Blog Archive

Sunday, December 02, 2012

பசி,தனிமை பழங்கணக்கு

 ஒரு ஞாயிறின் தனிமை.
********************************
சனிக்கிழமை காலை தொடங்கும் துடிப்பு
கரைத்த ரசம் சாதம் விக்கலோடு உள்ளே இறங்கும்.
அம்மா தலைதட்ட,மீண்டும் தலை கோதிச்
செருப்பிட்ட கால்கள் சிநேகிதியின் வீட்டுக்கு விரையும்.
வெள்ளிவந்த   விகடன் கதைகளை
அலசி வழியில் வரும் தோழிகளுடன்
அரட்டையோடு தலை நிமிராமல்
பள்ளியை அடைந்து வாடி பௌர்ணமி
உனக்கெதற்குப் பவுடர் எனக் கேலி கேட்டு
உன்காந்தலழகு மேலாகத்தெரியத்தான்
என்று மறுமொழி சொல்லி
பன்னிரண்டு மணி வரை  பாடங்கள் பொறுத்து கண்கணவென
 மணி  ஓசை முடிவதற்குள்
பள்ளிக் கதவைத் தாண்டிவிடும் கால்கள்.
மீண்டும் பதவிசுப் போர்வை போர்த்து
பஜார் வழியாச் செல்லாதே
கேலி பேசும் காளைகள் உண்டு
எனும் தோழியின் எச்சரிக்கையைக் கேட்டு சுட்டெரிக்கும் வெய்யிலில்
வீட்டு நிழலை அடைந்ததும்
ஆரம்பிக்கும் என் வீக் எண்ட்.
அவசரமில்லாமல் தேவானையுடன் பேசி வம்படித்து
அடுத்த வீட்டு இட்லிமாவு அரைபடும் சத்தம் கேட்டு
முருங்கை பறித்து,ஓடும் பல்லிகளுக்கு நடுவில்
கிணற்றில்தண்ணீர் இறைத்துத் தொட்டி நிரப்பி
உடைமாற்றி  மலைக்கோட்டை ஏறி உலகத்தையே ஆளும்
மகராணிபோல அந்தக் காற்றைச் சுவாசித்துக்
கீழே இறங்கி அம்மா அப்பா தம்பிகளுடனும்ஸ்ரீநிவாசப்பெருமாளையும்
கண்டுகொண்டு

கழித்த சனிக்கிழமை.பிறகுவரும் ஞாயிறு.
எங்கே போயின.
 நினைவில் பசுமையாகப் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றன.



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

ராமலக்ஷ்மி said...

எழுந்த நினைவுகள் வடித்த வரிகள் அழகிய கவிதை.

/மலைக்கோட்டை ஏறி உலகத்தையே ஆளும்
மகராணிபோல/

ஆகா, சரியே!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான நினைவுகள்.

கடந்து வந்த பாதையை நினைப்பதில் உள்ள சுகம்...

Ranjani Narayanan said...

உனக்கெதுக்கு பவுடர்?
இன்னும் அப்படியே தான் இருக்கிறீர்கள் வல்லி!
பழைய நினைவுகள் எங்களையும் பழைய காலத்துக்குக் கொண்டு சென்றன.
அருமையானதொரு மலரும் நினைவு!

ADHI VENKAT said...

அழகான கவிதை. மலரும் நினைவுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான நினைவுகள்...

நன்றி அம்மா...

ஸ்ரீராம். said...

நினைவுகள் கவிதையாய்.... அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

sury siva said...


// அலசி வழியில் வரும் தோழிகளுடன்
அரட்டையோடு தலை நிமிராமல்
பள்ளியை அடைந்து //

இதெல்லாம்

// எங்கே போயின.
நினைவில் பசுமையாகப் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றன.//

ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள்.

அந்தக் கால நினைவுகள் அருமை.
அதைச் சொல்வதிலும் நமக்குப்
பெருமை.


மீனாட்சி பாட்டி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.திண்டுக்கல் மலைக்கோட்டைக் காற்று பிரசித்தம். குளிர்கால மாலைப்பொழுது இன்னும் இனிமை. ஒரு பாறை அதில் என் பாறை.தூரத்தில் இருக்கும் வயல்களைப் பார்த்தபடி ஏறி உட்கார்ந்துவிட்டால் வேறு மகிழ்ச்சியே வேண்டாம்.
இப்போது காட்சிகள் மாறி இருக்கும்:)மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட் என்னுடைய பொக்கிஷம் என் நினைவுகள்:)
பயம் அறியாமல் பயணித்த பாதை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் நினைவுகள் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியா ரஞ்சனி.?

பள்ளிப் பருவம் இனிமை. தோழிகளும் அப்படியே.அதில் சந்தனலக்ஷ்மி ரொம்ப நெருக்கம். அவள்தான் இப்படிச் சொல்லுவாள்.அந்தக்கால சரோஜாதேவிபோல இருப்பாள்.அழகி.

கபடம் இல்லாத அன்பு.அதுதான் புத்தகத்தைத் திறந்ததும் வீசும் வாசம் நினைவுகள். நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நினைவுகள் சில நேரத்தில் நிறையவே வருகின்றன.கணினியும் நாற்காலியும் நம்மை பழையதை அசைபோட வைக்கின்றன.
அவ்வளவே. நன்றி ஆதி.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மிகவும் நன்றி தனபாலன். உங்களுக்கு மலைக்கோட்டை போகும் வழக்கம் இருக்கிறதா:0)

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் ஒரு ரகசியம். இதைக் கவிதை என்று சொல்லிவிடாதீர்கள் மடக்கிப் போட்ட நினைவு வாக்கியங்கள்:)உங்களுக்கும் பிடித்ததுதான் மகிழ்ச்சி.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மீனாட்சி அம்மா.
ஞாயிற்றுக்கிழமைகளில் சில சம்யம் வெறுமை சூழும். அப்போது மனதில் ஓடிய நினைவுகளைப் பதிந்துவிட்டேன்.
புரிதலுக்கு மிகவும் நன்றி.

Kanchana Radhakrishnan said...

இனிமையான நினைவுகள்.