Blog Archive

Tuesday, February 16, 2010

500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா)

selina,gordan



கோர்டன்
************************
சமீபத்தில் டர்னர் க்ளாசிக் மூவீஸ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரு கண் பார்வை இழந்த பெண்ணின் வாழ்க்கையின் சோகமும் சந்தோஷமும் மிக அழகான சந்தர்ப்பங்களின் நிகழ்ச்சிகளின் கோர்வையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
பதினாறு வயது செலினா வும் அவள் அம்மாவும்,தாத்தாவும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார்கள் . வறுமைக்கோட்டின் எல்லை.
பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் அம்மாவாக ஷெல்லி விண்டர்ஸ்








செலினாவாக எலிசபெத் ஹார்ட்மேன் என்ற நடிகை கண்ணில்லாத பெண்ணாக வெகு அருமையாக நடித்திருக்கிறார்.
கோர்டன் என்னும் கறுப்பினத்தவராக சிட்னி பாட்டியெ(Sidney Poitier) ஓல் பா என்று அழைக்கப்படும் தாத்தா. இவர்களைச் சுற்றி வரும் கதை. ஐந்து வயதில் அம்மாவுக்கும் அவருடைய சினேகிதனுக்கும் சண்டையில் கண்கள் குருடாகின்றன செலினாவுக்கு.

அந்த நாட்களில் கறுப்பு வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த கசப்புணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமேஅவளைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அம்மா.
செலினாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி,பாசி மணி மாலைகளைக் கோர்த்து அதை இன்னொரு அன்புள்ளம் கொண்டவர் மூலம் விற்று அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பதுதான்.

அந்தச் சினேகிதரே சிலசமயங்கள் அருகில் இருக்கும் பார்க்கில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்,..அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அன்று மாலை வரைச் சந்தோஷமாகப் பலவித பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டே மாலைகளைக் கோர்த்து முடிப்பாள்.
இரவு நேரம் நெருங்கும்போது அவளது தாத்தா குடி போதையோடு அங்கு வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
இதைக் கண்டுபிடிக்கும் அம்மா அவளைப் பார்க்குக்குப் போகத்தடை விதிக்கிறாள்.
அதையும் மீறி தாத்தாவுடன் வெளியே வரும்போதுதான்,அந்தப் பார்க்கில் மேற்பார்வையாளராக இருக்கும் கோர்டனைச் சந்திக்கிறாள்.
இருவருக்கும் அழகான நேசம் மலர்கிறது. கோர்டன், செலினாவின் வெகுளித்தனத்தையும், பொறுமையையும் கண்டு வியக்கிறான். அவளுக்குக் கண்பார்வையின் குறைப்பாடுகளை நீக மிகவும் முயற்சிக்கிறான். சாலையைக் கடப்பதற்கும்,,ப்ரெயில் முறையில் கல்வி அனுபவம் பெறுவதற்கும் பாடு படுகிறான்.
கண்பார்வையில்லாத அந்தச் சிறுமிக்கு உலகின் வெளிச்சமான பகுதியைக் காண்பிக்கிறான். இவர்களின் நட்பை அறியவரும், ரோசலின்(செலினாவின் அம்மா) கோர்டன் ஒரு கறுப்பு இனத்தவர் என்று சொல்லி செலினாவை மிரட்டி அடிக்கிறாள் .


இரண்டு நாட்களுக்கு மேல் செலினாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி வெளியே வந்து பார்க்குக்குச் செல்ல முயற்சிக்கிறாள். தோல்வியே ஏற்படுகிறது. ஒரு மழை இரவில் கோர்டனின் தொலைபேசி எண்ணை வாங்கிக் . கொள்கிறாள் .
கோர்டனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும் ,அவள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான்.
அவளோ அவனை விட்டுப் போவதில் சம்மதம் இல்லாவிட்டாலும் அவன் ஏற்பாடு செய்யும் கண்தெரியாதவர்கள் பள்ளிக்குப் போகச் சம்மதிக்கிறாள்.

கடைசிக் காட்சியில் அவளுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட மியூசிக் பாக்ஸை எடுத்துக் கொண்டு படியிறங்குகிறான் கோர்டான்.
அவன் வாயிலுக்கு வருவதற்குள் அழைத்துச் செல்ல வந்த பள்ளி வண்டி கிளம்பிவிடுகிறது. கண்களில் இன்னதென்று தெரியாத உணர்ச்சியோடு பார்த்தவண்ணம் நிற்கிறான் கோர்டன்.

அருமையான முடிவு. மற்ற காதல் படங்களைப் போல், உன்னை நான் திருமணம் செய்து வாழ்நாள் பூராவும் காப்பாற்றுவேன் என்ற உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் கோர்டன்….சிட்னி பாட்டரின். நடிப்பு மனதில் நிற்கிறது . ஆஸ்கார் வாங்கின படமென்று திரையில் காண்பித்தார்கள்.

இந்தப் படத்தில் , அந்த நாளைய வெள்ளை கறுப்பர்களின் இன பேதத்தை ஒட்டி எடுக்கப்பட்ட காட்சிகளும் , வார்த்தைகளும் மனதில் பதிகின்றன,.
இவர்களது நேசம் நிறைவேறாமல் போவதற்கும் இந்த பேதமே காரணமாகிறது.:(
வெகு இயற்கையாக அவர்களது மெல்லிய உணர்வுகள் காண்பிக்கப் படுகின்றன.
வெகுநாளைக்கப்புறம் மிக நல்ல படமொன்றைப் பார்த்த நிறைவு எனக்குக் கிடைத்தது.









எல்லோரும் வாழ வேண்டும்.

16 comments:

KarthigaVasudevan said...

நல்ல பகிர்வு வல்லிம்மா...
அந்தக் கண் தெரியாத சிறுமிக்கும் கோர்டனுக்கும் இருந்த சிநேகமான நேசத்தை உணர முடிந்தது நீங்கள் கதை சொன்ன நேர்த்தியில்.

தக்குடு said...

வல்லியம்மா, படம் பார்த்த மாதிரியே இருந்தது. இப்பொதான் தெரியுது ஏன் உங்களோட பேரன் & பேத்திகள் உங்களை விட மாட்டேங்கரானு!.....:) அருமையாக கதை சொல்லும் 'தாத்தி'யை யார்தான் விரும்பமாட்டார்???...:)

வல்லிசிம்ஹன் said...

வரணும், கார்த்திகா.
இன்னும் அழகாகச் சொல்லி இருக்கலாம். அத்தனை உணர்ச்சிகள் அந்தப் பெண்ணும் ,சிட்னி பாட்டரும் காண்பித்து இருப்பார்கள்.
பதிவு நீண்டுவிட்ட எண்ணம் தோன்றியதால் நிறுத்தி விட்டேன்.
சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லை.:) நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் கதைகளில் ஐஸ்க்ரீம் மலை, சாக்கலேட் மரம் எல்லாம் வரும்.
தக்குடு பாண்டி,
இந்தச் சினிமா நல்ல உயர்ந்த ரகம்.
இதைப் பற்றி யார் சொன்னாலும் நன்றாகவே இருக்கும்.
ஒரு ஆஸ்காரும், 4 நாமினேஷன்களும் கிடைத்ததாம்.
ஒரு காட்சியில் இந்தக் கதாநாயகி வெளியே போக முடியாத கோபத்தை,
ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவாள்.கண்தெரியாத அவலம் ,தனக்குப் பிடித்தவனைப் பார்க்க முடியாத தவிப்பு எல்லாம் அற்புதமாக நாம் உணரும்படி நடித்திருந்தாள் அந்தப் பெண்.

ஆர்வா said...

இதுவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்தால் பார்த்துவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

முதல் வருகையா ,கவிதை காதலன்!நல்வரவு.
இந்த மாதிரி இதமான சினிமாக்களைப் பார்க்கும் போது எனக்கு மறைந்த சாவி சார் நினைவுக்கு வருவார்.விசிறி வாழை என்று ஒரு கதை எழுதி இருந்தார். அதிலும் இந்த நிறைவேறாத காதல் அழகாகச் சொல்லி இருப்பார். அந்த புதினமும் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

துளசி கோபால் said...

அருமை.

உண்மையான ஐந்நூறுக்கு மீண்டும் இனிய வாழ்த்து(க்)கள்.

அதென்ன கதை......'கண்ணைச் சுத்தியே' ஓடுது!

சந்தனமுல்லை said...

அழகான விவரிப்பு வல்லியம்மா! பார்க்க ஆவலாக இருக்கிறது. நன்றி!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான்னு நினைக்கிறேன்.:)
சரியாகிவிடும். கண்ணே,கனியே,முத்தே மணியே ......
குசும்பு கொஞ்ச நஞ்சமில்ல உங்களுக்கு!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. ரொம்ப ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கிற சினிமா.
ரசித்துப் பார்த்தேன். கொஞ்சம் கலக்கத்தோடும் நம்மை அந்த நாட்களுக்கு அழைத்துச் செல்கிறதுப்பா.
சிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்.

ஹுஸைனம்மா said...

அட, சினிமா விமரிசனமும் எழுதுவீங்களா? (இப்பத்தான் கொஞ்ச நாளா வர்றேன் உங்க பூவுக்கு, அதான் ஆச்சர்யம்!!)

நல்ல கதை. //..உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற//

இதுதான் நல்ல படம், கதை.

Anonymous said...

விக்கிப்பீடியாவுல குவான் யின் கதை யெல்லாம் சூப்பரா இருக்கே ... உங்க பதிவு வந்து தெரிஞ்சிக்கிட்ட மற்றொரு அருமையான விஷயம் குவான் யின்!

மேலருக்க ஃபோட்டோ லின்க்கு பாத்து ... அப்படியே கூகிள் தேடல் செய்தேன்! :)

வல்லிசிம்ஹன் said...

பிடிச்சதைப் பற்றி யாருகிட்டயாவது சொல்லணும். ஒண்ணுமே கேட்காமல் வாங்கிப் போட்டுக் கொள்ளும் ஒரே இடம் என் பதிவு:)
நன்றிப்பா.
thanks Hussainamma.

வல்லிசிம்ஹன் said...

ஹை மதுரா, க்வான்யின் நான் ரெய்கி கத்துக்கும்போது அறிமுகமான அவதார்,டிசெண்டன்ட்.
குரு. இப்படியெல்லாம் அழைக்கப் படுவார். (ஷி இஸ் த மதர் ஆஃப் ஹீலிங்.) நேற்று இவருக்கு காடராக்ட் நல்ல படியாக நடந்தது.
ஸொ அதுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக ''க்வான் யின்'' அம்மாவை அழைத்துவிட்டேன்.:)
நீங்க இந்த யின் யான் சைட் போய்ப் பாருங்க. ரொம்ப சுவையாக இருக்கும்.

Unknown said...

அருமையான இடுகை. படம் பார்த்த நிறைவு

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுல்தான். நலமா. துபாய் தமிழ் மன்றம் பற்றி ச் செய்திகள் படித்தேம். மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இருபதில் பார்க்க முடியாமல் விட்ட எல்லாப் படங்களையும் இப்போது அறுபதில் பார்ப்பது என்று தீர்மானமாக இருக்கிறேன்:)
அதுவும் டிசிஎம் சானலில் வரும் பழைய படங்கல் ,செய்திகளோடு வருகின்றன. நம் ஊரிலும் பழைய படத்துக்கென்றே ஒரு தொலைக்காட்சி சாத்தியமா என்று நினைத்தேன். அனுமானிக்க முடியவில்லை.:(
நன்றிம்மா