Blog Archive

Friday, September 12, 2014

வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுத் தந்தவர்கள்

அப்பா  இரண்டாவது ஆசிரியர்
என்றும் கருணையும்  கவனமும்  எல்லாக்  குழந்தைகளுடனும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்தப் பள்ளி போலத்தான் என் பள்ளிக்கூடமும் இருக்கும்.                                            பிறந்ததிலிருந்து  போற்றி வளர்த்த தாய்,  முதல் குரு. அவள் இல்லாமல் என்ன தெரிந்திருக்கும் நமக்கு.  எந்தத் தவறையும்   மன்னிப்பாள். எந்தத் தப்பையும் திருத்துவாள்.. வாதம் செய்யும் துடுக்குப் பெண்ணை   அணைபோட்டு நல்வழிப் படுத்தின அம்மாவுக்குத்தான் முதல்  வணக்கம்.  இதுபோலத்தான் என் ஆசிரியர் தினப்  பதிவை   ஆரம்பித்தேன். நினைவுகள் அலை மோத பிறகு எழுதவில்லை.                                  




பள்ளியில் கொண்டு சேர்த்த அப்பாவின் கைகளின்    ஆதரவை  இன்னும் மறக்கவில்லை. வாழ்வின் முதன் அரண். அவரே  என்னை    கணவரிடம் ஒப்படைக்கும் போது தெரியாமல்  ஏதாவது    தப்பாக நடந்தால் நீங்க பெரிசா எடுத்துக் கொள்ளக் கூடாது  என்று சொல்லி அதற்கு நல்ல  பதிலையும் வாங்கிக்   கொண்டவர். மாப்பிள்ளையும் தன் பிள்ளையாக உயர்ந்த   இடத்தில் வைத்து  கடைசி வரை   மரியாதை காத்தவர். இவரிடம் கற்ற பாடங்கள் எத்தனை. ஒழுக்கம்,நேர்மை,நேரம் தவறாமல் இருத்தல்,பெரியோர் சொல் கேட்பது எல்லாம் தினம் சொல்லும் அறிவுரை.  அப்போது  அந்த இடத்தைவிட்டு ஓடத்தோன்றும். ஆனாலும் மனம் பதிந்து கொண்ட நாட்கள்.+


கொடுத்த இடமும்  பாந்தமாக  அமைந்தது.அதிர்ந்து பேசாமல்  தன் வழிப் படுத்தும் குணம் கொண்டவர்  கணவராக வாய்த்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்.தன் உழைப்பால் உயர்ந்தவர்  என்னையும் அதே  வழியில் ஈடுபட வைத்ததே  ஒரு சாதனை.  சொல்லிப் புரிய வைப்பதைவிடா வேலைகளைச் செய்தே  புரிய வைப்பார்.எந்த வேலையும் தாழ்ந்ததில்லை என்ற கொள்கை என்  மனதில் புகுத்தியவர்.சுத்தம்,அகத்தூய்மை,புறத்தூய்மை என்று  எல்லாவிஷயங்களிலும்  குரு அவர்தான். அவர்    எதிர்பார்த்தபடி நான் இல்லையென்றாலும் வருந்தமாட்டார்,. அந்த வேலையைத் தானே  செய்துவிடுவார்,. அவரது குணத்தை எங்கள் குழந்தைகளிடம் காண்கிறேன்.



We  had a great father maa.   என்றுதான்  இன்றும் அவர்கள் சொல்வார்கள்.  வலைப் பதிவு என்று ஆரம்பித்தபிறகு    அவருடன் செலவிடும் நேரம் குறைந்தது கண்டு இப்போது யோசிக்கிறேன்.  அவர் தன் தோட்டம் செடி என்றிருந்தால் நான் வீடு,கணினி என்று இருந்துவிட்டேனோ என்ற  ஏக்கம் படிகிறது. யாருக்குத் தெரியும் சொல்லாமல் கொள்ளாமல்    சென்றுவிடுவார் என்று. அதிலும் ஒரு பாடம் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார். நேரம் எவ்வளவு குறுகியது.அதில் நேசம் எவ்வளவு முக்கியம் என்று. இப்பொழுது  நான் எவ்வளவோ மாறிவருகிறேன்.புதுப் பாடங்களுக்குப் பிஞ்சுகள் தயாராக இருக்கிறார்கள்.அவர்களும் கற்றுக் கொண்டு எனக்கும் கற்பிக்க  அவர்கள் தயார்.





இணைய நட்புகள் தினம் புதுப்புது தகவல்கள் தந்து  அதிகம் படிக்காத  எனக்கு ஆசான்களாக  மாறுகிறார்கள். ஒவ்வொருவரிடம் அயராத உழைப்பு.எடுத்த வேலையை முடிக்கும் தீவிரம். உடல் நோவோ,மனக் கஷ்டமோ  எதையும் பாராமல் மீண்டு எழும் ஃபினிக்ஸ் பறவைகள் போல என்  தோழிகள் துளசி கோபாலும்,கீதா சாம்பசிவமும்.
**********************************************************
முதிர்ச்சி அடைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர்களும் விரிவான கண்ணோட்டம் கொண்டவர்களுமாக   தேனம்மையும் பவளசங்கரியும் உலா வருகிறார்கள்.இன்னும் கற்கவேண்டியது எத்தனையோ  .இவர்கள் காட்டும் வழியில் போனாலே போதும்.
****************************************************


நட்பு வட்டங்களில் இன்னும் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்,வெங்கட், மின்னல்வரிகள்   கணேஷ்,சத்தியப்ரியன்  ஜி, ரிஷபன்  அவர்கள்,வை.கோபு ஜி,,காவிரியாகப்  பாயும் நடை கொண்ட   ஆர்விஎஸ், தோட்டக்காரர்  ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி  ,திடம் கொண்டு போராடும் சீனு,  திண்டுக்கல் தனபாலன்,,  உழைத்து விவரங்கள் சேர்க்கும்,பதியும்   கோமதி அரசு  என்று     நீண்டு போகிறது என் அன்புக் கூட்டம்.  இன்னும் பெயர்கள்  நிறைய விட்டுப் போயிருக்கின்றன. சட்டென வரும் அயற்சி  கணினியிலிருந்து கை எடுக்க வைக்கிறது.    என் ஆசிரியர்கள்   அனைவருக்கும் வணக்கங்கள்    .அனைவரும்  நலமாக இருக்க இறைவனிடம்  வேண்டுகிறேன்.


24 comments:

இராஜராஜேஸ்வரி said...

.இன்னும் கற்கவேண்டியது எத்தனையோ
என்னும் ஏக்கத்தை ஏற்படுத்தியது தங்கள் பகிர்வுகள்.

ராமலக்ஷ்மி said...

உண்மை. நம்மைச் சுற்றியிருப்பவர்கள்தாம் நமது ஆசான்கள். முன் உதாரணமாக இருந்து நம்மைச் செலுத்துகிறார்கள். அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆன்மிகத்துக்கு ராஜேஸ்வரி என்று எழுதாமல் விட்டேன் பதிவைப் படிக்காமல் படங்களைப் பார்க்கும் போதெ அந்தக் கோவிலுக்குப் போய்விட்ட உணர்வைத் தரும் இதத்துக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, என்றும் ஆதரவு. எதிர்பார்ப்பில்லாத அன்பைக் கொடுக்கும் உங்களுக்கும் நன்றி. என் படக்கலை ஆசிரியர் அல்லவா நீங்கள்.

Geetha Sambasivam said...

//அவர் தன் தோட்டம் செடி என்றிருந்தால் நான் வீடு,கணினி என்று இருந்துவிட்டேனோ என்ற ஏக்கம் படிகிறது. யாருக்குத் தெரியும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுவார் என்று. அதிலும் ஒரு பாடம் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார்//

வருத்தமாய் இருந்தாலும் உங்கள் அந்நியோந்நியத்தினால் அவர் புரிந்து கொண்டிருப்பார். நடப்பவை நல்லதாகவே நடக்கும்.

Geetha Sambasivam said...

நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொள்ள இருக்கிறது. இந்த வாழ்நாள் போதாது என நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

//கணவரிடம் ஒப்படைக்கும் போது தெரியாமல் ஏதாவது தப்பாக நடந்தால் நீங்க பெரிசா எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி அதற்கு நல்ல பதிலையும் வாங்கிக் கொண்டவர். //

"அதற்கு நல்ல பதிலையும்" - என்ன என்று சொல்லவில்லையே.... :)))))

//நேரம் எவ்வளவு குறுகியது.அதில் நேசம் எவ்வளவு முக்கியம் என்று.//

உண்மை. உண்மை. உண்மை.

நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளேயே அடுத்தவரிடத்தில் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

என்னன்பு கீதா, உலகமே நமக்கு ஆசிரியர்தான். வாழ்க்கை மற்றொரு ஆசிரியர். நம்முடன் பயணம் செய்யும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் அறிவுதான,அன்புதானம் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். வாங்கிக் கொள்வதில்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும். உலகமும் வாழ்வும் நிரந்தரம் என்று நினைக்கும்போதுதான் அலட்சியம் வருகிறது. இறைவன் எத்தனையோ வழிகளில் சூசகமாகச் சொல்கிறான்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். எங்க சிங்கம் என்ன சொல்லி இருக்கும். நான் நன்னா பாத்துக்கிறேன் மாமா. நீங்க கவலைப் படாதீங்கோன்னுதான்.ஏனெனில் இது எக்மோர் ப்ளாட்ஃபார்மில்.நான் வண்டியில் இருக்க அவரும் அப்பாவும் வெளியே பேசிக்கொண்டிருந்தனர். அப்புறம் வந்து என்னிடம் வெகுநாட்கள் கழித்துச் சொன்னார். எங்க அம்மா கூட உன்னிடம் சொல்லி இருக்கணும் என் பிள்ளைக்கு ஒண்ணும் தெரியாது.நீதான் நன்றாகச் சமைத்துப் போட்டு,பணத்தை அவனிடம் கொடுக்காமல் கவனமாகச் செலவு செய்யணும் என்று ,இதைச் சொல்லிவிட்டு சிரிப்பார்.

RajalakshmiParamasivam said...

உங்கள் நினைவலைகள் உங்கள் ஆசிரியர்களை பற்றிய செய்திகள் மிகவும் அருமை. வாழும் வரை கற்றுக் கொண்டு தான் இருப்போம் என்பது உண்மையே!

கரந்தை ஜெயக்குமார் said...

கற்பதற்கு எல்லை ஏது
நினைவலைகள் என்றுமே இனிமையானவைதான்

Thenammai Lakshmanan said...

//நேரம் எவ்வளவு குறுகியது.அதில் நேசம் எவ்வளவு முக்கியம் என்று.// உண்மை ம்மா


ஆ என் பெயருமா.. தன்யளானேன் மா.. நீங்கதான் எங்க தன்னம்பிக்கை ஆசிரியர். நிறைய நானும் தெரிந்து கொண்டு வருகிறேன்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

வெங்கட் நாகராஜ் said...

உலகமே நமக்கு ஆசான்....

உண்மை தான் வல்லிம்மா. பார்க்கும் ஒவ்வொரு உயிரினத்திடமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

நல்ல பதிவும்மா....

கோமதி அரசு said...

அக்கா நெகிழ்ந்து போனேன் உங்கள் அன்பை கண்டு. உங்கள் பதிவு மிக அருமை.அருமையான படங்கள்.
நாள் தோறும் நாம் பாடம் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
நீங்கள் சொல்வது போல் நானும் சில நேரங்களில் நினைப்பேன் சிறு பிள்ளைகள் போல் வாழ்க்கையில் சில நேரங்களில் சிறு சிறு கருத்துவேறுபாடு கொண்டு ஒருவருக்கு ஒருவர் கோபித்துக் கொண்டு இருக்கும் போது இப்படி இருக்க கூடாது என்று.
இன்று உங்களிடமிருந்தும் நான் கற்றுக் கொண்டேன் பாடம்.
நன்றி அக்கா. அன்பு செய்வோம் எல்லோரிடமும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி.வரணும்பா. நாம் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். புராணக்கதைகளில் நாரதர் புழுவினடம் கதை கேட்டதாக நிகழ்ச்சி வரும்.சரியான நேரத்தில் கிடைக்கும் பாடம் நம்மைக் காக்கும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜெயகுமார் மிக நன்றி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேன், நீங்கள் எல்லோரும் இளைய தலைமுறையின் முன்னோடிகள்.பன்முகப் பக்கமாக அறிமுகம் ஆகிறீர்கள் எனக்கு.அதிசயமாக இருக்கிறது. மாணவியாகவே இருப்பதில் எத்தனை நன்மை என்று தெரிகிறது பார்த்தீர்களா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், எத்தனை அனுபவங்கள் நமக்கு எளிமையையும் பக்தியையும்,வியப்பையும் கொடுக்கக் காத்திருக்கின்றன இல்லையா மா.மகா உயர்வு தரும் எழுத்துகளைப் படிக்கிறேன்.நல்ல சிந்தனைதரும் எழுத்துகள் கிடைக்கின்றன உங்கள் பதிவுகளில் மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, வரலாற்றுப் பதிவுகளாக உங்கள் எழுத்து எனக்குக் கிடைக்கிறது அதில் வீசும்பக்தி மணம்,அடக்கம் ,நல்ல குடும்பத்தலைவியின் பாங்கு எல்லாமே பிடிக்கிறது. பாராட்டித்தான் ஆகவேண்டும்.ஆசிரியைப் பதத்தைப் போற்றிக்காக்கும் உங்களுக்கும் சாருக்கும் நமஸ்காரங்கள்.

துளசி கோபால் said...

அருமை!!!!

Unknown said...

மனம் நெகிழ்ந்து போனது .

Geetha said...

நல்ல பதிவு .மனதை நிறைக்கின்றது வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா. வலைச்சரத்தில் சரியான லின்க் கிடைக்கவில்லை. ம்ஜுயற்சிக்கிறேன்.