Blog Archive

Thursday, July 08, 2010

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

சமீபத்தில் ஒரு திருமணம், ஒரு புதுமனை புகு விழா, ஒரு பிறந்தநாள் அறுபதாவது பிறந்த நாள் என்று வரிசையாக விழாக்களில் கலந்து கொள்ளும் அனுபவம் கிடைத்தது. மகிழ்ச்சி தான் எல்லா இடங்களிலும்.
அதில் அந்தப் புதுமனை புகு விழாதான் என்னை மிகவும் ஈர்த்தது. ஆறு சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பம். தந்தை தாங்கள் வாழ்ந்த பழைய வீட்டை விற்று விட்டு அபார்ட்மெண்ட்களாகக் கட்டிக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டார்.புத்திசாலித் தந்தை .தனக்கும் அதில் ஒரு அபார்ட்மெண்டை வைத்துக் கொண்டார்.
வெகு விமரிசையாக நடந்த அந்த விழாவில் அவருடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நான்கு கிரௌண்டு நிலம்.அதில் பழைய வீடாக இருந்து அத்தனை குழந்தைகளும் வளர்ந்து, தண்ணீர்,பணம்,உடல் நலம் கெடுதல் அத்தனையையும் அந்த வீடு பார்த்திருக்கிறது அதே போல மூன்று சகோதரிகள் மூன்று சகோதரர்கள் வளர்ந்து திருமணம் செய்து அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து தனித்தனியே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

பெரியவருக்கே சென்ற வருடம் எண்பது வயது பூர்த்தியாகி அந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் சென்றிருந்தோம். சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே இருந்த பிணைப்பைக் கண்டு அசந்து போனேன். மகன்களும் அவர்களின் மனைவிகளும் மகள்களும் அவர்களின் கணவர்களும் கண் படும் அளவுக்கு அத்தனை ஒற்றுமையாக அந்த விழாவை இரண்டு நாட்களாக ஒரு சிறு சுளிப்புக் கூட காட்டாமல் துளிக் கூட அவசரம் காண்பிக்காமல் சாஸ்திர சம்பந்த விசேஷங்கள் நிறைவேறின.
ஒரு பைபாஸ் அறுவைசிகித்சையைத் தாண்டி வந்திருக்கும் அந்தப் பெரியவரின் கண்டிப்பும்,கனிவும் எப்பவுமே பிரசித்தி.

அவர் மனைவியோ கேட்கவே வேண்டாம். அவர் சொல்லைத் தாண்டி ஒன்றும் செய்ய மாட்டார்.அவர்கள் இருவரையும் பார்க்கையில் எனக்கு எப்பவுமே படிக்காத மேதை என்ற பழையபடத்தில் வரும் ரங்காராவும் கண்ணாம்பாவும் தான் நினைவுக்கு வருவார்கள்:)

அவருக்கு ஏற்ற உடல் பருமனும் முகவிலாசமும் , சிரிக்கும் கண்களும் வெகு பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள். பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையிலியே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திவிடுவார்கள்.

அவர் தோற்றம் ஆஜானுபாகுவாகத் தெரிந்தாலும் இந்த அம்மா பக்கத்தில் இருக்கும் போது அவ்வளவு பருமன் தெரியாது. நான் அவர்களை மிஸ்டர் அண்ட் மிசஸ் சாண்டா என்று அழைப்பேன் .
எங்க குடும்பத்திற்கும் அவங்களுக்கும் நல்ல உறவு .கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்.

இப்போது இந்த விழாவுக்கு வருவோம். நான் அவர் அருகில் உட்கார்ந்து,


''என்ன மாமா,மீண்டும் எல்லாரும் ஒன்று சேரப் போகிறீர்களா.



இன்னும் நெருக்கம் அதிகமாகும். பேரன்கள் பேத்திகளுக்கும் தாத்தா பாட்டியோட இருக்கும்

சந்தர்ப்பம் கூடுகிறது 'என்றேன்.



அவர் ஆமாம்மா,ம்மீண்டும் ஒன்று சேரச் சந்தர்ப்பம்.

வருவதையும்,வாடகைக்கு விடுவதையும் அவர்களிடம் விட்டு விட்டேன்.

சுதந்திரமாக இருக்கப் பழகி விட்டார்கள்.

நாங்களும் அப்படியே எங்கள் வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்ற மாதிரி



மாற்றி அமைத்துக் கொண்டோம்.

நான் இன்னும் ஆரோக்கியமாகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறேன்.

அவளுக்கும் ஒன்றும் குறைவில்லை.

இதே போல வாழ்க்கை நடக்கும் வரை கவலை இல்லை.



பிள்ளைகளின் துணை தேவை என்பது பல வேளைகளில் ஏற்படக் கூடும்.

அப்போது அவர்களின் உதவி கிடைத்தால் சுகம்தான்.



இருபக்கமும் சுதந்திரமும் வேண்டும். தொந்தரவும் இருக்கக் கூடாது.

பெரியவனுக்கே ஐம்பத்திரண்டு ஆகப் போகிறது.

அவன் குழந்தைகளும் வளர்ந்து பெரிய பேத்திக்குக் கல்யாணவயசு வந்தாச்சு!!



அதனால் நான் ரொம்ப நிதானமாகத் தான் இந்தக் கட்டிட வேலைகளைச் செய்தேன்.

அவரவர் இஷ்டப்படி செய்யட்டும் என்று முடித்தார்.



உங்களுக்கு அவர்கள் உங்கள் அருகில் இருப்பது நல்லதுதானே மாமா'

என்றேன்.

நல்லதுதான். அவர்களுக்கும் அது நல்லதாக இருக்கணும்.

சட்டென்று அலுப்பு வரச் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது பார்த்தியா''

என்றார்.

எனக்குச் சட்டென்று காலமான என் தந்தையே அங்கே உட்கார்ந்து பேசுவது போலத் தோன்றியது.

என் கண்கள் கலங்குவதை அவர் கவனித்திருக்க வேண்டும்.

ரொம்ப யோசிக்காதம்மா.

காலத்தை அதன் போக்கில் விட்டு விடு.

போய்ச் சாப்பிட்டுவிட்டு,வெற்றிலை,பாக்கு தாம்பூலம் வாங்கிக் கொண்டு போ.

மாமி உனக்குப் பிடித்த பச்சை வர்ண கல்கத்தா புடவை வாங்கி வைத்திருக்கிறாள்.'

என்று சிரித்த வண்ணம் சொன்னார்.

நான் காஞ்சீபுரம் காட்டன் தானே கேட்டேன் என்று நானும் சிரித்தவண்ணமெ

எழுந்துவிட்டேன்.



அப்பாவையும் அம்மாவையும் நினைத்தபடி அவர்களை நமாஸ்கரித்துவிட்டு

வெளியே வந்தேன்.

எங்களுடைய எண்பது எப்படி இருக்கும்.நல்லபடியே இருக்கும் என்று

நடையைக் கட்டினேன்

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

20 comments:

KarthigaVasudevan said...

டைட்டில் ரமணிச்சந்திரன் நாவல் மாதிரி இருக்கு வல்லிம்மா :)


காஞ்சிபுரம் காட்டன் தெரியும்,பச்சை வர்ண கல்கத்தா புடவையா? ...அதுவும் காட்டன் தானா இல்ல வேறயா? எங்க பக்கத்து வீட்டுப்பாட்டி ஒருத்தர் முன்னெல்லாம் சில்க் மாதிரி துணியில பட்டை பட்டையா குறுக்க கோடு போட்ட ஒரு புடவையை மடிசாரா உடுத்திட்டு இருப்பாங்க,அந்த மாதிரி புடவை அவங்க உடுத்தி மட்டும் தான் பார்த்திருக்கேன் நான்.அதுக்கு என்ன பேர்ன்னு தெரியலை.

ரங்காராவ் கண்ணாம்பா என்ன ஒரு அசத்தல் அப்பா அம்மா ஜோடி!

ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையும் ,நல்ல புரிதலும் கணவன் மனைவி உறவில் மட்டும் இல்லை; ஒரு காலகட்டத்துக்குப் பின் பெற்றோர்கள் பிள்ளைகள் இடையேயும் சரியான விகிதத்தில் இருந்துட்டா எல்லாரோட வாழ்க்கையிலும் நிம்மதியும் ஆனந்தமும் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கார்த்திகா, அவ்வளவு பெரிய எழுத்தாளர்...அவங்க தலைப்பை யோசிச்சு வைப்பாங்க. எனக்கொ மனசில எப்பவும் ஏதாவது பாட்டு போய்க் கொண்டே இருக்கும். அதில அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை, அதில் அணைந்திடாத தீபமாகும் பாசவலைன்னு ஒரு பாட்டு நேத்திக்கு ஓடியது. அதையே இந்த நிகழ்ச்சிக்கு ,பதிவுக்கும் டைட்டிலாக வைத்துவிட்டேன்:)

அடுத்து நீங்கள் சொல்லும் அந்த சில்க் காட்டன் பெங்கால் காட்டன் இப்பவும் இருக்கு. பெங்கால் கைத்தறி கடைகளிலும், பொடீக் களிலும் கிடைக்கும்ம்மா.
உண்மைதான் அடிப்படையில் புரிதலும் அன்பும் இருந்தால் எல்லா உறவுகள் நன்றாகத்தான் இருக்கும். அநாவசியமான சந்தேகங்கள்,மற்றவர் பேச்சைக் கேட்பது எல்லாம் சிலசமயம் விரிசல்களுக்குக் காரணமாகின்றன.நன்றி ம்மா

மதுரையம்பதி said...

மிக நெகிழ்வாக இருக்கிறது படிக்க....இப்படியான பெரியவரின் குழந்தைகள் கண்டிப்பாக இவரது குணங்களுக்கு ஏற்ப இருப்பார்கள்....

Geetha Sambasivam said...

கார்த்திகா சொல்வது சின்னாளப்பட்டுப் புடைவைனு நினைக்கிறேன். அதுதான் சில்க் போன்ற துணியில் பட்டை பட்டையாக் குறுக்கு, நெடுக்குக் கோடு போட்டு மடிசாருக்கு வசதியாக இருக்கும்! அப்புறம் கல்கத்தா காட்டன் ரத்தன் பஜார் ஹாண்ட்லூம் ஹவுஸில் அருமையாக இருக்கிறது. மத்திய அரசு நிறுவனம் என்பதால் அதிகக் கூட்டம் இருப்பதில்லை. ஆனால் தரமான புடைவைகள். கல்கத்தாவிலே வாங்கினாலும் இதே விலைதான் இருக்கு.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, போஸ்ட் படிச்சுப் புடைவை பத்தி எழுதினால் எப்படி?? நீங்க சொல்லும் தம்பதிகள் மனக்கண் முன்னே வந்துட்டுப் போயிட்டாங்க. இப்படி என் பெண்ணின் புக்ககத்து உறவிலேயும் மாம்பலத்தில் இருந்த கிரவுண்டை எல்லாப் பெண்கள், பையன்களுக்குக் கட்டிக்கக் கொடுத்தாங்க. எல்லாரும் அந்த கிரவுண்டிலேயே வீடு கட்டிக்கொண்டு ஒற்றுமையாய் வாழ்கிறார்கள். இது ஒரு அருமையான எண்ணம் தான். சொந்தமும் விட்டுப் போகாது, யாருக்கும் மனக்குறையும் இருக்காது. எல்லாரும் சந்தோஷமாக வாழவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மௌலி.
இத்தனை நபர்கள் கொண்ட குடும்பத்தை ரொம்ப நாட்களாகவே பார்க்கிறேன். அவர்களிடம் சின்னச் சின்ன சச்சரவு வந்தாலும் சீக்கிரம் தீர்த்துக் கொள்கிறார்கள். 25 வயசுலிருந்து 10 வயசு வரை அத்தை மாமா பசங்கள். அந்த நெருக்கம் எல்லாமே என்னை மிகவும் பரவசப் படுத்தியது. அதனாலயே உடனே பதியும் ஆசை வந்தது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. சின்னாளப்பட்டோ,தேவேந்திராவோ,பாகவத புடைவையோ:)
இந்தக் கார்த்திகா சொன்ன மாதிரி பெங்கால் ஹாண்ட்லூம் புடைவைகள் மஞ்சுஷா,சாருலதா இந்தக் கடைகளில் இருக்கிறது.

நான் சொன்னவர்கள் வடபழனியில் கட்டி இருக்கிறார்கள்.வெகு நன்றாக இருக்கிறது.
என்ன ஆச்சுன்னு அப்புறம் பார்க்கணும்.:)

ஒற்றுமையான குடும்பம்.

Jayashree said...

எங்களுடைய எண்பது எப்படி இருக்கும்.நல்லபடியே இருக்கும் என்று

அப்படியே நன்றாகவே இருக்கும்:)

தக்குடு said...

அருமையான பகிர்வு அம்மா! நாங்களும் ஒரு சதாபிஷேகம் போய்ட்டு வந்த மாதிரி இருக்கு..:) சிங்கத்துக்கும் சிங்கத்தோட கண்ணாம்பாவுக்கும் ப்ரமாதமா இதே போல் ஜோரா நடக்கும் கவலையெ வேண்டாம்....:)

சாந்தி மாரியப்பன் said...

அருமையான பகிர்வு வல்லிம்மா..

நானானி said...

//பழையபடத்தில் வரும் ரங்காராவும் கண்ணாம்பாவும் தான் நினைவுக்கு வருவார்கள்:) //

என்ன கம்பீரமான ஜோடி!!

பெசண்ட்நகர் பீச்சில் வாக் போகும் போது இதே மாதிரி ஒரு ஜோடியைப் பார்ப்பேன்.

நானானி said...

//இருபக்கமும் சுதந்திரமும் வேண்டும். தொந்தரவும் இருக்கக் கூடாது.//


நல்ல தெளிவான சிந்தனை!

நானானி said...

//ரொம்ப யோசிக்காதம்மா//

படித்ததும் நெகிழ்ந்தேன்.
அருமையான பதிவு!

வல்லிசிம்ஹன் said...

ஆசைகள்க்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி ஜயஷ்ரீ.
ததாஸ்து.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு மிக நன்றி சாரல்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. உண்மையாகவே நல்ல பொருத்தம் உள்ள பெற்றோர்களையும் குழந்தைகளையும் பார்ப்பது வெகு இனிமை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் தக்குடு. முதலி மகன் கல்யாணம்..அது ஜாம் ஜாம் என்று நடப்பதைப் பார்க்க வலைப் பெற்றோர்கள் ஆவலுடன் இருக்கிறோம்:)

வல்லிசிம்ஹன் said...

குடும்பத்திலியே ஒற்றுமை காண்பது இந்த நாட்களில் அதிசயமான ஒன்றாகி விட்டது. எழுதும் போது உங்கள் வீட்டு நினைவும் வந்தது. நல்லதொரு குடும்பம் பல்கழைக் கழகம் என்கிறதுக்கு உங்க குடும்பமும் ஓர் எடுத்துக் காட்டு.வருகைக்கு நன்றிப்பா.

ப்ரியமுடன் வசந்த் said...

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை பட்டுக்கோட்டையின் வரிகள்
எங்கப்பா எப்பொழுதும் விரும்பி கேட்டு படிக்கும் பாடல் எங்கம்மாவும் அவருடன் சேர்ந்து படிப்பார் எனக்கு அவர்கள் அப்படி சேர்ந்து படிப்பது பிடிக்கும் என்பதால் அடிக்கடி அவர்களை பாடச்சொல்லி கேட்பதுண்டு எப்பவாதும் சண்டை போட்டுகிட்டாங்கன்னா கூட அவர்களை சேர்த்து வைப்பதும் இந்த பாடல்தான்..

அந்த பெரியவர் கூறியதும் மிகச்சரி காலத்தை அதன் போக்கிலே விட்டுவிடுவது...

எங்களை போன்ற வளரும் தலை முறைக்கு நல்ல அனுபவங்களை கற்றுத்தருகிறது உங்கள் அனுபவங்கள்...

வல்லிசிம்ஹன் said...

பாடலுக்கு இவ்வளவு சிறப்புக் கொடுக்கப் பட்டிருப்பது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷம். உங்கள் பெற்றொருக்கு என் வணக்கங்கள்.நல்லவற்றை அனுபவிப்பதற்கும் நல்ல மனம் வேண்டும் இல்லையா.