Add caption கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. ஒரு நடுத்தர வயது
தம்பதியினர் வீட்டுக்கு வந்திருந்தனர். கல்கத்தாவைச் சேர்ந்த தமிழ் மக்கள்.
இராமேஸ்வரம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நானும் சிங்கமும் அவர்களை நம் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போகுமாறு கேட்டுக் கொண்டோம்.
.
இருவருக்கும் 60க்குள் தான் இருக்கும்.
ஒரே மகன். திருமணமாகி இருந்தது. குழந்தை இல்லை.
சேது, ராமேவரத்தில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்தால்
குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என்றதால் இவர்கள்
வந்திருக்கிறார்கள்.
நான் கேட்டேன் ஏன் மகன் மருமகளையும் அழைத்து வரவில்லை என்று.
நம்பிக்கை இல்லை என்று சுருக்கமாகச் சொன்னார்.
இருவர் முகத்திலும் கவலை. நாங்கள் எங்களால் முடிந்த அளவு
சமாதானப் படுத்தினோம்.
போய்த்திரும்பும் வழியில் இங்கே வருமாறு சொன்னோம்.
அதே போல் 4,5 நாட்களில் அசதியோடு ஆனல் மகிழ்ச்சியாகத் திரும்பினார்கள்.
சேது,திருப்புல்லணை ராமன்,தேவிபட்டினம் ,கடைசியில் தனுஷ்கோடி ராமேஸ்வரம் என்று
எல்லா இடங்களிலும் செய்ய வேண்டிய கர்மாக்களைப் பூர்த்தி செய்து ,
கடவுள் தரிசனமும் செய்துவந்த திருப்தி முகத்தில் தெரிந்தது.
சென்னையில் உள்ள உறவுகளைப் போய்ப் பார்த்துவிட்டுக் கல்கத்தாவுக்குப் போய் நல்ல சேதி அனுப்புவதாக உற்சாகமாகக் கிளம்பினார்கள்.
மகனுக்கும் தொலைபேசியில் பேசிவிட்டுத் தான் பயணம்.
கல்கத்தா சென்ற இரண்டு மாதத்தில் தொலைபேசியில் நல்ல செய்தி சந்தோஷம் கொப்பளிக்க வந்தது.எல்லாம் பகவத் சங்கல்பம் .
அவர்களின் மகனிடமும் பேசினோம்.வாழ்த்துகளைச் சொன்னோம்.
மாமா அவர்கள் கிளம்பும்போதே அவள் எக்ஸ்பெக்டிங்க் தான். அவர்களது
முயற்சியை நிறுத்த வேண்டாம் என்றுதான் நான் சொல்லவில்லை.
என்று சிரிக்கிறான் அந்தப் பிள்ளை.
வரப் போகிற குழந்தை ப்ரி மெச்சூர் பேபி,கொஞ்சம் சீக்கிரம் பிறந்து விட்டது என்று சொல்லப் போகிறேன்.
நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் மாமா.
உங்களுக்கு கல்கத்தா ட்ரிப் இருக்கிறது என்று சொன்னான்.
ஓகே டா. உன் ரகசியம் எங்கள் ரகசியம். அப்புறமாவது சொல்லிவிடு
என்றபடி தொலைபேசியை வைத்தார்.
வந்த குழந்தை அத்தனை சிரமம் வைக்கவில்லை. வைத்தியர் சொன்ன நேரத்துக்கு
தள்ளி பத்து நாட்கள் கழித்துதான் பிறந்தது.
அதுவும் இரட்டைக் குழந்தைகள். ஒன்று துர்கா. மற்றொன்று ரமேஷ்.
யார் ஜெயித்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை.