Blog Archive

Monday, April 30, 2012

அன்னையர் தினத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த  மே மாதம் வந்தாலே   மூளையைக் கசிக்கக்   கொள்ள வேண்டி இருக்கிறது.

நிறைய நபர்கள் பிறந்திருக்கிறார்கள்.
நிறைய நபர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள்.

நடுவில அம்மாக்கள் தினம் வேறு வருகிறது.
மத்தவங்களுக்கெல்லாம் வாழ்த்துகள் சொல்லிடலாம்.

என் பெண் என்னமா வேணும்.வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றதும்.
பழைய   ஆங்கிலப்படம் டிவிடி கேட்டிருக்கிறேன்.
ராசிபுரத்தில வெண்ணெய் நல்லா இருக்குன்னால் வரவங்கள்ட்ட சொல்லி வாங்கற கதைதான்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்மா   நோய்வாய்ப்பட்டு சிறிது சிறிதாக  மீண்டு வருகிறார்கள்.
அவர்கள் பெயர்  திருமதி கணவதி ராசநாராயணன்.
ஆமாம்   நம் கி.ரா. அவ்ர்களின் துணைவியார்தான்.
எப்போது தொலைபேசினாலும் எப்படி இருக்கப்பா கண்ணு'என்னும் போது

மனம் எங்கியோ கசிகிறது.
ஐய்யாவிடம் அவர்களை வந்து பார்க்கலாமா என்று கேட்டால்  இப்போதைக்கு வேண்டாம். அவள் நிலைமை சரியாகட்டும்.

மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கும்போது வாருங்கள். உங்களை நாங்கள் உபசரிக்கத் தோதுவாக இருக்கும்.  என்கிறார்.

மேன்மக்கள்.

திருமதி கணவதி அம்மாவுக்குப் பரிசாகக் கடவுளை நான் வேண்டுவது
உடல்நலம் சுருக்க  நிகழவேண்டும்,கிடைக்கவேண்டும் என்பதே.

அவரது நகைச்சுவை உணர்வுக்கு ஒரு  துளி.
என்னிடம் ஆராய்ச்சிக் கேள்வி கேட்டார்
வில்லிபுத்தூர் ஆண்டாள். நாச்சியார் கறுப்பா சிவப்பா  என்பதுதான்.
நான் சொன்னேன்  அவள் கறுப்பாக இருந்தால்தான் அரங்கனுக்கு
இணையான ஜோடியாக அமைந்திருக்கும் என்று!!!

அந்த ஜோடியைப் போல இந்த ஜோடியும் நலமே வாழ  வேண்டும்.

பதின்ம வயதில் ஒரு சின்னக் காதல் 1960

வாசல்  அழியைத் திறக்க வந்த  மாதவன் கதவின் இடது பக்கத்தில் சாக்பீஸில்   எழுதப் பட்டிருக்கும் எழுதி
இருக்கும் எழுத்துக்களைப் படிக்க நேர்ந்தது.
சின்னவன் ஏபிசிடி எழுதி இருப்பானோ என்றவண்ணம் உள்ளே போய் ஈரப்படுத்திய
துணிக் கிழிசலைக் கொண்டு வந்தார்.
கூடவே வந்த எட்டு வயதுக் கண்ணனைப் பார்த்து'ஏண்டா பையா இது போல மரக்கட்டையில் கிறுக்குகிறாய்.
சிலாம்பு ஏறிடாதா என்றால், அய்ய என்னப்பா எனக்கு என்னவயசாச்சு. எனக்குத்தான் நோட்டு புத்தகமெல்லாம் இருக்கே.
இது நீலா அக்கா எழுதினா''
துணுக்கென்றது அப்பாவுக்கு. அழிப்பதற்கு முன்னால்
என்ன எழுதி இருக்கு என்று பார்த்தார் .
 ஜாநீலா,நீலஜா  என்று எழுதி இருந்தது.
ஒன்றும் புரியவில்லை.
கண்ணனிடம்  கேட்டார். அவ ஸ்கூல் சிநேகிதியா இருப்பா அப்பா என்று ஓடிவிட்டான் கண்ணன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 தோழியின் பெயரெல்லாம் கதவிலயும் கம்பிகள்லயும் எழுதிவைக்கிறது
சரியாக இல்லையே.
என்றபடி சமையலறையில் விட்ட வேலையைத் தொடர்ந்தார்,.

சமயலறையை ஒட்டி இருந்த முற்றத்தில்  பெண்ணுக்குத் தலைவாரிக் கொண்டிருந்த
சிவு என்ற ஸ்ரீவரமங்கை,பெண்ணின்  பின்னலுக்கு ரிப்பன் கட்டி
''போய்க் குளித்துவிட்டு அப்பாவுக்க உதவி செய்.''
குட்டிம்மாவும் தலையை ஆட்டியவாறே பின்பக்கம் இருந்த குளியலறைக்குச்  சென்றாள்.
அங்கிருந்தபடியே அம்மாவுக்கு ஆர்டர் போட்டாள்.
அம்மா, அப்பாவை என் பின்க் பாவாடை சட்டையை எடுத்துக் கதவு மேல
போடச் சொல்லுமா.

சரி உங்க அக்கா  காலங்கார்த்தால எங்க போனாள்.?
அவளுடைய  ஸ்கூல் ஃப்ரண்ட்கிட்ட   கேள்விப்பேப்பர் வாங்கப் போயிருக்காமா.
என்கிட்ட என்னிடம் சொல்லலை.
இரண்டு வீடு தள்ளிதானம்மா இருக்கு சாந்தா வீடு.
  என்றபடிக் குளித்துவிட்டு வந்த குட்டிமா  அம்மா மேல படாமல்  அப்பாவிடம் சென்றாள்.
விளக்கு ஏத்திவிட்டு பெருமாளுக்குப் பூ வைம்மா.
என்ற மாதவன்,
சாதம் ஆகிவிட்டது. ரசமும் அப்பளமும் போதுமில்லையா
என்று மனைவியிடம் கேட்டார்.

கண்ணனை கோடிக்கடையில் மிக்ஸர் வாங்கி வரச் சொல்லுங்கள்.
நாலணா  போதும்.
குட்டிம்மா குறுக்கிட்டு இருபத்தைந்து பைசான்னு சொல்லுமா
என்று சிரித்தது.

அதற்குள் உள்ளே  வேகமாக உள்ளே நுழைந்தாள் பெரிய பெண் நீலா.
அம்மா,சாந்தாவாத்துல மத்யான ஷோ  பாலும் பழமும் போகிறார்களாம்மா.
நானும் போகட்டுமா ,ப்ளீஸ்மா.
முதல்ல  மேல வந்து விழாத. சத்தம் போடாத. அப்பா இவ்வளவு வேலை பார்த்திருக்கிறார்.
பதினாலு வயசுக்கான பொறுப்பு வேண்டாமா.
ஏம்மா அப்பா என்னைவிட நன்றாக  சமைப்பார்மா என்றச் செல்லச் சிணுங்கலுடன் அப்பாவைக் கொஞ்ச  செல்லும்  பெண்ணை
கவலையுடன் பார்த்தாள்.

நீலா   இரண்டு குழந்தைகள் தவறிய பிறகு பிறந்த பெண் என்பதால்
அப்பா   செல்லம் நிறைய..
அதை நன்கு உணர்ந்த பெண் ,சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வாள்.
இப்பொழுது இரண்டு வருடமாக அம்மாவின் கைக்குள் வரப் பழகியிருக்கிறாள்.
இருக்கட்டும்,காப்பிப் பாத்திரங்களை   அலம்பி வை.
நகமெல்லாம்   அழுக்காயிடும். நாளைக்கு ஸிச்டர்   பள்ளிக்கூடத்தில் கையிலியே போடுவார்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லமா. எஸ்டர் ஸிஸ்டர் ரொம்ப நல்லவங்க''குட்டிம்மாவோட குரல்.
நாளைக்குப் பாத்துக்கறேன் உன்னை என்று கறுவிக் கொண்டே
பக்கெட்டிலிருந்த தண்ணீரை   வைத்துச் சின்னச் சின்னப் பாத்திரங்களை அலம்ப ஆரம்பித்தாள் நீலா.

பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பா.கைவலிச்சுதுன்னால் விட்டுடும்மா. நான் பார்த்திருக்கிறேன் என்றார்.
வெளியிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

இந்தப் பதினாலு வயசிலயெ  உங்கள் வீட்டு அண்டா எல்லாம் நான் தேய்த்திருக்கிறேன் நினைவிருக்கட்டும்  என்றது.
 உதட்டைச் சுழிக்கும் பெண்ணைப் பார்த்துச் சிரித்துவிட்டார். அப்பா.

ஆமாம் யாருமா அந்த ஜானீலா  வாசல் மூங்கில்   தட்டைல  எழுதி இருக்கிறே?

ஒரு க்ஷணம் கைகள் நின்றுவிட்டன  நீலாவுக்கு.
நானாப்பா.  அய்ய  என்னை என்னச் சின்னக் குழந்தைன்னு நினைச்சியா
குட்டிமா எழுதி இருக்கும். அதுக்குத் தான் யாரோ  ஆறேழு சாக்பீஸ் கொடுத்தார்கள்' என்றபாடி பரபரவென்றுக் கழுவி முடித்துக்
கைகளை சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டாள். அடுத்த மூச்சில்  ஷாந்தாவோடு பாலும் பழம் படம் போகும் விஷயம்   அப்ப்ளிகேஷனாக

வந்தது.
எவ்வளாவோ நல்ல பாட்டுப்பா. ச்சிவாஜி சரோஜாதேவி வேற. உன்னாலியும் அழைச்சுண்டு போக முடியாது.   வேலை நிறைய இருக்குன்னு நீதான் சொன்ன. நான் அவர்களோடப் போனா என்னப்பா.

யாரெல்லாம் போகிறா.
சாந்தா ,அவ அண்ணா ஜானகிராமன்,  தம்பி பப்லூ, அந்தாத்து மாமி.
சொல்லும்போது பெண்ணின் முகத்தில் பளபளக்கும் சந்தோஷம்
மாதவனைச் சற்றே பிரமிக்க வைத்தது.
அடுத்தவாரம் அம்மா நான் நீ எல்லாரும் போகலாம்மா.
அடுத்த வாரம் வேற எம்ஜியார் படம் வந்துடும் பா.
நீ  அதுக்கெல்லாம் வரமாட்ட.

ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் ஆகாது. அந்தப் பிள்ளைக்கு ஸ்கூல் ஃபைனல் எக்ஸாம் லாம் வரது
எப்படி அவர்கள்  வீட்டில் இதற்கு சம்மதிக்கிறார்கள்..

அவந்தான் மா டிக்கட் எடுக்க முன்னாடியே போயிருக்கான்.
குதிரை வண்டி கூட வந்துடும். அம்ம  அம்மா இந்தத் தடவை மட்டும்மா.

இனிமே கேக்க மாட்டேன்.
பின்க் சாட்டின் பாவாடையும் ,பச்சை ஜார்ஜெட் தாவணியும் போட்டுக்கட்டுமா.
பிங்கும்  பச்சையுமா அழகா  ஒரு ஜாக்கெட் இருக்கே.
ஹை இதோ இரண்டு பின்க் ரிப்பன்.

வளையல் தான் இல்லை. பரவாயில்லை என்று தேனியாகப் பறக்கும் மகளின் புதிய அவதாரத்தைப் பார்த்துப் பிரமித்தார் அப்பா மாதவன்.....
இது  மதுரை பழங்காநத்தத்தில்   நடக்கிற கற்பனை:)   தொடரும்.




நீ அப்பா கிட்ட கேட்டுக்கோ.
படிக்க பாடங்கள் ஒன்றும் இல்லையென்றால் அப்பா  ஒண்ணும் சொல்ல மாட்டார்.

Tuesday, April 24, 2012

நன்மைகள் அள்ளித்தர ஒரு அட்சய திருதியை நாள்

 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பெரியவர்கள் எல்லோரும் செய்த   மாதிரி
பூஜைகள்  எல்லாம் செய்ய
எங்கள் வீட்டில் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது.
ஆனால்
இராமாயணம்  மஹாபாரதம் படிக்கலாம்.

இனிய விருந்து செய்து    உறவினர்களுடன் கூடி உண்ணலாம்.

குபேரனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும்   நாட்டின் சுபிக்ஷத்துக்காக

மலர்தூவி வழிபடலாம்.
துளசியைத் தீர்த்தத்தில் கலந்து    படங்கள் விக்கிரகங்கள் அனைத்துக்கும்

நீர் தெளிக்கலாம்.
அனைவருக்கும் மனமார்ந்த   வாழ்த்துகள். அனைத்தும் பெற்று
நல்வாழ்வு   வாழ வேண்டும்.
Posted by Picasa

Saturday, April 21, 2012

தோழிக்கு மிஸ்ஸ்ட் கால் அதிகாலை 1.20க்கு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆநந்ததிற்கு ஒரு மிஸ்ஸ்ட்  கால் கொடுத்த   அடுத்த பதிவு இந்தப் பதிவாக இருப்பது சந்தோஷமாக இல்லை.

என் அடுத்தவீட்டுத் தோழி  தனியாக வசிப்பவர். ஒரு பெண் அதுவும் மும்பையில்   வாசம்.
தோழி என்னைவிட 7 வயது மூத்தவர்.
ஆர்தரைடிஸ், ரத்த அழுத்தம் எல்லா விதமான   நோய்களால்
பாதிக்கப் பட்டாலும் மிகவும் உற்சாகமான    மனுஷி.
நிறைய நண்பர்கள். அக்கா தங்கைகள்.
அவர்களெ அரண்டு போகிறமாதிரி வந்தது இந்த மிட்நைட் ஃபோன் கால்.

தனியாக வாழ்ந்தாலும்  அயராமல் கச்சேரி,கல்யாணம் என்று வளைய வருபவர்,.

நேற்று  காலை  அவரிடமிருந்து ஒரு பதட்டமான அழைப்பு.
என்ன ஆச்சு   அம்மா என்று கேட்டால்.

நேற்று  ராத்திரி  நல்ல தூக்கத்திலிருந்து   ஃபோன் அடித்ததில் எழுந்துவிட்டேன்.
எடுத்துக் கேட்டால் பதிலே இல்லை. ரொம்ப பயமாக இருக்கிறது. எனக்கு அதற்கப்புறம் தூக்கமே இல்லை.
கொஞ்சம் வரமுடியுமா   என்றார்.

பதட்டத்துக்குக் காரணம் அவரது உறவினர் ஒருவர்    புற்றுநோயால்
அவதிப் பட்டுக் கொண்டிருப்பதுதான்.
அவருக்கு ஏதாவது  ஆகியிருக்குமோ என்ற கவலை.

நான் போன போது  விசாரிக்கையில்  ,மிஸ்ஸ்ட் கால்  தெரியும் இல்லையா என்று கேட்டேன்.
ஆமாம்,  காலர் ஐடி வைத்திருக்கிறேன்.

உடனே    எடுத்துப் பார்த்ததில் சரியாக இரவு   1.30க்கு
ஒரு   நம்பர் பதிவாகி  இருந்தது.
கொஞ்சம் யோசித்த பிறகு உங்களுக்கு இது யார்னு தெரியணுமா. இல்லை விட்டுவிடலாமா,  என்ற போது வந்ததே அவருக்குக் கோபம்.

அதெப்படி விடமுடியும். யார் அவனோ. திருப்பி இன்னிக்கு ராத்திரி அழைத்தால்   என்ன செய்வது.
ஏதாவது செய்யணும் என்றார்.
எப்படி யென்று கொஞ்சம்   யோசித்து சரி    பிஎஸென் எல்  இணையத்தளத்தில் தேடலாம்    என்று அவரது கணினியைத் திறந்தேன்.

இந்த நம்பருக்கான  பெயர் கிடைக்கவில்லை.
அடுத்த ஸ்டெப்  197.
அவர்களை அழைத்த போது   நிலைமையை விவரித்து  எங்களுக்கு அந்த நம்பரின் அடையாளம் வேண்டும் என்று கேட்டேன்.
என்  அழைப்பை அட்டெண்ட்  செய்த பெண் மிகப் பரிவாக
எல்லாவற்றையும்  கேட்டுக் கொண்டார்.
எண்ணையும் எடுத்து, மொத்தம்    20 செகண்டுகளில்
அந்த எண்ணுக்குறியவரின் பெயர், விலாசம் எல்லாம்  கொடுத்துவிட்டார்.

என் தோழிக்கு   யார் என்னவென்று கூடத் தெரியவில்லை. அந்த மாதிரி ஒரு
தெரு  பெயர் கூடக் கேள்விப்பட்டதில்லை.
என்ன செய்யலாம் என்று தொலைபேசி  உதவியாளரிடமே கேட்டேன்.
அவர்  இந்த   விஷயத்தையே   அப்படியே விட்டுவிடச்  சொன்னார்.

ஏன்பா  இந்தமாதிரி நடுராத்திரி கூட யாராவது  போன் செய்வாங்களா

அவர் முதலில் நிதானத்தில் இருந்திருக்க மாட்டார்.
தவறான நம்பரை  டயல் செய்திருக்கலாம்.

இல்லையே   அந்த நம்பரை நான் அழைத்தேனே 
அவன் எடுக்கவே இல்லயே...என்று சில நல்லவார்த்தைகளால்

என் தோழி திட்டினார்.
நாம் இதைக் கிளறுவதால்  நமக்குத்தான் நஷ்டம். இது போல்  இன்னோரு தடவை அழைப்பு வந்தால்
பிறகு ஆக்ஷன் எடுக்கலாம். பொறுமையாக இருங்கள்.

உங்கள் உறவினர்கள்   இடம் இரவு வேளையில் போன் செய்யவேண்டாம் என்றும்,  அப்படி ஏதாவது எமர்ஜென்சி   என்றால்  கைபேசியில்
அழைக்கவும் சொல்லச்  சொல்லிவிட    ஐடியா  கொடுத்தார்,.
ஆகக் கூடி என் தோழியின் தூக்கம் போயிற்று,.
நேற்று இரவு தங்கைவீட்டு க்குத் தூங்கப் போய்விட்டார்.

இந்தப் பதிவு எழுதிவைத்து இரண்டு நாட்கள் ஆச்சு. அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பதிவிடுகிறேன்.

இந்தப் பதிவில் நான் நன்றி சொல்லவிரும்புவது     சென்னைத் தொலைபேசியின் உதவியைத்தான்.
அந்த பெண்மணி   மிக நிதானமாகப் பேசி  எங்களை  ஒரு நிதானத்துக்கு
கொண்டுவந்தார்.
தோழி  ஜப்பானில் இருந்துவிட்டு இப்போது பத்துவருடங்களாகத்தான்
சென்னையில் இருக்கிறார். கணவரும் இல்லை.
விட்டிருந்தால் இந்த விஷயத்தை  அடித்துத் துவைத்துப் போட்டிருப்பார்,.
பாவம்.
இதற்காகவாவது  கணினி யில் உலவும்போது
தொலைபேசி     எண்ணெல்லாம்   கொடுக்காமல்   இருக்கவும்,
முகநூல்    பக்கத்தில்   குறைந்த   விஷயங்களைக் கொடுக்கவும்
சொல்லி விட்டு வந்தேன்.
ஏனெனில்  அவரும்   கிட்டத்தட்ட      இருபது    வருடங்களாகக்
கணினித் தொடர்பில் இருப்பவர்தான்:)

Wednesday, April 18, 2012

தமிழ்மணம் பக்கம் போக முடியவில்லையே

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

தமிழ்மணம்  க்ளிக் செய்தால் எரர்  ஃபர்பிட்டன் என்று வருகிறது.
எனக்கு மட்டுமா. எல்லோருக்குமா.
எல்லாருக்கும்னால் நிறைய சந்தோஷப்படுவேன்:)

Tuesday, April 17, 2012

ஆநந்தம் ஆநந்தம் ஆநந்தமே புது மலர்ச்சி இறுதிப் பகுதி

ஆநந்த வெளி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புத்தகத்தின் முதல் பக்கம் திரு சுரேஷ் பத்மநாபனின் கையெழுத்தே லிமரிக்ஸ் பாணியில் சந்தோஷம்,முன்னேற்றம்,வாழ்வின் அற்புதங்கள் எல்லாவற்றையும் சொல்வதாக எனக்குத் தோன்றியது. நன்றி திரு சுரேஷ் பத்மநாபன்,ஷான் சவான்.      

 நாவல்  ஆரம்பத்திலியே கதநாயகி மாயா   கனவும்  விழிப்பும் கலந்த ஒரு நிலையில்   கண் விழிக்கிறாள்.
யாரோ ஒருவர் சந்நியாசியா    யோகியா  என்று யூகிக்க முடியாத தோற்றத்தில் அவளைக் கை அசைத்துக் கூப்பிடுவது போல உணர்கிறாள்.

இந்த இடத்தில் வரும்   பகுதியை மட்டும் சொல்கிறேன்.(சாரி கணேஷ்)
  உடலின் அவசரம் கனவிலும் பிரதிபலிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இதையும் மீறி விழித்துக் கொண்டு ,தூக்கக் கலக்கத்தைப் போக்க காப்பியை நாடுகிறாள்.
அவள் கேட்கும் சத்தங்கள் என் வாழ்விலும் உண்டு:)
வேலைசெய்பவர் பாத்திரங்களைத் தடல் படால் பண்ணும் சப்தம். வேளுக்குடி  கிருஷ்ணன் சாரின்  பாரதத்தில்  தர்மம்,
வாரபலன்கள் ஒரு டிவியில், மஹாநதி ஷோபனா இன்னோரு தொலைக்காட்சியில் சௌந்தர்ய லஹரி   இப்படியான கூட்டுக் கலவை ஒலிகள். .

இன்னோரு பாரா காஃபி பற்றியது. சிக்கரிபோட்ட காஃபி தனக்குப் பிடிப்பதையும்,நுரௌயில்லாத காஃபி தன் அம்மாவுக்குப் பிடிப்பதையும் நினைக்கிறாள்.
 உடனெ   எனக்கு மாயாவைப் பிடித்துவிட்டது,.:)

அவள் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களிலிருந்து விடுபட  உதவிக்கரமாக நிற்கும் ஜோதி.
இவர்கள் இருவரும் இணைந்து சந்திக்கும் குருஜி...அதுவும் ஜீன்ஸ் போட்டவர்:)

அவரது சஹஜமான அணுகு முறையில் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ளும் பாங்கு.

எனக்கே இந்தக் குருஜியைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!


நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்று விளக்க ஒரு கதை சொல்கிறார்.
பலவித பறவைகளைக் கடவுள் பார்க்க விரும்புகிறர்
வண்ணமயில், பாடும் குயில், பச்சைக்கிளி
என்று விதவிதமாகப் பறவைகள் வருகின்றன.
அங்கு வந்து சேரும் காகத்துக்குத் தன்னைப் பார்த்துச் சோகமாகி விடுகிறது

வேஷம் போட்டுக் கொள்கிறது ...ஒவ்வொரு வண்ணப்பறவையிடமிருந்தும்
ஒரு ஒரு இறகை வாங்கி த் தன் உடம்பில் சொருகிக்கொள்ளுகிறது.

கடவுள் பறவைகளின் அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டே வரும்போது
காகத்தின் அருகே வந்து குழப்பத்துடன் பார்த்துவிட்டு, ஒரு ஏளனச் சிரிப்போடு போகிறார்.
வந்த பறவைகள் அனைத்தும் வெற்றிபெற்ற தாக அறிவிப்பவர் வேஷம் போட்டக் காகத்தை அடையாளம் காடி, இவர் தோற்கிறார்.
கோமாளித்தனமாக இருக்கிறது அவரது தோற்றம் என்றதும் காகம் அழுகிறது
ஆத்திரத்தில் தான் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறிகிறது.
இப்பொழுது உண்மையான காக வடிவத்தில் அதைப் பார்த்த கடவுள், காகமும் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்.

அண்டா  நிறைய பாயசத்தில் இந்தப் பாரா  ஒரு கப்தான்.

எனக்கு இந்தப் புத்தகத்தைக் கொடுக்கவேண்டும் என்று தோன்றிய எங்கள் ப்ளாகிற்கு  மனம் நிறைந்த மகிழ்ச்சியான  நன்றி.
எழுதிய திரு சுரேஷ் பத்மநாபன், ஷான் சவான், அருமையாகப் பெயரும் சூட்டித் தமிழாக்கமும் செய்திருக்கும் திரு கேஜி ஜவர்லால்,
வெளியிட்டு இருக்கும் கிழக்குப் பதிப்பத்தகத்தார் அனைவருக்கும் இந்த சந்தோஷத் தருணங்களைச் சமர்ப்பிக்கிறேன்.


Monday, April 16, 2012

ஆநந்தத்திற்கு அழைப்பு விடுவோம்.....நன்றி எங்கள்ப்ளாக்

அரசனின்  கனவு நிஜமான இடம்
இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததுமே   பிடித்த விஷயங்களே கண்ணிலே  பட்டன.
  கனவுகள்  எனக்கு  நிறையவே வரும்.அதுவும்  சிலசமயம் இனிமை சிலசமயம்
படபடப்பு ,அவசரம் என்று.அது   முதலில் என்னைக்  கவர்ந்தது.
அதற்கு முன்னால்  பெண்ணை உருவாக்கும் இறையின் அழகான பொன்மொழிகள் . அதை எழுதாவிட்டால் இந்த நாவலின் விமரிசனம் முழுமையாகாது என்று தோன்றியது.

இதோ
அந்த  வரிகள். இறைவிக்கும்  இன்னோரு தேவதைக்கும் நடக்கும் சம்பாஷணை....'அற்புதமான படைப்பு. மிகவும் யோசித்துச் செய்திருக்கிறீர்கள்
வேறென்ன திறமைகள்  இவளுக்குத் தந்திருக்கிறீர்கள்''

அவளால்  வாழ்க்கையின் சுமைகளை சுமக்கவும் திறம்பட க் கையாளவும்   முடியும்.
ஏககாலத்தில் அழவும் சிரிக்கவும் முடியும்.
இவளில்லாது மாயக்கதைகள் இருக்காது
பாடவும் ஆடவும்,கொண்டாடவும் தெரிந்தவள்
தான் நம்பும் விஷயங்களுக்காகப் போராடுவாள்
தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக  நன்மைக்காக  எந்தத் தியாகமும் செய்யத்தயங்காதவள். 
குழந்தைகளின் வெற்றியில்  களித்துக்  கூக்குரல்   எழுப்புகிறவள்.
பிரியமானவர்களை இழக்க நேர்ந்தால் வாழ்வு முழுவதும் அழுகிறவள்.
வாழ்வின் சிரம்னகளை எதிர்த்து நிற்கும்  பலத்தை நொடியில் உருவாக்கிக்  கொள்கிறவள்.
ஓர் அணைப்பும் ஒரு முத்தமும்  உடைந்த நெஞ்சத்தை ஆற்றவல்லது  என்பதை அறிந்தவள்.
அச்சத்தியமான பொறுமை கொண்டவள் என்றாலும் எதிர்த்து  உந்தித்தள்ளப்
படுகிறபோது உறுதியாக  எதிர்த்து நிற்கும் திறமை கொண்டவள்''
தேவதை பெருமூச்சு விடுகிறது.
இந்த உன்னதப் படைப்பு மற்ற படைப்புகளுக்கு அநீதி இழைக்கப் பட்டது போலத் தோற்றம் தருகிறதே.

இல்லை இந்தப் படைப்பிலும் ஒரு  பிழை இருக்கிறது.
??? தன் உன்னதம், தன் மதிப்பு என்ன என்பதை மறந்து விடுகிற தன்மை:(

அற்புதம் இல்லை? இந்த ஒரு  பக்கத்துக்கே  இந்த நாவலைத் தலையில் வைத்துக் கொண்டாட ஆசை.
இனி  கதை.
மாயா என்ற மென்மையான இளம்பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதியைப் பார்க்கப் போகிறோம். அவள் வாழ்க்கையிலும் ஆநந்தததிற்கு வழிக்கோடு ஒன்று வரைய ஒரு குரு வருகிறார்..
இன்றைய காலகட்டத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட இந்த நாவலை நான் 
இரண்டு நாட்களில் முடித்துவிட்டேன்.(நாவலின் சுவை அப்படி)
இப்போது அசை போடும் நேரத்தில் மீண்டும்   படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கணும்.
 

 
 



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Thursday, April 12, 2012

நம்ம ஊரு பூமியாட்டம்.!!

வ்
சுனாமி வருமோ.....
வீடு நோக்கி விரையும்  நம்மையே.....
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நேற்று மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம்.

அந்த உறக்கத்திலும் ஏதோ நகருவது போலவும்  அலார்ம் அடிக்கிற மாதிரியும் தோன்றுகிறது. கஷ்டப்பட்டுக் கண்ணை விழித்தால்
உறவினர் ஒருவர் தொலைபேசுகிறார்.
அக்கா  இங்க எல்லாம் நாங்க ஆஃபீசுக்கு வெளியே நிற்கிறொம்.

நீங்க என்ன பண்றீங்க.  எர்த் க்வேக்!!!! ட்ரெயினெல்லாம் ஓடலை.
ஒரே பயம்.'
சாதாரண நாளிலியே நமக்கு மத்தவங்க பேசுவது புரிய  சிறிதே
நேரம் பிடிக்கும்.
 இரவுத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நேற்று பகலில் தூங்கிச் சமன் செய்யலாம் என்றால் இதென்னடா பூகம்ப பூதம் வந்ததே.
உடனே   சமாளித்துக் கொண்டு  தட்டிக் கொண்டிருந்த தச்சர் சிங்கத்திடம்
விரைந்தேன். விசாலி போன். ஏர்த்க்வேக் சுனாமி . பையன் எங்க. என்று மூச்சு வாங்கினேன்.
என்ன உளருகிறாய்.
கொஞ்சம் நிதானப் படுத்திக்கோ.
கையில என்ன.
மருந்துப்பொட்டியும், கைப்பை,கைபேசி

எங்க கிளம்பறே.
வீட்டுக்குள்ள இருக்கக் கூடாதே வெளில வாங்க. பையன் எங்க.??????

அவன் இப்பதான் ஏதோ வேலையா ராதாகிருஷ்ணன் சாலைக்குப் போனான்.
அடடா உடனே கூப்பிடணுமே.

டயல் டயல் டயல்.
இல்ல ஒரு நம்பரும் கிடைக்கலை. பக்கத்துவீட்டு நம்பர் கூடக் கிடைக்கலை.

சரி நான் போய்ப் பார்த்து அழைத்துவரேன். நீ டிவி பார்த்து என்னன்னு கேளு.
இவளுக்குன்னு ஏதாவது பயம்.
எனக்குத் தெரியாம  என்ன நில நடுக்கம்  என்று முணுமுணுத்தபடி நகர்ந்தவரை
வேகமாகச் சென்று பிடித்தேன்.
அப்புறம் உங்களைத் தேட முடியாது என்னால்.

ஏம்மா  நார்மலாகவே இருக்க மாட்டியா ரோட்ல பாரு அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு என்றபடி திரும்பிப் பார்த்தார். சாலையில் வாகனங்கள் விரைந்து ஓடிக்கொண்டிருந்தன.
எதிர்த்த வீட்டு வாட்ச்மேன். இன்னா சார் பூமி நடுங்கித்தே. அல்லாம் வீட்டுக்குப் போறாங்க  சார்.
ஓ. நீ சொல்றது நிஜம்தானா.
சரி வா. அதற்காகச் சொத்து பூராக் கொண்டுவரவேண்டாம். ரேடியோல  நியூஸ் கேட்கலாம் என்றபடி  எங்க வாக்னாரைக் கிளப்பினார்.

நாங்கள் போகும் நேரம்   வழியெங்கும் நெரிசல் .பீதி. பாதி சிரிப்பு பாதி.
மகன் சென்ற அலுவலகத்துக்குப் பக்கம் அனைவரும் வெளியே நிற்கிறார்கள்..

எங்களைப் பார்த்துவிட்ட மகன்.
அம்மா உன்னைக் கூப்பிட்டேன் . ரிங் போகலை..
சரி இங்க வேலையை முடித்து வரலாம்னு நினைத்தேன் என்கிறான். நாங்களும் இங்கயே நிக்கறோம்பா. நீ பேசிட்டு வா  என்றேன்..

அவன் கிளம்பி வண்டியில் ஏறிக் கொண்டதும் காய்கறி இதர பொரொட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரவும் மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது.

 நல்லவேளை சிலநிமிடங்களில் வந்துவிட்டது. எப்பவும் இருக்கும் மின்வெட்டு நேற்று இல்லை.
வீட்டுக் கூடத்தில் எண்டிடிவி அலற,
என் அறையில் சன் டிவி கதற பூகம்ப மஹாத்மியம் 6 மணி அள்வில் ஓய்ந்தது.

சுனாமிவந்தால் எப்படி இருக்கும் என்று   பார்க்கப் போகிறோம் என்ற கும்பலை நினைத்துதான்  மனதுக்கு உறுத்தலாக இருந்தது.
உண்மையில் வந்திருந்தால்????.

புதுவருடம்  நாளை நல்லபடியாகப் பிறக்கட்டும். நந்தன வருடம் நம் ஊரை அமைதியான  நந்தனமாக   இந்த வருடம் ஒளிரட்டும்.


அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Wednesday, April 11, 2012

ஆநந்தம் நம்மிடம் வர ஒரு மிஸ்ஸ்ட் அழைப்பு போதுமாம் -1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எங்கள் ப்ளாக்  பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவை இல்லை:)
ஆரம்பித்த சில நாட்களில்   வாசகர்களைத் தன் பக்கம்  இழுத்துக் கொண்ட

பாசக் குடும்பம்.
யாரையும் கவருவதற்காகத் தனி முயற்சி எடுக்காமல் இயல்பாகவே
நன்மை நிறைந்த பதிவுகள்.

புத்தகமாக  ஒரு மாத இதழாக  வெளிவர என்ன தகுதி வேண்டுமோ
அத்தனையும் கொண்ட   ஒரு வலைப்பூ.

அதில்  சில வாரங்களுக்கு முன் நடத்தின ''தங்கத்தவளைப் பெண்ணே    ''நகைச்சுவை  போட்டி   எல்லாரையும் ஈர்த்தது. என்னையும் கவர்ந்தது.

புருடா விடுவது,லாஜிக் இல்லாமல் கதை எழுதுவது எல்லாமே எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.

இதில் என்ன சங்கடம் என்றால் என்னை மாதிரியே எங்கள் ப்ளாக் வாசகர்களும்   இருந்ததுதான்.
என்னை மாதிரி என்றா சொன்னேன். என்னைவிடப் புத்திசாலிகள் என்று எழுதி இருக்கவேண்டும்.
கீதா சாம்பசிவம், மீனாக்ஷி, அப்பாதுரை, கணேஷ்,குரோம்பேட்டைக் குறும்பன்  இப்படி எல்லாரும் போட்டியில் இறங்கிவிட்டார்கள்.

அட அசடே  ஒரு நல்ல கதை எழுதக் கூட லாயக்கில்லையே   என்று என்னையே தலையில் குட்டிக் கொண்டேன்.

ஆச்சர்யம் என்னவென்றால் எனக்கும் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் ஒரு  ஞாயிறு பிற்பகல்  எங்கள் ப்ளாக்  குழுவின் ஒரு(!!!)
ஆசிரியர்  கௌதமன்  படபடக்கும் வெய்யிலில் நம் வீட்டுக்கு பரிசுப் புத்தகத்தோடு வருகை தந்தார்.
காப்பி கீப்பி சாப்பிடுவாரோன்னு பார்த்தால் தண்ணீர் போதும் என்று விட்டார்,. நம் வீட்டுக் காப்பி மகிமை அவ்வளவு தூரமா பரவி இருக்கிறது   என்று வியந்தபடி அவர் அன்போடு அளித்த புத்தகத்தைப் பார்த்தேம்.
''ஆநந்ததுக்கு ஒரு மிஸ்டு கால்''

புத்தகத்தின் தலைப்பே வியப்பைத் தந்தது,. அப்படியெல்லாம் சந்தோஷம் நம்மைத் தேடி வருமா என்ன?
என்  சந்தேகத்தை அவர் போக்க முனையவில்லை. படித்துப் பாருங்கள்.

அவசியம் ஃபீட் பாக்''   கொடுக்க வேண்டும் என்ற அன்புக்கட்டளை வேறு.

இப்போது புத்தகம்

இதை ஆங்கிலத்தில் எழுதியவர்   ஸ்ரீ சுரேஷ் பத்மநாபன்.
ஆன் க்ளௌட் 9'' என்கிற புத்தகத்தின் தமிழாக்கம்
ஆநந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்''
இதைத்   தமிழாக்கம் செய்தவர்
  தமிழ்ப் பெயர் சூட்டியவர்  நம்
இதயம் பேத்துகிறது   வலைப்பூவின் கே ஜி ஜவர்லால்.
************************************************************

வெளியிட்டவர்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.


சமீபகாலமாக இவர் பதிவுகளைப் படிக்க முடிகிறது பின்னூட்டம் இட முடியவில்லை.

இப்போது இந்தப் பின்னூட்டம் வழியாக் முறையிட்டுக் கொள்ளுகிறேன்.:)

முன்னுரை மட்டும் முடித்திருக்கிறேன்.
புத்தகங்களைப் படிக்கும் அளவு அவைகளை விமர்சிக்கும்

புத்தி எனக்குக் குறைவுதான்.
ஆனால் நன்றாக  இருந்தது என்று சொல்லி முடிக்கவும் விருப்பமில்லை. அது தவறு கூட. ஏன் என்றால் அருமையான சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்திரூக்கிறது   இந்த நாவல்,கட்டுரை,புதினம்  எப்படி வேண்டுமானாலும்  சொல்லலாம்.
அதனால்  கொஞ்சம் மூளையைக் கசக்கிவிட்டு
அடுத்த பதிவில் என் கருத்தைத் தொடருகிறேன்.
சரியா.




Sunday, April 08, 2012

பங்குனியின் பௌர்ணமி

மழை வருமோ,சுற்றிலும் மேகம்
நீல நிலா
மரக்கிளைகளோட உறவாடும்நிலா
ஈஸ்டர் நிலவோ
திருமலை  நிலா
இந்தத் தடவையும்  நிலவு இரண்டாகத் தெரியுமோ என்ற
சந்தேகத்தோடுதான் காமிராவை எடுத்தேன்.நிலவு  இரண்டாக இல்லை. கொஞ்சம் திரையிட்ட நிலாவாகத் தெரிந்தது.

பார்த்தால் மேகங்கள் சூழ ஆரம்பித்திருந்தன.
விளையாட்டு நிலா. மேகங்கள் விரைந்தனவா...இல்லை நிலா
ஓடி மறைந்தாளா தெரியாது.
கிடைத்ததில்  சிதையாத சில நிலாக்களை அளிக்கிறேன்.:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa