Blog Archive

Thursday, June 12, 2014

சிங்கம் பார்ட் 8 1968 சேலம்


பல  நிகழ்ச்சிகள்  உள்ளத்தில் குறுக்கிடுகின்றன. அதில் முக்கியமானது  சேலம் கிச்சிலிப் பாளையத்தில் இருந்த வொர்க்ஷாப்பை  ஐந்து ரோடு எனும் இடத்திற்கும் மாற்றும் மகா பெரிய வேலை.
நாள் பகல் இரவு என்றில்லாமல்  வேலைகள். பெரிய பெரிய இயந்திரங்களை எல்லாம் அங்கே   அமைக்கவேண்டும். ஸ்திரமான இடம் பார்த்து  பாதுகாப்பு பார்த்து நிறுவ வேண்டும். ப்ளூ    ப்ரிண்ட்கள் துணையோடு அந்தப் பணிமனை    உருவானது. சேலத்தில்  பாசஞ்சர்  கார்களும் வரும். லாரிகளும்  ரிப்பேருக்கு வந்த வண்ணம் இருக்கும்.  அவைகளையும் விடக் கூடாது. இங்கேயும் வேலை நடக்கவேண்டும். அத்தனை பணியாளர்களும் சேர்ந்து உழைத்தாலும்  தீராத  பிரம்மாண்டமான     கவனிப்புத் தேவைப் பட்டது.




அளவில்லாத காஃபியும் டீயும்   தான் உணவு.  ஒரு வாரக் கடின உழைப்பில் உடல்  நலிந்துவிட்டது. வைத்தியரிடம் போய் விட்டு வந்திருக்கிறார். அவர் இவருடைய    தளர்ந்த நிலைமை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.   திஸ் இஸ்  டூ மச். வாட் டு யூ தின்க் யு ஆர்.  சூப்பர் மேன் என்று திட்டி  இதயப் பரிசோதனை செய்து.ஒன்றும்   கவலை இல்லை.  இப்பொதைக்கு  பூஸ்டர் இஞ்செக்ஷன் கொடுக்கிறேன்.   எப்போது உன கம்பெனி திறப்பு விழா என்று கேட்டு இருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து என்று சொன்னதும். ஊசியைப் போட்டு விட்டு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடு. பிறகு கம்பெனிக்குப் போகலாம் என்று நண்பர் ஒருவரோடு அனுப்பி விட்டார். இவர் வீட்டுக்கு வந்த நிலமை வழக்கத்தை விடப் பயங்கரமாக இருந்தது. நண்பர் கண் காட்டினார். அவனைச் சாப்பிட வைம்மா. அவன் தூங்கட்டும் என்றதும் மரமண்டைக்குப் புரியவில்லை. காலையில் யாராவது தூங்குவார்களா  என்று யோசித்தபடி அவருக்குத் தட்டில் இட்லி சாம்பார் சட்னி என்று எடுத்துவைத்தேன். இங்க கொண்டு வரயாமா. ரொம்பத் தூக்கம் வருகிறது என்ற குரல்  படுக்கை அறையிலிருந்து கேட்டது.                     குளிக்காமலா  தூங்குகிறார என்று அதிசயப் பட்டுக் கொண்டு போனால் அரைத்தூக்கத்தில் இருந்தார். அவசர அவசரமாக ஊட்டாத குறையாக் அவரைச் சாப்பிட வைத்தேன்.   ஈரத்தூண்டில்   முகத்தைத் துடைத்துக் கட்டிலில் சாய்ந்தவர்தான். ஆடவில்லை அசைய வில்லை.


அ டுத்த நாள் காலை பதினோரு மணியாகியும் எழுதிருக்கவில்லை. அப்போதுதான்  அவர் மார்பில் இதயத்தின் பக்கத்தில் ஒரு   பெல்டோனா ப்ளாஸ்டர் ஒட்டி இருப்பதைக் கவனித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. உடனே அடுத்தவீட்டு வேலாயுதம் தம்பதிகளை அழைத்தேன்.  அவருக்கு வைத்திய வகைகள் தெரியும். நல்ல நண்பர்கள். அவர் பார்த்துவிட்டு.  உறங்கட்டே.  தூக்க மருந்து கொடுத்திருக்கு டாக்டர். என்றார்.
எல்லோருக்கும் தெரிகிறது எனக்குத் தெரியவில்லையே  என்று வருத்தமாக இருந்தது.

பாதி விஷயம் நான் பயப்படுவேனே என்றே சொல்ல மாட்டார்.  சாயந்திரம் ஆனதும்   பொறுக்க முடியாமல் காஃபி மணம்நாசியில் படும்படி கட்டில் பக்கம் வைத்து நானும் பாபுவும் அவரை அழைத்தோம். அடுத்த நிமிடம் விழித்து விட்டார்.  நான் ஏன் இங்க இருக்கேன். வொர்க்ஷாப்ல என்ன ஆச்சு.  ஐ ஷுட் கோ என்று அனத்த ஆரம்பித்ததும்  நான் நடந்ததைச் சொல்லி இன்று மட்டும்  ஓய்வாக இருங்கள். கம்பெனி முதலாளி வருவதால் வெள்ளிக்கிழமைதான் திறப்புவிழா.இன்று செவ்வாய். அதனால் நஷ்டம்  யாருக்கும் இல்லை. என்றதும் மீண்டும் அலுப்போடு படுத்துக் கொண்டார். சரியாக இரண்டு மணி நேரம். ஐய்யா  குளிக்கப் போயாச்சு. வெள்ளை வேளேர் பாண்ட். வெள்ளை முழுக்கை சட்டை.  ரேவ்,,,,,,, வொர்க்ஷாப் போறேம்மா.  என்னால் இன்னும் தூங்க முடியாது. ஐ யாம் கம்ப்ளீட்லி ஃபைன். அடுத்த நிமிடம் ஜீப் உறுமியது.  அடுத்த நாள் மாலை  படங்களோடு வந்தார். கம்பெனி முதலாளி வரவேற்புக்கு  ஏற்பாடுகள் பிரமாதமாக இருந்தான. காகித வண்ணப்பூக்கள் அலங்காரம். புதிதாக் ஒரு சுழலும் மேடையில் அப்போது ரிலீசாகி இருந்த ஃபியட் வண்டி  ஒன்று சுழல்வது போலவும் அமைத்திருந்தார். மேலே இருந்த வண்ண ரிப்பன்கள் தொங்க அமர்க்களமாக இருந்தது.வெள்ளிக்கிழமையும் வந்தது.  கம்பெனி சேர்மனும் வந்தார்.
சுற்றிப் பார்த்துவிட்டு  மிக மகிழ்ந்து போனார்.  இதுக்குத் தாண்டா உன்னிடம் கொடுக்கணும் வேலையை  என்றவர்  சும்மா இல்லை.  வொர்க்ஸ் மானேஜர்  பதவியையும்    கொடுத்துவிட்டார். அப்போது 28  வயதுதான் சிங்கத்துக்கு. எனக்கோ   இரண்டாவது குழந்தை வயிற்றில்   எட்டு மாதம்.  




she is bringing  me accolades  "என்று பெருமைப் பட்டுக் கொண்டார் . அவர் தீர்மானப் படியே பெண்தான் பிறந்தது.      யாருடைய     பிரகாசத்துக்கும் யாரும் காரணமில்லை. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தியது என்று நானும் சொன்னேன்.                                                                                                        




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

16 comments:

ஸ்ரீராம். said...

கடும் உழைப்பாளி என்று தெரிகிறது. பிரமிப்பாய் இருக்கிறது.

இன்னம்பூரான் said...


சிங்கம் தரப்பில் ஒரு வழக்காடல்:

கடினமான உழைப்பில் தான் மன நிறைவு இருக்கிறது.

-பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

Geetha Sambasivam said...

ஹைய்யோ, நினைக்கவே ஆச்சரியமா இருந்தாலும் அந்தச் சமயம் உங்கள் மனம் எவ்வளவு தவித்திருக்கும் என்பதும் புரிகிறது.

Geetha Sambasivam said...

நல்ல மனிதர். :(

கரந்தை ஜெயக்குமார் said...

///யாருடைய பிரகாசத்துக்கும் யாரும் காரணமில்லை. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தியது///
உண்மை

அப்பாதுரை said...

கடும் உழைப்பு ஒரு போதை மாதிரி.

கடைசியில் உங்களை ஒரு தட்டு ஏத்தி வச்சது அவர் டச்.

ராமலக்ஷ்மி said...

கடைசிப் பத்தியில் சொல்லியிருக்கும் இரண்டுமே உண்மை.



வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். அயராமல் உழைப்பார்.சோம்பல் என்பதே கிடையாது. இந்த ஜலதோஷம் வந்து நுரையீரலில் சளிகட்டி அவஸ்தைப் பட்டாலும் கடைசிநாட்களில் கடைசி நிமிஷம் வரை வேலை செய்த வண்ணம்தான் இருந்தார். சும்மா இருக்கக் கூடாது என்பதில் பிடிவாதம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இ சார் வருகைக்கு நன்றி.வீடு ஒன்றே அவ்ருக்குப் பிடித்த இடம். அதில் எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பார். வேலை அவருக்குத் தெய்வம். அவர் தன்னுடைய டூல்ஸ் எல்லாவற்றையும் பேணிப் பாதுகாப்பதைக் கவனித்தால் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. நடுங்கித்தான் போனேன்.எனக்கு அமைந்த நண்பர்களும் நல்லவர்கள். மலையாளிகளோ தெலுங்கரோ எந்தச் சமயத்திலும் உதவிக்கு வந்துவிடுவார்கள். இல்லாவிட்டால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது. நன்றிமா. கைகளை நம்பிவாழ்ந்தார்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கரந்தை ஜெயக் குமார்.தங்கள் கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.நலமா. நம்ப முடியாமல் இருக்கும். அவரது தோற்றத்துக்கும் நம்பிக்கைகளுக்கும்.செவ்வாய்க் கிழமை முடிவெட்டிக் கொள்ளமாட்டார்.பேசுவதைப் பார்த்தால் எதிலும் நம்பிக்கை இல்லாதது போலத் தோன்றும்.ஆனால் என்னைவிட இயற்கையையும் கடவுளையும் நம்பினவர் அவர்தான். அவரது முன்னேற்றத்துக்கு அவர் மட்டுமே காரணம்.நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

இதை விட சிறப்பு இருக்க முடியுமா அம்மா...?

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன். எத்தனையோ உடல் சிரமங்களைப் பொருட்படுத்தவே மாட்டார்.மிக நன்றி அப்பா வருகைக்கு.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை கடின உழைப்பு....

அவரைப் போன்றவர்களுக்கு வேலை வந்து விட்டால், உணவு, உடல்நிலை போன்றவை கூட இரண்டாம் பட்சம் தான்.....

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட். எனக்கு அவரை பிடித்த அள்வு அவரது உழைப்பு அவ்வளௌ ரசிக்காததற்குக் காரணம் நாங்க சேர்ந்து மகிழ்ந்த நேரங்கள் குறைந்ததுதான் காரணம். ஒரு சினிமா உண்ட்டான்னு சண்டை வரும்:))