Blog Archive

Friday, July 20, 2018

யாத்திரை தொடர்கிறது கோவில்கள்.

காசி விஸ்வநாதர்.
ஸ்ரீ துர்கா தேவி  சரணம்.
ஜகன்மாதா துர்கா தேவி கோவில் 
வல்லிசிம்ஹன்

கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது
ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ்சுமாவுக்கு.
முதல்னாள் கடையில் அந்த சிவப்பு பனாரஸ் புடவை வாங்கினதிலிருந்து
 இனம் புரியாத மகிழ்ச்சி. எப்பொழுதோ வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

கும்பகோணம் அருகில் பட்டீஸ்வரம் துர்க்கையைத் தரிசித்த நினைவு.
என்ன ஒரு ஆகிருதி அந்த அம்மனுக்கு.
அதுவும் பாங்காக உடுத்தப்பட்ட ஒன்பது கஜப் புடவையில் பச்சையும் சிவப்புமாக
ஒளிவிட்ட தாயார்.

குழந்தை வரம் வேண்டி தாங்கள் சென்ற கர்ப்பரக்ஷாம்பிகைக்
 கோவில் குருக்கள் சொன்ன பிரகாரம்

பட்டீஸ்வரம் அம்மாவையும் தரிசிக்க வந்தார்கள்.
 இரண்டு குழந்தைகளும் அந்தத் தாயின் வரம் என்றே  நம்பினார்கள்.
அவர்களுக்கு அழகான் வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததும்

அவளே. இந்த ஊரில் என்னவாகக் காட்சி கொடுப்பாளோ
என்று நினைத்த வண்ணம் ஹரி ஹரி ஹரி என்று ஜபித்தபடி
ஸ்னானம் செய்து முடித்துத் தயாராகவும்,
வாசு எழுந்து காலைக் கடன் களை முடிக்கவும் சரியாக இருந்தது.

வஞ்சுமா நெற்றிக் குங்குமத்தைச் சரி செய்த படி அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
  ஓஹோ  ,தாயாரைத் தரிசிக்க இந்தத் தாயார் ரெடியா
என்று பரிகாசம் செய்தபடி, வஞ்சு நீ என்ன காயகல்பம் ஏதாவது சாப்பிடுகிறாயா
 ஒரே மந்தஹாசமாக அழகு சுடர் விடுகிறதே என்று
பழையகாலக் கதானாயகர்கள் போல வசனம் பேசவும் வஞ்சுமாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தேவைதான், சீக்கிரம் தயாராகுங்கள். நாம் ஒன்பது மணிக்குக் கோவிலில் இருக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமை ...மறந்துவிட்டதா.என்றார்.
மறப்பேனோ நான் இதை மறப்பேனோ என்று பாடிக் கொண்டே
உள்ளே சென்றார்.
  என்ன கச்சேரி அமர்க்களப் படுகிறதே. மாமா இவ்வளவு அழககப் பாடுவாரா
என்றபடி லக்ஷ்மிமா உள்ளே நுழைந்தார்.

அந்த சிவப்பு மேனியில் மின்னும் பச்சை காசிப் புடவையைப் பார்த்து
இங்கேயே பிரித்து உடுத்தியாச்சா என்று வியந்தபடி ரசித்தார் வஞ்சுமா.
எங்கள் திருமண நாள்.
நாற்பது வருடங்கள் முடிகிறது என்றதும்.
அப்போ ஸ்பெஷல் வாழ்த்துகள். இரண்டு கோவில்களிலும்
மாலைகள் வாங்கிக் கொடுக்கவேண்டும்.
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்றபடியே சிறு குழந்தை போல
குளியலறைக் கதவைத் தட்டி வாசுவுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
வஞ்சு, நீ வா இங்கே, நாம் காலை உணவு வரவழைக்கலம்.
யாராவது சிரிக்கப் போகிறார்கள் என்று அழைத்தார் லக்ஷ்மி மா.

அதெல்லாம் ஒன்றும் இல்லை.இன்னிக்குக் கொண்டாடியே ஆகவேண்டும்.
என்ன என்ன கொண்டாட்டம் என்றபடி நுழைந்தார் நாராயணன்.
 எங்க அக்காவுக்கு இன்னிக்கு 40ஆவது திருமண நாளாம்.
உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்று சிரித்தார் வஞ்சு.

அதானா ....மறந்து போச்சே.
ஆஹா. அதுதான் காலைலயே பாட்டோட தான் எழுந்திருந்தாப்
போல கூந்தலிலே நெய் தடவி...என்று அவரும் பாட,வாசு நுழைய
கோலாஹலமாகத் தொடங்கிய நாள், துர்க்க மாதா கோவிலுக்கு வந்ததும் அமைதியாக
வழிபட்டனர்.
எத்தனை பெரிய கோவில் வங்காள மஹராணி கட்டிய கோவிலாம்.
அரக்குவர்ணத்தில் பலவாசல்கள், பல சன்னிதிகள்,
சலவைக்கல் கூடம், மாதாவுக்குத் தனிக் குளம் கங்கையோடு இணைக்கப்
பட்டதாம்.
அந்தத் தேவியின் திருமேனி பார்க்கப் பார்க்கத்
திகட்டவில்லை.
புலி மேல் அமர்ந்த துர்க்கையின் கோலம் மனதில் நிறைந்தது.
காசி ராஜாவைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்ற
வந்த தேவியாம். தானாகவே தோன்றிய சிலாரூபம். சிங்கத்தின் மீது
 அமர்ந்திருப்பது போல ஒரு சன்னிதி.
எல்லா விவரங்களையும் தனக்குத் தெரிந்த இந்தியில் நாராயணன் கேட்டுக் கொண்டார்.
நடேசன் ஏற்பாடு செய்தபடி அந்த அழகான சிவப்புப் புடவை
அம்மனுக்குச் சார்த்தப் பட்டது.

அனேகமாக சிவப்புதான் அங்கே பயன்படுத்தப் படுமாம்.

பார்க்கும் இடமெல்லம் சிவப்புக் கொடிகள். வீரத்தின் விளைனிலத்தில் இருப்பது போல
நால்வருக்கும் தோன்றியது.
வாசுவின் பிரத்தியேகப் பிரார்த்தனை வஞ்சுமாவின் உடல் நலத்துக்காகத்தான்.
வஞ்சுவோ வரப் போகும் சிசுவிற்கு துர்க்காவின் நாமங்களில்
ஒன்றைச் சூடுவதாகப் பிரார்த்தனை.
லக்ஷ்மி நாராயணன் தமபதிகளுக்கு
புதல்வர்கள், மகள் அவர்களின் குடும்ப நலன் எல்லாவற்றிர்க்கும்
ஒரு தாயிடம் முறையிடுவது  போல மனதில் எண்ணங்கள் ஓடின.

வாசுவின் ஏற்பாட்டின்படி தம்பதியர் இருவருக்கும் பொருத்தமான மாலைகள்
நடேசன் வாங்கி வந்திருந்தார்.
வஞ்சு ,மாலை மாற்றினார் பாட வெளி மண்டபத்தில் இருவரும்
 மாலைகள் அணிந்து கொண்டனர்...
அப்படியே வெளியே வந்து, மலர்ப் பிரசாதங்களுடன், லக்ஷ்மி நாராயணர் கோவில்
இருக்கும் அஸ்ஸி காட் பகுதிக்கு வந்தனர்.

Add caption

No comments: