Blog Archive

Wednesday, November 29, 2017

1962 படிப்பு, பயணங்கள்,அனுபவங்கள்

 Vallisimhan
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்,

    அப்பாவின் இரண்டு அக்காக்களில் ஒருவர் சென்னை மந்தை வெளியிலும்,
இன்னொருவர் தில்லியிலும்  இருந்தார்கள்.
என் அம்மாவிடம் மிகவும் பிரியம் வைத்திருந்தவர்கள்.

அவர்கள் வந்துவிட்டால் வீட்டில் இன்பம் ,பேச்சு, கும்மாளம் தான்.
 பெரிய அத்தையின் அத்திம்பேர் பெரிய எழுத்தாளர்.
ஆங்கிலப்   பத்திரிக்கைகளுக்கு  எழுதுவார். இவர்தான்  எங்க வீட்டுக்காரரின் ஜாதகத்தை 3 வருடங்களுக்குப் பிறகு 1965இல்
கொண்டு வந்தவர். 
ஸ்ரீமத் ராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார்.
வால்மீகியின் ஒரு சொல் கூட பழுதில்லாமல் தமிழில்
கொண்டு வந்தவர். 
அத்தை ஒரு அப்பாவி. எப்பொழுதும் கணவருக்கு சேவை
செய்வதுதான் தெரியும். இருவரும் வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,
வாசனைப் பாக்கு என்று  வாசனையாகவே இருப்பார்கள்.இவர்களுக்கு இரண்டு
மகன்கள். எங்களைவிடப் பத்து,பனிரண்டு வயது மூத்தவர்கள்.
அத்தை வீட்டுக்குப் போனால், ஒரு சினிமா, ஒரு பீச்,ஒரு கோவில் என்று வெளியே அழைத்துச் சென்று விடுவார்.

இங்கே வந்தால் பேச்சுதான்.
சின்ன அத்தை வரும்போதே  தில்லி பிஸ்கட் மணம் வீசும்.
ஒரு டின் நிறையக் கொண்டு வருவார். அவர் மகனுடைய திருமணத்துக்குத் தான் நான்,அம்மா,அப்பா
பாட்டி, சித்தப்பா எல்லோரும் திண்டுக்கல்லில் இருந்து தஞ்சாவூர்
சென்றோம்.
அருமையான பயணம். தெரியாத ஒன்று கர்னாடகாவில் பெய்த மழை.
அத்தை மகனின் திருமணம் வெகு அழகான முறையில் நடந்தேறியது.
நாங்கள் திண்டுக்கல் திரும்ப, அம்மா சென்னை செல்வதாக
திட்டம்.
திருமணம் முடிந்து ,பாலிகை கரைக்க சத்திரத்தின் பக்கம் ஓடிய
வெண்ணாற்றங்கரைக்குச் சென்றோம்.
பத்துப் பதினைந்து பெண்களாக ஆற்றங்கரை மேட்டுக்கு வந்தோம். உற்சாகக் களிப்பில் ஆறு
சிவந்த வண்ணத்தில் ஓடுவதைக் கவனிக்கவில்லை.
பட்டுப் பாவாடைகள், பூக்கள், தட்டுகளில் பாலிகை கரைக்க வேண்டிய குவளைகள்
எல்லாமாகக் காவிரிக்குப் போட்டியாக நாங்களும் ஓடினோம்.
திடீரென எதிர்க்கரையிலிருந்து ஒரு குரல்.
பொண்ணுகளா இறங்காதீங்க, வெள்ளம் வருது ,பின்னாலே போயிடுங்க.
  என்று கூச்சல் போட்டார்.
நாங்கள் மிரண்டு போனோம்.
பார்த்துக் கொண்டிருந்தபோதே  ஹோவென்ற பேரிரைச்சலோடு
பாய்ந்த வந்த நீர் மிரட்டியது எங்களை.
கிளைகள், மரங்கள் ,பறவைகள் என்று ஆர்ப்பாட்டத்தோடு வந்த காவிரி
எங்களை பயமுறுத்த மீண்டும் சத்திரத்துக்கே வந்தோம்.
அன்றிரவு சென்னைக்குப் புறப்பட்ட அம்மாவைக் கும்பகோணம் சென்று வண்டி ஏற்றினோம்.
 அந்தப் பயணம் அம்மாவின் வாழ்க்கையில் மறக்க முடியாததாக
அமைந்தது. பார்க்கலாம்.
Add caption
Add caption

16 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வெள்ளம் வருகின்றது என்ற எச்சரிக்கை. அப்பப்பா. இவ்வாறான அனுபவத்தை நாங்கள் கும்பகோணத்தில் காவிரியாற்றில் எதிர்கொண்டுள்ளோம். அவற்றை நினைவூட்டின இப்பதிவு.

பூ விழி said...

நேரிலேயே வெள்ள வரவை கண்டுள்ளீர்கள்

நெல்லைத் தமிழன் said...

வெண்ணாற்றங்கரை - படித்தவுடன், வெண்ணாற்றங்கரைப் போர் நினைவுக்கு வருகிறது.

ஆற்று வெள்ளம், பாலிகை.... சென்ற காலத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.

Bhanumathy Venkateswaran said...

மிக அழகான நினைவுகள். அப்போதெல்லாம் பாலிகை கரைக்க மேள தாளத்தோடுதான் செல்வார்கள் இல்லையா?

ஸ்ரீராம். said...

பார்த்துக் கொண்டிருக்கும்போதே வரும் வெள்ளம் - மிரட்டல். நான் அப்படிப் பார்த்ததேயில்லை.

ராமலக்ஷ்மி said...

பாய்ந்து வந்த நீர் மிரட்சியைத் தந்திருக்குமே.

உங்கள் நினைவுகளுடன் நாங்களும் பயணிக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
மறக்க முடியவில்லை அந்தக் காட்சியை. இறைவன் எதை நாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறானோ அதைப் பார்க்க வைக்கிறான். வாய் ஓயாமல் பேசுபளை மௌனியாக்கியது அந்த வெள்ளம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நம் வைகையில் அது போல வெள்ளம் வந்திருந்தது ஒரு சமயம்.
இந்த வெள்ளம் சிற்றோடையாக இருந்து படிப்படியாக மேலே
ஏறியதைப் பார்த்துக் கல் போல நின்றோம். அதிசயமான காட்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு உண்மைதான் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி
ஏதோ ஒரு ராகம் பாடி மேளம் தட்டி வந்தார்கள். தண்ணீரைப் பார்த்து முதலில் ஓடியவர்கள் அவர்கள் தான். பெரியவர்கள் கூட யாரும் வரவில்லை. ஓ. மாப்பிள்ளை பெண் வந்தார்கள்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு. ஜம்புலிங்கம் ஐயா வணக்கம். நீங்களும் பார்த்திருக்கிறீர்களா.
அங்கே குடமுருட்டி ஆறு கூட இருக்கிறது இல்லையா.
வருகைக்கு மிக நன்றி ஐய்யா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்வில் ஒரே ஒரு தடவை பார்த்தேன் அன்பு பூவிழி.
அபாய அழகு. வா உன்னையும் விழுங்குகிறேன் என்று சவால் விடுவதைப் போல இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், வெண்ணாற்றாங்கரைப் போர், பார்த்திபன் கனவா,
சிவகாமியின் சபதமா. மறந்து விட்டது மா.
ஆமாம் பழைய காலம் நிறைவான அழகுகளில் ஆறும் பங்கெடுக்கும்.
இப்போது பக்கெட் தண்ணீரில் பாலிகைகள் கரைந்து விடுகின்றன.

Geetha Sambasivam said...

நான் பள்ளியில் படிக்கையில் ஒரு முறை வைகையில் இப்படித் தான் வெள்ளம் வந்து கீழ்ப்பாலம் மூடி மேல் பாலம் வரை தண்ணீர் தொட்டுக் கொண்டு ஓடியது! மேல்பாலத்தில் வண்டியில் வரச்சே பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வெள்ளம் மேல் பாலத்தைத் தொட வந்தது. நல்லவேளையா எங்க பேருந்து பாலத்தை விட்டுக் கீழே இறங்கி இருந்தது. மெதுவா எப்படியோ சிம்மக்கல் வந்து வீட்டுக்கும் போய்ச் சேர்ந்தேன். அதுக்கப்புறமா இரு முறை இம்மாதிரி வெள்ளம்!

கோமதி அரசு said...

பார்த்துக் கொண்டிருந்தபோதே ஹோவென்ற பேரிரைச்சலோடு
பாய்ந்த வந்த நீர் மிரட்டியது எங்களை//

பயமாய் இருந்துஇருக்குமே அப்போது.
நினைவுகள் பகிர்வை தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...


அன்பு கீதா, பாலத்தைத் தாண்டி உங்கள் பள்ளி இருந்ததா.
இப்பொழுதுகம் மழை ஆரம்பித்திருக்கிறது தென் மாவட்டங்களில்.

நம் நாட்களில் பஸ்ஸெல்லாம் நல்ல நிலையில் இருந்தது.

வெள்ளம் பாலத்தின் சாலையில் வந்திருந்தாலும் சமாளித்திருப்பார்கள்.

இருந்தும் பயமான அனுபவம் தான்.

வல்லிசிம்ஹன் said...


அன்பு கோமதி உங்களுக்கும் மாயவரத்தில் காவிரி அனுபவம் ஏதாவது உண்டா.
அந்த வயதுக்கும் இந்த வயதுக்கும் வேகமாக வரும் எதையுமே ருசிக்க முடியவில்லை.