Blog Archive

Thursday, May 03, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  மாமா வண்டியைக் கொண்டுவரும் போது சீவு என்கிற ஸ்ரீவரமங்கைப் பாட்டியும் வந்துவிட்டார்.
என்ன திருவேங்கடம் எங்க்கே பார்வேட்டை கிளம்பிட்டாய்னு கேட்டவாறு.

உனக்கும் எனக்கும் என்னடிம்மா பார்வேட்டை. இந்தக் குட்டி வந்திருக்கு, அதுக்கு ஏதாவது
வாங்கிவிட்டு, மாவடு,மாங்காய் மத்த காய்கறிகள் வாங்கலாமே ந்னு கிளம்பினேன்.
கூட்டத்திலே தன் மருமாள் தொலைஞ்சு போயிடுவாளோன்னு ராகவனுக்கு பயம். உங்க காரை எடுத்து வந்துவிட்டான்.// என்றார் பாட்டி.

போறதுதான் போற, எனக்கும் குங்குமம்,தாழம்பூ  ,வெத்திலை எல்லாம் வாங்கிண்டு வா என்றார் சீவுப் பாட்டி.
என்ன விசேஷம்டி அம்மா  உங்க அகத்துல//

நாட்டுப்பெண்ணுக்கு 5 ஆம் மாசம்.
அவ அம்மா நாச்சி வந்திருக்கா. ஏதோ பொன்னுக்குப் பின்னல்ல தாழம்பூ தைக்கணும் .மருதாணி இடணும்னு உட்கார்ந்திருக்கா.

யாரு நாச்சிப் பெரியம்மா வான்னு நானும் ஆவலோடு கேட்டேன்.
ஆமாம் என்ற ராகவன் மாமா,வரும்போது  அம்மாவைப் பார்க்கலாம் என்றார்.
எனக்கு மனம் பூராவும் சந்தோஷம்.

என் இன்னோரு பாட்டி சீனிம்மாவின் அக்கா இந்த நாச்சியார் பெரியம்மா.
5 அடிதான் . முகம் கை கால் எல்லாம் மஞ்சள்
நீட்ட ஸ்ரீசூரணம்  பளிச்சென்று பிரகாசிக்கும்.
அந்த சின்ன உடம்பை எப்படித்தான் ஒன்பது கஜத்தால் சுற்றிக் கொள்வாரோ.
ஒடுங்கின கைகள் என் கைகளைப் பிடித்துக் கொள்வது இன்னும் நினைவில் இருக்கிறது.
 வயிற்று வலித் தொந்தரவால் சுருங்கின முகம் எங்களை எல்லாம் பார்த்தாலே விகசிக்கும்.

பெரியம்மாவுக்குப் பெரிய சம்சாரம்.
மணி மாமா முதல்,பிறகு கிச்சன்,ராஜி,மங்கை இப்படிப் போகும்
ராகவ மாமாவைத்தான் அம்மு சித்திக்குக் கொடுத்துவிட்டார்கள்.

பெரியம்மாவின் கணவர் வரதா அத்திம்பேர் . முரட்டு மனிதர்.
 எங்கயோ போய்விட்டேன். புது மண்டபத்தை அடையவும் மழை வரவும்
சரியாக இருந்தது. உருட்டல் மிரட்டல் அதிகமாகவே , நான் வளையல் கடை உள்ளே போய் உட்கார்ந்து விட்டேன்.
பாட்டிக்கு என் பயம் தெரியும், நீ இரு. நாங்கள் போய் மற்ற சமாசாரம் வாங்கி
வருகிறோம் என்று சென்றார்கள். மண்டபக்கடைகள்  முடியும் இடத்தில்
பந்தலுக்கு அடியில் பாட்டி வழக்கமாக காய்கறி வாங்கும் இடத்தில் இரண்டு
கித்தான் பையில் மாவடு, மாங்காய்,கீரை,வாழை, சேம்பு,புடலங்காய்
கத்திரிக்காய், எல்லாம் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் வாணலிகள்
விற்கும் கடைக்கு வந்தார்கள் . ஒரு மண் அடுப்பும் வாங்கிக் கொண்டார் பாட்டி.

அதுவரை வளையல் கடை அம்மாவின் மகள் ,மகன் வீடு எல்லா வம்புகளையும் கேட்டுக் கொண்டேன்.
என்ன சமையல் வரைக்கும் வந்துவிட்டோம் .
இவர்களூம் வந்துவிட்டார்கள்.
என்ன பேத்தி வாயடிக்கிறாளா என்ற படி வந்த  பாட்டி
Add caption
 எங்கள் வீட்டில் இருக்கும்
 எல்லோருக்கும் வளையல்கள்,
வாங்கினார். ஒரு மஞ்சள் வண்ணப் பையில் அந்த அம்மா கொடுத்ததைப்
பத்திரமாகக் கையில் பிடித்தபடி, வண்ண வண்ணப் பாசிகள் கோர்த்த மாலையைக் கழுத்தில் போட்டுக் கொண்டு,   மழையில் நனைந்திருந்த தளங்களைக்
கடந்து வண்டியை வந்தடைந்தோம்.
மழை நின்று சிறிய தூறலாகி இருந்தது.
மல்லிப்பூ பந்துகள் பக்கம் போனதும் பாட்டிக்குத் தாழம்பு நினைவு வந்தது.
அதையும், மல்லிப்பூ பந்துகளையும் வாங்கிக் கொண்டு சீவுப் பாட்டி வீட்டுக்கு வந்தோம்.

இன்று இங்கே மழை மிரட்டுகிறது. நாளை பார்க்கலாம். தொடரும்.

16 comments:

ஸ்ரீராம். said...

ஏதோ நேற்றோ, சென்ற வாரமோ நடந்ததைப் பற்றிச் சொல்லுவது போல ஞாபகமாகச் சொல்லி வருகிறீர்கள்... தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

இங்கேயும் மழை வருவது போல் போக்குக் காட்டிப் பின் எதுவும் இல்லை! அருமையான நினைவலைகள். எங்க வீட்டில் கோயிலுக்குள் மாலை கட்டும் இடத்துக்கு எதிரே இருந்த கடையில் வளைகள் வாங்குவோம். பரம்பரை வளைச் செட்டி. கோயில் வளையல் திருவிழாவில் அவங்க வீட்டு வளையல்களே விநியோகிக்கப்படும். குழந்தை பிறந்தால் கறுப்பு வளைகளை இலவசமாகத் தருவார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் சகோதரியாரே

KILLERGEE Devakottai said...

டைரிக்குறிப்புகளோ என்று தோன்றுகிறது அம்மா தொடர்கிறேன்...

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

கோர்வையாக நினைவில் வைத்து எழுதுவது என்பது சற்றே சிரமம். ஆனால் நீங்கள் அதனை அனாயசமாகச் செய்கின்றீர்கள்.

கோமதி அரசு said...

நினைவுகள் நேற்று நடந்தது போல்!
அருமையான நினைவுகள்.
தொடர்கிறேன்.

பண்டிகை வந்தால் மருதாணி வைக்க வேண்டும் அம்மா சொல்லிக் கொடுத்த பழக்கம்.
மருதாணிக்கு யார் வீட்டிலும் போய் நிற்க முடியாது பண்டிகைக்கு என்று இரண்டு பெரிய சிமெண்ட் தொட்டியில் வள்ர்த்தேன் மருதாணி செடிகளை.
எல்லாம் மாயவரத்தில் விட்டு வந்தாச்சு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மதுரைப் பயணங்கள் பத்து பதினைந்து நாட்கள் தான் இருக்கும்.

அப்பா வந்து அழைத்துச் சென்று விடுவார்.
சித்திப்பாட்டி வீடுகளுக்குப் போவது வழக்கமான விஷயம்.
அவற்றில் ஒன்றிரண்டு சம்பவங்கள் நன்றாகவே நினைவில் இருக்கின்றன.
இதே அம்முப்பாட்டி வீட்டில் தான் நான் என் கடிதம் எழுதினது
10 வருடங்கள் கழித்து .அப்போது சந்தைப்ப்பேட்டை வீட்டிற்கு மாறிவிட்டார்கள்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எனக்குப் பொற்றாமரைக்குளம் புதுமண்டபக் கடைகள், யானைகள் நிற்கும் கொட்டாரம், கல்யானைகள்,சந்தைக் கடை,புதுமண்டபக் கடைகள் ஒன்றும் மறக்கவில்லை.

இப்போது எப்படி எல்லாம் மாறி இருக்கிறதோ.
நீங்கள் சொல்லும் வளைச்செட்டியின் கடை எனக்குத் தெரியவில்லை.
இதுவே எப்போதோ கண்ட கனாதான். மீனாட் சந்நிதி பளிச்சென்று நினைவில் இருக்கிறது,

எத்தனையோ பொக்கிஷங்களை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.

பதிவின் படம் கவர்ந்தது. தங்கையை பத்திரமாக அண்ணன் கைப்பிடித்து தண்ணீரின் அருகில் செல்வது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக்குமார். இன்னும் ஒரு பாகத்தோடு முடிக்கப்
பார்க்கிறேன்.நதியில் அடித்துச் செல்வது போல நினைவுகள்
என்னைப் பிடித்துக் கொள்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

டயரிக் குறிப்புகளும் உண்டு தேவகோட்டை ஜி.
என் பயணங்கள் என் மனதில் ,பதிவான விதம் அப்படி.
மனிதர்களின் குணாதிசயங்களும் அப்படி.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் சோழ நாட்டில் பௌத்தம்,
இந்த எழுத்துப் பல நாட்களின் ஒருங்கிணைப்பு.

கதம்பம் போல என் மனதில் படிந்தவை.
உங்கள் பாராட்டு மனதுக்கு மிக மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் ஞாபக சக்தி அசர வைக்கிறது வல்லிம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: அருமையான நினைவுகள் அம்மா...நுணுக்கமாகவும் எழுதுகின்றீர்கள்....தொடர்கிறோம்

கீதா: வல்லிம்மா இன்று க்ரூப்பில் உங்கள் ஃபார்வேர்டட் மெஸேஜ் ஒன்று பார்த்தேன் மூளைத் திறன் பற்றி குறிப்பாக வயதானவர்களுக்கு ஏன் ஸ்லோ டவுன் ஆகிறது என்பது பற்றி....இப்பத் தெரிகிறது உங்கள் நினைவுகள் இத்தனையும் பதிந்திருக்கும் போது யுவர் டிஸ்க் இஸ் ஃபுல்!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

தாழம்பூ ஆமாம் எங்கள் ஊரில் நதிக்கரையில் தாழம்பூ நிறைய இருக்கும். பின்னலில் வைத்து தாழம்பூ ஜடை போட்டு விடுவார்கள். முடி பல நாட்களுக்கு தாழம்பூ மணத்துடன் இருக்கும்...எனக்கு அந்த நினைவு வந்தது...ஆனால் தாழம்பூவில் சில சமயம் பாம்புகள் இருக்கும் மிகவும் கேர்ஃபுல்லாக அந்த பொடி மூக்கினுள் போகாமலும் பூவை பிரித்து இதழ்களை வைத்துப் பின்ன வேண்டும்...

Geetha Sambasivam said...

//இப்போது எப்படி எல்லாம் மாறி இருக்கிறதோ.
நீங்கள் சொல்லும் வளைச்செட்டியின் கடை எனக்குத் தெரியவில்லை.
இதுவே எப்போதோ கண்ட கனாதான். மீனாட் சந்நிதி பளிச்சென்று நினைவில் இருக்கிறது,//

இப்போச் சென்ற மாதம் போனதில் கடைகள் எதுவும் இல்லை. வடக்கு கோபுர வாசலை அடைத்துக் காவல் போட்டிருந்தார்கள். ஆயிரக்கால் மண்டபம் செல்லும் வழி, கல்யாண மண்டபம் செல்லும் வழியெல்லாம் காவல். பலத்த போலீஸ் பாதுகாப்பு! பூக்கடைகள் மட்டும் அதுவும் பரம்பரைப் பூக்கட்டுபவர்கள் மட்டும் எப்போதும் இருக்கும் இடத்தில் பூக்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். வளைக்கடை அதற்கு எதிரில் தான் இருக்கும்; இருந்தது. இப்போ ஏதும் இல்லை! கோயிலின் அழகே போய் மீனாட்சியும் சோகமாக இருந்ததாக எனக்குத் தோற்றம். அதிலே வேறே சுந்தரேசர் சந்நிதியில் அர்ச்சனைக்குக் கொடுத்தால் பட்டர் தேங்காயை உடைக்காமலேயே அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்திருந்தார். கவனக்குறைவு மிகக் கேவலமாக இருக்கு!

Geetha Sambasivam said...

// பின்னலில் வைத்து தாழம்பூ ஜடை போட்டு விடுவார்கள். முடி பல நாட்களுக்கு தாழம்பூ மணத்துடன் இருக்கும்.//

மல்லிகைப் பூக்காலங்களில் பூத்தைத்துக் கொள்ளாமல் இருந்ததில்லை. அப்பா, அம்மா அதற்கென முயலவில்லை எனினும் எங்க வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த சுப்பம்மா சும்மா இருக்க மாட்டார். அவரே வாழைப்பட்டையில் பூக்களை வைத்து அலங்காரம் செய்து உல்லன் நூல், சின்னச் சின்ன பொம்மைகள் வைத்துத் தைத்து எடுத்துக் கொண்டு வருவார். உச்சிக்கு ராக்கொடியும் அவரே கொண்டு வந்து தைப்பார். இரண்டு நாட்கள் பின்னலை அவிழ்க்க மாட்டேன். அதோட பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கும் போயிருக்கேன். நவராத்திரின்னா கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரம்! கிருஷ்ணன் கொண்டையோடயே பள்ளிக்குப் போவேன்!

எங்க அப்பா குடும்பத்தில் யாரோ சின்னப் பெண்ணுக்குத் தாழம்பூ வைத்துத் தைத்ததில் பூ நாகம் கடித்து இறந்து விட்டதாய்ச் சொல்வார்கள். ஆகவே அங்கே தாழம்பூவே வாங்க மாட்டாங்க! :) நான் கல்யாணம் ஆகிப் பெண் பிறந்து மூன்று வருஷத்திற்கு அப்புறமா 22,23 வயசில் முதல் முதலாகத் தாழம்பூ வைத்துத் தைத்துக் கொண்டேன். நம்ம ரங்க்ஸின் அத்தைக்கு என்னோட அடர்ந்த தலைமுடி ரொம்பப் பிடிக்கும். அவங்க வீட்டுக்குப் போனப்போ என்னை உட்கார்த்தி வைத்துத் தைத்து விட்டாங்க!