Blog Archive

Sunday, September 21, 2008

புரட்டாசி..சனிக்கிழமை,அரிசிப்பாகு,மாவிளக்கு

இவருக்கு நேர்ந்து கொண்டு மாவிளக்கு ஏற்றுவது, குடும்பங்களில் வழக்கம். தீராத வயிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.
சீனிம்மாவின் அக்கா நாச்சிப் பெரியம்மா.

அவருடைய பெண்ணின் பெயர் மங்கை. நாச்சியார் பெரியம்மா அந்த நாளில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் திருமலை ஏறிப் போவது வழக்கம்.
இத்தனைக்கும் அவர் உருவம் ஒரு நாலடி உய்ரமும் உழக்குக்கு ஆடை கட்டின மாதிரி,
ஒரு கட்டம்போட்ட சிகப்புக் கலர் ஒன்பது கஜப்புடவையை நேர்த்தியாகக் கால் தெரியாமல் கட்டிக் கொண்டு,
அந்த வயதில் வாய் கொள்ளாத சிரிப்போடு ஏறும் அழகை அம்மா சொல்லிக் கேட்டு இருக்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்தபிறகு நானே பார்த்தும் இருக்கிறேன். 1962ஆம் வருடம் மே மாதம் ஒரு மாமாவின் திருமணம் முடிந்து
நாங்கள் எல்லோரும் திருப்பதி போனோம்.

வெளியில் சாப்பாடு வாங்கி சாப்பிடாத வகை இவர்கள்.
கையில் பலவகை உலர்ந்த பழங்கள்,முந்திரி இவைகளை எடுத்துக் கொள்வார்கள்.
காப்பி டிகாக்ஷன் பாட்டிலில் இருக்கும். பால் வாங்கிக் கலந்து கொள்வார்கள்.
போனால் போகிறது என்று எனக்கும் ஒரு மிடறு கொடுப்பார்கள். அதுவே அம்ர்தமாக இருக்கும்.

தங்குமிடம் ஏதாவது ஒரு மடமாக இருக்கும். பழைய பரகால மடம் என்று நினைக்கிறேன்.
அங்கு போய்ச் சேர்ந்ததும் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு,
இரவு ஆகியிருப்பதால் கொண்டுவந்த பூரி உருளைக் கிழங்கை முடித்து,
தயிர்சாதமும் முடித்து உறங்கிவிட்டோம்.

சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெந்நீரோடு வந்து எழுப்பினார்கள். அனைவரும் நன்றாகக் குளித்துவிட்டு, எதிர்த்தாப்போல் இருக்கும் புஷ்கரணியில் தண்ணிர் எடுத்துத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குப் போனோம்.
அப்போதெல்லாம் கோவில் வாசல் வழியாகவே உள்ளே நுழையலாம். வெளிச்சுற்று கியூ எல்லாம் கிடையாது.
அங்கப் பிரதக்ஷிணம் செய்பவர்கள் பூர்த்தி செய்தார்கள்.

பெருமாளையும் மிக அருகில் போய்ப் பார்த்ததாக நினைவு.
அப்போதுதான் மடப்பள்ளி நாச்சியார் வெளித்திண்ணையில் மாவிளக்குக்கான
பொருகளான,ஊறவைத்து அரைத்த அரிசி மாவு,
அங்கேயே இடித்த வெல்லம்,வீட்டிலிருந்து கொண்டு போன நெய்,திரி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி,
ஒரு வாழை இலையில் வைத்து ஈர உடையுடன் இருந்த பெரியம்மாப் பாட்டி தன் குட்டி சரீரத்தை அங்கே தரையில் சாய்த்துக்கொண்டு, வயிற்றின் மேல் மாவிளைக்கை ஏற்றச்சொல்லி வைத்துக் கொண்டார்கள்.

ஸ்வாமி மலையேறும் வரை கோவிந்த நாம ஜபம்தான்.




புரட்டாசியும் பெருமாளும் மாவிளக்கும் இங்கேயும் நினைவு வரத்தான் செய்கிறது.
ஆனால் வழக்கம், இல்லாவிட்டால் ஏற்றமாட்டார்கள்.
அதனால் அரிசிமாவும் வெல்லமும் சேர்த்து ஏதாவது ஒரு பண்டம்
வெங்கடேசனுக்குக் கை காண்பிக்கணுமே என்று மேலே இருக்கும்,பாகு,பர்ஃபி
செய்தேன்.

செய்த விதம் பார்க்கலாமா.

அரிசிமாவு வறுத்துக் கொண்டு,
அதில் பாதி அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு,
200கிராம் வெண்ணெயும் கலந்து
வாணலியில் கிளறி ஒரு பீங்கான் கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டேன்.
இந்தக் கலவையை அப்படியே எடுத்து
மைக்ரோவேவில் எக்ஸ்ப்ரஸ் 4இல் வைத்ததும், மைசூர்பாகு மாதிரியே நுரைத்துக் கொண்டு வந்தது.
அதை வெளியே எடுத்து கட்டம் கிழித்தாச்சு.

பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)
பெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் சளித்தொல்லை இருந்தாலும் அனுபவித்துச் சாப்பிட்டார்கள்.

ஒரு வாரம் தாங்கும் என்று நினைக்கிறேன்.
வட்டிக்காசு வாங்கற வடமலையானுக்கு குட்டிக் கோவிந்தா கோவிந்தா!!!









Posted by Picasa

24 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒன் ஆர்டர் பர்பி பார்சேல்!!

வல்லிசிம்ஹன் said...

அனுப்பியாச்சு கொத்ஸ்.
நாலு துண்டுதான் அனுப்பி இருக்கேன்:)

Tulsi said...

எங்க மாமியார் இப்படி ஒரு முறை வயித்துவலி சரியாகணுமுன்னு செஞ்சதைப் பார்த்துருக்கேன். இப்ப நீங்க சொன்னாவுட்டுத்தான் ஞாபகம் வருது. (வயித்துவலி சரியாச்சான்னு அடுத்தமுறை ஃபோன் பண்ணும்போது கேட்டுச் சொல்றேன்)

மைக்ரோவேவ் மாவிளக்கு பார்க்க நல்லா இருக்கு:-)

ராமலக்ஷ்மி said...

46 ஆண்டுகளுக்கு முன் சென்ற திருப்பதி பயணத்தை அப்படியே நினைவு கூர்ந்து அளித்திருக்கும் விதம் அருமை.

//பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)//

பிறகென்ன:)!

படத்தில் காட்டியிருக்கும் பெருமாள் கோவிலைத்தான் இம்மாத மெகா போட்டிக்குக் கொடுத்திருக்கிறார் nathas.

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...
அனுப்பியாச்சு கொத்ஸ்.
நாலு துண்டுதான் அனுப்பி இருக்கேன்:)
//

நாலு துண்டுதானா?

சரி அதை கொத்ஸே சாப்பிட்டட்டும் எனக்கு நீங்க ஊருக்கு வந்து செஞ்சு கொடுக்கணும்! :)))

ambi said...

//பெருமாளும் பிரமாதம்னு சொல்லிட்டார்:)
பெத்த பெருமாள்,சின்னப் பெருமாள் //

ஹிஹி, யாரு..?உங்க வீட்டு சிங்கபெருமாளா? :))

பர்பியா? நல்லா இருக்கு. முந்திரி எல்லாம் தூவ வேணாமோ?

மெளலி (மதுரையம்பதி) said...

சாதாரணமாகவே மாவிளக்கு எனக்கு பிடித்த பண்டம். ஆடி-தை வெள்ளிகளில் ஏற்றுவார்கள்.

நீங்க இங்கு போட்டிருக்கும் படம் இன்னும் அழகாக காண்பிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நானும் மைக்ரோவேவ்ல ஏதாவது செய்தேன்ன்னு பெரூமை அடிச்சுக்கலாம் இல்லையா துளசி. அதுக்குத்தான்:)
எனக்கும் பெரிய பாட்டி வலியிலிருந்து விடூபட்டாங்களான்னு ஞாபகம் இல்லை.
ஆனா ரொம்ப சுறு சுறுன்னு ஏதாவது செய்து கொண்டே இருப்பாங்க!
அந்த மாதிரி பரம்பரையா நான் என்று நினைக்கவே முடியவில்லை:(

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா,ராமலக்ஷ்மி.
இது அரோரா ன்னு வீட்டுக்குப் பத்துமைலோ என்னவோ இருக்கிற பாலாஜி கோவில்.மகா அழகு.
கியூ அப்படி இப்பஅத்தபடி நல்ல தரிசனம்.ஜெருகண்டி கிடையாது. நல்ல நாள் விழா நாள்ள கூட்டம் வழியும்.
மத்தபடி ஒரு கஷ்டமும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அப்படியேம்மா ஆயில்யன். செய்துடலாம்.

கொத்ஸ் நெய் சாப்பிடறதை விட்டுட்டேன்னு சொன்னார்.அதனால பையனுக்கும் மனைவிக்கும் மட்டும் அனுப்பினேன்.
என்ன இருந்தாலும் பல்லு உடைஞ்சதுனு நாளைக்கு கம்ப்ளைண்ட் வரக்கூடாது பாருங்க.:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
சிங்கப் பெருமாளுக்குச் சர்க்கரையும் நெய்யும் சேர்ந்து எது செய்தாலும் , ஓகே.
இங்க இருக்கிற பெரிய,சிறிய பசங்களைச் சொல்கிறேன்:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலீ.

ம்ம்.பார்த்திருக்கேன்.கபாலீஸ்வரர் கோவிலில் கற்பகாம்பாளுக்கு , எதிர்த்தாப்பில வரிசையா விளக்கு பூஜையும்,மாவிளக்கும் ஜொலிக்கும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

திரைகடலோடியும் மாவிளக்கு போட்ட வல்லியம்மா வாழ்க! என்ன ஒரு குறை இங்கேயே இருந்தா அப்படியே ஆபீஸ் விட்டு போகும்போது ஒரு பீஸ் வாங்கி சாப்பிட்டு அம்பியின் வயத்தெறிச்சலை கொஞ்சம் வாங்கியிருக்கலாம். நல்ல வேளை ஞபகப் படுத்தினீர்கள் நானும் போட வேண்டும் கடைசி சனிக்கிழமை.வெங்கடேசாய மங்களம்

தி. ரா. ச.(T.R.C.) said...

திரைக்கு பின்னால் மட்டும் நிற்பவன் இல்லை வேங்கடவன் திரைகடலுக்கு அப்பாலும் இருப்பவன் தான் அவன்

G.Ragavan said...

நீங்க திருப்பதிக்குப் போடுவீங்களா...எங்க வீடுகள்ள இருக்கங்குடி மாரியம்மனுக்கும் சங்கரங்கோயில் கோமதிக்கும் மாவிளக்குப் போடுவாங்க. கண்ணுவலி வந்தா கண்ணுல வெச்சு எடுப்பாங்க. வயித்துவலின்னா வயித்துல..இப்பிடி.

எங்க வீடுகள்ள...அரைக்க மாட்டாங்க. பச்சரிசியை ஊற வெச்சிக் காய வெச்சி...அத ஒரல்ல போட்டு ஒலக்கையால டங்குடங்குன்னு இடிக்கிறப்பவே வெல்லம் போடுவாங்க. அரிசியும் வெல்லமும் நல்லா கும்முன்னு கலந்துரும்.

அதுல வெளக்கு வெச்சி...குழிச்சி...நெய்யூத்தி திரியேத்துவாங்க. பூஜையெல்லாம் முடிஞ்சி வெளக்கு அணைஞ்சப்பெறகு...அந்த மாவுல நெய் எறங்கீருக்கும். அடடா...மணமணக்குமே...

இப்பல்லாம் ஏது உரலு ஒலக்கை. பச்சரிசியை ஊற வச்சு.. காய வச்சு... அப்புறம் மிக்சீல போட்டு அடிச்சி....நல்லா அடிச்சி வர்ரப்ப வெல்லத்தையும் போட்டு அடிச்சி எடுத்தா மாவு பதமா வரும். அதுல வெளக்குதான்....அப்புறமா தொண்டைக்குள்ள களுக்கு களுக்குத்தான். :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
அவன் இல்லாத இடமெங்க இருக்கு.
ஒரு ஜுரம்,தலைவலி கால்வலின்னா முடிஞ்சு வச்சு முடிஞ்சு வச்சசு ஏதுக்குடா இத்தனை நாலணா முடிச்சுனூ குழம்ப வச்சுடுவார்.

அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்ன..
இப்ப எல்லாம் சாமி சரணம்தான்:)
நான் ஏதாவது வேண்டிண்டு


இவர்களால நிறைவேத்த முடியாமப் போய்விட்டால் வம்பு.
நீ எப்போ கூப்பிடறியோ அப்ப வரேன்னு அவன் மேலயே பாரத்தைப்போடறது கைவந்த கலை.

வல்லிசிம்ஹன் said...

ராகவன் !!

பின்னூட்டத்திலேயெ விளக்குப் போட்டாச்சு.
எங்க வீட்டிலும் நீங்க சொன்ன முறைதான்.

இங்க, இவங்க்க வீட்டில மாவிளக்கு வழக்கம் வச்சுக்க இல்லை.
அதனால மாவை வறுத்தேன்.
நீங்க சொன்ன முறைதான் ஒரிஜினல்.

அதுவும் அம்மா விளக்கேத்துகிற அன்னிக்கு இருக்கிற விரதத்தைப் பார்த்தால் ரொம்பப் பாவமா இருக்கும்..நல்லபடியா மலையேறணுமேன்னு பக்கத்திலயே உட்கார்ந்து ஸ்லோகம் சொல்லுவார்.

மலையேறிய பிறகு தேங்காய் உடைத்து அதைச் சில்லுச் சில்லாக செய்து அதில் மாவை வைத்துக் கொடுப்பார்.
ம்ம்ம் அதெல்லாம் சொர்க்கம்:)
நன்றி ஜிரா.

குமரன் (Kumaran) said...

அனுபவப் பகிர்தல் நல்லா இருக்கு வல்லியம்மா. கடைசியில் சொன்ன குட்டி கோவிந்தாவும். :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்கம்மா கார்த்திகை சோமவாரம் மாவிளக்கு பார்ப்பாங்க.. அது உருண்டையா உருட்டிவச்சிக்கிட்டு கொஞ்சம் தேங்காயைக்கடிச்சிக்கிட்டு சாப்பிட சுவையா இருக்கும்...

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன்,
இந்த மாவிளக்கு ஏற்றுவதற்கு ஏதாவது தத்துவம் வச்சிருந்தாங்களான்னு தெரியவில்லை.

கொள்ளுத்தாத்தா பிரபந்தத்தை வைத்து அன்பே தகழியா....பாடுவதைக் கேட்டு இருக்கேன்.
இன்னும் மறந்ததெல்லாம் இப்ப ஞாபகம் வருது:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா முத்து கயல்.

நெய் ,வெல்லம் நிறைய இட்டு அம்மா செய்திருப்பாங்க இல்லையா.
அதனாலதான் உருட்ட வந்திருக்கும்.

கார்த்திகை சோம வாரம் எத்தனை உயர்த்தி!!!
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு வழக்கம்.
அம்மாவை டெல்லிக்குக் கூப்பிடுங்க.செய்து தரட்டும்:)

Geetha Sambasivam said...

//தீராத வயிற்றுவலிதீர வயிற்றின் மேலேயெ, ஒரு வாழையிலையில் மாவிளக்கு ஏற்றி கொள்வதை, நான் பார்த்திருக்கிறேன்.//

எங்க வீட்டிலே எங்க அப்பாவுக்கு, அப்புறம் எங்க பையருக்கு, இப்போ சமீபத்திலே நானும் வயிற்றில் வைத்துக் கொண்டு இருக்கேன். நீங்க செய்யும் இந்த ஸ்வீட் குஜராத்தில் அரிசிமாவிலேயும் செய்வாங்க, உளுந்தைச் சிவக்க வறுத்து மெஷினில் நைசாக அரைத்து அதிலேயும் செய்வாங்க, மைசூர்பாகை விட டேஸ்டியாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவா கீதா. ஆச்சரியமா இருக்கு. அந்த நாளைய நம்பிக்கை இன்னும் வேலை செய்கிறது என்று பெருமையாகவும் இருக்கிறது.

உளுந்து வறுத்துச் செய்யும் இனிப்பை நான் செய்து பார்க்கிறேன். குழந்தைகளுக்கு நல்லது இல்லையா.
நன்றிம்மா.

நானானி said...

சங்கரன்கோயில் கோமதிஅம்மனுக்கு இது போல் மாவிளக்கு பார்ப்பார்கள்.
அம்மன் சன்னதிக்கு முன் தரையில் ஒரு குழி இருக்கும் அதன் மேல் அமர்ந்து கொண்டு வேண்டினால் நிறைவேறும் என்பார்கள்.