத் திரும்பினேன்.
டாக்டர் எங்கேயோ இருப்பவர். பெயர் கூடத் தெரியாது.

என் 26 வயதில் 
இப்போது இருக்கும் தெளிவோ
துணிவோ கிடையாது. :))) இப்போ இன்னும் 
20 வருடங்கள் சேர்த்தால் 50 வருடங்களுக்கு முன்!!!!!

ஆனால் டாக்டர் சொன்னதென்னவோ பெரிய வார்த்தை.
இவர் மேல் அம்மா வந்து இருக்கிறாள் என்று.
சிக்கன்பாக்ஸ்.

அறியாமை ,பயம் நிறைய என்னை ஆட்கொள்ள
அடுத்த வேண்டுதல் சமயபுரத்து மாரியிடம்தான்.

நீ காப்பாத்து என்பதைத் தவிர அந்த இரவு வேறு எந்த வார்த்தைகளும் என்னிடமிருந்து.

டெலிபோன் எல்லாம் வீட்டில் அப்போது கிடையாது.
காலை நெருங்கும்போது கொஞ்சம் தெளிவு வந்தது.

எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா பேரு மேரி.
அவங்க வந்ததும் அவரிடம் நானும் குழந்தைகளும்
அடைக்கலம்.

அவர்தான் எங்களைத் தேற்றினார்.
அய்யா வயசில (34) பெரியவரு இல்லை. வந்தா எல்லாம் கொஞ்சம் பயமாக இருக்கும்.
20 நாளில் எல்லாம் சரியாகி விடும்
என்று எனக்கு இந்த சமயம் செய்ய வேண்டிய பத்திய சாப்பாடு, வேப்பிலை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
மறக்காமல் கடைக்குப் போய் (அப்போது) இரண்டு ரூபாய் விலையில் சமயபுரம் அம்மாவின் படமும் வாங்கி வந்தார்கள்.

என் பெற்றொருக்கும் இவர் பெற்றொருக்கும் கடிதங்கள் எழுதி போஸ்ட் செய்யச் சொன்னேன்.
பதில் 2 நாள் கழித்து வந்தது.
இருவராலும் வரமுடியாத நிலை.

அப்போது எனக்கு இன்னும் தைரியம் வந்தது.
இரண்டு நாட்களில்
 மூன்று குழந்தைகளுக்கும்
பரவி விட்டது.
அப்புறம் கேப்பானேன்.
திருச்செங்கோடு வாடிக்கையாளர்,வயதானவர் பார்க்க வந்து வெளியிலேயே
நின்று எனக்கு ஆதரவு சொல்லி,,
 ஒரு வாரத்துக்குத் தேவையான
இளனீர் அனுப்புவதாகச் சொல்லி அனுப்பிக் கொண்டே இருந்தார்.

அலுவலகப் பியூன் மணி இரண்டு குடங்களில்
தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அங்கு
கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிக்கும்!!

எல்லோருக்கும் தயிர் சாதம், இளநிர்,
பச்சை வெங்காயம், பூண்டு போட கீரை,
தக்காளி சூப்.
இதெதான் காலையும் மாலையும்.எண்ணெய் அடுப்பில் வைக்கக் கூடாது.
கடுகு சத்தம் ஆகாது எல்லாம் எனக்கு சொல்லப் பட்ட அறிவுரைகள்.

இரு வாரம் சென்றதும் மேரியம்மா
பருத்திக்கொட்டை கொண்டு வந்தார்.
எதற்கு என்றபோது அவைகளை ஊற வைத்து
பால் எடுத்து இவர்கள் குடிக்க வேண்டும் என்று

எடுத்து வைத்தார்.
இதுவரை பருத்தியும் பசுவும் தெரியும்
மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரியாது.
வேப்பிலை மஞ்சள் அரைத்துக் கொடுப்பது,
எப்போதும் துணையாகப் படுப்பது
என்று
சமயசஞ்சீவியாக வந்தது, காப்பாற்றியது அந்த அம்மாதான் என்று உணர்கிறேன்.

இது எங்கள் எல்லோருக்கும் சேர்ந்து
அனுபவமானதால் இன்னும் குடும்பத்தில் நெருக்கம்
சேர்ந்தது.
ஏனெனில் அப்பா என்பவரைப் பார்ப்பதே
குழந்தைகளுக்கு அபூர்வம்.
மூன்று வாரங்கள் அப்பா அவர்களுடன் வீட்டில் இருந்து
அவர்களோடு கதை பேசினது,
எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
நாங்களும் சமயபுரம் 3 வாரங்கள் போய் வந்தோம்.
மேரியம்மாவுக்கு நான் என்ன கொடுத்து
கடன் தீர்க்க முடியும்?
அவருடைய இஷ்ட தெய்வமான வேளாங்கண்ணி அம்மாவுக்கு மெழுகு வர்த்தி ஏத்த சொன்னார்கள் செய்து விட்டேன்.
காலத்தில் செய்த உதவி.
அவர்கள் பேரன் பேத்தி கல்யாணங்கள்
முடிந்தததாக அறிந்தேன்.
நான் தினமும் செய்யும் வழிபாட்டில் மேரிக்கு எப்போதும் இடம் உண்டு.
திக்கற்றவற்குத் தெய்வமே துணை.
தெய்வம் மனித ரூபத்தில்
வந்து விட்டது.
- September 27, 2006  

9 comments:

ஸ்ரீராம். said...

மேரி போன்ற மனிதர்கள் நெகிழ வைப்பார்கள்.  எனக்கும் அப்படியான அனுபவம் உண்டு.  அம்மன் வந்து அப்புறம்  இறங்கி  நாம் மூன்று குறை குளிக்கும்போது தண்ணீரை அடுப்பில் சுட வைக்காமல், தேவையானால் வெயிலில் வைத்து சூடாக்க வேண்டும் என்பார்கள்.  அந்தத் தண்ணீரில் வேப்பிலை போடச் சொன்னார்கள்.

ஸ்ரீராம். said...

2000 ம் வருடம் முதலில் எனக்கும், அப்புறம் மாமியார் தவிர மற்றவர்களுக்கும் அம்மை போட்டது,  இதே மாதிரிதான்.  எங்கள் அப்பா என் தங்கை வீட்டிலிருந்து அம்மனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு அவர் மதுரை சென்று விட்டார்.  உடன் வேலைபார்த்த ஒரு கிறித்தவ பெண்மணிதான் இளநீர் வாங்கி கொடுத்து வேறு சில உதவிகளும் செய்தார்.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லி இருக்கும் கணக்குகளிலிருந்து நீங்கள் பிறந்த வருடத்தை கண்டுபிடித்து விட்டேன்.. டட்டடாடாயிங்... ஹிஹிஹி...

நெல்லைத் தமிழன் said...

திக்கற்றவருக்கு தெய்வமே துணை.

அதைவிட, அந்த அந்த சமயங்களில் சரியான நபரை அனுப்பி நம் கஷ்டத்திலிருந்து அந்த இறை சக்தி நம்மை மீட்டுவிடும்.

2006ல் எனக்கு அம்மை போட்டபோது, கார் எடுத்துக்கொண்டு ஆபீஸ் சென்றுவிட்டேன் (லீவு போட மனமில்லாமல்). அறைக்கும் யாரும் வரக்கூடாது என்று சொல்லிட்டேன். அப்புறம் என் பாஸ் சொல்லி வீடு திரும்பப்பார்த்தால் காரை ஓட்ட முடியலை. பிறகு ஆபீஸில் உதவி செய்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் முதல் முறை மெடிக்கல் லீவி/சிக் லீவு போட்டேன்.

ஆமாம்... அம்மை முகத்தில் தழும்பைக் கொடுத்ததா?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அப்போது பெரிய அண்டா நிறைய நீரை மாடி வெய்யிலில் வேப்பிலை போட்டு வைத்து எல்லோருக்கும் அவர்கள் முறை வந்த போது தலையில் ஊற்றினேன். மதியம் 12 மணிக்கு புண்பட்ட மேனிக்கு இதமாக இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

தெய்வம் எப்படி உதவுகிறது பாருங்கள் ஶ்ரீராம். மேரி மட்டும் துணை இல்லை என்றால் நான் மிகக் கஷ்தப்பட்டு இருப்பேன். உடல் பூராவும் அம்மா. வேப்பிலையை க் கையில் கொடுத்து நீவி விடுவேன். சிங்கமோ படுக்காது. சிகரெட் வேற. எப்படி சமாளித்தேன் என்றே நினைவில்லை. அசாத்திய தைரியத்தையும் பொறுமையையும் சமயபுரத்து அம்மா தான் கொடுத்தாள்.. உங்களுக்கு உதவி செய்த கிறித்தவ அம்மாவை வணங்குகிறேன். நன்றி மா ஶ்ரீராம்.தெய்வம் எப்போதும் துணை இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா உங்களுக்கும் அனுபவம் உண்டா முரளி.? ஆமாம். யாருமே வரமுடியாத நிலையில் இந்த மேரி அம்மா மட்டும் இல்லாவிட்டால், தவித்திருப்பேன். 21 நாட்கள் கழித்துதான் தலைக்கு விட்டது. அதுவும் முகல் வடு உதிர்ந்த பிறகே தண்ணீர் விட மேரிம்மா சொன்னார்கள்.
அதிகம் சிரமப்படாமல் அம்மா வந்து போனார் என்று நம்புகிறேன். பாரெயினில் இருந்தீர்களோ?

வல்லிசிம்ஹன் said...

ஶ்ரீராம்:)))) 78 வயாசாறதுமா. ஹாஹஹ்ஹாஹா. என் மகன்கள் எப்பவும் சமத்துதான்..

கோமதி அரசு said...

மாரியம்மா போல வந்தார் மேரியம்மா.
முன்பு படித்து இருக்கிறேன். மீண்டும் படித்தவுடன் நினைவுக்கு வந்து விட்டது.

பழைய அனுபவம்.

வல்லிசிம்ஹன் Wednesday, September 27, 2006இல் எழுதியது.        அம்மா சரணம். நடந்த கதை 1974 வேறு யாரும் துணை இல்லாத போது.. ++++++++++++++++++...