Blog Archive

Friday, October 19, 2012

நான் இவண்ட் மேனேஜரான கதை...1

சின்னஞ்சிறு பெண்போலே கற்பனை செய்ய வேண்டியதுதான்.படம் ஸ்ரீராம் கேட்டது. ஈவண்ட் இவர்கள் சதாபிஷேகம்
இது இவண்ட்:)
எங்கயோ  மாலைநேரச் சந்திப்புக்கு ஏற்பாடு;)


 
ரொம்ப நாளைக்கு முன்னால்................1960 ஏப்ரில்
அம்மாவின்   தம்பிகள்  ஒருவருக்குக் கல்யாண ஏற்பாடு. பெண் பார்க்கக்
கிளம்புகிறோம்.
பாட்டி  வாங்கிய   பட்டுப் பாவாடை மிளகாய்ப் பழ வண்ணத்தில் மின்னியது. அதற்கு ஏற்ற(!)  பச்சை வண்ண  சட்டை  கைகளில் மாங்காய் ஜரிகையில்
வேய்ந்திருக்கும்.
அதைப் போட்டுக் கொண்டு குஞ்சலம் சூட்டிய பின்னலை முன்னால் போட்டுக் கொண்டு  பட்டம் சூட்டாத இளவரசியாக    அந்த மூன்று அறைகள் வீட்டில் நடை போட்டுக் கொண்டிருந்தேன்.
ஏ ஆண்டா  உங்க மாமாவுக்குத்தானே பெண் பார்க்கப் போகிறீர்கள்?
ஆமாம் மாமி . அதுக்கு நீ ஏன்  பறக்கிறே இப்படி.?

அவன் ரொம்ப (மாமாக்களோடயே  வளர்ந்ததால்  நிறைய மரியாதையெல்லாம் வைப்பதில்லை:)  )கூச்ச  ஸ்வபாவம். நாந்தான்
பெண் சரியாப் பார்க்கணும்'' அதான் யோசிக்கிறேன்.
தலைமேல் பட்டென்று  ஒன்று விழுந்தது.
யாரு  என்னைக் குட்டினது என்று திரும்பினால் ,  அம்மா!!
பேசாமல் உள்ளேவா. அவள் எப்பவுமே  இப்படித்தான் தைலா மாமி.
பிஞ்சில பழுத்தது. ஒரு பத்திரிக்கை
 விடாமல் படிக்க வேண்டியது.
அதில நடக்கிறதெல்லாம் உண்மைனு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
அசட்டுப் பிசட்டுனு பேசறது.நீங்க தப்பா  நினைச்சுக் காதீங்கோனு '' அம்மா முகம்  சிவக்க  என்னை உள்ளே இழுத்துக் கொண்டு போனார்.
என்னிக்குத் தான் வாயைக் கட்டி,நாக்கை அடக்கப் போறியோ'அன்னிக்குத்தான் உனக்கு நல்ல பேரு  வரும்
என்று எச்சரித்தபடி ராக்கொடியைச் சுற்றி நல்ல கனகாம்பரப்பூவைச் சூட்டிவிட்டாள். நடுவில் மருக்கொழுந்தும் வைக்க மறக்கவில்லை;)

 இன்னோரு மாமா பக்கத்தில வந்தார். நீதான் எல்லாத்தையும்
பார்த்துக்கணும் மா. நாங்க எல்லாரும் பேச்சில் கவனமா இருப்போம்.
நீ பார்க்கப் போகிற பொண்ணை ப்  பார்த்துப் பேசி  ஓகே சொன்னாதான் நாங்களும் சரின்னு சொல்வோம்''என்று சமாதானம் சொன்னார்.

சரி என்று முணுமுணுத்தபடி  வந்திருந்த பெரிய டாக்சியில் ஏறிக் கொண்டோம்.
''சீவி முடிச்சு  சிங்காரிச்சு. சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு''னு படிக்காதமேதை  பாட்டைப் பாட ஆரம்பித்தவளை
ச்சூ  என்ற அம்மா குரல் அடக்க, மாமா சிரித்துவிட்டார். எனக்கே கொஞ்சம் நர்வஸாதான்  இருந்தது.
பரவாயில்லை  இவள் என் பக்கத்தில் இருக்கட்டும்.

பெண்வீட்டுக்குப் போனோம். அவங்க வீட்டில் வண்ணவண்ணமாக
நிறையப் பெண்கள்.
வருவதும் எங்களை வந்து  பார்த்துவிட்டு உள்ளே போனார்கள். நான் மெதுவாக  எங்களுக்குப் போடப்பட்டிலிருந்த  பாயிலிருந்து எழுந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்த  அறைக்குள் போனேன்.

உன் பேரென்ன, இது பெண்ணோட தங்கை குரல்.
ஆண்டாள். எங்க மாமாம்வுக்காக வந்தேன்.
என்ன வேணும்.
இந்த மாமியோட பேசணும். இவள் மாமியா. இவளுக்கே    20 வயதுதன் ஆகிறது
சரி ''உங்க பேரென்ன என்று அந்த அழகான பெண்ணைக் கேட்டேன்.
ஜயா என்றாள். அட எங்க அம்மா பேரு.
உங்களுக்குப் பாட  வருமா என்ற அடுத்த கேள்வி. கத்துக்கலையேமா.
என்று பதில் வந்தது.
பரவாயில்லை, சினிமாப் பாட்டெல்லாம் தெரியுமான்னு கேட்டேன். ம்ம் கொஞ்சம் தெரியும் என்று  சிரித்துவிட்டார் அவர். அப்படியே
மயங்கிவிட்டேன்.

ஓடி வந்து மாமாவின் காதைக் கடித்து
மாமா ரொம்ப அழகா இருக்காங்க ,பாட்டெல்லாம் பாடுவாங்களாம். தையல் எல்லாம் தெரியுமாம். நீ சரின்னு சொல்லிடு''

மறுபடியும்  ஷ் ஷ்.
நான் வரப்போகும் பஜ்ஜியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்:)

அந்தவீட்டில் நான்கு பெண்களுமே அழகாக இருந்தார்கள் எங்கள் ஜயா மாமிதான்    பெஸ்ட்   என்று  பாட்டியிடம் வந்து சொன்னேன்.

சரி மத்த பேச்செல்லாம் நடக்கட்டும். வைகாசியில் கல்யாணம் வைத்துவிடலாம் என்றார்.. சீனிம்மாப் பாட்டி. அவர் வெளியே வந்தே நான் பார்த்ததில்லை.அவருக்கு  எந்த வெளிவிஷயமாக இருந்தாலும் உதவி செய்வதெல்லாம் அம்மாவும் மாமாக்களும்தான்.
பாட்டி அம்மாவைக் கேட்டார்.
அதான் இந்த முந்திரிக் கொட்டை பார்த்துட்டுச் சொல்லித்தே,. அதில பாதி உண்மை. மற்றதை நான் பேசிவிட்டு வந்தேன் என்று அம்மா சொன்னார். அமர்க்களமாக  நிறைவேறிய  அந்த திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பில் மாமாவின் அருகே  கொஞ்ச நேரம்  ஜானவாசக் காரில் உட்கார்ந்து
அம்மா முறைப்பதற்கு முன்   இறங்கிவிட்டேன்.:)






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

35 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

1960...!

இனிய நினைவுகள்...

நன்றி அம்மா...

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!! சூப்பரூ!!!!

அப்போ ஆரம்பிச்சு இன்னும் நிறுத்தலை:-))))

ராக்கொடி பகுதி பெஸ்ட்.

நானும் ரெண்டு வாங்கினேன் சீரங்க நினைவுக்காக:-)

sury siva said...


அம்மாடி !!
அம்பது அறுபது வருசம் இருக்குமா ? இதெல்லாம் நடந்து ?
அப்படியே நேத்திக்கு நடந்தது போல சொல்றேளே !!

அது சரி !!
முந்திரிக்கொட்டை ஒண்னு
முந்திண்டு எல்லாத்தையும் செய்யறது சொல்றதுனாலே தான்
முக்காவாசி விஷயங்கள்
முழுசாக முடிகிறது.

இவங்க எல்லாருமே
ரைட் பிரைனி பீபிள் .
ஃபோர் டெல்லிங் அன்ட் கிரியேடிவிடி இவர்களிடம் அதிகம்.
ஹைலி இன்னொவேடிவ் அன்ட் ஆர் ஏபில் டு ரீட் வாட் அதர்ஸ் ஃபீல்.

அன்ட்
டு பி கிரெயேடிவ் இஸ் காட்ஸ் கிஃப்ட்.

சுப்பு ரத்தினம்.

வெங்கட் நாகராஜ் said...

இனிதான நினைவுகள்.... - சுவையாகச் சொல்லிப் போன உங்களுக்கு ஒரு பூங்கொத்து!

Unknown said...

அம்மா நலம்தானே.நேற்று நடந்தசம்பவம் போலவே பகிர உங்களால்தான் முடியும் அத்தனை ஜீவன்உள்ளது உங்கள் எழுத்தில்.இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். பகிர, அப்போது எடுத்த புகைப்படங்கள் இல்லையோ?!!

ராமலக்ஷ்மி said...

பாகம் ஒன்று 1960-ல் ஆரம்பித்திருக்கிறது. 2012 வரைக்கும் வாசிக்கக் காத்திருக்கிறோம். சுவாரஸ்யம்:)! தொடருங்கள்.

Subhashini said...

கண் முன்னாடி அந்த சின்ன பெண் பட்டு பாவாடை சரசரக்க அழகு தேவதையா நடை போட்டதை அப்படியே கொண்டு வந்துட்டேள் வல்லி மா உங்க எழுத்திலே.......

கதம்ப உணர்வுகள் said...

வல்லிம்மா எழுதுவது ஒரு சுவாரஸ்யம் என்றால்....

அந்த எழுத்தை ரசித்து வாசிப்பது ஒரு சுவாரஸ்யம்...

ரசிக்கும்படி எழுதுவது ஒரு லாவகம்....

அந்த காலத்துக்கே கூட்டிச்சென்று...

ஆண்டாள் தன் பேச்சால் ஆண்டாளோ?
அம்மா தலைல குட்டு வைத்து வைத்து ஆண்டாளின் கற்பனையையும், ரசிக்கும் தன்மையையும் அமிழ்த்திடாமல் இருக்கவேண்டுமே என்று பதைப்புடன் வேண்டத் தோணித்து....

சரக் சரக்கென்று பட்டுபாவாடை....ராக்கொடி வைத்து கனகாம்பரம் சுற்றி... ஹூஹும் மரிக்கொழுந்து வைக்க மறக்கவில்லை... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரசித்தேன்...

ஆண்டாளின் அழகு முகமும் வெடுக் வெடுக்கென்று பேசாமல் துறு துறுவென்று படிக்காத மேதை பாட்டு பாட தொடங்கி அம்மாவின் முறைப்பில் அடங்கிய அந்த குட்டிச்செல்லம் கண்முன் தெரிகிறாள்...

நான் பார்த்து சொன்னா தான் மாமா சரின்னு சொல்வா....

ஆமாம் அத்துனூண்டு வயசுலயே ஜெயா மாமியை செலக்ட் செய்து சிரிக்கவைத்து பாட்டு தெரியுமா என்று கேட்டு தெரியாதேன்னு சொன்னதும் சும்மா சினிமா பாட்டு? ம்ம்ம்ம் கொஞ்சம் தெரியும்... அதை அப்டியே மாமாவிடம் வந்து சொல்லாமல் பெரிய மனுஷி போல எல்லாம் நல்லபடியா நடக்க இந்த குட்டிப்பெண்ணின் சௌஜன்யமான பதில்.... மாமா தையல் தெரியுமாம், பாடத்தெரியுமாம். அழகா சிரிக்கிறாளாம். அந்த சிரிப்பில் மயங்கிய ஆண்டாளின் மனதை அப்படியே வாசகர்களும் உணரும்படி எழுதிய வல்லிம்மா உங்க எழுத்துகளுக்கும் ஆண்டாளின் இளமையும் துறுதுறுப்பும் அப்டியே தெரியறது.....

ரசிக்கவைத்த வரிகளுக்கு அன்புவாழ்த்துகள் வல்லிம்மா...

அம்மா அப்பாவின் சதாபிஷேகத்திற்கு மனம் நிறைந்த அன்பு நமஸ்காரங்களுடன் ஆசீர்வாதம் வேண்டி மஞ்சு....

மனம் நிறைந்தது.....

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் 52 வருஷம் ஆச்சு:)இனியவை நினைவுகளே. நன்றி தனபாலன். அப்போதுதான் திண்டுக்கல்லுக்கு வந்தோம்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். மூக்கை நுழைக்காமல் இருக்க முடியாது துளசி.:)ராக்கொடி கல்லெல்லாம் உதிர்ந்து போயாச்சு. அப்படியே வைத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். நான் அனுப்பிய அழைப்பு மெயில் வந்ததா.
அம்மாவுக்கு அவள் கவலை. என்னை யாராவது பின்னால் சொல்லப் போகிறார்களே என்று பாதுகாப்புச் செய்வார்.பாவம். அதையும் மீறி அதிகப் பிரசிங்கத்தனம் செய்தால் அவள்தான் என்ன செய்ய முடியும்?
52 வருடங்கள் ஆச்சு.நினைவில் பசுமையாக இருக்கிறது.இப்ப நடப்பதுதான் மறக்கிறது சீக்கிரம்!!உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு ரொம்பவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.ரசித்துப் படிக்க நீங்க எல்லாரும் இருப்பதே எனக்கு டானிக்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா.இனிப்பான நினைவுகள் மனதில் தங்கத்தானே செய்யும் .
நான் நலமாகவே இருக்கிறேன் பா. உங்களுக்கும் நவராத்திரி நன்மைகள் பெருக வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராமுக்குனு போட்டிருக்கேன் படம். நான் ஓகே சொன்ன மாமி மாமா சதாபிஷேகப் படம்:)
பழைய படத்தில் ரொம்ப ஆ சிங்கமாவே இருப்பேன். என்னை யாரும் போட்டொ எடுக்கவும் இல்லை.:)))

வல்லிசிம்ஹன் said...

ஓ செய்துடலாம் ராமலக்ஷ்மி.
மூட் வரும்போது எழுதிடணும்.:0)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மஞ்சு. என்ன இனிய மிருதுவான மனம் அம்மா உங்களுக்கு. உங்கள் பின்னூட்டத்துக்காகவே நான் பதிவெழுதலாம் போல இருக்கே!!
எங்கள் அம்மா என்னைக் கட்டில் வைத்து இருக்காவிட்டால் சிவன் தலை ஏறிக் கொண்டாட்டமிட்ட கங்கைதான் என் செய்கைகள்.
மிக மிக நன்றி மா. இத்தனை ஆதுரம் இன்னும் நிறையப் பிரவகிக்கட்டும்.
படத்தில் இருப்பவர்கள் தான் மாமா மாமி.
அம்மாவும் அப்பாவும் இறைவனடி சேர்ந்தார்கள் சுகமாக.

வல்லிசிம்ஹன் said...

அய்ய சுபாஷினி,பட்டுப்பாவாடை கட்டினா அழகு வந்துடுமா பெண்ணே:)

என் தம்பிகள் என்னைச் சட்டாம்பிள்ளை என்பார்கள்.
அன்புள்ளத்துக்கு ரொம்ப நன்றிமா.

சமீரா said...

வாவ்!! ரொம்ப அழகா அந்த நாட்கள நினைவு கூர்ந்து எழுதி இருகீங்கம்மா.. கண் முன்னாடி ஒரு பெண் பார்க்கும் படலமே வந்து போய்டிச்சி...

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா :-))

பட்டுப்பாவாடை,குஞ்சலம்,ராக்கொடி.. ஜொள்ளு விட வெச்சிட்டீங்களே வல்லிம்மா :-))

Ranjani Narayanan said...

பழைய நினைவுகள் எத்தனை இனிமையானவை!

மாமாவுக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்து, இப்போது சதாபிஷேகமும் செய்து....நிஜமாகவே சூப்பர் இவென்ட் மானேஜர் தான் நீங்கள்!

கண் முன்னால் எல்லா நிகழ்ச்சிகளும் வந்து போயின.

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராமுக்குனு போட்டிருக்கேன் படம்.//

நன்றி.:))

பதிவில் பெயர் சேர்த்து எனக்காகச் சிரமம் எடுத்துப் படம் சேர்த்ததற்கு நன்றி...

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். அந்தக் காலத்துக்கே கூட்டிச் சென்றது. எங்க மாமாவெல்லாம் பெண் பார்க்கிறச்சே எங்களை எல்லாம் அழைச்சிட்டுப் போறதுன்னா கட்டுப்படியாகாது. நாங்க ஆறு பேர் இருந்தோம். :))))) ஆகவே மாமிகளைக் கல்யாணத்திலே பார்த்ததுதான்.

Geetha Sambasivam said...

ராக்கொடி வைச்சு, சூரியப்ரபை, சந்திரப்ரபை, ஜடைபில்லை எல்லாம் வைச்சு நவராத்திரிக்குப் பின்னிக்கும் நினைவுகள் வந்தன. மற்றநாட்களில் ராக்கொடி எல்லாம் இல்லை. இப்போல்லாம் அது மாதிரி பார்க்க முடிகிறதில்லை. ஒரு சில பரத நாட்டிய நிகழ்ச்சிகள் தவிர. :))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் சமீரா. உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி!!!

வல்லிசிம்ஹன் said...

மாமாவுடன் கூடப் போனதில்தான் மகிழ்ச்சி.ரஞ்சனி.
அம்மான் அம்மாவுக்கு அடுத்தபடி இல்லையா. மத்தபடி பெண்ணை மிகவும் பிடித்ததால்தான் திருமணம் நடந்தது. வருகைக்கும் பதிவு மகிழ்ச்சி கொடுத்ததற்கும் எனக்கு சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல். அந்தக் குடும்பத்துக்கு நான் நன்ன் முதல் பேத்தி. பாட்டிக்கு என் மேலும் எனக்குப் பாட்டி மேலும் அதீதப் பிரீதி.
அதனால்தான் இத்தனை கொண்டாட்டம்.எல்லாமென் கல்யாணம் ஆகிறவரை.:)அந்த அன்புக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில்தான் அதிகம் ஆகிறது.:)அக்கறை எடுத்துக் கேட்டீர்கள் இல்லையா. அதுதான் ஊக்கம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அங்கெ பாட்டியின் ராஜ்ஜியத்துக்குள் போய்விட்டால் விதிமுறைகள் மாறி விடும்.
அம்மா சிம்பிளா அழகாகச் செய்துவிடுவார். பாட்டிக்கு நகை நட்டோடதான் வெளில போகணும்.
எனக்குச் சந்த்ரபிரபை,சூர்யப் பிரபை எல்லாம் நல்ல வேளை வைக்கவில்லை:)ஜடை பில்லையை இப்ப பேத்திக்கு பதக்கமாக்கிட்டேன்.

இராஜராஜேஸ்வரி said...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மலரும் இனிய நினைவுகள்..

ராமலக்ஷ்மி said...

படம் ஒன்று அருமை. பரிசுகளைப் பகிர்ந்தளித்த சதாபிஷேகத் தம்பதியர் இவர்கள்தானே:)?

வல்லிசிம்ஹன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி.
மனம் நிறைந்த நன்றிகள்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி, அவர்களேதான்.
இப்ப உங்கள் நினைவை நான் பாராட்டலாம் இல்லையா:0)

ADHI VENKAT said...

படிக்கிறச்சேயே ரொம்ப இனிமையா இருந்ததும்மா. நானும் ஒரு சிலமுறை குஞ்சலம் வைத்து பின்னிக் கொண்டு இருக்கிறேன். பட்டு பாவாடை போட்டுக் கொண்டு சுற்றி சுற்றி வந்தது நினைவில் வந்தது. என் மாமாக்கள் கல்யாணத்தில் நானும் ஜானவாச காரில் உட்கார்ந்திருக்கிறேன்.....:)

மாதேவி said...

அப்பவே நலல் கலக்கு கலக்கி இருக்குறீர்கள் :))