Blog Archive

Sunday, August 12, 2018

அன்பினால் என்றும் ஒன்றாய் வாழணும் 2

திருவிடை மருதூர் மஹாலிங்க  சுவாமி.


Vallisimhan
திருவிடைமருதூர்  அம்பாள் பார்வதி

திகைப்புடன்  பார்த்தார் கௌரி. எதுக்குங்க  வெறும்
மயக்கத்துக்குப் போய்  இப்படி பயப்படுறீங்க.
இல்லம்மா. நீ விழுந்த விதம் என்னைக் கலங்கடித்துவிட்டது.
இங்க இருக்கு தஞ்சாவூர்.
அங்கே   மீனாட்சி ஹாஸ்ப்பிட்டலில் எல்லா வசதியும் இருக்காம்.
சென்னை  போய்  தனியா உன்னைக் கவனிக்க எனக்குத் தெம்பில்லை.
நம் குமாரசாமியும், உன் ரத்த அழுத்தம் பார்த்துப் பயப்படுகிறான்.
உறவுகாரங்க துணை இருக்கு.
ஒரு நாலு மணி நேரம் அங்க டெஸ்ட்   செய்துக்கறதுல
தப்பில்லை என்றார் சபேசன்.

எனக்கென்னவோ வீணா கலவரப்படற மாதிரி இருக்கு. நீங்க சொன்னால் மீற  வேண்டாம்னு வரேன் என்று 
எழுந்த   கௌரி,தன்   களைத்த மன நிலையைப் பார்த்து வியந்தாள். எங்க போச்சு என் தைரியம்.


என்று நினைத்தபடி சபேசன் துணையுடன் நடந்து முகம் கழுவி , புடவையை  மாற்றி வெளியே வருவதற்குள் வியர்த்துக் கொட்டியது.

வைத்தியம் செய்து கொள்வதே நல்லது என்று நினைத்தபடி மகாலிங்க சுவாமியை மனதில் இருத்தித் தஞ்சாவூருக்கு கிளம்பினார்கள்.
குமாரசாமியும், கௌரி தம்பி வைத்தியம் வந்தார்கள்.

கௌரிக்கு எப்பொழுதும் எதற்கும் பயம் கிடையாது. தன கணவர் உடல் நிலை பற்றித்தான்   கவனமாக இருப்பார்.

73 வயதில் இது என்ன சோதனை. என்னால் மற்றவர்களுக்குத் துன்பம் வராகி கூடாதே என்று நினைத்தவள் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான் தம்பி வைத்தி.
அக்கா ,இந்த ஹார்லிக்ஸ் சாப்பிடு. கொஞ்சம் தெம்பு வரும் என்று கொடுத்தான்.
சிந்தாமல் கவனமாகக் குடித்தவர் கண்ணில் நீர். எனக்கு ஏதாவதுன்னா,  அத்தானைப் பாத்துப்பியாடா என்று கேட்டார்.
பதறிப் போனார் வைத்தி.
சும்மா வாய் வார்த்தையாக்கூட சொல்லாதே அக்கா.
டெஸ்ட்   செய்து மருந்து கொடுப்பார்கள். நீயே பார்.
எனக்கு அங்கே இருக்கும்   தலை மருத்துவரைத் தெரியும்.
நீ சாய்ந்து கண்ணை மூடிக்கொள்.//என்றார்.

தஞ்சாவூரும்  வந்தது.
மீனாக்ஷி ஹாஸ்பிட்டலில் விரைவாக  கௌரி யைச் சோதிக்க ஆரம்பித்தார்கள்.
எம் ஆர் ஐ, எக்கோ, ஈசிஜி எல்லாம்  காக்க வைக்காமல் நடந்தன.
ரிப்போர்ட் ரெடியாக ஒரு மணி நேரம் ஆகும்.
அம்மாவுக்கு காரம் உப்பு குறைவாக  உணவு வாங்கி கொடுங்கள்.
என்ற டாக்டரின் சொல்படி அனைவருமே  அங்கிருந்த காண்டினில் உணவு வாங்கிச் சாப்பிட்டார்கள்.
 கௌரிக்கு இந்த இடமும் டாக்டரின் அணுகு முறையும் பிடித்திருந்தது.
சாப்பாடு உள்ளே போனதும் மனதும் தெளிவானது.


சொன்ன நேரத்தில் அழைப்பு வந்ததும்  அனைவரும் வைத்தியரின் அறைக்குச் சென்றனர். அங்கு மாட்டி இருந்த மீனாட்சியின் படம் தெவீகமாக ஒளிவிட்டது.

வைத்தியர் ஆரம்பித்தார்.

கௌரிம்மா , 
உங்க வயதுக்கேற்ற உடல் நிலைதான் இப்போது இருக்கிறது.
கவலை வேண்டாம் .

இதயம் வெகு சிறக்க இருக்கிறது. 
தலை ஸ்கானில்  ஒரு கடுகு அளவு ஸ்பாட் தெரிகிறது. அதை நாங்கள் அன்யுரிசம் என்போம்.

நீங்கள் அதிகமாக  ஸ்ட்ரெஸ்  எடுத்துக் கொள்ளும்போது தலைவலி வந்தால் 
எடுத்துக் கொள்ள மருந்து தருகிறோம்.
அதைவிட, தேவை இல்லாமல் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
யோகா செய்யுங்கள். கணவரோடு , கவனிக்கவும் அவர் வந்தால் தான் நீங்கள் வெளியே செல்லலாம்.  நடப்பு பயிற்சிக்குப் போகலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை உணவு உட்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் இருவருமே இதைக் கடைப்பிடிக்கலாம் .

இப்போ தலைவலி இருக்கா  என்று வினவினார் டாக்டர்.
இல்லை டாக்டர் , நான் வந்ததுமே மருந்து கொடுத்தார்கள் என்றார் கௌரி. 

இந்த அநியூரிஸ்ம்  சின்ன அளவில் இருக்கிறது. 
அபாயம்   குறைவு தான்  என்றாலும் ,  இதுவே பெரிய 
அளவில் இருந்தால் 
 அறுவை சிகித்சை சொல்லி இருப்பேன்.
அதிர்ந்தார் சபேசன்.   இது போல  இவளுக்கு வராகி காரணம் என்ன  என்று கேட்டார். அம்மாவுக்கு முன் மண்டையில் நெற்றிக்கு மேல் பகுதியில்  இருக்கிறது.
மாதாமாதம்   செக் செய்துக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து   ஆஸ்பிரின் வரவழைத்துக் கொடுக்கிறேன்.

வயிற்று க்குச் சங்கடம் இருக்காது.
மதியம் படுத்துக்க கொள்வதற்கு முன் ஒன்று எடுத்துக் கொண்டால் போதும்.
ஒரு மாதத்திற்குப்  பிறகு நம் ஊரிலேயே  கிடைக்கும்  மருந்து 
வாங்கி கொள்ளலாம்.

தீர்க்க முடியாத பிரச்சினை இல்ல.
அமெரிக்காவா இருந்தால் காலை ல போயி   மூன்றாம்  நாள் வீட்டுக்கு வந்துடலாம்.ஆஞ்சியோ பிளாஸ்ட்டி எங்க அம்மாவுக்கு செய்யும்போது மூன்றாம் நாள்  வீட்டுக்கு வந்துட்டாங்க.

கௌரிம்மா மத்தபடி நல்லா இருக்காங்க.
என்று நல்ல விதமாக முடித்தார் டாக்டர்.

 அம்மா நீங்க உங்களுக்கு கொடுத்திருக்கிற அறைக்குப் போய் ஓய்வெடுத்துக்குங்க.  நாளை சென்னைக்குப் போகலாம் என்றார்.

நான் இவங்ககிட்ட மருந்து    எழுதித் தருகிறேன். என்று சொல்லிவிட்டு, வைத்தி தம்பி நீங்களும்  அக்காவை வீல் சேரில்  அழைத்துப் போங்க என்றார்.

விட்டால் போதும் என்று எழுந்தார் கௌரி, சக்கர நாற்காலியில் அமர்ந்து டாக்டரைப் பார்த்துப் புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு அறைக்கு வந்தார்கள்.

அக்கா  நானும் வடிவும் உங்க வீட்டில தங்கப் போறோம்.
உங்கள் இருவரையும் பார்த்துக்கறோம் என்றார் வைத்தி.

எனக்கு ஒன்னும் வியாதி இல்லைடா. நான் சரியாகத்தான் இருக்கேன். தலைவலி வந்தால்தான் கஷ்டம் என்றார் கௌரி.
அங்கே மருத்துவர் அறையில் ,   சிரியஸான முகத்துடன் டாக்டர் 
சபேசனையும் , மகன் குமாரனையும் விழித்துப் பேசினார். உண்மையாகவே மகாலிங்க சுவாமிதான் காப்பாற்றி இருக்கிறார்.
குமாரசாமி டாக்டர் , புரிந்து கொண்டு மருந்து கொடுத்திருக்கிறார்.
இல்லாவிட்டால் ஸ்ட்ரோகே  வந்திருக்கும்.

இனி நிஜமாகவே  கவனமாகப் பார்த்துக் கொள்ளணும் .
 ஓவராகக் கவலைப் படவிடக்கூடாது.

வாழ்க்கையின்   தரம்   சுகமாக இருக்கும்படி  கவனித்துக் 
கொண்டால்   சுகமே என்றார்.
++++++

நான் பார்த்தவரை கௌரி  நன்றாகவே இருக்கிறார்.
அவர்கள்   வாழ்க்கையும் சலனமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

பயணம் சென்றால்   சுகமான வண்டி எடுத்துக் கொண்டு போய் வருகிறார்கள்.
சபேசன் திருவிடைமருதூர்  சுவாமியை மாத மாதம் வந்து தரிசிப்பதற்காக வேண்டிக் கொண்டு 
போய் வருகிறார். இரண்டு   மாதங்களுக்கு ஒரு தடவை 
கௌரியும்  வருவார்.           இரண்டு மூன்று நாள் இருந்துவிட்டு  திரும்புவார்கள்.
 ஒரு வருட செக்கப்பில்   ஈஸ்வரன் கிருபையில் அந்த  கலக்கமும் தீர்ந்தது.......
தஞ்சை வைத்தியருக்கே ஆச்சர்யம். இயற்கையாகவே நல்ல ஆரோக்கியம் கொண்டவருக்கு  கடவுள் கருணையும் சேர்ந்ததில் 
நோய்க்குத் தீர்வு கிடைத்திருக்கிறது.
அடுத்த வருடம் செக்கப் வந்தால் போதும் என்றார்.

இனி எல்லாம் நலமே.
சபேசன் கௌரி தம்பதியருக்கு குடும்பத்துக்கும் 
நலவாழ்த்துகள்.




No comments: