Blog Archive

Friday, March 11, 2011

அம்மாவின் டயரியில் குறிப்பிடாத வரிகள்

அம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில்
ஒன்று , மருத்துவ மனையில் அப்பா  சரியாகக் கவனிக்கப் படாதது.

அவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம்.
அப்பாவிடம் உனக்கு நெஞு வலிக்கிறதாப்பான்னு கேட்டு இருக்கலாம்.
அவர்களது புத்திரச் செல்வங்கள் அவர்து
நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாதது ஒரு குற்றம்.
அவரவர் வேலைகளில் மூழ்கி
36 மணிநேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத  உயிரை இழந்தோம்.

ஒரே  ஒரு  பூரண செக்அப் அந்த மருத்துவர் செய்திருக்கலாம்.

அம்மாவும் சின்னத்தம்பியும் தான் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.
இரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது.
ஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும்
 போல நெற்றியில் திருமண்காப்பு,
''என்னம்மா  சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா ''
என்ற புன்சிரிப்புடனான கேள்வி.

அம்மா சொன்னது போல்  கண்ணும் கருத்தும் இயங்கவில்லை.
அன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன்.
எப்பொழுதும் போல மெச்சிக்கொண்டார்.

மதியத்துக்கு மேல் தான் நான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது பலவீனம்
உச்சக் கட்டத்தை  அடைந்தது.
வந்து பார்த்த அருமை வைத்தியர் க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து
வியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா ''என்று
சொல்லிவிட்டு டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.

அப்பாவின் கைகள் மறுத்து,வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப்பேச்சு வரவில்லை.
அருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

என்னால் பார்க்க சகிக்க முடியாமல் அறைக்கு வெளியே வந்தேன்.
வைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன்.
அவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி.
 கண்கள் திறந்திருக்க,பார்வை இல்லை.
அம்மா அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே
கைகளைக் கூப்பி அவர்கைகளில் முகத்தை வைத்துக் கொண்டார்.
வந்த வைத்தியர் மாஸ்ஸிவ் அட்டாக்'' என்று உரைத்து விட்டு வெளியேறினார்.
பிறகு சின்னத் தம்பி வந்தான்.
வேலைகள் நடந்தன. நான் அந்த நர்ஸம்மாவிடம்  என்ன ஆச்சு என்று கேட்டதற்கு
''வயசாச்சு இல்லம்மா'',  என்று தன் தொலைபேசியில்  சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.
அன்று எங்களுக்கு மிகவும் உறுதியாக இருந்து எங்களைக் கவனித்துக் கொண்டது, வாய் அதிகம் பேசாத எங்கள் சிங்கம் தான்.
இன்றும் அந்த மருத்துவ மனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.

கடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள் தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.இந்தப் பதிவு
ஏற்கனவே   வல்லமை மின்னிதழில்  பிரசுரம்  ஆகி இருக்கிறது. ஆசிரியர் திரு அண்ணாகண்ணனுக்கு  மிகவும் நன்றி.

பலவருடங்களாக  மனதில் உறுத்தியது இந்தச் சம்பவம் இப்பொழுது எழுதவும் காரணம் உண்டு.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தம்பி    சர்க்கரை நோயில் அவதிப் படுபவர்.
தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.

அவரும் வெளியில் கிளம்பியவர் திரும்பி வருகையில் தலை சுற்றி 
நடைபாதையில்  உட்கார்ந்துவிட்டார். அதுவும்   சென்னையின் சுறுசுறு அண்ணாசாலையில்.
கிட்டத்தட்ட   நினைவிழந்த நிலையில், அவரைப் பார்த்த நல்ல மனிதர்  அவர்கையிலிருந்த  டயபெடிஸ் ஐடி   அட்டையைப் பார்த்து அவரை
மருத்துவமனையில்  சேர்த்து, வீட்டுக்கும் சொல்லிவிட்டார்,.
50 வயதே   ஆகும் அவரைக் காப்பாற்றிய   நல்ல மருத்துவரும் இருக்கிறார்.
இதையும் இங்கே பதிய வேண்டும் இல்லையா.


மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்'
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பெற வேண்டும்.

7 comments:

துளசி கோபால் said...

சேவை மனப்பான்மை இன்னும் சிலரிடமாவது இருக்கு என்பதே இப்போதைய மகிழ்ச்சி.

வல்லமையில் கட்டுரை அழகா வந்துருக்குப்பா.

இனிய வாழ்த்து(க்)கள்.

பாச மலர் / Paasa Malar said...

உயிர் காத்து நின்றவருக்குப் பாராட்டுகள்..

ஸ்ரீராம். said...

பகிர்ந்து கொண்டதில் மன பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும். வேதனையான சம்பவங்கள்.

இந்தத் தவறுகள் இனியாவது எங்கும் நடக்காமல் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அதே தான்.மனித மனசில் கொஞ்சமாவது ஈரம் இருக்கிறது.

எழுதிவிட்டேன். இப்போது தோன்றுகிறது எல்லோரையும் வருத்தப் பட வைக்கிறேனோ என்று. இனி எழுத்தை மாற்றணும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாசமலர். நலமென்று நம்புகிறேன்.

சமுத்ரா said...

leave it...it's called 'விதி'..

வல்லிசிம்ஹன் said...

வேறேன்ன சொல்வது. இயலாமையின் மறு பெயர் விதி என்றே நினைக்கவேண்டி இருக்கிறது. நன்றி சமுத்ரா.