Blog Archive

Friday, May 26, 2017

ஒரு குழந்தையும் ஒரு தாத்தாவின் மறைவும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஏன்பா நீதானே  ஒயிட் ஹேர் இருந்தா உம்மாச்சி அழைச்சுண்டு போவார்னு சொன்ன.
ஆமாம் கண்ணா.
தாத்தா தலைல க்ரே ஹேர் தானே இருக்கு.
உம்மாச்சி சரியாய் பார்க்காம அழைச்சுண்டு போயிடப் போரார்ப்பா.
தாத்தாவைப் பொட்டி யிலிருந்து
எடுத்துடுங்கோ.

Wednesday, May 24, 2017

N.S. Raghavan... நல்ல தம்பி 1950 June 10 May 22 nd 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அருமை அன்பு,மாண்பு, பக்தி. எல்லாமாக ஒரு உருவம் என் சகோதரன்.
25 வருடங்கள் நோம்பு போல் , வாழ்க்கை, இருதய சிகிச்சைக்குப் பிறகு. தந்தைக்கு அடுத்தபடி இன்னும் அதிகமாக என்ன என்னிடம் பிரியம் கொண்டவன்.
முரளி, தலை முடி  வெட்டிக்கோடா.
முரளி சட்டை இல்லாமல் இருக்காதே  டா. எனக்குப் பார்க்க முடியல.
சரி இதோ போறேன்  ரெவ் னு சொன்னதைச் செய்துவிடுவான்.
அவனுக்கு வாய்த்த மனைவியோ தங்கம்.
 கணவனுக்காக எத்தனையோ விரதம் .கோவில்கள்.
மகன் தந்தை சொல் மீறாத பிள்ளை. அப்பா இந்தக் கோவில்னு சொல்ல வேண்டியதுதான். அடுத்தவாரம் பயணம் கிளம்பி விடுவார்கள். குருவாயூர், திருமலை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் என்று வண்டி பறக்கும்.
 60 வயது வரைத் தன அலுவலகத் தலைமைப் பொருப்பைப் பார்த்துக் கொண்டவன் , சேர்த்த பணம் போதும் என்று பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டான் .
பேத்தியின் காவலன்.மாணவன் என்று பல அவதாரம்.
ஒரு நொடி உட்காராமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்.
இதோ இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை ஒரு வினாடியில் இறைவன் அழைத்துக் கொண்டான்.
நான் இங்கிருக்கிறேன்.
என் உயிராக நேசிப்பவர்களைக் கண்ணாடிப் பெட்டியில் பார்த்து அலுத்துவிட்டது.
நான் இந்தியா  செல்லவில்லை. அதற்குத்தக்க சரியான
விமான டிக்கட்டும்  கிடைக்கவில்லை.
அடுத்த நாள் போவதற்குள் காரியங்கள் முடிந்திருக்கும்.
மௌனம்  காத்துக்   கண்ணீர்வடிக்க மட்டுமே தெம்பு.

இனி வரும் சிரம நாட்களை எதிர்கொள்ள இறைவன் துணை இருப்பான்,. இதுவும் அவன் சொல்லிக் கொடுத்து
தான்.  நன்றி முரளி.

Sunday, May 14, 2017

அன்னையர் தின வாழ்த்துகள் மே 14 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
என் அம்மாவுக்கு என் தலை முடியை சீவி
சிடுக்கெடுத்து, நீண்ட பின்னலை
சிலும்பில்லாமல் பின்னி, துளியே துளி
நுனி முடி விட்டு ரிப்பனும் கட்டிவிடுவதில்
அத்தனை இஷ்டம்.

என்னைவிட அடங்காப் பிடாரியாக என் முடி சிடுக்குகள்.
எண்ணெய் தேய்த்து, கண் எரியாமல் உசிலம்பொடி
போட்டு அலசித் தேய்த்து ,உலர்த்தி,
சொகுசாக சாம்பிராணிக் கூடையில் உலர்த்தி
 இரட்டைப் பின்னல் வெள்ளியன்று உண்டு.
தலையில்  ஏதோ திண்டுக்கல் உஷ்ணத்தில்  வந்த கட்டிக்காக எத்தனை கைவைத்தியம்
பார்க்கமுடியுமோ அத்தனையும் செய்தாள்.
சிறிவெங்காயம் அரைத்து வதக்கிப் பற்றுப் போடுவாள். அவள் போற்றீப்
பாதுகாத்த முடியைக் காப்பாற்றமுடியாமல் இருபது வருடங்கள் தவித்தேன்.
என் மாமியார் இறைவனிடம் சென்றவுடன் மெல்ல ஆரம்பித்தது
முடிவெட்டும் புராணம்.
என் மகளின் தோழிகள் அதிர்ந்தார்கள்.வேண்டாம் ஆன்ட்டி
என்று சொல்லிப் பார்த்தார்கள் .அவர்கள் அனைவருக்கும் நீளமுடிதான்
என் பெண்ணையும் சேர்த்து.
 கொத்தமல்லிக்கட்டாக முடிந்த முடியை
இதோ இரண்டு வருடங்களாக அம்மாவுக்காக வளர்க்கிறேன்.
இந்த வயதில் தேவையா என்று தோன்றினாலும்,
பாவம் எங்க அம்மா எங்கிருந்தாவது
பார்த்துக் கொண்டிருப்பார்,மகிழ்வார் என்றே நம்புகிறேன்.
என் பேத்திகளுக்கும்  நீளமுடிதான். ஒரு அங்குலம்.
கூட  நறுக்க விடமாட்டார்கள்.

Wednesday, May 10, 2017

அழகர் ஆற்றில் இறங்க ........

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..
அழகர் மலை மன்னர் வந்தார்
ஆற்றில் இறங்க அண்ணல் வந்தார்.
 கள்ளர் மலை கள்ளர் வந்தார்//  கோதை மனம் மகிழ்  மன்னர் வந்தார்.
பச்சை ப்   பட்டுடுத்தி  சுந்தரன் வந்தார்
பசும்பொன்னால் ஆன பெருமாள் வந்தார்.
மதுரை மனம் மகிழ அரசர் வந்தார்
ஆண்டாள் கைமாலை அணிந்த காளை  வந்தார்.
தங்கப் பரியேறி விமலன் வந்தார்
அழகுத்  தோளுடை   அழகர் வந்தார் .
வையம் செழிக்க,
பொன் பயிர் விளைய
அழகா நீ அருள் புரி .

Friday, May 05, 2017

முதுமை ஒரு வரம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்..      சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
உண்மை தான். அன்பு வார்த்தைகள் அதிகம் பேசாமல்
முதுமை கழிவது மிகச் சிரமம்.
அதைவிடச் சிரமம்
செய்யாத செயலுக்குப் பழி ஏற்பது.  லக்ஷ்மிப்
 பாட்டி ஒரு தடவை இது போல மாட்டிக் கொண்டார்.
மருமகள்  கணவனிடம் சொல்ல,
  மகன் பாட்டியிடம்  சுடு சொல் சொல்ல
பாட்டி விழித்தார்.
நான் ஒண்ணும் சொல்லலியேப்பா.
 பக்கத்துவீட்டுச் செல்லியிடம் சாதாரணமாகத்தான் சொன்னேன்.
அவளுக்கு ஏதோ மனக்குறை. சரியா சாப்பிட முடியலை. ஒவ்வொரு தடவையும்
அவள் ...மருமகள்
கணக்கு எழுதும்போது நான் ஏதோ தப்பு செய்யற மாதிரி இருக்கு.  இப்படின்னு.,,,,,
 புத்திசாலிதான் அவள். 65 வயதில் இத்தனை கிழடு தட்டிப் போச்சென்னு
வருத்தமாக இருந்தது.

ஆதரவா நாலு வார்த்தை சொன்னேன். அவளுக்கு நாலும் பிள்ளைகள்.
 இரண்டு நாட்கள் அங்கே போய் இருந்துவான்னு.
மத்தபடி இந்த அகத்தைப் பற்றிப் பேசலியே என்று.
   இனிமே அங்கே போகாதே. நீ அவளைவிடப் பெரியவள்.
எத்தனையோ சௌகர்யமாக இருக்கிறாய்,
வாயால் கெடுத்துக் கொள்ளாதே என்று பொரிந்துவிட்டுப் போய்விட்டான்.
  ஆஹா,நமக்கென்று ஒரு நல்ல தோழி இருந்தாள்.
இனி எப்படி என்றவளுக்கு, வரப்பிரசாதம் பேத்தி வழியாகக்
கிடைத்தது. புத்தக சந்தையில் வாங்கியதாக, லக்ஷ்மி கடாக்ஷம்,
 அமரதாரா, கள்ளிக்காட்டு இதிகாசம் எல்லாம்
கொடுத்துவிட்டுப் போனாள்.
  கையில் வைத்துப் படித்தால் கை வலிக்கும் என்று கூடவே
ஒரு அலுமினிய மேஜையும் வாங்கி வந்திருந்தாள்.
  நெல்லுக்கு இறைத்த நீர் பாடல் தான்
நினைவுக்கு வந்தது லக்ஷ்மி பாட்டிக்கு.
  தாளுண்ட நீரைத் தலையால் தரும் தென்னை
போன்ற பேத்தியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள்.

Tuesday, May 02, 2017

Shilthorn Switzerland

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
17ஆம்தேதி காலை மழையோடு ஆரம்பித்தது. எங்களுக்குள் விவாதம். நாம் போகப் போகும் இடம் ஒரு மலைச்சிகரம். அங்கே மதிய உணவுக்குப் போய்விடலாம்.
மழையிருந்தால் ஒன்றுமே பார்க்க முடியாது. அந்த மழையை இங்கயே பார்த்துக் கொண்டு சீட்டுக்கட்டு ராஜா பாடலாமேன்னு ஒரு யோஜனை,.
பையனோ இவ்வளவு தூரம் வந்து உள்ளே உட்காருவானேன்.
குடையிருக்க கோட் இருக்க மழைக்குப் பயமேன்னு டயலாக் சொன்னதும் பத்து நிமிடத்தில் ரயில் நிலையத்தில் இருந்தோம்.
கையில் சாப்பாடு எடுத்துக் கொள்ளவில்லை . பேத்தியின் இரண்டாவது  பிறந்த நாள்  அன்று:)
அதனால் அவ பேரைச் சொல்லி எல்லோருக்கும் மலையுச்சி ரெஸ்டாரண்டில் மகன் எங்களுக்குச் சாப்பாடு கொடுக்கப் போகிறான் 
ரயில் நிலையத்தில் வண்டி வர இன்னும் இருபது நிமிடம் இருக்கும் என்ற நிலையில்
மழையைப் பார்த்து,சத்தமில்லாமல் அது விழுவதை ரசித்துக் கொண்டிருக்கும்போது,
ஒரு டாக்ஸிக்காரம்மா வந்தாங்க.
அவங்க எங்களைப் பாதிதூரம் கொண்டு விடுவதாகவும் 100ரூபாய் கொடுத்தால் போதும்னு சொல்லவும், சரி அந்தப் பயணத்தையும் சவாரியையும் ரசிக்கலாமேனுட்டு அந்தப் பெரிய வண்டியில் அனைவரும் ஏறிக் கொள்ள மழையில் வெகு லாவகமாக வண்டி ஓட்டினார் எலிசபெத் .
அவரும் கணவருமாக க்ரின்டெல்வால்டில் இருபது வருஷமாக வாடகை வண்டிகள் ஓட்டுகிறார்களாம். நல்ல வருமானம். இந்தியர்களும் ,ஜப்பானியர்களும் தான் அதிகம் வருகிறார்கள் என்றார்.
இன்னும் பத்து வருடம் ஓட்டலாம் என்றதும்,நான் அவசர அவசரமாக ஏன் வயது வரம்பு உண்டா என்றேன். ஓ,நோ எனக்கு அப்ப 70 வயசாகிவிடும்
என்றாரே பார்க்கலாம்.!!!!!
அப்ப இவருக்கு இப்ப அறுபது. அழகா சம்பாதிக்கிறாரேன்னு எனக்கு ஆற்றாமையும், தன்னிரக்கமும் மிகுதியாச்சு.
சே, நாம எல்லாம் என்ன கணக்கில சேர்த்தி. இதைப் பாரு என்ன ஜம்முனு வண்டி ஓட்டறது. மழை,மின்னல் அப்படீனு ஒரு பயம் உண்டா. எங்க சிங்கம் வண்டீ ஓட்டறதில சமர்த்தர்னா இவ மகா சமர்த்தியா ஓட்டறா.
சாப்பாடுனு ஒரு ரொட்டியும் ஒரு சாஜேஜும் கடித்துக் கொண்டாள்.
சிக்குனு இருக்கா. பளபளனு முகம் ஒரு சுருக்கம் கிடையாது.
சுதந்திரம் அப்படி இப்படீனு மனசு பொருமிப் பொருமி,
என் நெத்தி சுருங்கியே போச்சு.
சிங்கம்தான் அவளுடைய  பக்கத்து ஃ ப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து அவள் ஓட்டும் அழகை கமெண்ட் செய்து கொண்டிருந்தார். 'வேகம் குறையாம
 ஒரு ஜெர்க் கூட இல்லாம எப்படி ஓட்டறா பார்த்தியா'ன்னு என்னைத் திரும்பி பார்த்துக் கேட்டார்.
ஆங், வண்டி நல்ல வண்டி, ரோடு பள்ளம் மேடு கிடையாது, அப்புறம் என்ன?
நானும்தான் ஓட்டுவேன் என்றேன்.
'பையா அம்மா வண்டி ஓட்டக் கத்துக் கொண்டது ஞாபகம் இருக்கா ராஜான்னு' சிரிச்சார்.
ஆஹா மறக்குமா,என் பிஞ்சு வயசு நிகழ்ச்சிகள் ஆபத்துகள்ள அதுவும் ஒண்ணாச்சே.னு எங்கியோ பார்த்தான்எங்க சின்ன மகன்.
போச்சு இன்னிக்கு சம்பந்திகளுக்கு இன்னோரு விருந்துனு நான் அவனைத் தடுக்கப் பார்த்தேன்:)
பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை நீங்க எல்லாம் பறிச்சுக்கக் கூடாதுன்னாலும் கேக்கலை.
இன்னும் ஒரு சீட்டுப் பின்னாலிருந்த பெண்டாட்டியப் பார்த்து அம்மாவுக்குக் கார் ஒட்டத் தெரியும்பா என்றான்.
நிஜமாவா சொல்லவெ இல்லையே என்றும் அவளும் ஒத்துப் பாடினாள். ''ஆனால் பாதசாரிகளின் நலத்தை உத்தேசித்து திருச்சி போக்குவரத்து இலாகா,
லைசென்ஸ் கொடுக்க மாட்டேனுட்டாங்க''ன்னான்.
ஏம்மா நல்லா எட்டுப் போடலியான்னு மருமகள் கேட்டாள்.
எட்டா!!உங்க அம்மா பதினாறே போட்டு இருப்பா. என்னா ஆச்சுன்னா
நானும் குழந்தைகளும் வண்டியில் இருந்ததால மரத்தோரமா நிறுத்திட்டா:)
க்ளட்ச்சையும் பிரேக்,ஆக்ஸிலேட்டர் எல்லாத்தையும் மாத்தி மாத்தி அழுத்தினா வண்டி ஓடும்னு நினைச்சு,ஆக்சிலேட்டர்,ப்ரேக் ரெண்டையும் இரண்டு பாதத்தில பிடிச்சுண்டு விடவே இல்லை. அப்படியே வண்டி எங்க போறோம்னு தெரியாம திணறிப் போச்சு.
எதிர்த்தாப்பில போலீஸ்காரர் அவர்மாட்டுத் தன் வேலையைப் பார்க்க சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் எங்க வண்டி துள்ளறதைப் பார்த்துட்டு
ஆஹ்ஹ்னு சைடு வாங்கி பள்ளத்தில இறங்கிட்டார்.
அவரைப் பார்த்ததும் அம்மாவுக்கு உதறல் எல்லாத்தையும் விட்டுட்டா. வண்டி
ரோடைவிட்டுக் கீழ வயலில் இறங்கி தத்தி தத்தி ஒரு புளியமரத்திலடில போய் நின்னுது. ஹாய்னு சத்தம் போட்டுட்டுனு நீங்க எல்லாரும் இறங்கியாச்சு.
அவர் நிறுத்தினதும் நான் வண்டியை நிறுத்தின வைபவத்தை எல்லோரும் ரசிச்சுக் கொண்டாடினாங்க.
கூடவே இவர் என்னை அநேகமா போலீஸ் பார்த்து
உன்னை லாக் கப்பில வைப்பாங்க. அதுவும் அப்ப 1974ல ஏதோ ஒரு நெருக்கடி அரசியல்னு நினைக்கிறேன்.
உன்னை அவன் லேசில விடப்போறதில்லன்னு ,வேணும்னா நாங்க செல்வம் லாட்ஜில சாப்பிட்டுட்டு உனக்கும் ஏதாவது கொண்டு வரோம்னு சொன்னது
எல்லாம் நினைவுக்கு வர எனக்கே என் அசட்டுத்தனம் சிரிப்பாக இருந்தது.
எப்படியோ அந்த அழகான ஃபியட் கார் சேதாரம் ஏதும் இல்லாம வெளில வர அந்தக் கான்ஸ்டபிளே உதவி செய்தார்.
அம்மா, அய்யாதான் ஜம்முனு ஓட்டறாரே, நீங்க சொகுசாப் போங்கம்மா. எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்னு ஓதிட்டுப் போனார்.
இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா!!
இப்படியாகத்தானெ திருமதி எலிசபெத் க்ராஃப் உபயத்தில் சம்பந்திகளுக்கு ஒரு கதை கிடைத்தது. நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)