Blog Archive

Monday, November 02, 2020

மஹாலயத்தில் தாத்தாவும் பாட்டியும் 2004

Vallisimhan

 சேஷிப் பாட்டியும், பத்து தாத்தாவும்  காய்கறி,சேப்பக் கிழங்கு 
வகைகளை பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மஹா பரணிக்கு பக்ஷ சிராத்தம் செய்வது அவர்களுக்கு வழக்கமாகி இருந்தது.
தாத்தாவுக்கு 80 வயதாகிறது. 40 வருடங்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார்.

பாட்டிக்கும் அலுப்பு என்பதே கிடையாது.
காலையில் எழுந்திருக்கும் போதே 
பெரியவர்களெல்லாம் வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே எழுந்திருப்பார்.
கணகளைக் கசக்கைக்
 கைகளைவிரித்துக் கராக்ரதே வசதே லக்ஷ்மி என்று மற்ற ஸ்லோகங்களையும்
சொல்லியே எழுந்திருந்து, கைகால்களைச் சுத்தம் செய்து குளித்து விட்டு அகண்ட விளைக்கை ஏற்றிவிடுவார்.

கணவருக்குக் காலையில் கஞ்சி குடிக்கும் வழக்கம் என்பதால்
அவரும் முறைப்படி சந்தியா வந்தனம் செய்தபிறகு 
கஞ்சி கொடுப்பார்.

கிராமத்து வாழ்க்கை மெதுவே ஆரம்பிக்கும். 
அன்றைக்கு வேண்டிய பண்டங்கள் தயார்.
திதிக்கு ஏற்பாடு செய்த வைதிகர்கள் வந்து குளித்து
புது வேட்டிகள் உடுத்தி தயார் ஆவதற்குள்
பாட்டி க்ளிப்தமாக சிராத்த சமையலை முடித்து விடுவார்.

பரிமாறுவதற்கு மட்டும் பக்கத்து வீட்டு
சாலாட்சியை அழைத்துக் கொள்வாள்.
மஹாலய தர்ப்பணம் முடிந்து வந்தவர்கள் கிளம்பிய பிறகே
தன் உணவை எடுத்துக் கொள்வாள்.
தங்களுக்கு வேண்டும் பட்சண பலகாரம் போக மீதியை
 சாலாட்சியின் கையில் கொடுத்துவிடுவாள்.

இருவருக்கும் இரவு பட்சணமே பலகாரம் என்பதால், நிம்மதியாகக்
காலை நீட்டி உட்கார்ந்து மாமியார் குண நலன் களையும், மாமனார்
கோபத்தையும்  அலசிக் கொண்டிருந்தார்கள்.

என்னவோ அண்ணா, அவர்கள் கொடுத்த புண்ணியம் நம் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்.
நமக்குப் பிறகு அவர்கள் விடாமல் இந்தப் புண்ணிய காரியத்தை தொடர வேண்டும்.

ஆமாம்மா. செய்வார்கள். அவர்கள் ஸந்ததியின் நன்மைக்காக மட்டுமில்லாமல்
பொது நலனாக தான தர்மங்களையும்  செய்ய வேண்டும் என்பதையும்
நாம் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
இன்று பூர்த்தியான  மஹாபரணி ஸ்ராத்தம் நல்ல விதமாக நடந்ததும் அவர்கள் கருணை.

இதே போல அம்மாவின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.
சுமங்கலிப் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். 
உன் நாத்தனார்க்கு அழகாப் புடவை வாங்கிடலாம். ஜாம் ஜாம்னு நடக்கும் பாரு என்று
ஆனந்தமாக ஊஞ்சலில் படுத்துக்கொண்டார் பத்து தாத்தா.
தரையிலியே  படுத்துப் பாட்டியும் உறங்க ஆரம்பித்தார்.

++++++++++++++++
P.S.மீள் பதிவு. மீட்கும் பதிவு. பின்னூட்டங்கள்
காணாமல், இமெயில் முகவரியும் தொலைந்த காலத்தில்
பதிவு மட்டும் பிழைத்த வருடம்:)
தாத்தா பாட்டி வாழ்க. படம் இணையம்.

12 comments:

ஏகாந்தன் ! said...

தாத்தா பாட்டி சிந்தனைகள் நன்றாக மீண்டிருக்கின்றன.

அப்பா, அம்மாவோடு சேர்ந்து வாழ்வதே பலருக்குக் கிடைப்பதில்லை. தாத்தாக்கள், பாட்டிகளுடன் வாழ்வதென்பது.. பெரிய விஷயம். அப்படியே வாழ நேர்ந்திருந்தாலும், சரியாகக் கவனித்துக்கொண்டோமா, காரியங்கள் செய்தோமா என்றால், அதுவும் இல்லை எனச் சொல்லிவிடும் மனம்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா தாத்தா பாட்டி என்றாலே சுகமான நினைவுகள்தான். எனக்கும் என் தாத்தா பாட்டி நினைவுகள் நிறைய உண்டு. ஓரளவு என் மகனுக்கும் கிடைத்தது. அவன் பெரியவனாகி நினைவு வைத்துக் கொள்ளும் வயது வரை.

பாட்டிகள் வேலை செய்வதற்கு அலுத்துக் கொண்டதே இல்லைதான். உங்களின் சுகமான நினைவுகள் எனக்கும் பல எழுந்தன அம்மா...

கீதா

மாதேவி said...

தாத்தா பாட்டியுடன் இருப்பது இனிய அனுபவங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஏகாந்தன் ஜி.
எனக்குக் கிடைத்த பாட்டிகள் தாத்தாக்கள் எல்லோரும் அருமை.
எல்லாம் கிரமப்படி செய்வார்கள்.

அம்மா அப்பாவும் அதே நெறியில் எங்களை வளர்த்தார்கள்.
அவர்கள் எங்களைக் கவனித்துக் கொண்டது போல
நாங்கள் அவர்களைக் கவனிக்கவில்லை
என்ற குறை எப்போதும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

எனக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. என் குழந்தைகள் வளர்ந்து
மகள் திருமணத்துக்கும்
பாட்டி இருந்தார்.
அசதி என்பது அவள் அகராதியிலியே கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நலமாப்பா.
இளைய தலைமுறைக்கு
முதிர்ந்தோர் பாசம் ,கண்டிப்பு கிடைக்க
கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

க்ளிப்த்தமாக - இந்த வார்த்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  என்ன அர்த்தம்?

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவை படிக்கும் போதே சுகானுபாவமாக உள்ளது. வயதில் முதிர்ந்தவர்களின் அனுபவங்கள் கேட்பதற்கே ஒரு பாடமாக இருக்கும். என் (அம்மா வழி பாட்டி) பாட்டியும் எனக்கு குழந்தைகள் பிறக்கும் வரை நல்ல ஆர்வத்துடன் பார்த்து பார்த்து செய்தார்கள். அவர்களின் இழப்பு என்னால் இன்னும் மறக்க முடியாதது.பதிவு அருமையாக உள்ளது. இது தொடரா? இல்லை, அவ்வப்போது எழும் நினைவுகளா? உங்கள் தாத்தா, பாட்டியின் சதாபிஷேக போட்டோவா ? நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்கவியலா இனிய நினைவுகள்,,, அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். க்ளிப்தம் என்றால் கச்சிதமாக
வேலைகளைச் சுத்தமாக முடிப்பது.

அங்க பிச்சம், இங்க மிச்சம் என்பதெல்லாம் இல்லாமல்,
கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாகச் செயல் நிறைவேறினால் சொல்லும் வார்த்தை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா, நாம் கொடுத்து வைத்தவர்கள்,
எங்கள் மகளுக்குப்
பிரசவ சமய உதவியாக நான் வந்தபோது
குழந்தையை மட்டும் நான் பார்த்துக் கொண்டேன்.
மற்ற வேலைகள் செய்ய முடியாத படி ரத்த அழுத்தம் படுத்தியது.
அந்த நாட்களில் என் அம்மாவையும் பாட்டியையும் நினைத்துக் கசிந்து போவேன்.

ஆரோக்கியம் அவர்கள் கட்டுக்குள் இருந்தது.

நீங்களும் ஒரு உதாரணப் பாட்டியாஅத் தான் இருப்பீர்கள்.
உங்கள் செல்வப் பேரக்குழந்தைகள் நன்றே வளரும்.
அன்பு வார்த்தைகளுக்கு நன்றி மா.

இந்தப் பதிவு என் பெற்றொரை நினைத்து எழுதியது.
படத்தில் இருப்பவர்கள் யாரென்று தெரியாது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். மிக நன்றி ராஜா.
நம் முன்னோர்களை எந்தக் காலத்திலும் மறக்காமல் போற்றும் வழக்கத்தை
நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தாய் கொடுத்த அன்னம், தந்தை கொடுத்த கல்வி,
கணவர் அளித்த குழந்தைகள்
என்று நன்றிக்கடன் நீண்டுகொண்டே போகும்.

அடக்கமும் தானே வரும்.