Blog Archive

Thursday, July 05, 2018

1401 . கங்கை ஆரத்தி கண்டு மகிழ....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வஞ்சுமாவும்,லக்ஷ்மிமாவும்   ரயில் களைப்புப் போகக் கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பதாகச் சொல்லவும், வாசுவும் நாராயணனும்  நடேசன் ஜியின் அலுவலகத்துக்கு விரைந்தார்கள்.
காசியில்  தாங்கள் தரிசிக்க வேண்டிய கோவில்கள்  ,இடங்கள்
எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு ,குறித்துக் கொண்டார்கள்.

 பக்கத்திலிருக்கும் கங்கா நதியோர ஆரத்திக்குப் போக வேண்டும் என்பது நெடு நாளைய ஆசை.சாயந்திரம்
போய்விட்டு,   இரவு உணவு நேரம் திரும்பலாம் என்றும்,

அடுத்த நாள் லக்ஷ்மி நாராயணா கோவிலுக்கும், அன்ன பூரணித் தாயார் கோவிலுக்கும், பனாரஸ்பட்டுப் புடவை கடைக்கும் போவதாகவும் திட்டம்.
அடுத்த நாள் காசி விஸ்வனாதர் கோவிலுக்கும்,ஸ்ரீ விசாலாக்ஷி கோவிலுக்கும்
நேரம் பார்த்துப் போகவேண்டும் என்று பூஜை நேரங்களைக் குறித்துக் கொண்டார்கள்.
எந்த சமயத்திலும் வஞ்சுமாவுக்குக் களைப்பில்லாமல் உணவு நேரத்தில் விடுதியில் இருக்க வேண்டிய  அவசியத்தையும் மனதில் இருத்திக் கொண்டார் வாசு.


ஜாஜ்வல்யமாக ஆரம்பித்தது கங்கை ஆரத்தி. மாலை ஐந்து மணிக்கே தோளைச் சுற்றி ஒரு ஷால்
போட்டுக் கொண்டு  கங்கையின் பிரவாகத்தை நோக்கியபடி
கங்கையின் துதிகளைப் பாடிய ஜெய் கங்கே , ஹர கங்கே என்று கைதட்டி
உற்சாகமாக இருந்தார்கள்.
வஞ்சுமாவுக்கு கங்கை அம்மாத் தன்னைப் பார்த்துக் கண்சிமிட்டுவது போலவும், அலைகள் ஓட்டத்தால் அணைப்பது
 போலவும் ஏதேதோ கற்பனைகள்.

அந்த கற்பனா உலகத்தைக் கலைக்கும் வேகத்தில் பலவித மணிகள்
ஒலிக்க ஆரம்பித்தன. ஓஹோ 6 மணி ஆகிட்டதா என்று சுதாரித்துக் கொண்டார்கள்.

மஞ்சள் ,சிகப்பு என்று கலந்த வர்ண உடைகளுடன்
பக்கத்து ஆஸ்ரமத்திலிருந்து வந்த சிஷ்யர்களும் அவர்களுக்கு
குரு போலத் தோற்றமளித்த ஒருவரும் கைகளில் பெரிய பெரிய
தட்டுகள் கோபுர தீபங்கள் ஏந்தியவாறு வந்து ஆரத்தி ஆரம்பித்தனர்.
கூட்டமான கூட்டம். நடேசன் இவர்களுக்காக்ப் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்திருந்த ஓரத்தில் தம்பதிகள் கூப்பிய கரங்களுடன் உட்கார்ந்திருந்தனர்.
தாயே காப்பாத்து என்ற பிரார்த்தனையே மனம் நிறைய ஓடிக்கொண்டிருந்தது.
ஏதோ வேற்று உலகுக்கு அந்த பக்தி வெள்ளம் அவர்களை அழைத்துச் சென்றது.
கங்கை நதியில்  ஓலையில் விளக்குகளுடன், வெற்றிலை தாம்பூலங்களுடன், வளையல்களுடன் தாயாருக்கு
மரியாதை செய்வது போல் படித்துறையிலிரிந்து
அலைகளில் இறங்கி ஓடிய காட்சி வஞ்சுமா ,லக்ஷ்மிமா மனதை விட்டு அகலவில்லை.
ஜெ கங்கே மாதா. ஜெ ஜெ பாகீரதி.


12 comments:

ஸ்ரீராம். said...

சிலிர்ப்பூட்டும் தருணங்கள். கங்கா ஆரத்தி சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். திரு வாசுவின் அக்கறை மனதில் நிற்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

பதிவிற்கு ஏற்ற பொருத்தமான வீடியோவையும் முந்தைய பதிவாகக் கொடுத்து சூப்பர் மா அதை இதோடே இணைத்திருக்கலாமோ?

வஞ்சும்மா பாட்டியின் கனவு நிறைவேறும் தருணங்கள். தொடர்கிறோம் அம்மா

கீதா

Geetha Sambasivam said...

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சி. காசியில் கேதாரநாத் படித்துறையிலும் ஹரித்வாரில் ஒரு முறையும் கங்கை ஆரத்தி பார்த்தோம். மிக அருமை. மெய் சிலிர்க்க வைக்கும்.

KILLERGEE Devakottai said...

எனக்கும் இங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது அம்மா.

கோமதி அரசு said...

//வஞ்சுமாவுக்குக் களைப்பில்லாமல் உணவு நேரத்தில் விடுதியில் இருக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் இருத்திக் கொண்டார் வாசு.//

அன்பும், கரிசனமும் படிக்கும் போது மகிழ்ச்சி தருகிறது.

கங்கை ஆரத்தி பார்த்த மகிழ்ச்சியை பதிவு தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் , நான் இந்த ஆரத்தியைத் தினம் மாலை 6 மணிக்கு சன்ஸ்கார் டிவியில் பார்ப்பேன்.
அலுக்கவே அலுக்காது.
அதுவும் அனூப் ஜலொட்டாவின் ஜெய் கங்கே ஜேய் பாகீரதி பாட்டு
ரொம்பப் பிரமாதமாக இருக்கும்.
நானும் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இந்த ஆரத்தியை என்ன காரணத்தாலோ
இணைக்க முடியவில்லை. யூ டியூபில் தேடினதே அதற்காகத்தான்..

அந்தக் கங்கையைப் பார்க்காமல் இங்கே மிசிகன் நதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேணும் இல்லையாமா.

Geetha Sambasivam said...

கில்லர்ஜி, கேதார்காட்டில் தான் இருக்கு காசி மடம். குமரகுருபரரால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பழமையான மடம். பலரும் தமிழர்கள். முன் கூட்டிக் கடிதம் எழுதிவிட்டு அங்கே போய்த் தங்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அம்மாவும் அப்பாவும் பத்ரி நாத் போகும் இரண்டு மூன்று தடவை பார்த்தார்களாம்.
அம்மாவுக்குச் சொல்லும்போதே கண்கள் ஒளிவிடும்.
அவர்களுடன் போக முடியாத தாபம் இன்னும் இருக்கிறது.
அம்பி மாமா, இன்னோரு மாமா,பாட்டி அம்மா அப்பா என்று
எல்லோரும் போனார்கள். அம்பி மாமா தில்லியில் இருந்ததால்
அங்கு வரும் அனைவரையும் பத்ரி நாத் அழைத்துப் போவது அவர் பொறுப்பு.
நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையாரே, கட்டாயம் போய்ப் பாருங்கள்.
அழுக்கு நிறைந்த இடங்கள் இப்போது மாறி வருகிறதாம்.
உடம்பில் வலு இருக்கும் போது நல்ல இடங்களைப் போய்ப்
பார்த்துவிடவேண்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இந்த அன்பாய் என் பெற்றோரிடம் பார்த்திருக்கிறேன்.
வாழ்க்கையின் முதல் பாதியில் அம்மா அப்பாவைப் பார்த்துக் கொண்டார். இரண்டாவது பாதியில் அப்பா அம்மாவைக் கவனித்துக் கொண்டார்.
அதெல்லாம் பெரிய கதையாகிடும்.
இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அது// என்று தான் வாழ்ந்தார்கள். நன்றி
கோமதி மா.

வெங்கட் நாகராஜ் said...

கங்கா ஆரத்தி - கங்கே மையாகி ஜெய் கோஷங்களோடு.... நிச்சயம் பார்க்க வேண்டிய காட்சிம்மா....

ஹரித்வாரில் ஹர் கி போடியில் நிறைய முறை பார்த்ததுண்டு. பார்க்கப் பார்க்க பரவசம் தான்.

தொடர்கிறேன் மா.