Blog Archive

Sunday, October 23, 2011

கதை சொல்லும் பாட்டி

தாயும் அவளைப் பெற்றவளும் நானும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்










புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பரை அறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும் ஒரு கால் உடைந்த பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு குட்டி ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவிண் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும்.
மண்கலயங்களில் காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய்,ஓகே ஆயில் எனப்படும் பட்சணம் செய்யும் எண்ணெய்
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.
சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும் (ஒரு பாதி) டாக்டரை (அரை வைத்தியர்=கம்பவுண்டர்)வரவழைப்பார்

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள்,
பிறகு என் திருமணம் எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.
சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)

அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.
நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. நான்
 திரும்பிப்  போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன் சொல்கிறான்
 ,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில்

வரும்:))))
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்கு(சிகாகோ)

இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.


எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.
இந்தச் செல்லப்பாட்டி   என்  வாழ்வின்   வெகு முக்கிய அங்கம்
அவளை நட்சத்திரப் பதிவில் கவுரவிக்கணுமா இல்லையா.


7 comments:

மதுரை சரவணன் said...

nalla irukkungka.. nadai vekamaaka ullathau.. vaalththukkal

வெங்கட் நாகராஜ் said...

சீனிப் பாட்டி... உங்கள் எழுத்துகள் மூலம் எங்கள் கண்முன்னால் நிற்கிறார். அந்தக்கால மனுஷர்கள்... ம்...

நட்சத்திர வாரம் அருமையாக சென்றது அம்மா.... வாழ்த்துகள்...

மதுரையம்பதி said...

அந்தக்கால வீட்டின் அமைப்பை அப்படியே எழுதியிருக்கீங்கம்மா....எனக்கும் மதுரை டி.வி.எஸ் நகர் வீட்டு நினைவுகள் வந்தது..... :-)

Geetha Sambasivam said...

கட்டாயமாய் கெளரவிக்கணும். மதுரை மேலாவணி மூலவீதி வீடுகள் எல்லாம் ரொம்பப் பெரியவை. அதிலே ஒரு போர்ஷனில் நாங்க இருந்ததே பெரியதாக இருக்கும். பல நினைவுகளைக்கிளப்பிய பதிவு

வல்லிசிம்ஹன் said...

நன்றி சரவணன்.

மனதின் நினைவுகள் வேகமாக விரல் வழி இறங்கி விடுகின்றன:)

வல்லிசிம்ஹன் said...

எங்க சீனிம்மா பாட்டி, உழைப்புக்கு அஞ்சாதவர்.அவர் உடலில்
ஒரு திசு கூடச் சோம்பல் பட்டது இல்லை.என் வாழ்க்கையின் முன்னோடிகள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நட்சத்திரங்கள்தான்
வெங்கட்.

மிக மிக நன்றி.

துளசி கோபால் said...

வீடு மட்டும்தான் சின்னது, மனசு? மகா பெரியது. அதான் அந்தக் கால வாழ்க்கையில் அன்பு ரொம்பவே நிறைஞ்சு வழிஞ்சுருக்கு.

சீனியம்மாவுக்கு சிறந்த கௌரவம்!!!!