Blog Archive

Wednesday, July 25, 2018

கயா புண்ணிய யாத்திரையின் வரலாறு

Vallisimhan

இந்த இரண்டு பதிவுகளும் கூகிளில் எடுக்கப் பட்டவை. என் எழுத்தில்.

கயை” என்ற ஊர் பீகாரில் இருக்கிறது. புத்தருக்கு ஞானம் கிடைத்த ஊரான ”புத்த கயா” இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஊராகும். இந்தக் கயை புனிதத் தலத்தில் இறந்த முன்னோர்களுக்கு  பிண்டமளித்து நீத்தார் கடன் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிண்டங்களை பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடம் எனும் விழுதில்லா ஆலமரத்தின் அடியிலும் படைக்கிறார்கள். இங்கு நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல; நண்பர்கள், (ஏன் நல்ல மனமிருந்தால் எதிரிகளுக்கும் கூட பிண்டம் வைக்கலாம்) உறவுகள், நாம் ப்புப் பிராணிகள், முகம் தெரியாதவர்கள், விபத்து போன்றவற்றில் மறைந்தவர்கள் என அனைவருக்கும் பிண்டம் வைக்கலாம். அக்ஷய வடத்தில் பிண்டம் வைப்பதோடு ”நீத்தார் வழிபாடு” கயையில் நிறைவடைகிறது. இதனால் நம் முன்னோர்கள் மகிழ்வதாகவும், மேலுலகம் செல்வதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தானாத்
த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய

என்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்தபின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர்நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.

DSCN5044

இந்தப் பிண்டங்களில் பல்குணி நதியில் 17 பிண்டங்கள் வைத்துப் படைக்க வேண்டும். விஷ்ணு பாதத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். பிறகு இறுதியாக அக்ஷய வடத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். அந்த 64 பிண்டங்களில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் உரித்தானவை. அந்த அளவுக்கு தாய்க்கு முக்கிய ஸ்தானம் அளிக்கப்படுகிறது. ஏன்?

DSCN5027

நம்மைப் பத்து மாதம் சுமந்து, உதிரத்தைத் தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து ஆளாக்குபவள் அன்னை. அந்த அன்னைக்கு இறந்த பின்னரும் காட்டும் நன்றிக் கடனே மேற்கண்ட 16 பிண்டப் பிரதானம். அதற்கென்று உள்ள மந்திரங்களைச் சொல்லி அந்தப் பிண்டத்தைப் படைக்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அந்த மந்திரத்தை விட்டு விட்டு அதன் பொருளை மட்டும் பார்ப்போமா?

1. அம்மா, என்னை கர்ப்பத்தில் தாங்கியபடி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது அதனால் சொல்லொணா வேதனைகளை அனுபவித்தாயே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்வாயாக!

2. ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் உனக்கு வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.

DSCN5176

3. உன் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனையை நீ சகித்தாய் அம்மா. ஆனால் அதனால் எனக்குச் சேர்த்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.

4. நீ நிறைகர்ப்பிணியாக என்னைச் சுமந்தபோது உனக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்குவதற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா, ஏற்றுக் கொள்வாயாக!.

DSCN5188

5. அம்மா, உன் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.

6. அன்புள்ள அன்னையே, என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, நீ கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாயே , உனக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயை கூர்ந்து ஏற்றுக் கொள்வாயாக!.

7. நான் பிறந்தபோது மூன்று நாள்கள் அன்ன ஆகாரமின்றி பசி என்னும் பெருநெருப்பில் நீ நொந்தாயே அம்மா, உனக்கு என்னால் ஏற்பட்ட இந்தக் கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா!.

DSCN5203

8. இரவில் நான் உன் ஆடைகளை மல, மூத்ரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், பெற்றுக் கொள் அம்மா.

9. என் பசி, தாகம் தீர்க்க அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாயே உன்னை அவ்வாறு வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், தயவு செய்து ஏற்றுக் கொள்.

10. அல்லும் பகலும் உன் முலைப் பாலை அருந்தும்போது உன்னை நான் துன்புறுத்தினேன். அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா.

11. கோடைக்காலங்களில் என்னைக் காக்கத் உன் உடலை வருத்திக் கொண்டாயே அம்மா! உனக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாவங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் அம்மா.

IMG01960

12. மகன் நோய்வாய்ப்பட்டானே என்ற கவலையால் வாடி இருந்தாயே, அம்மா உனக்கு விளைவித்த அந்த மனத்துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள் அம்மா.

13. என் அன்பார்ந்த அன்னையே, யமலோகம் செல்லும் நீ கோரமானவற்றை எல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன் ஏற்றுக் கொள்வாயாக!.

14. உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களின் தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகிறேன் அம்மா! கருணை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொள்வாயாக.

15. நான் நன்கு வளர்வதற்காகத் உனக்கு ஆகாரம் இல்லாமல் கூடக் கஷ்டப்பட்டாயே அம்மா, உனக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக!.

IMG01969

16. கர்ப்பத்திலும், சிசுவாக இருந்தபோதும், நான் மரணவேதனையை ஒத்த பல கஷ்டங்களை உனக்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைப் தருகிறேன், ஏற்றுக் கொள்வாயாக அம்மா!.

இதுதான் அந்த ஸ்லோகத்தின் பொருள்.

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அல்லவா? அந்தத் தெய்வத்தின் அருளை எப்போதும் பெறுவோமாக, பெற முயற்சிப்போமாக…

ஓம்



***



No comments: