Blog Archive

Wednesday, January 02, 2013

உந்து மதக் களீற்றன் ஓடாத தோள்வலியன்

சீரார் வளை ஒலிப்ப
பந்தார்விரலி
திருப்பாவை திருவெம்பாவை
நப்பின்னையும் கண்ணனும்
ஆண்டாள் திருவடிகளே சரணம்


18ஆம் பாசுரம்

உந்துமதக் களிற்றன்  ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே   நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைத் திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்  மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள்  கூவினகாண்
பந்தார்விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய்  மகிழ்ந்தேலோர்  எம்பாவாய்
***********************************************


ஆய்ப்பாடி உறங்குகிறது. ஸ்ரீ கோதையின் தோழிகளும் அவளும் வாயில் காப்போர்களை எழுப்பி நந்தகோபாலன் யசோதையையும் எழுப்பிவிட்டார்கள்.
அடுத்தது நல்ல உறக்கத்தில் இருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் கண்ணனையும் எழுப்பவேண்டும்.

எப்பொழுதுமே தாயாரையே அணுகித் தகப்பனை அணுகுவது பக்திசாம்ராஜ்யத்தின்
விதி முறைகளில் ஒன்று.
அவள்தான் தன் மக்களின் பிழைகளைப் பொறுத்துத் தன்நாயகனிடம் அழைத்துச்செல்வாள்.
இதே முறையை ஆண்டாளும் பின்பற்றுகிறாள்.
 மதங்கொண்ட  யானைகளையும் முறியடிக்கும் தோள்வலிமை கொண்ட நந்தகோபாலன் மருமகளே !
நப்பின்னை நங்காய்!என்றழைக்கிறாள்.

நாங்கள் நின்வாசல்கடையில் நிற்கிறோம்.

நீ அழகாக எழுந்து,மாதவனுடன் மலர்ப் பந்து விளையாடும், வளையல்கள் ஒலிக்கும் அழகிய செந்தாமரைக்கைகளால்

விரைந்துவந்து  கதவைத் திறவாய் தாயே!!  எம்பாவாய்.

திருப்பாவை ஜீயர் சரணம்
ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகள் சரணம்.
எம்பாவாய் எங்களிடம் உன் திருவருள் ஓங்கி நிற்கட்டும்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

Unknown said...

படங்களும் பதிவும் அருமை. உந்து மதகளிற்றின் ஸ்ரீராமானுஜருக்கு மிகவும் பிடித்த பாசுரம் என்று படித்த ஞாபகம். மிகவும் நன்றிஅம்மா.

sury siva said...

இந்த காட்சி கண்முன்னே நிற்கிறது.
இகலோகச் சிந்தனைகள் எல்லாமே
மறந்து போகின்றது.
மனதைத் துறந்து
மாயவன் பாதம் சேரும்
வழியும் இது தானோ !!

ஆண்டாள் திருவடி சரணம்

சுப்பு ரத்தினம்.

இராஜராஜேஸ்வரி said...

திருப்பாவை ஜீயர் சரணம்

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

படங்களும், கருத்தும் அருமை.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்திரா.
ஆமாம் திருப்பவை ஜீயருக்கு மிகப் பிடித்த பாடல்.
அவர் உஞ்சவிருத்தி செய்யும் காலத்திலும் எப்பொழுதும் திருப்பாவை மனதிலும் வாயிலும் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு நாள் தற்செயலாக இந்தப் பாட்டைப் அனுசந்திக்கையில் ,தன் குருவான பெரிய நம்பிகள் வீட்டின் எதிரில் நின்று பாடுகிறார். பாசுரத்தில் வரும் செந்தாமரைக் கையால் சீறார் வளையொலிப்ப என்ற வரிகளுக்கேற்ப பெரியநம்பியின் மகள் அத்துழாய் கைவளை ஒலிக்கவாசல் கதவைத் திறக்கவும்

.ஸ்ரீராமானுஜர் பக்திப் பரவசத்தில் மயங்கி விழுந்ததாக வரலாறு.அவரது பக்திப் பரவசம் நம்மை என்று தொற்றுமோ!!!!!

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் இதுதான் வழி சுப்பு சார். உங்கள் பக்தி வெள்ளத்தில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.18 நாட்கள் அனுபவித்தயிற்று. இன்னும் 12 நாட்கள்:)

Unknown said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

பால கணேஷ் said...

கண்ணனும் நப்பின்னையும் படம் வெகு அருமை. கண்ணை எடுக்க முடியலை. ஆண்டாளின் வரிகள்... சொல்லணுமா என்ன... திருப்பாவை படிக்கறப்பல்லாம் பிரமிப்புதான் எனக்குள்ள.

துரை செல்வராஜூ said...

எதிர்பாராமல் இவ்விடத்திற்கு வந்தேன்.என்ன சொல்வது என்று தெரியவில்லை. நன்றாக இருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுரேஷ்குமார்.
வருகைக்கும் கருத்துக்கும் மிகமிக நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அவர்களின் பிரேமை அவ்வளவு ஆழமானது கணேஷ்.அதை வரைந்த ஓவியரைத்தான் பாராட்டவேண்டும்!!

பக்திரசத்தில் தோய்த்து தோய்த்து ஸ்ரீஆண்டாள் லயிக்கும் இப்பாடல்கள் நம்மை அவளுடனேயே அழைத்துப் போகின்றன. மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

எதிர்பாராமல் வந்தாலும் வருகைக்கு மிக நன்றி திரு துரை செல்வராஜ்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.திருப்பாவை அனுபவிக்கும் வேளை எங்களூரில் மழை வந்தது. இனி எல்லாம் நல்லதே நடக்கட்டும்.

Geetha Sambasivam said...

பொறுமையாய்ப் படங்களைத் தேடிப் போடறீங்க. அருமையான படங்கள். இவ்வளவு பெரியதாக எங்கே கிடைக்கின்றன? எனக்கு கூகிளில் தேடினால் ஸ்டாம்ப் சைசுக்குத் தான் கிடைக்கின்றன. :)))))

மாதேவி said...

அழகிய தொகுப்பு.

ஆண்டாள் பாதம் பணிவோம்.

வல்லிசிம்ஹன் said...

கீதாம்மா, கூகிளில் படம் கிடைத்து அப்லோட் செய்ததும் ர்ரைட் க்ளிக் செய்தால் லார்ஜ் செய்கிற ஆப்ஷன் கிடைக்கும்மா. அதைவைத்துதான் நான் என்லார்ஜ் செய்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு மாதேவி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா.