Blog Archive

Wednesday, February 27, 2013

''ராதா கல்யாணம்'' எழுதியவர் ''கீதா;''

என்னது கீதான்னு அப்பவே எழுத்தாளினி இருந்தாங்களா:)  !!!!!!!!!!



 ராதா  என்கிற அன்புமனம் கொண்ட பெண்ணின் பாசப் பிணைப்பு எப்படி அவளுடைய அத்தையையும் மகிழ்ச்சி வட்டத்தில் ஆழ்த்துகிறது என்பதே
என்பதே கதை.

கீதா  எனும் எழுத்தாளர்  எழுதிய சிறுகதை.
லதா  என்ற பெயரோடு ஒரு ஓவியர்  அப்போதெல்லாம் சாண்டில்யன் கதைகளுக்கு ஓவியம் வரைவர்,. நிறைய நாட்கள்  கழித்துதான் தெரியும் அவர் ல.தாமோதரன் என்று:)

அது போல இது எழுத்தாளரும் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.
கதை நன்றாக இருந்தது.
அண்ணனின்  பாசத்தை எதிர்பார்த்து அவன் பெண்ணின் திருமணத்துக்குச் செல்லும் தங்கை.

ஒரு ஆறு மாதங்களுக்கு முன் தான் தன் பதினைந்து வயது மகனை இழந்தவள்.
அப்போதெல்லாம் டைபாய்ட்  வியாதிக்குப் பிழைப்பவர்கள்  கொஞ்சமே.
கணவனின் சேமிப்பான 500ரூபாயும் கரைய மகனையும் இழக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அருமையாக இருந்த அண்ணன்,மத்திய சர்க்கார்  வேலை கிடைத்து டெல்லிக்குச் சென்றதும்  சிறிது மாறுகிறான்.
அவன் மனைவி நீலா  முழுவதும் மாறிவிடுகிறாள்.
  நாத்தனாரின் மகன் மறைவுக்குக் கூட அவளால் வர மனம் ஒப்பவில்லை.
ஜெயத் துக்கும்   இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும்.
அங்கே அண்ணனுக்கும்
17 வயதில் ராதை என்கிற பெண்ணும் இரண்டு ஆண் குழந்தைகளும் .

கனு கார்த்திகைக்கு இரண்டு ரூபாய் அனுப்புவதோடு(????????????????????)
அவன் தன் பாசத்துக்கு அணை போட்டு விடுகிறான்.
மனைவியைப் பகைத்துக் கொள்ள மனமில்லை.

இந்த நிலையில் ஜெயத்துக்குக் கடிதம் வருகிறது.
''ராதைக்குத் திருமணம் செய்யப் போவதாகவும்.சென்னையில் உள்ள
தன் பங்களாவுக்குக் குழந்தைகள் கணவரோடு வந்து   திருமணத்தில் கலந்துகொண்டு

கௌரவிக்கவேண்டும் என்று   தேதியும் குறிப்பிட்டு
அண்ணன்    எழுதி இருக்கிறான்.

ராதையின் மேல் ஜெயத்துக்கு எப்பவுமே ஒரு பிணைப்பு. இறந்த தன் அம்மா போலவே இருக்கிறாள். அமைதியான குணம்   என்று எப்பொழுதும் மெச்சிக் கொள்வாள்.
அவள் மனம் குழப்பத்தில் தவிக்கிறது.
குழந்தை இப்போதுதான்  தவறியிருக்கிறான் தான் திருமணவைபவங்களில் கலந்து கொள்ளவேண்டுமா   என்று.
இரவு வேலை முடிந்து வரும் கணவனிடமும் முறையிடுகிறாள்.

அவனும் திருமணத்துக்குப் போவதுதான் பண்பு என்று முறையை எடுத்துச் சொல்கிறான். நம் துன்பம் நம்மோடு. அந்தக் குழந்தையை நாம் வாழ்த்தாமல் யார் வாழ்த்துவது என்று அடுத்த நாள் பணத்துக்கு ஏற்பாடு செய்யவும் ஒரு வழி சொல்கிறான்.

ஜெயம் போட்டுக் கொண்டிருக்கும் ஆறு பவுன் சங்கிலியை பாங்கில்  அடைமானம் வைத்து 300  ரூபாய் கொண்டு   வருகிறான்,
இரயில் செலவு,ராதைக்குத் திருமணப் பரிசாக  தங்கமுலாம் பூசின மோதிரம்
குழந்தைகளுக்குப் புது துணிமணிகள் ,ஜெயம் கழுத்துக்கு ஒரு கவரிங்  செயின் என்று
வாங்கி வருகிறான்.
ஜெயம் முதலில் கிளம்பிக் கல்யாணத்துக்கு முன்னால் செய்ய வேண்டிய
சமாராதனை  மற்ற  நல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள சென்னை வருகிறாள்  குழந்தைகளுடன்.

அவள் குடும்பத்துக்கு ஒரே பெண்.
அதனால் அண்ணன் அவளை முன்பாகவே வரச் சொல்லி எழுதி இருந்தான்.

ரயிலடிக்கு வரும் அண்ணனின் மகன் சேகர் அத்தையைப் பாசத்தோடு அழைத்துச் செல்கிறான்.

அங்கே பங்களா கொள்ளாமல் மன்னி நீலாவின் தங்கைகளும் அம்மா,சித்தி என்று  நிறைந்திருக்கிறார்கள்.
வந்திறங்கும் ஜெயத்தை வந்தியா என்று வரவேற்று  உள்ளே  சென்றுவிடுகிறாள் நீலா.

கல்யாணப் பெண் ராதா ஓடிவந்து அத்தையைக் கட்டிக் கொள்கிறாள்.
இருவர் கண்ணிலும் தவறிவிட்ட மோகனின் நினைவு  கண்ணீரை  வரவழைக்கிறது.
கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கும் ராதாவின் அம்மம்மா(!)
'நன்னாயிருக்கடி ரெண்டு பேரும் செய்யறது. கல்யாணப் பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோடு இரு என்ன்று ராதாவை அழைத்துச் சென்று விடுகிறால்.
வரும் இரண்டு நாட்களிலும் ஜெயம் புறக்கணிக்கப் படுகிறாள்.
ஒரு சாதாரணப் புடவை கல்யாணத்துக்கு வாங்கித்தருகிறாள்
நீலா.
அவளுக்கும் அவள் உறவினர்களுக்கும் நல்ல பட்டுப் புடவைகள்   வந்து சேருவதை ஜெயம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். திருமணத்துக்கு முதல் நாள் ஜெயத்தின் கண்வனும் வந்து சேர அவனுக்கும் வேட்டி அங்கவஸ்திரம் வைத்துக் கொடுக்கப் படுகிறது.
திருமணம் மிக ஆடம்பரமாக நடக்கிறது.
கச்சேரி,கதாகாலாட்சேபம் என்று  மூன்று நாட்கள் போனதே
தெரியவில்லை.
திருமணம் முடிந்த கையோடு கணவனையும் குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு திருச்சி திரும்பிவிடுகிறாள்.
வந்தவளுக்குத் தனக்கு நேர்ந்த அவமானங்களை நினைத்துத் துக்கம் பொங்கி வருகிறது.
பிறகு மனதைத் தேற்றிக்   கொள்கிறாள்.
பணம் ஒன்றுதானே நம்மிடம் இல்லை. மற்றபடி நல்ல கணவன்,மணிமணியாகக் குழந்தைகள் .
என்று திருப்திப் பட்டுக் கொள்கிறாள்.
இரண்டு நாளில்  ஒரு மதிய வேளையில் அத்தை.... என்று குரல் கேட்கிறது.
வாசலில் கார் நிற்கும் சத்தம் ,கதவுகள் சாத்தப் படும் சப்தம் கேட்டதும் விரைகிறாள்  கதவைத் திறக்க.
அங்கெ புதுமணம் மாறாமல் நிற்கிறார்கள் ராதையு ம்  அவள் கணவன் மாதவனும்.

ஆச்சரியம் விலகாத நிலையில் ஜெயம் நிற்க வண்டியிலிருந்து வண்டி ஓட்டுபவர் பலவித பிஸ்கட் டப்பாக்கள்,பழங்கள்  துணிமணிப் பெட்டிகள் என்று கொண்டு வைக்கிறான்.
அதில் ஒரு புடவைப் பெட்டியை எடுத்து அத்தை கையில் கொடுத்து இருவரும் வணங்குகிறார்கள்.

என்னம்மா ராதா இதெல்லாம் என்று ஜெயம் கேட்க,
ராதை சொல்கிறாள்.
'அத்தை  எங்க  மாமியார் ரொம்ப நல்லவர்.
நீங்கள் கல்யாணத்தில் நடத்தப் பட்ட விதத்தை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
நானும் கல்யாணம் முடிந்த  கையோடு அவர்களுடன் மதுரைக்குச் சென்றுவிட்டேன்.
அங்கேதான் என்னை அருகில் வைத்துக் கொண்டு உறவுகளின் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.
உங்க அம்மா மாதிரி நீ இருக்காதே.
அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் நாமும் தரவேண்டும் .பெற வேண்டும்.

நீ உடனே மாதவனை அழைத்துப் போய் உன் அத்தையைப் பார்த்துவிட்டு வா.
நம்வீட்டிற்கும்   வரச் சொல்லி அழைப்பு கொடுத்துவிட்டு,கோவில்களெல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார்   அத்தை'' என்று மூச்சுவிடாமல்  சொல்லி முடிக்கிறாள்.

ஜெயத்தின் வருத்தமெல்லாம் மறைந்துவிடுகிறது. ஒரு பாசம் விலகினால் என்ன.இந்தக் குழந்தையின் அன்பினால்  என் மனத்தை    நிரம்பச் செய்துவிட்டானே இறைவன் என்று  கடவுளை நினைக்கிறாள். .


கதை   எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும்..

எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கெல்லாம் எப்படியோ.:)
,






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

28 comments:

கோமதி அரசு said...

அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் நாமும் தரவேண்டும் .பெற வேண்டும்//
உண்மை. அன்பு கொடுக்க கொடுக்க தான் வளரும், கிடைக்கும்.

மிகவும் நல்ல கதை. உறவுகளின் அன்பை சொல்லும் கதை, மனதை தொட்டது.

கதை பகிர்வுக்கு நன்றி அக்கா.

Geetha Sambasivam said...

ரொம்பப் பிடிச்சது கதை. பிறந்த வீட்டில் இல்லாட்டியும் மற்ற இடங்களில் இம்மாதிரியான புறக்கணிப்பும், அவமானமும் நிறையப் பட்டாச்சு! :)))) உண்மையில் பணம்தான் மனிதர்களின் தராதரத்தை நிர்ணயிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டே தான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறோம். :))))))

Geetha Sambasivam said...

இந்தக் கதைக்குப் படங்கள் "ஸாரதி" என்னும் ஓவியர்னு நினைக்கிறேன். பார்த்தால் அவர் வரைஞ்சாப்போல் தான் இருக்கு. :)))))

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கதை வல்லிம்மா..

ADHI VENKAT said...

எனக்கும் பிடிச்சிருக்கு.... எல்லா இடத்திலயும் இப்படித் தான், பணத்தை வைத்து தான் தராதரம்...

அப்பாதுரை said...

நல்ல கதை.
எந்த வருஷ புத்தகம்? விகடனா கல்கியா?
(ஹிஹி.. நானும் அதையே நினைச்சேன் :)

வெங்கட் நாகராஜ் said...

ரொம்ப பிடிச்சு இருந்தது வல்லிம்மா....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. கல்யாணங்களில் பெரும்பாலும் மனஸ்தாபங்கள் வருவது உபசரிப்புக் குறையும் போதுதான். எல்லோர் வாழ்க்கையிலும் இது நடக்க வாய்ப்பிருந்திருக்கிறது.
எப்போது பணத்தை விட்டுவிட்டு அன்பிற்கு மதிப்பு கூடுகிறதோ அப்போதுதான் நம் வாழ்வும் வளம் பெறும்.உங்கள் வார்த்தைப் படியே அன்பு வளரட்டும்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.பெரிய இடத்துக் கல்யாணங்களைவிட நம் மனதொத்தவர்களின் வீட்டுக் கல்யாணங்கள் பிடித்தமானவை. எனக்கு மிக நெருங்கிய திருமணத்தில்
பிரதி உபசாரம் என்று கிடைத்தது வெற்றிலைத் தாம்பூலமும் பட்சணப் பொட்டலுமும் தான்:)
அடையாளம் கண்டு கொள்ளலாம் உண்மையான அன்பர்களை:)

வல்லிசிம்ஹன் said...

ஸாரதியேதான்பா. அந்தப் பட ஓரத்தில் இருக்குப் பாருங்களேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா சாரல்.நடக்கிறதுதானேம்மா.

வல்லிசிம்ஹன் said...

பணம்தான் வாழ்க்கை என்று நிறைய பார்த்தாச்சு.ஆதி.
அன்புத்திருமணங்கள் செழிக்க நாம் வேண்டிக் கொள்ளலாம்.

வல்லிசிம்ஹன் said...

துரை, இது 54 ஆம் வருட விகடன்.

அப்போ நம்ம கீதாவுக்கு இரண்டு வயசுதான் இருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

நல்லா எழுதி இருக்காங்க. நேரில பாக்கிற மாதிரி இருந்தது வெங்கட்.

மகேந்திரன் said...

சில பல வறட்டு பேச்சுகளாலும்
உணர்வுகளாலும் உறவுகளின் உன்னதத்தை
தொலைத்து நிற்பதை விட
அனுசரித்து போனால் உறவுகள் என்றும் நிலைத்து
நிற்கும்...
உன்னதமான உறவுகளுக்கு இடையில்
ஒருபோதும் மனப்பிறழ்ச்சி கூடாது என
அருமையாக உரைக்கும் கதை...
ரொம்ப பிடிச்சது அம்மா....
பகிர்வுக்கு நன்றிகள்...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே மகேந்திரன். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைதான்.
இருந்தாலும் சுயகௌரவம் சிலசமயம் நம்மை வருத்தப் படவைத்துவிடுகிறது.
அழகாகக் கதையை முடித்திருக்கிறார் திருமதி கீதா அவர்கள்.

RAMA RAVI (RAMVI) said...

அற்புதமாக எழுதியிருக்கிரார் கதையை.கடைசியில் மிக அழகான திருப்பம்.

நீலாவைப்போலும்,ராதாவின் மாமியாரைப்போலும் மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ரமா. உலகம் மாறவில்லை. அதே மனுஷர்கள்தானே.

அதைப் பார்த்து நாமும் அந்த மாதிரி தவறு செய்யாமல் அரவணைத்துப் போனால் நமக்கு நல்லது.

Ranjani Narayanan said...

ராதாவின் மாமியார் என்கிற பாத்திரம் மூலம் உறவுகள் காக்கப்பட வேண்டிய அவசியத்தை கதாசிரியர் வெகு நேர்த்தியாகச் சொல்லிவிட்டார். மாமியார் பாத்திரத்தையும் இதன் மூலம் துலங்கச் செய்துவிட்டார்.

ஒரு மிக நல்ல கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லி!

ஸ்ரீராம். said...

ராதாவின் மாமியார் மறைவில் இருக்கும் பாசிட்டிவ் நபர். ராதாவின் தாய் இருக்கும் உறவு வட்டத்தில்தான் அவரும் இருக்கிறார். இவர்களைப் புறக்கணிப்போம். அவர்களைப் பார்ப்போம்.

அப்புறம், கீதா என்ற பெயர் இருந்தாலே நன்றாக எழுதுவார்கள் போல!

அருமையான கதைக் கரு. சுருக்கி, நன்றாகப் புரியும் வண்ணம் அழகாகத் தந்தீர்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள் ரஞ்சனி. மாமியார் பதம் சில இடங்களில் நல்ல பெயர் பெறுவதில்லை. ராதாவின் மாமியார் அந்தக் குறையைப் போக்கிவிட்டார்.
நல்ல கணிப்பு. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அன்னம் போலத்தான் உறவுகளையும் கையாளவேண்டும்.
நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அல்லவற்றைத் தள்ளவேண்டியதுதான்.

meenakshi said...

// கதை எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும்..//

எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்களோ ?

//கனு கார்த்திகைக்கு இரண்டு ரூபாய் அனுப்புவதோடு(????????????????????)
அவன் தன் பாசத்துக்கு அணை போட்டு விடுகிறான்.//

1968 ல் ரூ 2 1975 ல் ரூ 5 ஆகி 1990 ரூ 25 ஆகியது .
விலைவாசிக்குத் தகுந்தாற்போலே என்று நினைக்கிறேன்.

அம்மா போனப்பறம் அதுவும் காணோம்.
அவாவா வீட்டிலே ஆயிரம் இருக்கும். ஏதோ நன்னா இருக்கயா ரைட்டு அவ்ளோ தான்.

மீனாட்சி பாட்டி.
ஹஸ்பென்ட் ஆஃப் .. சீ...சீ..
வைஃப் ஆஃப் சுப்பு தாத்தா.

meenakshi said...
This comment has been removed by a blog administrator.
ராமலக்ஷ்மி said...

எங்களுக்கும் கதை.மிகப் பிடித்தது. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி மாமி.தாமதமாகப் பதில் எழுதுகிறேன்.

அண்ணன் தங்கை சகோதர உறவு போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவை தான். இரண்டோ ஐந்தோ இல்லை ஆயிரமோ நினைவில் இருந்தால் போதும். நீங்கள் சொல்வது அவரவர் இருக்கும் இடத்தில் சௌக்கியமாக இருக்கவேண்டும். வைஃப் ஆஃப் சுப்பு அண்ணானு நான் சொல்லப் போகிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
இன்னும் நான்கு கதைகள் இருக்கு.அவைகளையும் பத்திரமாகப் பதிவு செய்துவிடவேண்டும்:)

இராஜராஜேஸ்வரி said...

குழந்தையின் அன்பினால் என் மனத்தை நிரம்பச் செய்துவிட்டானே இறைவன்

மனதை நிறைய்ச் செய்ததே கதை ..!