Blog Archive

Thursday, August 20, 2015

சில நினைவுகள்,பழங்கணக்குகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அம்மாவுக்கு  எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். 

எங்கள் துணிகளை அவள் நீவி நீவி  மடித்து வைக்கும் அழகை 
இன்றும் எண்ணிப் பார்க்கிறேன். அவளின்  நல்ல பழக்க வழக்கங்கள்
 பாதிதான் எனக்கு வந்திருக்கின்றன.
 மிக நிதானமாகச் செல்லும் வாழ்க்கையில் வம்பு தும்புக்கு இடம் கொடுத்தது கிடையாது.
நாமும் வம்பு பேசக் கூடாது. மற்றவர்கள் பேசும் விதம் நடக்கக் கூடாது ...இதுதான்
அவருக்கும்  அப்பாவுக்கும் வாழ்க்கைப் பாலிசி.

அப்பாவின் அறுபது வயதில் வீடு வாங்க  திட்டம் போட்டுத் தம்பிகளோடு சேர்ந்து
தி.நகரில்  இரண்டு  வீடுகள்  ஒரு பலமாடிக் கட்டிடத்தில் வாங்கினார்கள். அருகருகில் இருந்தததால் 
இரு வீடுகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து கொள்ள முடிந்தது. தம்பிகள் இருவருக்கும்
வெளியூர்  செல்லும் வேலை.
அதனால் இரண்டு வீட்டு அவசரத்தேவைகள், மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்றவற்றை 
இருவருமாகச் சேர்ந்து கவனித்துக் கொண்டனர்.

பேரனும் பேத்தியும்  தாத்தா பாட்டியிடம் இன்னும் ஒட்டுதலாக இருந்தார்கள்.
பேத்தியைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது  தாத்தாவின் வேலை. அவளுக்குப் பிடித்த பலகாரம் செய்ய வேண்டியது பாட்டியின் வேலை.
அப்பாவும் அம்மாவும்  வேலையிலிருந்து வரும் வரை  அமைதியாகப் பேத்தி 
தாத்தா பாட்டியிடம் இருப்பாள். பேரனும் தனக்குக் கல்வியில்  
என்ன சந்தேகம் இருந்தாலும் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
அடுத்த நாளைக்கு வேணும் என்கிற ஜாமெட்ரி  டப்பாவிலிருந்து,
சார்ட் பேப்பர்  வரை அப்பா கவனித்துக் கொள்வார்.

அப்பாவின் திடீர்  மறைவில்   மிகவும் அழுதது  சின்னத் தம்பிதான்.

பசுமலை,காரைக்குடி,ராமேஸ்வரம்  என்று அப்பாவுடன் தான் கழித்த 
அருமை நாட்களைச் சொல்லிச் சொல்லி அழுதவனுக்கு மயக்கம் வராத குறைதான்.

இருந்தும் அப்பாவின்  காரியங்கள் முடிந்த 13 ஆம் நாள்  மகிழ்ச்சியாக தாய் மாமன்
கடமைகளை,செவ்வனே  செய்தனர்.
எங்கள் பெண்ணின்  திருமணத்துக்கு இருவரும் வந்து முகத்தில் சோகம் காட்டாமல்
மாலை மாற்றலில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

கடவுளுக்கு  கண்கள் கிடையாது என்று அவர்கள் இருவரிடமும் 
நான்  மனம் வருந்தியபோது  இதற்கு மேல் உனக்குச் சோகம் வரக் கூடாது என்றுதான் அப்பா தானே 
கிளம்பிவிட்டார்.
அதை நினைத்து நீ  சந்தோஷமாக இருந்தால் தான் அவர் ஆத்மா  திருப்தி அடையும் என்று
என்னைத் தேற்றிய இருவரையும்
இன்றும் எனக்கு அண்ணன்களாகத்தான் பார்க்கிறேன்.

சின்னவன் இன்று இல்லாவிட்டாலும்  அவன் கொடுத்த ஆதரவுகளை மறக்கவில்லை.
இருவரது குடும்பங்களும் ஆண்டவன் அருளில்  செழிப்புடன் இருக்கவும்  இறைவன்
அருள் புரிவான்.


12 comments:

நம்பள்கி said...

உங்கள் இடுகை புரியவில்லை; ஆனால், ஏதோ இழப்பு என்று புரிகிறது. காலம் மட்டுமே உங்கள் இழப்பை ஆற்றும்!

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு அடுத்த தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையின் வழக்கங்களில் பாதி வழக்கங்கள்தான் கைவருகின்றன. அதனால் என்ன,அடுத்ததலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்க நம்மிடம் வேறு நல்ல பழக்கங்கள் கைவந்து விடும்!

:))))

"வம்பு பேசக் கூடாது, நம்மைப்பற்றியும் வம்பில்லாமல் நடந்துகொள்ளவேண்டும்" - எங்கள் வீட்டிலும் அடிக்கடி சொல்லப் படும் வார்த்தைகள்!

Geetha Sambasivam said...

நாம் செய்வதை நமக்கு அடுத்த தலைமுறை கடைப்பிடிக்குமா சந்தேகம் தான். எல்லாவற்றையும் மேலே இருந்து அவன் பார்த்துக் கொள்வான்.

ராமலக்ஷ்மி said...

உணர்வோடு கலந்து விட்ட நினைவுகள். பகிர்வில் உள்ளன பல பாடங்கள். அருமை.

”தளிர் சுரேஷ்” said...

உறவுகளை பற்றிய நினைவுகள் என்றும் மறப்பதில்லை! பகிர்வுக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

உறவுகளின் நினைவுகள் மறப்பதில்லை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு நம்பள்கி இது பழைய கதை. இழப்பு யாருக்கு இல்லை. மனம் கனமாகும் போது ஏதாவது எழுதுகிறேன். எதிர்காலத்தை நோக்கி
சந்தோஷப்படு என்று சொன்ன கணவரும் மறைந்தார். தங்கள் பரிவுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். வம்பில்லாத வாழ்வே நன்மை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. காதில் போட்டுக் கொள்ள யாருக்கும் நேரமில்லை. சொல்லக் கூட எனக்குத் தள்ளவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,

சொன்ன பேச்சைக் கேக்கணும் என்வபதே எங்கள் தாத்தா சொல்லும் வார்த்தைகள்.

வல்லிசிம்ஹன் said...

தளிர் சுரேஷ் மிக நன்றி. மா

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி பரிவை குமார்.