Blog Archive

Wednesday, April 18, 2018

1347, அப்பாவுடன் பயணம் 1991. 3

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 காஞ்சி வரதனைப் பார்க்க வேளை வரவில்லையே என்று
அப்பா கிளம்பினார். போகும் வழி எல்லாம் கோவில்கள்.

  திருஊரகம்  உலகளந்த பெருமாளைத் தரிசித்தால் ,திருமணம் கூடி வரும் என்று திறந்திருந்த அந்தக் கோவிலுக்குள்ளும்  நுழைந்தோம். .,பிரம்மாண்டமான திவ்ய தரிசனம் . அப்பா நகர மறுத்தார்.
கோவிந்த கோவிந்தா என்று கூப்பிய கைகளொடு நின்றிருந்தார்
Add caption


எங்களை அழைத்து வந்த பட்டர்,
ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்தார்.
உள்ளே ஸ்திரிகளுக்குக் கைகால் அலம்பிக்க வேண்டும் என்றால்
போகலாம் என்று உள்ளே நுழைந்தார், . எங்களுக்குத் தயக்கமாக இருந்தாலும்
அவசரத்துக்கு என்ன செய்வது. பளிச்சென்றிருந்த அந்தக் காலத்து வீடு,முற்றம், சுற்றிக் கூடம் என்று பெரிதாக இருந்தது.
உள்ளே பாட்டிம்மா ஒருவர் இருந்தார். தாகத்துக்கு ஏதாவது மோர் தரட்டுமா
என்று அன்பாக விசாரித்தார்.
அப்பாவை ஆச்க்சரியத்தோடு பார்த்தார். நாராயணன் சார் இல்லையோ நீங்கள்
திருமங்கலத்தில் பார்த்தது என்றார்...
அப்பாவுக்கும் அதிசயம். தன் சினேகிதன் வைகுண்டத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறோம்
என்று புரிந்தது. அப்பாவை விட ஐந்து வயது மூத்தவர் வைகுண்டம் என்கிற பழைய நண்பர்.

நீங்கள் காஞ்சிபுரத்துக்கு எப்போது வந்தீர்கள்
என்று அந்த மாமியை விசாரித்தார். .எங்கள் பிள்ளையும் தபால் துறையில் இருக்கிறான்.
அவனுக்கு இங்கே தான் வேலை,என்று எங்கள் மூவரையும்
அன்போடு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஜயம்......... வாங்கோ வாங்கோ. இதெல்லாம் யார். இதென்ன ஆச்சரியம். எப்படியோ பகவான் நம்மை சந்திக்க வைத்தாரே. 30 வருஷம் இருக்குமா.

இது ரங்கனா, டேய் நீ பண்ண விஷமத்துக்கு உங்க அப்பா
ஜன்னலில் கட்டிப் போடுவாரேடா. துளிக்கூட பயம் இல்லாமல் ஊஞ்சல் ஆடுவியேன்னதும்,
ரங்கன் முகம் சிவந்து போனது. என்னடா என்று வாசலுக்குப் போனான்.
அங்கே வைகுண்டம் மாமா வந்து கொண்டிருந்தார்.
எங்கள் எல்லோரையும் ஒரு நிமிடம் பார்த்துத் திகைத்து விட்டு,உள்ளே நுழைந்தார்.
அப்பாவைப் பார்த்ததும் அப்படியே கட்டிக் கொண்டுவிட்டார்.
நாராயணா,
இதென்ன அதிசயம். மே 30 உனக்குப் பிறந்த நாளாச்சேன்னு நினைத்தேன்,

என்றதும் எங்களுக்கு ஆச்சரியம்.
அவர் தன் பிள்ளையின் ஆபீஸ் ரிகார்டுகளில் அப்பாவின் பெயரைப் பார்த்திருக்கிறார்.
மஹாபலிபுரம் தபால் அலுவலகத்தில்  அப்பா ரிடயரானது பதிவாகி இருந்ததும்
அதற்கப்புறம் வேறு செய்தி இல்லாததும்  அவர் தெரிந்து வைத்துக் கொண்டு
விசாரித்திருக்கிறார்.
அப்பா அவரை டிடெக்டிவ் வைகுந்தம் என்றூ கூப்பிடுவது எனக்கு நினைவுக்கு
வந்தது.சிரித்துவிட்டோம்.

அதற்குள் பிங்கட்டிலிருந்து அந்த பட்டர் மாமா வந்தார். இங்கிருந்த சூழ்னிலையைப் பார்த்து
ஏற்கனவே தெரிந்தவர்களா நீங்கள் நல்லதாப் போச்சு,
நான் இவர்களைப் பாண்டவத்தூதப் பெருமாளைப் பார்க்க அழைத்து வந்தது இவ்வளவு நன்மையாச்சே  என்று சந்தோஷப்பட்டார். கிருஷ்ண அர்ஜுன சந்திப்பு மாதிரி இருந்தது.
அம்மா இவ்வளவு சந்தோஷப்பட்டுப் பார்த்து நிறைய நாளாகிறதே என்று நினைத்துக் கொண்டேன்.
அவரவர் வயதுக்காரர்களைப் பார்க்கும் போது வரும் ஆனந்தம் இது என்று தோன்றியது.
பாண்டவதூதனைக் காக்க வைக்கிறோம்....தொடரும்

12 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு இனிமையான ஆச்சர்யம் அந்த சந்திப்பு, இல்லை? அந்தப் பிறந்த நாள் அப்பாவுக்கு மறக்க முடியாத நாளாயிருந்திருக்கும். முப்பது வருடங்களுக்குப்பின் மீண்டும் சந்திப்பு என்றால் இனிமை ப்ளஸ் ஆச்சர்யம்.

Geetha Sambasivam said...

பல சமயங்களிலும் இம்மாதிரி ஆச்சரியமான சந்திப்புகள் மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தைத் தரும். அது போல் இங்கேயும். தொடரக் காத்திருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம். அப்பா எப்பவும் அடக்கி வாசிப்பவர்.
வைகுண்டம் மாமாவைக் கண்டதும் கண்ணில் நீர்.
ஆறு வருடங்கள் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்.
வைகுண்டம் மாமாவின் அம்மா மஹா மடி ஆசாரம்.
ஏகாதசி விரதம் எல்லாம் அமர்க்களப்படும்.
ஸ்ரீமதி வைகுண்டம் எல்லாவற்றுக்கும் ஈடு கொடுப்பார். அவர்கள் வீட்டு மாடியும் நம் வீட்டு மாடியும் ஒரு அடி தூரத்தில் இருக்கும். மாமியார் தூங்கும் போது
மாமி மாடிக்கு வருவார். அம்மாவும் அவரும் துணி உலத்திக்கொண்டே பேசுவார்கள்
ஒன்றாக வடாம் இடுவார்கள். மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் போவார்கள்.
உண்மையில் எதிர்பாராத சந்தோஷம் கிடைத்த நாள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். வரதராஜ பெருமாள் தன்னைத் தரிசிக்கும் முன்னால்
தோழனைச் சந்திக்க வைத்து அருள் செய்வித்தார். கீதா மா.

அப்பா நண்பன் என்றால் உயிர் போல் நடத்துவார்.
அவர் உருக ,இவர் உருக அன்று ஒரு அற்புதம் தான் நடந்தது,.

கரந்தை ஜெயக்குமார் said...

எதிர்பாரா சந்திப்புகள் என்றென்றும் மகிழ்வைத் தரும்

வெங்கட் நாகராஜ் said...

பல நாட்கள் கழித்து எதிர் பாராமல் இப்படி நண்பர்கள் சந்தித்து கொள்வது எவ்வளவு ஸ்வாரஸ்யம்.

தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

அப்பாவுக்கு நண்பரை சந்தித்த மகிழ்ச்சி , மகிழ்ச்சியை தந்த உங்களை மிகவும் பாராட்டி இருப்பார் இல்லையா அக்கா?
நண்பரின் எதிர்பாராத சந்திப்பு மனதெல்லாம் மகிழ்ச்சியை அள்ளி தந்து இருக்கும் அப்பாவுக்கு.
பயணத்தை தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

இப்படியான நட்பு அது எத்தனை ஆழமாக இருந்ததால் 30 வருடம் கழித்தும் சந்திக்க வைத்து நினைவு இருந்து அந்த நாட்களை அசை போட வைத்திருக்கிறது இல்லையா. உங்கள் எல்லோருக்குமே இனிய் ஆஅச்சரியமாகத்தான் இருந்திருக்கும். இது மிகுந்த உற்சாகம் தரும் ஒன்றாகும்...

தொடர்கிறோம் வல்லிம்மா

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஜெயக்குமார். அன்பும் ஆச்சர்யமும் நிறைந்த நாளாகி விட்டது அந்த நாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஏதோ சதுரங்கக் காய்கள் நகர்த்துவது போல
அப்பா எப்பொழுதும் வணங்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள்.,
இந்த நிகழ்வை நடத்தினார்.///

எனக்கு மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அப்பா ,நான் ஒன்றும் செய்யாட்டாலே தலை மேல வைத்துக்கொள்வார் கோமதி மா.

பயணம் முடிந்து திரும்பும்போது அம்மா,அப்பா இருவரும் என் கைகளைப் பிடித்துக் கொண்டு
சிரித்துக் கொண்டார்கள்.

சிங்கம் என்னுடைய 70 ஆவது பிறந்த நாளைக்கும் இது மாதிரி மாஜிக் பண்ணு என்று
கேலி செய்தார். நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மா, கீதாமா,
கட்டாயம் இது கடவுள் செயல் தான்.

இதைவிடச் சிறந்த பரிசு அப்பா எதிர்பார்த்திருக்க மாட்டார். அவ்வளவு சாது.

மிக இனிய நாள். நன்றி மா. வாழ்க வளமுடன்.