Blog Archive

Friday, December 28, 2012

புள்ளின்வாய்க் கீண்டானின் கீர்த்திமை

புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்
பாவைக் களம்  புகுந்தார்
கோதண்டராமனைப் பாடுவோம்
Add caption
பக்தியால் உன்னைத் தொழுதேன் கண்ணா  அருள்வாய்
  ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த  13 ஆம் நாள் பாசுரம்.
*********************************************************************************8
 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!
*************************************************************

அடுத்த வீட்டுப் பெண்ணை எழுப்ப வந்தாள் கோதை தன் தோழிகளோடு. அவர்களோ
நோம்பு நூற்க வேண்டிய பாவைக் களம் சென்று கண்ணனைப் பாடவேண்டும்
என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
  தோழியின் வீடோ அரவமற்று இருக்கிறது. அவள் ஆழ்துயிலில்
ஆழ்ந்திருக்கிறாள்.
கோதை பாட ஆரம்பிக்கிறாள்.
அம்மா,  வெள்ளி எழுந்துவிட்டது.
வியாழம் உறங்கிற்று.

இந்த நிகழ்வு சரித்திர ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழுமாம்.
ஆண்டாள் பாடிய காலம் கிபி 731 ஆம் ஆண்டாக இருக்கச் சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தமிழ்ப் பேராசியர் ,ஆராய்ச்சியாளர்  திரு.மு.ராகவையங்கார்   சொல்கிறார்.  எவ்வளவு அருமையான நிகழ்வு. அதையும் அவள் விட்டுவைக்கவில்லை.

மகாபெரிய  அசுரன் பகாசுரன். கொக்கு வடிவத்தில் பாலகிருஷ்ணனைக் கொல்ல   வந்தான். அவன் வாயைக் கிழித்து அவனை அழித்தான் கிருஷ்ணன்..

யசோதைக்கு கோகுலத்தில் எதைப் பார்த்தாலும் ஒரு அசுரன் போலத் தோன்றியதாம்..அந்தக் கவலையில் கண்ணனைக் கட்டுப்படுத்த  முயன்றாலும்  அது முடியாத காரியமாக இருந்ததாம். காற்றை வீசாதே என்று யாரால் கட்டுப் படுத்த  முடியும்!

இதே போல கருணையே வடிவமான இராமனின்  கோபாவேசம்
இராவணனின் மேல் பாய்கிறது.
 பலவிதமாக அவனை இம்சிக்கிறான்   இராவணன்.,.

இறுதிநாள்  யுத்தத்தில் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிவதாகக் கோதை குறிப்பிடுகிறாள்.
நரசிம்ஹாவதாரத்தில்  நொடிப் பொழுதில் இரணியனை வீழ்த்திய நாராயணனுக்கு,இராவணன் ஒரு   தூசுதான்.
 பகைவனுக்கும் அருளும் நெஞ்சம்  இருந்ததால்  கொஞ்சமே தாமதித்தான்.
இதையும் சொல்லி அந்தப் பெண்ணை  எழுப்புகிறாள்.

உலகத்தைக் காக்க வந்திருக்கும் மாலவனைப் பாட உனக்கேன் பிணக்கம்.  உடலும் உள்ளமும் குளிர  நீரில் மூழ்கித் தூய்மையாக் வா. கள்ளத்துயிலை நீக்கு. எங்களோடு வந்து கலது கொள்வாய் பெண்ணே   என்று அன்புடன் அழைக்கிறாள்.   ஆண்டாள்.
அவள் திருவடிகளில்   சரணடைகிறோம்.










 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

பக்தியால் உன்னைத் தொழுதேன் கண்ணா அருள்வாய் ..

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று- இந்த வரிக்கு வியாக்கியானம் அருமையாகக் கொடுப்பார்கள்..

அருமையான படங்களுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி . வியாழம் வெள்ளி பற்றிப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். நினைவு செய்தததற்கு மிக நன்றிமா. சிறு செய்தியை இணைத்திருக்கிறேன் இப்போது, மிக மிக நன்றிப்பா.

ஸ்ரீராம். said...

காலம் குறிக்கும் சொற்களை வைத்து ஆராய்ச்சி செய்து பாடிய காலம் அறிய முடிவது சிறப்பு. நல்ல பகிர்வு அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.அவர் எழுதிய நூல் கிடைக்குமா என்று தேடப் போகீறேன்.பாதியில் படிக்காமல் வைத்துவிடுவேனோ என்கிற பயமும் இருக்கிறது.:)

கோமதி அரசு said...

அழகான படங்கள் , அருமையான விளக்கம். நன்றி அக்கா.