Thursday, March 26, 2026

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன்

திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன்னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு

எப்பொழுதும்
 எங்களோடு நீ இரு.
 ராமன் மீண்டும் வருகிறான். மார்ச் 27 ஆம் நாள், பங்குனி 13 ஆம் நாள்...
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)
-


Friday, March 13, 2026

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன்


இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள்  என்று  இருந்தது.       மாமனார் பண்ணை நடத்திவந்தார்.   தீவன வியாபாரமும் செய்து வந்தார்.  
  சிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை.
 மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது.                                    புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை  வலம் வந்து  அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி ,

அதை இடித்துத் திட்டு வாங்கி  எல்லாக் கலகங்களும் நடந்த நேரம்.                        தாத்தா   கண்டிப்புக்குப் பயந்து   தினமும் வீட்டுக்கு வரும் நேரம்   மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த   விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி.     மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம்.                                                                                    
 இப்படி ஒரு காலை   கன்றுக்குட்டி ஒன்று  அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும்     துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா   லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி   தோட்டத்துக்கான  10 அடி       விட்டக் கிணறு குறுக்கிட்டது.  இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப்   பார்த்துக்    கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.  
           உடனே வீட்டில்  உள்ள அனைவரும்  அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார்  தன்னால் முடியாது என்று கைவிரிக்க  கன்றுக்குட்டி  தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு.
எதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார்.                                    மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்பில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில்  இறங்கிவிட்டார்.    கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய  கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு  கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும்   நிறைய.   நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து.  இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு                                கிணற்றின்    சுவற்றில்  இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம்.  பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம்.


ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...