Blog Archive

Thursday, November 26, 2009

அக்கா நலமா ?

அன்புள்ள அக்கா , நிறைய வருடங்கள் ஆகிவிட்டன . எப்படி இந்தப் பிரிவு வந்தது , இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன் நேற்று. மீண்டும் மீண்டும் ஊட்டியில் மண்சரிவு என்று படிக்கும் போதுவருத்தமாகவும் கவலையாகவும் இருந்தது.



கோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.





நாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்

வந்தது.

நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.

உங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.
அவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,

டிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....

எட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.

அப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..



உங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.




அதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.
நீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்கள் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,
அவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்
எல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.

எத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.
கடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது
அக்கா., நம் நட்பு.

இதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, November 23, 2009

எங்கள் மீனாள்

வளையவந்தவளுக்கு என்ன
ஆயிற்று என்று புரியவில்லை.
சதா மேலிருக்கும் பெட்டி மூடிய முட்டிய வண்ணமே இருந்தாள்.

மருந்தும் வாங்கிப் போட்டது.
ஒரு தியானம் செய்யும் யோகியாக
இருந்தவள் இன்று ..அவளுடைய முன்னோர்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டாள்.

நானும் அந்த வெற்றுப் பெட்டியையும் அவள் விட்டுக் சென்ற மீன்களையும் வெறித்த வண்ணம் இருக்கிறேன்.
மீனாட்சியிடம் அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, November 13, 2009

நவம்பர் பதிமூன்று அன்புக்கான நாள்

இன்று உலக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.

அன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.

வயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .

கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள்.

உடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்
பெற்றொரைப் பாராட்டும் பிள்ளைகள்
பிள்ளைகளைக் காக்கும் பெற்றோர்கள்
இப்படி நீளும் பட்டியல்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.
இதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.

அதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.
அவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)
பார்த்தால்,

KINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.
நல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.
அவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக
இயங்க வாழ்த்துகள்
























பெற்ற பையனுக்கு வயதாகிறது என்று எந்தத் தாயும், முக்கியமாக இந்தத் தாய் :0) ஒப்புக் கொள்ள மாட்டாள்......
குழந்தைக்கு வாழ்த்துகள்.





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, November 12, 2009

விருது வந்தது நல்ல விருது வந்தது :)



கயல்விழி முத்துலட்சுமி! நன்றி. ''வாம்மா மின்னலு'' ......இந்த பட்டம் என்னிடம் எப்பவும் தங்கணும்:)

படிப்பவர்களெல்லாம் முதலில் கயல்விழி முத்துலட்சுமியின் இன்றைய பதிவான இஷ்டமொவும் கஷ்டமொவும் (தட்டச்சுப் பிழை)சிறுமுயற்சியில் படித்து விட்டு மேலே படிக்கவும்.

இப்படியெல்லாம் இளைய தலைமுறை யோசிப்பதைப் பார்த்துப் படித்து ரொம்பவே பொறாமையா இருக்கு. ஆமா, பொறு ஆமை.

ஆமை வேகத்தில டெரர்(ஆயில்யன் உபயம்)
காண்பிச்சுக் கொண்டிருந்த என் பதிவு இப்ப,
வெரசா (விரைவாக)த் திறக்கிறதாம்.



ஆகக் கூடி இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு யோசித்துப் பார்த்தா
எதிராப்பில இருக்கிற காளிகாம்பாள் காலண்டர்தான்னு நினைவு வந்தது.
சாமி கடவுளே, ரத்தப் பரிசோதனை நல்ல ரிசல்ட் வரணும்னு கும்பிட்டுக் கிட்டேதான் எழுந்தேன்.
கயலு எழுத்தைப் பார்த்ததும் மனசு லேசாகிவிட்டது.

உண்மையாகவே மிகவும் நெகிழ்வா உணர்கிறேன்.
கயல் நன்றி .
இதை நினைத்தே இன்றையப் பொழுதைச் சுலபமாக ஒட்டி விடுவேன்.

ஒ !! இன்னும் ஒன்று சொல்லியே ஆகணும்.
இன்று மருத்துவ மனையில் ஒரு வயதான கண் சரியாகத் தெரியாத எழுபத்தைந்து வயது மங்கையைப் பார்த்தேன்.
மங்கை என்றுதான் அவர்களைச் சொல்லணும்

எட்டு மணி வரை காப்பி குடிக்காமல் இருக்கணும்னு நொந்து கொண்டே சர்க்கரைப் பரிசோதனைக்குப் போனேன்.

இவங்க அதுக்கு முன்னால் வந்துட்டாங்க.
தனியே ஆட்டோவில் வந்து ,ரத்தம் சோதனைக்குக் கொடுத்துவிட்டு ப
வீட்டுக்குப் போய், காப்பி குடிக்கவேண்டும், துணி தோய்க்கணும், குளிச்சு சமையல் செய்யணும் என்கிறார்கள் .

தனி வீட்டில் ஒருவர் உதவியும் இல்லாமல் வாழும் துணிச்சல், மனத்திடம்
எல்லாவற்றுக்கும் மேல் அலுத்துக் கொள்ளாத அமைதியான சுபாவம்.
ஆட்டோக்காரரிடம், ஐம்பத்து ஐந்து ரூபாய்க் கூலியை
நாற்பது ரூபாயாகப் பேரம் பேசிய நாசூக்கு எல்லாவற்றையும் கண்ணிமைக்காமல் பார்த்தேன்.

கற்றுக்கொள்ள நிறைய பாடம் இருக்கிறது.
மீண்டும் நன்றி கயல்விழி முத்துலட்சுமி.!!!!
உங்கள் கவிதையும் சூப்பர்.




























எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

பின்னூட்டத்துக்காக ஒரு பதிவு

வாண்டுகள் இரண்டின் படம் கிடைத்தது . ஆனால் நான் எடுத்த படம் இல்லை. போட்டிக்கு அனுப்ப முடியாது .
தெரியாமல், டெலிட் செய்ய வேண்டிய பதிவை பப்ளிஷ் செய்து விட்டேன்.
அதற்கு ஜெயஸ்ரீ அவர்கள் பின்னூட்டமும் இட்டு விட்டார்கள்.
அனாவசியமாக ஒரு ஒரு வரிப் பதிவு போட்டு எண்ணிக்கை கூட்டக் கூடாது என்கிற ஒரே ஒரு நேர்மையான (;) ) எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

வீட்டுக் குழ்ந்தைகளின் (பேரங்கள் , பேத்திகள் படத்தை இணையத்தில்

இடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுவிட்டது.:(

மற்ற வாண்டுகள் விளையாடும்போது எடுத்த படமும் இருக்கிறது. ஒரே ஒரு இடர் . அவர்களும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் :)
அதனால ரிஸ்க் எடுக்கக் கூடாது .
உங்க பேரன் படம் போடக்கூடாது, எங்க பசங்க படம் போடலாமான்னு ஒரு கேள்வி கேட்டுட்டாங்கன்னா அவ்வளவா நல்லா இருக்காது இல்லையா.

நான் எழுதாத பதிவிக்கு பின்னூட்டம் போட்ட நியுசிலாந்து அம்மையாருக்கு நன்றி.
பூ பேரெல்லாம் தெரியாது ம்மா. எதோ கிடைச்சதைப் போட்டேன்:)










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
p

Sunday, November 08, 2009

வாண்டுவின் ராஜாங்கம்


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அம்மா தூகர் வேணும். ஆ போடு.

எதுக்குடா இப்ப.(9 மணி இரவு) நீ ஹைப்பர் ஆகித் தூங்காமல் இருக்கவா.
ஆளைவிடு.
இல்லியெ, அண்ணாவுக்கு விக்கறது.!!
அதனால?
எனக்கும் இப்ப வந்துடும். :)


நாளைக்கு உனக்கு ஹேர்கட் பண்ணனும் கிஷா.
வேண்டாமேமா.
இப்பியே இக்கட்டும்மா.

கண்ணு குத்துமே
உனக்குக் குத்திலியே:))

அண்ணா இனிமெ நீ கிஷா முன்னால கெட்ட வார்த்தைகள் சொல்லாதே. உடனே பிடிச்சுப்பான்.
எதுமா ---இது அண்ணா
அதாண்டா ஐ டி ஐ ஒ ட், ஃப் ஒ ஒ எல்

என்று அம்மா ச்பெல்லிங் கொடுத்ததும் சின்னவன் சொல்லிட்டான்.

அம்மா உன்னை இடியட் சொல்லாதே ஃபூல் சொல்லாதேன்னு
சொல்றா அண்ணா:)))
அம்மா அவன் லிப் ரீடிங் கத்துண்டு இருக்கான்மா. நாம இனிமே வேற பாஷை கத்துக்கலாம் என்று சிரிக்கிறான் பெரியவன்.

Friday, November 06, 2009

மீனாட்சியும் கன்யாகுமரியும்







எங்கள் மீனாட்சி(சொக்கனா) தனியாக இருக்கிறாள்.
அவளுக்குத் துணை தேடும் சிரமும் கொடுக்கவில்லை.
நிச்சலனமாக வளைய வந்து கொண்டே அவள் வாழ்க்கை நகர்கிறது.

இந்தத் தனிமைக்கு என்ன அர்த்தம். யாரிடம் கேட்டாலும் இந்த வகை மீன்களின் வாழ்க்கை முறை இதுதான் என்கிறார்கள்.
எனக்கு மட்டும் குற்ற உணர்வு போக மறுக்கிறது.

எட்டு வயதாகி விட்டது.
ஒருவேளை அவள் பிறந்த அமெசான் காடுகளில் விட்டு வைத்திருந்தால்
குடும்பம் கிடைத்து இருக்குமோ அவளுக்கு.

எனக்குத் தெரிந்த நாங்கள் வாங்கின மீன்கள் எல்லாம் ஜோடியாகத் தான் வந்தன.
நிறைய நாட்கள் இருக்கவில்லை.

சிலவற்றை வைத்து உணவு போட்டுக் கட்டுபடியாகததால் விலைக்கும் இலவசமாகவும் கொடுத்து விட்டோம்.
இவள் மட்டும் ஒட்டிக் கொண்டு விட்டாள்.
அவளைப் பார்த்தால், நமக்கே சில சமயம் ஆன்மீகத்தில் இறங்கித் தியானம் செய்யும் ஞானி போலத் தோற்றமளிப்பாள்.

இல்லாத ஒன்றைத் தேடுவதாக மேல் நோக்கித் தாவி மூக்கில் வேறு அடி.

தபஸ் செய்வது போல ஒரே இடத்தில் வாலை மட்டும் மெதுவாக அசைத்துக் கொண்டு கண்ணாடிச் சுவர் வழியாக என்னைப் பார்க்கும் போது
இவளுக்கு கன்யாகுமரி என்று பெயர் மாற்றலாம் என்று தோன்றுகிறது.
எங்கிருக்கிறான் உன் துணைவன்?


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, November 02, 2009

விழா புதுசு மனசு பழசு

திருப்பரங்குன்றம்




பைபாஸ் ரோட்



மதுரை டவுன் ரோடு






ஒரு கிராம ரயில் நிலையம் .



பசுமலை















சதங்கா அழைப்பு விடுத்து வெகு நாட்கள் சென்று விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கணும் சதங்கா.


சதங்கா கேட்டிருக்கும் முதல் கேள்வி

1,உங்களைப் பற்றிச் சிலவரிகள்.
-----------------------------------------------------------------


பெரிய நோட்டுப் புத்தகங்களில் கிறுக்கிக் கொண்டிருந்ததைப் பதிவுகளில் எழுதலாமே என்று நினைத்தாதுதான்.

தந்தை பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின் வரும் தலைமுறைக்காக. முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை.
இப்பொழுது நான் எழுதுவதைப் பிற்கால குடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை.

2,தீபாவளி என்றதும் நினைவுக்கு வரும் மறக்க முடியாத சம்பவம்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------நாங்கள் எல்லாரும் உறங்கிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்கள் தீபாவளிப் புதுத்துணிகளுக்கு மஞ்சள்,குங்குமம் வைப்பதும், அடிக்குரலில் அடுத்த தீபாவளிக்கு இன்னும் நல்லதாக உடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது,.
அம்மாவுக்கு எப்பவும் ஒரு சின்னாளப்பட்டுச் சேலைதான். அப்பாவுக்கு அதே எட்டு முழம் வேஷ்டியும் ஒரு பூத்துவாலையும்.

மறக்க முடியாதவற்றை எழுதத் தனிப் பதிவு போடவேண்டும்.:)



3, 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருப்பீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------

தருமமிகுச் சென்னையில் தான்.

4,தற்போது இருக்கும் ஊரில் தீபாவளி கொண்டாடும் முறையைப் பற்றி?
---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆளுக்கொரு தரைச் சக்கரம், இரண்டு சீனிச்சரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்புகள் வெடித்துவிட்டு மற்றதைப் பார்க்க வரும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடுவது.
போன வருடம் சிகாகோவில் பட்டாசு வெடிக்காதபோதும் குழந்தைகளோடு இருந்ததால் ஆனந்தம் கொண்டாடியது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டியக் காலத்தின் கட்டாயத்துக்கு வந்துவிட்டது.

எல்லோரிடமும் மணிக்கணக்கில் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டது.

5,புத்தாடை எங்கு வாங்கினீர்கள், தைத்தீர்கள்.?
-----------------------------------------------------------------------------

நல்லியில் புடவை பட்டும் பருத்தியும் கலந்தது.

சிங்கத்துக்கு வேஷ்டியும் ஆயத்த உடை சட்டையும்.

6,உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள், வாங்கினீர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------

செய்தது ஓமப்பொடியும்,க்ஷீரா எனப்படும் கோதுமை மாவு கேசரியும், வாங்கினது மிக்ஸரும்,லட்டுவும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள.

7,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள் எவ்வாறு தெரிவிக்கிறீர்கள்.?
---------------------------------------------------------------------------------------------------------------

முக்கால்வாசி தொலைபேசி.
இணையத்துக்குப் பதிவின் மூலம்.

ஈமெயில் வாழ்த்துகளும் உண்டு.
பெரியவர்களை நேரில் சென்று வணங்குவதும் வழக்கம்.
8,தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா
---------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டும் தான். வெளியே மற்றவர் வீட்டுக்குப் போனாலும் அவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருப்பார்கள்:))))

9,இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் நமக்கு உதவியாக இருப்பவர்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகளும் ,பட்டாசும் தருவது வழக்கம்.
அதைத்தவிர உதவி கேட்டு வருபவர்களுக்கும் கொடுப்பதுண்டு.
10,நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
****************************************************************
அனைவரும் எழுதலாம். ஏனெனில் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள்.
நான்தான் கடைசி என்று நினைக்கிறேன்.
நன்றி சதங்கா. உங்களால் ஒரு டைம் மெஷின் எனக்குக் கிடைத்தது. நினைவுகளில் மூழ்கி எழுந்திருக்க இன்னோரு சந்தர்ப்பம். அனைவருக்கும் நன்றி.
சக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா ஐயாவுக்கும் நன்றி.












எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.