Blog Archive

Thursday, January 07, 2010

மார்கழி இருபத்துமூன்றாம் நாள்,மாரிமலை ...











இன்று மார்கழி இருபத்துமூன்றாம் நாள் .
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ
விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ ,பூவைப்பூ வண்ணா !உன்
கோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் .
--
ஆண்டாள் முந்தைய பாசுரத்தில் சங்கம் இருக்கும் அரசர்களைப் போல ,நாங்கள் வந்திருக்கிறோம் கண்ணா என்று சொல்கிறாள்.
அவன் அதைக் கேட்டு செங்கண் சிறுச் சிறிதே விழித்துப் பார்த்து எழுந்திருக்கிறான்.
அவன் பார்க்கும் பார்வையின் வீட்சண்யம் கோதைக்கு மலைக்குகையில் உறங்கும் சிங்கத்தை நினைவு படுத்துகிறது .
மாரிக்காலத்தில் உறங்கப் போன சிங்கம்,எழுகிறது.
அதன் சிவந்த ,கோமளமான கருணைக் கண்கள் விழிக்கின்றன.
அதன்
கால்களை நீட்டி முதுகை வளைத்து பிடரியில் உள்ள ரோமங்கள் எல்லாம் நிமிர்ந்து, மெய்சிலிர்க்கும் முழக்கம் அதனுடைய தொண்டையிலிருந்து புறப்படுகிறது.
அது அஹோபில சிங்கமா,ராகவசிம்ஹமா ,இல்லை யாதவசிம்ஹமா.??
எல்லாம் ஒன்றுதானே . ஒரே ஒரு சிங்கம் பலவித வடிவம்.,கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. அது என்ன நடை!!
தரையில் அதிராமல் கால் வைக்கும் சிங்கம்.
கொடியவரை அடையாளம் கொண்டு அவர் மேல் பாயும் சிங்கம். பிரஹலாதனைக் காத்த சிங்கம்.
ராமனாகக் காட்டில் உலாவிய சிங்கம். இப்போது யசோதையின் இளஞ்சிங்கம்.
அந்த
சிங்கத்தை அழைக்கிறாள்.எங்களை வந்து உன் செந்தாமரைக் கண்ணால் பார். சிம்மாசனத்துக்கு அதன் பெருமையைக் கொடுத்தவனே எங்கள் முறையீட்டைக் கேள் .
உன் அருளைப் பரிசாகக் கொடு என்று வேண்டுகிறாள்.
ஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் .
எழுத்துப்பிழை, பொருட்பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்தருள வேண்டும்.

எல்லோரும் வாழ வேண்டும்.

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அருமை வல்லியம்மா!!.

வல்லிசிம்ஹன் said...

Thanks ma Mouli.