Blog Archive

Thursday, September 09, 2021

பழைய நினைப்புதான்.....3


291, நூறும் ஒண்ணும் 2007




Posted by Picasa இந்தப் பாட்டிக்கு நூறு வயசாச்சு.
நம்ப முடியுதா:)
அவங்களோட பேரன்தான் இவங்களை நல்லா வச்சிருக்காரு.
பாட்டிக்குப் பொண்ணு வயித்துப் பேரன்.                                                                                     அவரோட பொண்டாட்டி நம்ம பொண்ணுக்கு நல்ல சினேகிதி.
சாலினு பேரு.
க்ரானி,க்ரானினு கூப்பிடறதைப் பார்த்துட்டு நான் அசந்து போனேன்.அத்தனை அன்பு இந்தப் பாட்டிகிட்ட அவங்களுக்கு.
இந்த வயசுக்கே உரித்தான சில முக்கிய பிரச்சினைகள் இருந்தும், இந்த சாலி(Sally) ரொம்பப் பொறுமை சாலியா(!)ப் பார்த்துக்கறாங்க.
பாட்டிக்கு நல்ல க்ரொஷா பின்ன வருமாம். நான் பொண்ணு வீட்டில இருந்த சமயம் ஒரு நாள் இவங்களை ஒரு மாலைப் பொழுதுக்கு வரச்சொல்லி இருந்தோம்.
பாட்டிக்கு வாக்கர் கூடத் தேவையா இருக்கவில்லை. பேத்தி கையை இறுக்கப் பிடித்து மெதுவா ஏறி வீட்டுக்குள்ள வந்து இருக்கையில உட்கார்ந்து,எங்க குட்டிப் பேரனோட விளையாடினாங்க.
அவனுக்குத் தான் பாட்டியோட எலும்பு உறுத்தவே ரொம்ப நேரம் அவங்களோட இருக்கலை.
Sally, பொறுமையா பாட்டிக்கு என் பொட்டு, என் உடை எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல அவங்க கேட்டுக்கிட்டு கிராஸ் கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சாங்க.

நீ உன் பாட்டியைப் பார்த்துக் கொண்டாயா. உன் அம்மாவுக்கு சேவை செய்தியா.இப்படி....
நானும் என் பழைய வரலாறிலிருந்து கொஞ்சம் சொன்னேன்.
அவ்வளவா இம்ப்ரஸ் ஆகலை பாட்டி.

ஆனா சமோசாவையும், பால்கோவாவையும் ரசிச்சு சாப்பிட்டாங்க.
பாட்டிக்கு இப்பத்தான் ஒரு இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சை முடிஞ்சு இருக்கு. இல்லாட்டி மாடிக்கும் போய்ப் பார்த்துட்டு வருவாங்கனு சாலி சொன்னாங்க.

அங்க இருந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் பாட்டி எழுந்து கீபொர்ட் வாசிச்சு, குஷன் கவரெல்லாம் சுத்தமா முடி போட்டு வச்சு, கீழ சிதறிக் கிடைந்த விளையாட்டுப் பொருட்களை அதோட பொட்டில போட்டு,
(ஹய்யோ) மீண்டும் சோஃபாவில வந்து உட்கார்ந்து கொண்டா.ர்......                                                                                                                                                                                                                                                                       
சற்றே செனீலிடி வந்து இருக்கிறது என்பது எனக்குப் பிறகே உரைத்தது.
அடுத்த வீட்டு அல்(ஆதி)சேஷன் குரைக்க ஆரம்பித்ததும்,
ஓ டாகி டாகி, எனக்கு இப்பவே டாகி பார்க்கணும்.
'Sally you are a bad girl. you will not let me play''
என்று விசும்ப ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு மனமே என்னவோ ஆகிவிட்டது.
ஆனால் இதை அந்தப் பெண் ரொம்ப அழகா சமாளிச்சா.
உடனே ஒரு நாய் பொம்மையைக் கையில் கொடுத்து நீங்க இதோட விளையாடுங்க. நான் இதோ வரேன். நாம் கோவிலுக்குப் போகலாம். உங்க தோழி அங்க காத்து இருப்பாங்கனு சொன்னதும் பாட்டிக்கு மீண்டும் உற்சாகம் வந்து விட்டது.
சாலி நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார்.


ம்ம். என்னவெல்லாமோ அயல் நாடு பத்திச் சொல்றாங்களே.
இப்படியும் ஒரு பேரன் பொண்டாட்டி பாட்டியைப் பார்த்துக்கிறாளே என்று சந்தோஷப்பட்டேன்.
🤩
இன்னும் பாட்டிக்குத் தன் சொந்த ஊரானமெம்ஃபிஸ் போகத்தான் ஆசை. தனியாக இருந்தால் அடிக்கடி கீழே விழுந்து விடுவதால்
தாங்கள் தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்ததாக சாலி சொன்னார்.
பாட்டிக்கு ஒரே பெண் தான் அவரும் நோய் வந்து இறந்து விட்டார்.
அந்த பெண்ணின் பையந்தான் சாம்,சாலியின் கணவன்.
பாட்டிக்குப் பிறகு ஒரு எஸ்டேட் (20 ஏக்கர்)இவர்களுக்குக் கிடைக்கும் என்று என் பெண் அவர்கள் கிளம்பியதும் சொன்னாள்.

18 comments:

கோமதி அரசு said...

பழைய நினைவுகள் பகிர்வு அருமை.
இங்கு மேல் நாட்டில் முதியவர்களை நன்றாக பார்த்து கொள்கிறார்கள்.

முதியவர்களும் தங்களை நன்றாக பார்த்து கொள்கிறார்கள். முதுமையை நினைக்காமல் வேலைகளை செய்கிறார்கள். கடைகளில் பல மணி நேரம் நின்று வேலைப்பார்க்கும் வய்து முதிர்ந்தவர்களைப்பார்த்தேன்.

பேத்தி அவர்களை பார்த்து கொள்வது மகிழ்ச்சி.
வயது முதிர்ந்த காலத்தில் அன்பான சொந்தம் பார்த்துக் கொள்வது வரம்.

மாதேவி said...

நூறு வயதா ஆச்சரியம்.பார்க்கும்போது திடகாத்திரமாகத்தான் இருக்கிறார்.

ஸ்ரீராம். said...

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இரண்டாவது குழந்தைப் பருவம் ஆரம்பித்து விடுகிறது என்று சொல்வார்கள்.  இதில் இதுபோன்ற பாதிப்புகள் வேறு இருந்தால்....   அன்புடன் பார்த்துக் கொள்கிறவர்கள் வாழ்க..

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா, நீங்கள் சொல்வதே உண்மை.
நல்ல ஆரோக்கியம் இருக்கும் வரை நன்றாகவே அனுபவிக்கிறார்கள்.
மருத்துவ வசதியும் சிறப்பாக இருக்கிறது.

அந்தப் பாட்டி 110 வயது வரை இருந்தார்.ஸாலியும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.
கொடுப்பினைதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
14 வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு. இருக்கும் வரை. உதவியுடன் வாழ்நதார்.

KILLERGEE Devakottai said...

பாட்டிக்கு நூறு வயது போல் தெரியவில்லை....
வாழ்க நலம்...

Thulasidharan V Thillaiakathu said...

பேத்தி பாட்டியைப் பார்த்துக் கொள்வது நல்ல விஷயம்.
ஆனால் கடைசியில் சொல்லியிருக்கும் வரி கொஞ்சம்....ஒரு வேளை...அதுவும் நீங்க ஒரு பொம்மை போட்டிருக்கீங்க அது என்ன இமோஜி என்று தெரியவில்லை. இருந்தாலும் அந்த வரி யோசிக்க வைக்கிறது. நல்ல மனதை செயலை அப்படி நினைக்கக் கூடாதுதான்...

அம்மா கோமதிக்கா சொல்லியிருப்பதுதான் நான் சொல்ல வந்ததும். அதே கருத்துதான்.

என் மகனும் சொல்வதுண்டு. நாம் இந்த ஊரைப் பற்றித் தப்பான அபிப்ராயம் வைத்திருக்கிறோம். இங்கயும் வயசானவங்களை அன்பா கவனிச்சிக்கிறவங்க, குழந்தைகள்கிட்ட அவங்க தேவையைக் கவனிச்சுப் பூர்த்தி செய்யறவங்க இருக்காங்க ஆனால் பொறுப்பு குழந்தைகளுக்கும் வர வேண்டும் என்று நினைப்பாங்க. வயதானவர்கள் தங்களைப் பெரும்பாலும் உற்சாகமாக வைத்துக் கொள்கிறார்கள் என்றும். முடிந்த வரை வேலை பார்க்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் என்றும். ஆனால் பல திருமண முறிவுகள் மீண்டும் திருமணங்கள் என்று நிகழ்வதுண்டுதான் ஆனால் அக்குடும்பத்துக் குழந்தைகளைப் பெரும்பாலும் ஒதுக்குவதில்லை. என்றும் சொன்னான். சில குடும்பங்களில் சிக்கல்களும் உண்டுதான் என்றும் சொல்லியிருக்கிறான்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்தப் பாட்டி 110 வயது வரை இருந்தார்.ஸாலியும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.
கொடுப்பினைதான்.//

நிச்சயமாக. ஆஹா 110!!!!

பாட்டி நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றியது ஃபோட்டோவில். உங்கள் பேரன் இல்லையா அம்மா? அவர் மடியில்?

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
முதுமை வரமாக இருப்பது சில இடங்களில்.
சாபமாகுவது சில இடங்களில்.
இந்தப் பாட்டியும், பேத்தியும்
என்னை மிகவும் யோசிக்க வைத்தவர்.
இப்போது அந்தப் பேத்திக்கே
55 வயதாகிறது. அவளுக்கும் நல்ல
வாழ்வு அமைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
ஆமாம்.
இவர் ரொம்பக் கெடுபிடியானவர். அந்தப் பெண் ஸாலி
மஹாப் பொறுமையாகப்
பார்த்துக் கொண்டாள்.
நூறு வயதில் எப்படி இருப்போமோ என்று நினைக்கவே கவலையாக
இருக்கிறது. இறைவன்
எப்பொழுதும் காக்க வேண்டும். அந்தப்
பேத்தி இப்போது மிக சுகமாக நல்லபடியாக
வாழ்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
ஓ. அந்த இமோஜி மாறி வந்துவிட்டது.
எடுத்து விட்டேன்.
மஹா சூப்பர் எனர்ஜி பாட்டிம்மா.
நேர் எதிர்க் குணத்தோடு ஒரு பாட்டியும் 95
வயதில் நாலு வீடு தள்ளி இருக்கிறார்.
மருமகள் நல்ல உழைப்பாளி.
கவனித்துப் பார்த்துக் கொள்கிறாள்.

மனித குணங்கள் எந்த ஊராக இருந்தாலும்
வளர்ப்பைப் பொறுத்தே அமைகிறது.
ரொம்ப ரொம்பப் பொறுமை வேண்டும்.
நானும் சிங்கத்தின் பாட்டியை ஒரு வருடம் வாக்கில்
நோய்ப் படுக்கையில் கவனித்துக் கொண்டேன். அதெல்லாம்
அன்போடு செய்த பணிகள் தான்.
நீங்களும் மாமியாருக்குச் செய்திருப்பீர்கள்.

எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை.
இறைவன் தான் நீதிபதி.

Geetha Sambasivam said...

பாட்டி நூறு வயதில் நல்ல ஆரோக்கியமாய்த் தெரிகிறார். பேரன் மனைவியும் பொறுமைசாலி தான். சட்டெனச் சூழ்நிலையை மாற்றி விட்டார் பாருங்க. என்னதான் எஸ்டேட்டும், பணமும் கிடைத்தாலும் (எப்படி ஆனாலும் அவங்களுக்குத் தானே) பொறுமை இருந்தால் தவிர இப்படிப் பார்த்துக்க முடியாது. பாட்டியும் அதிர்ஷ்டசாலி, அவங்க பேரன், பேரன் மனைவியும்.

Geetha Sambasivam said...

இப்படிக் குடும்பமாக நிறையப் பார்த்திருக்கேன் அம்பேரிக்காவில். கூட்டுக் குடும்பங்களையும் பார்த்திருக்கேன். சொல்லப் போனால் நாம் தான் தவறாக நினைக்கிறோம். :(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
நாம் தவறாக எடை போடுகிறோம் இவர்களை.

சில சமயம்.
பெற்றோரைக் கவனிப்பவர்களும் இருக்கிறார்கள்.
முதியோர் இல்லத்துக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஸாலி மிக நல்ல பெண்.
அதே அவள் தங்கை எவிலின்
கணவர் ,குழந்தைகளோடு இல்லாமல் தனியாக வசிக்கிறார்.
பிறவியில் நல்ல குணம் அமைந்திருக்க வேண்டும்.

நான் அப்போது இருந்த நிலையை எழுதினேன்.
ஸாலியின் நல்ல தனத்தைத் தப்பாக விமரிசித்து
எழுதவில்லை. நன்றிமா.



வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

நல்ல வயது இருந்து விட்டு,பாட்டி சென்றார்.

பாட்டி வைத்துக் கொண்டிருப்பது சின்னவன் கிருஷ்ணா:)

Thulasidharan V Thillaiakathu said...

புரிந்தது அம்மா கிருஷ்ணா நீங்கள் பதிவில் சொல்லியிருப்பதை வைத்துப் புரிந்து கொண்டாலும் ஹிஹிஹி

கீதா

வெங்கட் நாகராஜ் said...

நூறு வயது மூதாட்டி. அவரைப் பார்த்துக் கொள்ளும் பேரனும் அவரது மனைவியும். சிறப்பு.

பழைய நினைப்புதான் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பு. தொடரட்டும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு வெங்கட்.
2007இல் சந்தித்த குடும்பம். பாட்டி இருந்தவரை நலமாக இருந்தார் அந்தப் பெண் மிகச் சிறப்பாகப் பார்த்துக் கொண்டார். நன்றி மா.