Blog Archive

Thursday, May 08, 2008

296,மாறுவது,, இயற்கையில் இல்லை

நாம் பிறக்கும்போது சில குணங்களுடன்தான் பிறக்கிறோம்.
உற்றார் ,ரத்தபந்தங்களின் சாயல் படியும்.

வளர்க்கப் படும் விதத்தில் மாறுபாடுகள் ஏதும் இல்லையானால் குழந்தைகளின் குணங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.
முதலில் பிறந்தவனுக்குச் செல்லம் கடைசியில் பிறந்தவளுக்குச் செல்லம்.

நடுவில் பிறந்ததற்கு ஒண்ணும் கிடையாது என்பது வழக்கமான நாட்களும் உண்டாம்.

அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏதாவது முனையில் ஜெயித்துக் காண்பிப்பதும் உண்டு.
மற்றவர்கள் மேல் காட்டம் கொள்பவர்களும் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு மனிதரை அண்மையில் சந்தித்தேன்.
அவரும் அந்தக் காலத்திலேயே அரபு நாடுகளுக்குச் சென்று செல்வம் சேர்த்து

இராக்கியப் போரின் போது தாயகம் திரும்பியவர்.

அவர்கள் நாடு பஹ்ரெயின், தாக்கப்படலாம் என்கிற நிலையில்,
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் உழைத்துக் கிடைத்த சொத்துகளைக் காப்பாற்றிக் கொண்டு நாடு திரும்பினர் அவரும் மனைவியும் ஒரு பெண்குழந்தையும்.

அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்து இரண்டு வீடுகள் இரண்டு கார்கள் என்று வசதியாகத் தான் இருக்கிறார்.
அவருடைய தாய் மிக வயதானவர்.

இவருடன் சேர்த்து இன்னும் ஐந்து பிள்ளைகளும் இரண்டு பெண்களும்.
நல்ல திட ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கிறார். நல்ல உழைப்பாளி.

அதே பங்களூருவில் தனி வீட்டில் இன்னோரு வயதான அம்மையாரோடு வாழ்ந்து வருகிறார்.
அவருடய ஒரே வருத்தம் தன் இரண்டாவது மகன் தன்னை வந்து பார்த்துப் பேசுவதில்லை என்பதுதான்.

இந்த அம்மாவையும் பார்த்தேன், அவருடைய மகனையும் சந்தித்தேன்.
மகனிடம் பேசும்போது, தன்னை அம்மா சரியாகப் பேணவில்லை, அப்படியிருந்த போதும் தன் முயற்சியில் முன்னேறி இந்த செழிப்பான நிலைமையில் இருப்பதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

அவருக்கும் இப்போது அறுபதுக்கு மேல் வயதாகிறது.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் அம்மாவை ஏன் பார்ப்பதில்லை, என்ற கேள்விக்கு அவர் சொல்லும் ஒரே பதில் ,மற்றவர்களை எஞ்சினீயர்களாகவும் ,வைத்தியர்களாகவும் தன் பெற்றோர் படிக்க வைத்ததாகவும் தன்னை மட்டும்,

வெறும் பட்டதாரி நிலையில் கைவிட்டதாகவும் சொல்லித் தன் தீரா ஆற்றாமையைக் காட்டிக் கொண்டார்.

எனக்குத் தெரிந்தவரையில் அவர்கள் குடும்பத்தில் மிக்க நெருக்கமாகப் பழகியவள் ஆனதால், ரெண்டெட்டில் இருந்த ,அந்த அம்மாவைப் பார்க்கும் போது இந்த ஆதங்கத்தைப் பற்றிக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவர்கள் வீடு மிகவும் சிறியது. பழைய நாட்களில் வாங்கின வீடாகையால்
குளிர்ச்சியான செண்பகமரங்கள் இரண்டும்,
மல்லிகைச் செடிகள் பன்னீர்ப் புஷ்பங்கள் என்று வெகு அழகாகக் காட்சி அளித்தது.

அந்த முதிய நிலையிலும், வாயில் கதவைத் திறந்ததிலிருந்து
எங்களை உட்கார வைத்து உபசரித்துப் பேசிய இரண்டு மணிநேரமும் முகத்தில் புன்னகை மாறவில்லை.

எப்படி இந்த அம்மாவுக்கு அந்தப் பிள்ளை????? என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

கேட்கவும் கேட்டேன். எல்லாமே சரியாக இருந்துவிட்டால் எப்படிம்மா.
அவனுக்குச் சொல்லாத ரகசியம் இன்னும் ஒண்ணு இருக்கு என்று சிரிக்கிறார்.

ஓ, ஏதாவது தத்து எடுத்த பையன் என்ற கதையோ என்று எனக்கு மனதில் ஓடியது.

ஏனெனில் நான் குறிப்பிட்ட அந்த மனிதர் ''எங்க அம்மா என்னை மட்டும் தவிட்டுக்கு வாங்கிவிட்டாள்(அதாவது பஞ்ச காலத்தில் குழந்தையைத் தவிட்டுக்குக் கூட பண்டமாற்றாக விற்று விடுவார்களாம்.) என்று அடிக்கடி குறைப் படுவார்.;)


என் முகத்தைப் பார்த்து ருக்கு அம்மா(தாய்) நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லைம்மா.
இவன் எஸ்.எஸ்.எல்.சி படித்து வாங்கின மதிப்பெண் ரொம்பக் குறைவு.

இவன் அப்பா இவன் வாங்கின மார்க்கைப் பார்த்து அவனை அடிக்காத தோஷம் தான்.
நாந்தான் அப்போது எங்கள் பக்கத்து வீட்டில் விவேகானந்தா கல்லூரியில்
பேராசிரியராக இருந்த ஒருவரிடம் சொல்லி இவனுக்குப் ப்ரீயூனிவர்சிடி வகுப்பில் இடம் வாங்கிக் கொடுத்தேன்.

அதற்கப்புறமும் அவருடைய உதவியின் வழியாகவே அவனுக்குத் தெரியாமல் தனி வகுப்பு எடுக்க வைத்து முதுகலைப் பட்டமும் வாங்க வைத்தேன்.

இந்த செய்தியை அவன் காதுக்கு எட்டாமல் வைத்ததற்குக் காரணம்

அவனுடைய தாழ்வு மனப்பான்மை விலக வேண்டும் என்பதற்காக.

இப்போதும் அவனுக்கு மனக்குறை இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.
எந்த வழியில் அதைப் போக்குவது என்றுதான் தெரியவில்லை.

நீ ரொம்ப நாளையப் பழக்கம் என்பதால் சொன்னேன், மறந்தும் அவனிடம் இந்தக் கதையைச் சொல்லி விடாதே என்றார்.
உங்களுக்கு அவர் இப்படிப் பேசுவதில் வருத்தமில்லையா என்று கேட்டதில்
குழந்தை பேசினால் எனக்கேன்ன. அவன் இங்க வந்து போனால்
சந்தோஷமாக இருக்கும்.


இவ்வளவு பேரும் வந்துவிட்டுப் போகையில் இவன் மட்டும் வரவில்லை என்றால் வருத்தமாக இருக்கிறது. அவ்வளவுதான்.
நாங்கள் கிளம்புகையில் , போகும் போது ''இன்னிக்குத் தான் கிளறினேன். உனக்கு ஒரு டப்பா எடுத்துக் கொண்டு அவனுக்கு ஒரு டப்பா கொடு'' என்று
திரட்டிப்பால் இரண்டு டப்பர்வேர் பொட்டியில் அடைத்துக் கொடுத்தார்.

ஏதோ காரணத்தில் எங்கள் அம்மாவின் ஞாபகம் வர, கண் கலங்கிவிட்டது எனக்கு.

இருக்கிற அம்மாவைக் கொண்டாட அந்த மனிதருக்குத் தெரியவில்லையே
என்று பெருமூச்சு தான் வந்தது.

என்னைவிடப் பெரியவர் அவர். அறிவுரை சொல்லவா முடியும். இல்லை மனசில் இருக்கும் ஆழப் புதைந்து விட்ட எண்ணத்தை மாற்ற முடியுமா. தெரியவில்லை.

அந்த அம்மாவுக்கும் எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.
அவளுக்கு மன நிம்மதி கிடைத்தால் நன்றாக இருக்கும்.

18 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

உண்மைதான் வல்லிம்மா இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகளை வளர்க்கும் போது இது போன்ற மனிதர்கள் நமக்கொரு பாடம் புகட்டிவிட்டுச் செல்கிறார்கள். அதனாலேயே நான் குழந்தைகளிடம் மிகவும் வெளிப்படையாக குறை நிறைகளை விவாதிக்கும் பழக்கம் வந்துவிட்டது.. பிற்காலத்தில் இதற்கென்ன எதிர்வினை இருக்கப்போகிறதோ..இப்போதைக்கு நமக்கொரு மனசமாதானம் அவ்வளவெ...

SP.VR. SUBBIAH said...

இந்தமாதிரிக்கேசுகள் நிறைய விடுகளில்
உள்ளன. ஜாதபகப்படி அத்ற்கு வலுவான கார்ணமும் உண்டு.

சூரியனுடன் சனி சேர்ந்து கெட்டிருந்தால்
மகனுக்கு அப்பாவுடன் உறவு இருக்காது

அதேபோல சந்திரனுடன் சனி சேர்ந்து கெட்டிருந்தால் மகனுக்கு அம்மாவுடன் உறவு இருக்காது

இதெல்லாம் முன்வினைக் கணக்கில் வரும்
இதை யாராலும் சரி பண்ண முடியது

கிரக்கோளாறு!

யார் கொடுத்த சபமோ என்று கிராமங்களில் சொல்வார்களே அதுதான் இது!

ambi said...

ம்ம், விஜய் டிவில கூட நீயா நானா?னு இதே விஷயத்தை பத்தி ஒரு விவாதம் வந்தது.


//திரட்டிப்பால் இரண்டு டப்பர்வேர் பொட்டியில் அடைத்துக் கொடுத்தார்.
//

அடடா! தெரிஞ்சு இருந்தா பெங்களூர் டிராபிக்குல எப்படியாவது வந்து வாங்கின்டு போயிருப்பேனே! :))

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கிருத்திகா. இந்தக் காலத்தில் இரண்டோ அல்லது ஒன்றோ தானே ஈருக்கிறது. அதுகளையும் நாம்தான் ரொம்பப் பொறுமையாக வழி நடத்தணும். அப்படியும் ஒட்டாத குழந்தைகள் உண்டு.
அன்பை என்ன்ன வாங்கவா முடியும்.
நம்ம சுப்பையா சார் சொல்ற மாதிரி கிரகக் கோளாறு இருந்தால் இப்படி இருக்கும் என்று தெரிகிறது.
ஆனால் ஒன்று அன்னை ஒருத்தி வருத்தத்துக்கு உள்ளானால் ,பிள்ளைகளின் வாழ்வில் சிறு கறை படியும் என்றே நம்புகிறேன். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பையா சார்.

அதான் பார்த்தேன். இப்படி ஏதாவது காரணம் இரூந்தால்தான் இப்படி ஏடாகூடமா வாழ்க்கை போகிறது;(
ஜன்ம வினைகளைக் களைவது கஷ்டம்தான்

வல்லிசிம்ஹன் said...

அம்பி, இதை நான் மிஸ் செய்துட்டேனே.

அதுக்குத்தான் போன் செய்தேன். ஒரு டெஸ்டுக்காக.
நீங்க வரலைன்னதும் நானே சாப்பிட்டு விட்டேன்;)

சதங்கா (Sathanga) said...

//என்னைவிடப் பெரியவர் அவர். அறிவுரை சொல்லவா முடியும். இல்லை மனசில் இருக்கும் ஆழப் புதைந்து விட்ட எண்ணத்தை மாற்ற முடியுமா. தெரியவில்லை.//

இந்த மனநிலை நம்ம மக்களுக்கு நிறையவே உண்டு. அதும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் ... ஏன் தான் இந்த ஈஏகோ பிடிச்சிக்கிட்டு தொங்கராங்களோ !!!!!!

கோபிநாத் said...

ம்ம்...இன்னும் அந்த மாதிரி மக்கள் இருக்காங்க.

பாவம் அந்த அம்மா..;(

வல்லிசிம்ஹன் said...

வரணும் சதங்கா.
எனக்கு என்ன வருத்தம்னால்,, அம்மா தப்பே செய்திருந்தாலும் நாம் நல்ல நிலமைக்கு வந்த பிறகாவது அவளை அரவணைத்துக் கொள்ளலாம் இல்லையா. அன்பு கொடுக்கக் கொடுக்கத்தானே வளரும்.

இத்தனைக்கும் அந்த மனிதர் மற்றவர்களுக்கு வாரி வழங்குவதைப் பார்க்கும்போது தன்னுடைய அம்மாவிடமும் குட்டியூண்டு அந்தக் கரிசனத்தைக் காண்பிக்கலாமே என்று நினைப்பு வரும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபிநாத்.

அவங்க மனசளவில் தன் பிள்ளையை என்னிக்கோ மன்னித்து விட்டார்கள்.

மனசில பாரம் வைத்திருப்பவர் மகன்தான். தன்னுடைய நிம்மதிக்காகவாவது அம்மாவைப் பார்க்கலாம்.. நன்றிம்மா.

துளசி கோபால் said...

அம்மாவோ பையனோ, ஆணோ பொண்ணோ எல்லா மனிதர்களுக்குள்ளும் 'ஒரு ஏக்கம்'
இருக்குங்க.

சிலது வெளியில் சொல்லலாம். சில சொல்ல முடியாது. சிலது ரொம்ப அற்பக் காரணமாக்கூட இருக்கலாம்.

இதெல்லாம் நிறைஞ்சதுதான் வாழ்க்கை.

வல்லிசிம்ஹன் said...

உண்மையான வார்த்தை துளசி. ஏக்கம் யாருக்கு இல்ல.

கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் அந்த அம்மாவின் அன்பு இவருக்குக் கிடைக்குமே என்று தோன்றியது. வீணா ஊர் பூரா ஒரு பேச்சுப் பேசும்போது அதுவும் இரண்டு பேரும் ஒரே ஊரில் இருக்கும் போது, எல்லாருக்கும் வாயில் அவல் கிடைத்த மாதிரி ஆகிறது. அதைத்தான் சொல்ல வந்தேன்.

Geetha Sambasivam said...

//அதற்கப்புறமும் அவருடைய உதவியின் வழியாகவே அவனுக்குத் தெரியாமல் தனி வகுப்பு எடுக்க வைத்து முதுகலைப் பட்டமும் வாங்க வைத்தேன்.
//
இம்மாதிரி அம்மாக்கள் குழந்தைகளால் புரிந்துகொள்ளப் படுவதில்லை என்பதும் சுடும் உண்மை!

Expatguru said...

//அன்னை ஒருத்தி வருத்தத்துக்கு உள்ளானால் ,பிள்ளைகளின் வாழ்வில் சிறு கறை படியும் //

இது தந்தைகளுக்கும் பொருந்தும் அல்லவா? அன்னையாவது அழுது வெளியே கூறிவிடுவாள். தந்தை மனதுக்குள் வைத்துக்கொண்டே கடைசி வரை அழுதுகொண்டிருப்பார்.

தாய் தந்தையர் உயிருடன் இருக்கும்போதே அவர்கள் மனம் குளிர செய்து விடவேண்டும். அவர்கள் இவ்வுலகிலிருந்து போன பிறகு என்ன தான் பிராயச்சித்தம் செய்ய நினைத்தாலும் எடுபடாது.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
அந்த மகனுக்கும் துளி நியாயமாவது தெரிந்திருக்கும். இருந்தாலும் அம்மாவை வருத்தப்பட வைப்பதில் வீண் மகிழ்ச்சி. அவ்வளவே.

வல்லிசிம்ஹன் said...

எக்ஸ்பாட்குரு,

பெற்றோருக்குத் தான் எல்லாம் பொருந்தும்.
உள்ளேயே அழுது உயிரையும் விட்ட தந்தையையும் தெரியும்.


அவர் படத்தில் போடப்பட்ட பேப்பர் மாலை ஆடும் போதெல்லாம் அவர்
இன்னும் வருத்தப்படுகிறாரோ என்று தோன்றும்.

மெளலி (மதுரையம்பதி) said...

அடக் கடவுளே!!!...உங்களைத்தான் பார்க்க முடியல்லை மிஸ் பண்ணிட்டேன்னு நினைச்சேன்....பால்கோவாவுமா :)

கொஞ்சம் ஜாடயா சொல்லியிருந்தாக்கூட ஸ்டேஷனுக்கே வந்து வாங்கிண்டிருக்கலாமே!!!

Geetha Sambasivam said...

சரிதான், மெளலிக்கு உங்களைப் பார்க்க முடியாததை விட பால்கோவாவிற்குத் தான் அலையறார் பாருங்க! :P