Blog Archive

Thursday, September 03, 2015

எங்க வீட்டு குணுக்கு(பெயர் மூஞ்சில வெடிக்கிறது):)




மைதாமாவு ஒத்துக்கொள்ளாதவர்கள் இந்தப் பதிவைப் படிக்காமல்

ஒதுங்கலாம்:).



ஏன்னா எங்க வீட்டிலியே ஒருத்தர் இருக்கார். ''எனிதிங் ஒயிட் இஸ் டேஞ்சரஸ்"

அப்படீனு யாரோ எழுதினதைப் படித்ததிலிருந்து அவர்

வெள்ளையா இருக்கும் எதையும் சந்தேகக் கண்களோடுதான்

பார்ப்பார்.



சிவப்பு அரிசி, தான் சாப்பாட்டுக்கு.

சர்க்கரை,உப்பு,வெள்ளை அரிசி,மைதா, கோதுமை பக்கமே போக மாட்டார்.



ஆனால் இட்லி,தோசை,பொங்கல் பரவாயில்லை என்று ஒத்துப்பார்.



அதில் மிளகு சீரகம் பொடித்துப் போட்டால் ரொம்பவே பிடிக்கும்.

யாருன்னு சொல்ல மாட்டேன்பா.





ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும்னு சொல்லுவாங்க இல்லையா.
அது போலத்தான்.:)
இப்போ கொடுக்கிற குணுக்கு என்னும் பலகாரம்
சாதாரணமா அடை மாவிலயே அடை ஒரு நாளும் அடுத்த நாள் குணுக்காகவும் அவதாரம் எடுக்கும் பதார்த்தம் இல்லை.

இதுக்குத் தேவையான பொருட்கள்;

மைதாமாவு,
அதில அரைப்பங்கு ரவை,

அதில கால் பங்கு அரிசி மாவு.

மாவுகளைக் கலந்து கொண்டு அதில் பெருங்காயப்பொடி,
பச்சை மிளகாய் ,உப்பு எல்லாம் கலந்து கொள்ளவேண்டும்.

பச்சை மிளகாய் கண்ணில தெரிகிற அளவு நறுக்கி வைத்துக்கொள்ளணும். இல்லாவிட்டால் சாப்பிடறவங்க அதையும் சேர்த்துக் கடிச்சுட்டு குய்யோ முறையோனு அலறுவாங்க.

எல்லாம் அனுபவம் தான்:)

இந்தக் கலவையில் ஒரு கையளவு தயிர்,கொஞ்சம் பால்,கொஞ்சம் சர்க்கரை,
கொஞ்சம் நெய்யெல்லாம் சேர்த்து(நெய் வேண்டாம்னா வெண்ணை போட்டுக்கலாம்.அதுவும் வேணாம்னா சனோலா ரெண்டு ஸ்பூன்)

எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது,.

அதுவும் கல் உப்பும் போட்டுப் பிசைந்து,
இந்த மைதாமாவு குணுக்கு ஆரம்பித்து வைத்தவர் எங்க புகுந்த வீட்டு அத்தை.

அவங்க , எப்பவும் குணுக்கா?ன்னு கேட்ட மகளைத் திருப்தி செய்ய ,
இந்தப் புதுப் பலகாரத்தைச் செய்ய,அவங்க செய்யும் போது ஒரு குணுக்குப் பிரிந்து முகத்தில் வெடிக்க அதற்கு
அன்று மூஞ்சீல வெடிக்கிறதுன்னு ஒரு பெயர் வந்தது.

ஆமாம். இது எண்ணையில் செய்யும் பலகாரம்.
கல் உப்பைப் பொடிக்காமல் கரைக்காமல் போட்டால், அது எண்ணையுடன்...
அதுவும் கொதிக்கும் எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் என்ன செய்யும். ரோஷம் உள்ளதாச்சே உப்பு:)


இந்த மாவில் கொத்தமல்லியும், கருவேப்பிலையும் அளவாப் போட்டால் கமகமா வாசனையோடு ம்ம்ம்ம்
நல்லா இருக்கும்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து,பிறகு மிதமான சூட்டிலியே மாவை உருட்டிப் போட்டு,நல்ல தங்க வண்ணத்தில் வறுத்து எடுக்கலாம்.

ஓஹோ சொல்ல மறந்துட்டேன். அடுப்பை முதலில் பத்த வைக்கணும். அப்புறம் கனமான வாணலியில் எண்ணையை ஊற்றி,

பிறகுதான்,.....
முதலிலிருந்து படிக்கவும்.
இன்னோரு பலகாரம் உண்டு. அதுக்குப் பெயர் பைத்தியக்கார தோசை.

அதை இன்னோரு நாள் பார்க்கலாம்.


24 comments:

ambi said...

//யாருன்னு சொல்ல மாட்டேன்பா.
//

சிங்கம் மேல அவ்ளோ பயமா? :p

புதுசா இருக்கே? தண்ணி வேற சேக்க கூடாதுனு சொல்றீங்க. தயிர், பால் எல்லாம் விடனுமா? எந்த பதத்துல கரைக்கனும்?

போண்டா மாதிரியா? பஜ்ஜி மாதிரியா? :))

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

ரொம்ப வித்தியாசமா இருக்கே. செஞ்சு பார்த்துருவோம் :)))

வல்லிசிம்ஹன் said...

சிங்கமில்லப்பா:)

அவருக்குப் பிடிக்கலைன்னா சாப்பிட மாட்டார்.
இது இன்னோருத்தர். இந்த வீட்டு சொந்தக்காரர்:)
அவரும் அவர் துணைவியும் ரிசர்ச் செய்து கண்டுபிடித்த விஷயங்கள் இவை:)
இதுவும் போண்டா மாதிரி.ஆனால் சின்னது.
போண்டா ரெண்டு வாயாச் சாப்பிடணும். இது ஒரு வாய்க்கு ஒண்ணு.
தண்ணீர் விட்டால் ருசி குறையும்,அதான் சொன்னேன்.சந்தேகப்பட வேண்டாம்.:)
நல்லாவே வரும்,,

ராமலக்ஷ்மி said...

//வெள்ளையா இருக்கும் எதையும் சந்தேகக் கண்களோடுதான் பார்ப்பார்.//

'அப்போ இட்லி?' எனக் கேட்க வந்தேன். அடுத்த வரி அடக்கி விட்டது. அதானே, இட்லி பிடிக்காத தமிழர் எவரேனும் உண்டா?

ஒரு பச்சை மிளகாய் போடுமிடத்தில் 3எடுத்துக் கொண்டு, நீளவாக்கில் கீறி விதைகளை அப்புறப் படுத்தி அப்புறமாய் பொடியாக அரிந்து மாவில் சேருங்கள். நோ குய்யோ நோ முறையோ!

NewBee said...

குணுக்கு..

ஹி..ஹி..ஃபன்னி நேம்...:)))).

எப்பவாவது டீப் ப்ரை செய்யும் போது , இந்த லின்க்கை கிளிக்கிறேன். :)

பி.கு.:ம்ம்ம்ம்...ஒரு வரி தமிழ்ப் பின்னூட்டத்துல, 6 ஆங்கில வார்த்தையா...வண்டு நீ ரொம்ப மண்டு...சீக்கிரமாத் திருந்து. :(

வல்லிசிம்ஹன் said...

வரணும் சதங்கா. செய்து பாருங்க. வித்தியாசமா நல்ல்லா சுவையாக இருக்கும்.

சர்க்கரை உப்பு காரம் எல்லாம் சேர்த்து ஒரு புது வகையா இருக்கும். கொஞ்ச நேரம் ஊற வச்சு செய்தா இன்னும் சுவை.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
பாயிண்ட் பிடிச்சீங்க.

காரம் எனக்குத் தான் வேணும் .


அவங்க யாருக்கும் ப்ளாண்டா இருந்தா சமையல் பிடிக்கும்.
அதனால இந்த கீறிப் போட்ட பச்சமிளகாய் செய்துடறேன் இனிமேல்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நியூ பீ.
குறுக்கிப் போடுவதால் குணுக்கு ஆச்சோ??

செய்ங்க.நம்ம குழிஆப்ப டெஃப்லான் வாணலிலேயும் எண்ணை இல்லாம செய்யலாம். செய்துட்டு சொல்லுங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பையித்தியக்கார தோசையா? அது என்னவா இருக்கும்..:)

வல்லிசிம்ஹன் said...

ஆங்க்க். அஸ்கு புஸ்க். ஒரே பதிவில ரெண்டு ரெசிபி சொல்லுவேனா.
அது எங்க பெரிய மாமியார் நான் இனொவேடிவா செய்த தோசைக்கு வச்ச பேரு.
நிலைச்சுப் போச்சு.:0

அது ஒண்ணுமில்லப்பா கயல்,
வீட்டுக்குத் திடும்னு யாராவது வராங்கன்னு வச்சுப்போம்.
அரைத்த மாவு தீர்ந்து நீர்த்துப் போயிருக்கும். அப்ப கொஞ்சதோசை மாவு இருக்குமில்ல
அதில கடலை மாவு,மைதா,கோதுமை மாவு,ஜவ்வரிசி,சேமியா,கொஞ்சம் ப்ரெட் தூள் எல்லாம் போட்டு ஒரு கலக்கு கலக்கி வார்த்து விட்டால் பைத்தியக்கார தோசை,.:)

துளசி கோபால் said...

பூனா கோமளா மாமிதான் குணுக்கு ஸ்பெஷலிஸ்ட். கொசுவத்திக்கே கொசுவத்தியா? :-)


இனிமே பதிவர் சந்திப்புக்கு இந்த 'போண்டா'தானா? :-)

ஏம்ப்பா...... எல்லாமே சுட்டதா?

அச்சச்சோ.........

படங்களைச் சொல்றேன்!!!

Anonymous said...

எங்க வீட்டுல எண்ணைப்பண்டம் செஞ்சா நான் மட்டும் சாப்பிடணும். எண்ணெயில்லாம தோசை வாணலியில பண்ணமுடியுமா

வல்லிசிம்ஹன் said...

கோமளா மாமிக்கு நம்மால ஈடு கொடுக்க முடியுமா. துளசி:)

நானெல்லாம் அப்பப்ப வேஷம் அதாவது குக் வேஷம் கட்டறவங்க.

இந்தப் பதிவுக்குப் படங்கள்கிடைக்கலைப்பா. கிடச்ச படம் அடை மாவு குணுக்கு.
ஆமாம் ஆமாம் இது சுட்ட குணுக்குதான். மாமியார் கிட்ட இருந்து சுட்டது. கை சுட்டு கிட்டது. வாயும் சுட்டுக்கிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க சின்ன அம்மிணி. செய்யலாமே.

தோசை டெஃப்லான் கோட் செய்த தவ்வால செய்யலாம். கெட்டி மாவுதானே. செய்து பாத்துட்டு சொல்லுங்க.:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

செய்து பார்த்தூட்டேன்.. வெள்ளையப்பம் மாதிரி ஆனா அதமாதிரி அதிகம் எண்ணை குடிக்காம ரொம்ப நல்லா இருந்தது. தொட்டுக்க தக்காளி சட்னியும் தான். (சின்னப்பையன் கட்டா மிட்டா சாஸ் தொட்டு சாப்பிட்டான் அதுவும் நல்லாத்தான் இருந்தது)

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா யூ மேட் மை டே!!!
நன்றி.

நான் சொல்றதைக் கேக்க ஒருத்தர் இருக்காங்களா.

நல்லா வந்ததைப் பத்தி ரொம்ப சந்தோஷம்:)

//(சின்னப்பையன் கட்டா மிட்டா சாஸ் தொட்டு சாப்பிட்டான் அதுவும் நல்லாத்தான் இருந்தது)//

அவனுக்குத் தெரிந்திருக்கு. எதுக்கு எதைத் தொட்டுச் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு!!சமத்துப்பையன்.

Anonymous said...

//ஏன்னா எங்க வீட்டிலியே ஒருத்தர் இருக்கார். ''எனிதிங் ஒயிட் இஸ் டேஞ்சரஸ்"// எங்க வீட்டுலையும் அதே. சிகப்பு அரிசி புட்டுன்னா எனக்கு உசிரு தான், ஆனா இந்த சிகப்பு அரிசிய தினமும் சாதமா சாப்பிடுற கொடுமை இருக்கே தாங்க முடியாது :) ... புழுங்கலரிசி மேல இருந்த காதலே போயிரும்போல! :) புழுங்கலரிசினு நினைச்சு இரண்டு முறை தப்பா இந்த சிகப்பரிசிய அஞ்சு கிலோ வாங்கி - ஐயோ ஐயோ ...வெளியில வச்சா காக்கா என்ன எறும்பு கூட சாப்பிட மாட்டைங்குது! :) ...

இப்ப எண்ணையில பொறிக்கவும் அப்ஜக்ஷன்! :) ...
அதனால குணுக்க கனவுல மட்டும் பாத்துக்கிட்டேன்.

பைத்தியக்கார தோசை கட்டாயம் ட்ரை பண்ணலாம் ... அல்மோஸ்ட் பாதி பைத்தியம் பண்ணியிருக்கேன் ... இன்னும் சேமியா, கடலைமாவு, அப்புறம் ப்ரெட் வேறயா ... ஆஹா ... போட்டு தாக்கிற வேண்டியதுதான் ...

வல்லிசிம்ஹன் said...

ஹாய் மதுரா. பாதிப் பைத்தியமா:)

எதுவுமே முழுசா இருந்தா சோபிக்கும் இல்லையா.

செய்யூஊஊஊஊஊஊஊஉ.
நீங்க எங்க பொண்ணு,பையன்கள் எல்லாம் எண்ணை என்னும் அருமையான (ஸ்லர்ப்) வஸ்து வளருவதைத் தடுக்கிறீர்கள் என்று ஆக்ஷேபிக்கிறேன்:)

எனக்கு இந்தச் சிகப்போ ப்ரௌனோ அந்த அரிசி தொண்டையில் சிக்கிக்குதுப்பா.:)

நம்பள்கி said...

சரி! நம்ம மைதா மாவு உப்புமாவை உங்க மாமியாருக்கு கொடுத்தேளா!

Abi Raja said...

தண்ணீர் சேர்க்கலைனா ரொம்ப கெட்டியா இருக்காதா அம்மா அப்புறம் தயிர் சேர்க்கணும் சொல்லி இருக்கிங்க புளிக்காதா செய்து பார்க்கிறேன் குறிப்புக்கு நன்றி அம்மா

வல்லிசிம்ஹன் said...

நம்பள்கி, என் மருமகளுக்கு உங்க ரெசிபி அனுப்புகிறேன்.

சுவர்க்கத்தில இருக்கிற மாமியார் வேண்டாம்னு சொல்லிட்டார்.>}}}

வல்லிசிம்ஹன் said...

புளிக்காத தயிர் சேர்க்கணும் அம்மா..
தளரப் பிசைந்து கொள்ளனும். நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் அபினயா.

Abi Raja said...

பதிலுக்கு நன்றி அம்மா நீங்க எல்லாம் வேண்டாம் நீ என்றே அழைக்கலாம். செய்து பார்த்து சொல்கிறேன் அம்மா

வல்லிசிம்ஹன் said...

சரி அபி நயா.
செய்து பார்த்து நன்றாக இருக்கிறதுன்னு இந்த அம்மாக்கு எழுதணும். ஒகெயா.