Blog Archive

Wednesday, April 16, 2008

அறுபதுக்கு அறுபது 1972


திரு சுந்தரராஜனுக்கு
ஐந்து குழந்தைகள். முதல் நாலும் பெண்ணாகப் பிறந்ததால் இராமேஸ்வரத்துக்குப் போய்ச் சேதுக்கரையில் பூஜை செய்து மகனும் பிறந்தான்.

அவர் மனைவி கமலம்மாவுக்குப் பொறுமையின் மறு அவதாரம்னு பேரு சொல்லுவாங்க.

பின்ன அடிக்கடி டூர் போகும் புருஷன், சதா நச்சு செய்யும் கூட்டுக் குடும்பம்,வளரும் குழந்தைகள். அவர்களுக்குத் தேவையான,உடை,படிப்பு

எல்லாவற்றுக்கும் மாமியாரையே சார்ந்து நிற்க வேண்டிய அவசியம்,

இதையெல்லாம் தாக்குப் பி்டிக்கக் கொஞ்சமாவது பூமா தேவி வேஷம் போட வேண்டுமே:)

இதைத் தவிர தோட்டம்,மாடுகள்.

நாலு மணிக்குக் காப்பி மெஷின் முகத்தில் முழித்து நாலு மச்சினர்கள் ஓரகத்திகள்,மாமனார்,மாமியார் இவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்து,

எழுந்து வரும் கடைசிக் குட்டி ஓரகத்தியிடம் புழைக்கடைக் கதவு சாவியைக் கொடுத்துக் கோனாரிடம் பால் cans(5) கழுவச் சொல்லி, விளக்கும் விளக்கெண்ணை சகிதம் நின்று கறந்த பாலை உள்ளே கொண்டு வரச் சொல்லி...ஸ் அப்பா நினைத்தாலே பயமாக இருக்கிறது.!!

அப்போது ஆரம்பிக்கும் காப்பிக் கடை முடிய 8 மணி ஆகும்.

மாட்டு வண்டியில் (ஒற்றை மாடு பூட்டியது) 12வயதிலிருந்து 6 வயது வரை இருக்கும் (பெண் குழந்தைகளுக்கு மட்டுமே )பசங்களை ஏற்றிவிட்டு,

பாதி லேடி சிவஸ்வாமிக்கும் மீதி ரோசரி மெட்ரிக்கும் போகும்.

அதுவும் கடைசிப் பெண் பட்டுப் பாலாடை இல்லாமல் பள்ளிக்குப் போகாது.அதென்ன பட்டுப் பாலாடைனு கேட்டீர்களானால் அதற்கு ஒரு பெரிய கதை வரும். அது தன்னுடைய ஒரே ஒரு பட்டுப் பாவாடையைத் தான் அப்படிக் கேட்கும்.

அது தோய்த்துத் தோய்த்துக் கிழிந்த பின்னரே வேறு உடைக்கு மாறியதாக மாமியார் சொல்லுவார்:)

மற்ற மச்சினர்களின் பையன்கள் கல்லூரிக்குப் போகும்போது தன்பையனை அவன் விருப்பப்படிப் பள்ளிப் படிப்பு முடிந்ததும்,

மெகானிக்காக வேலை செய்ய மோட்டார் சுந்தரம் கம்பனிக்கு அனுப்பினார். அந்தப் பையனும் தன் வேலையில் சிறப்புப் பட்டம் வாங்கி,வெளிநாட்டுக்குப் போய் ஆட்டொமொபைல் என்ஜினீயர்னு பட்டமும் வாங்கி வந்தார்.

நாலே வருஷத்தில் அசிஸ்டண்ட் மேனஜர் பதவி.:)

காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் போடுவாரே ஒரு வேஷம்!! அது:)

எல்லாப் பசங்களுக்கும் திருமணம் ஆகி, பேரன்கள் பேத்திகள்னு ஒரு பதினோரு செல்வங்கள் சேர்ந்தன.

''இப்பத்தான் பிஎஸ் ஹைஸ்கூலில் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள உனக்கு அறுபது ஆகிறதே மாமா'' என்று என் மாமியார் தன் கணவரிடம்,என் மாமனாரிடம்சொல்வதை நான் காதில் போட்டுக் கொண்டது 1972ஆம் வருஷம் புரட்டாசி மாதம்.

ஆமாம். இந்த வீட்டில் எல்லாம் வா போ. தான்.

எனக்குப் புழங்க முடியாத வார்த்தைகள்.பழகவில்லை.

அது வந்தது.இது போச்சு இந்த அஃறிணைப் பேச்சு மட்டும் சுலபமாகப் பிடித்துக் கொண்டது.

ஆகா அறுபதா!உடனே ஆஜிப் பாட்டியோடு எல்லோரும் கான்ஃபரன்ஸ்.

புரட்டாசி மூல நட்சத்திரத்தன்று தான், தன் பெண்டாட்டிக்குத் திருமாங்கல்யம் வாங்கிடத் தரமுடியும்,ஆனால் கட்டாயம் மணையில் உட்கார்ந்து மந்திரம் எல்லாம் சொல்ல நேரம் கிடையாது என்று தீர்மானமாகச் சுண்டு என்கிற சுந்தரராஜன் சொல்லிவிட்டார்.

ஒரே சத்தம் அந்தப் பெரிய வீட்டில் அன்று.

அதெப்படி சொல்லப் போச்சு இந்த மாதிரி? ஆயுஷ்ஹோமம் செய்ய வேண்டாமா.குழந்தைகளுக்கு நல்லதாச்சே? ம்ஹூம் எந்த அஸ்திரமும் பலிக்கவில்லை.

என் கமலா எனக்கு பலம் வேற ஒண்ணும் வேண்டாம் என்று விட்டார்.

கமலம்மாவும் பதிக்கேத்த பத்தீஇ. பாவம் மாமாவைக் கஷ்டப் படுத்த வேண்டாம். மத்தபடி ஜமாய்ச்சுடலாம் என்று தீர்மானம்.

ஒரு பட்டாளம் ஸ்ரீபார்த்தசாரதி கோவிலுக்குப் போய்

ஒரு தளிகைச் சர்க்கரைப் பொங்கலும் அரைத் தளிகை பிளியோதரையும்,கால் தளிகை (ஸ்பெஷல்) பொங்கலும் சொல்லி விட்டு,பெருமாளுக்கும் தாயாருக்கும் நிலமாலை ஏற்பாடு செய்துவிட்டு

வந்தது.

இன்னோரு கும்பல் புடைவைக் கடை (எல்லாம் நம்ம ராயப் பேட்டா நல்லிதான்)க்குப் படையெடுத்தத.

இன்னோரு கூட்டம் ஆசாரியைக் கூப்பிட்டு அவரோடு உட்கார்ந்து

நான்கு கிராம் தங்கக் காசுகள்(லக்ஷ்மி பொறித்தது) எல்லாப் பேரன்,பேத்திகளுக்கும் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டது.

இத்தனை கூட்டம்னு எப்படிச் சொல்கிறேன்னு பார்க்கிறீர்களா. திரு.சுந்தரராஜனுக்கு மூன்று சகோதரகள் இரண்டு சகோதரிகள். அவர்கள் எல்லோருடைய புத்திரச் செல்வங்களும் இந்த முக்கியமான ஃபங்க்ஷனில்

படு உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.

எங்கள் பழைய வீட்டில் கலயாணக் கூடம் என்று ஒரு பெரிய

அறை இருக்கும். நான்கு உயரமான தூண்கள்.

அதற்கு நடுவில் பித்தளை சங்கிலிகளில் தொங்கும் அழகான ஆறடிக்கு ஒண்ணரையடி அகலத்துக்கு ஒரு ஊஞ்சல். ஆகா.என்னமா இருக்கும் அந்த வழ வழா ஊஞ்சல்.

பாட்டிக்கு மத்தியானத் தூக்கத்துக்கும்,எங்களுக்குச் சாயந்திர நேர அரட்டைக்கும்,

சில பெரியவர்களுக்குச் சாப்பாட்டு மேஜையாகவும் அது பயன்படும்.

அந்தத் தூண்களைச் சுற்றி மாவிலை கட்டி, பூச்சரம் தொங்கவிட்டு,

அம்மாவுக்க்கு கத்திரிப்பூ கலரில் இரட்டைப்பேட்டு ஒன்பது கஜம் புடவை, நல்ல கனமான சங்கிலியில் கோத்த திருமாங்கல்யாம்,

மாமாவுக்கு டில்லி சென்று முக்கியப்பட்டவர்களைப் பார்க்கும்போது தோதாகப் போட்டுக் கொள்ள ஒரு புஷ்கோட்(சஃபாரி மாதிரி)

ஆஜானுபாகுவாக 6'2'' மாமாவும்,பக்கத்தில் சிரித்த முகத்தோடு கொஞ்சமே குள்ளமாகக் கமலம்மாவும் அந்தக் கூடத்தில் மாலைகள் கூடப் போட்டுக் கொள்ளாமல் வெகு சந்தோஷமாக நின்ற காட்சி போன வாரம் என் நினைவில் நின்றது.

வழி நடத்தும்,காக்கும் பெரியவர்களுக்கு என் வணக்கங்கள்.




32 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....
மனக்கண்ணில் காட்சி அற்புதமா இருக்கு.

'கொடுத்து வைத்தவள் நீயே......'

பாடிக்கிட்டு இருக்கேன்ப்பா:-))))

கோவி.கண்ணன் said...

வல்லியம்மா,

60 வயசில் நினைச்சுப்பார்த்தால் கடந்துவந்த வாழ்க்கை கன நேரத்தில் கரைந்தது போல் இருக்கும் போல, நினைவுகள் தான் கண்ட பலன் !

Radha Sriram said...

நல்ல விவரம்.:)உங்க அறுபதுக்கு மாமியார் மாமனார் அறுபதை நினைச்சு பாத்தீங்களோ??அவங்க ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு..sixties are the new fifties......அப்டீங்ராங்களே இப்பெல்லாம்??:):)

வல்லிசிம்ஹன் said...

அது என்னவோ உண்மைதான் துளசி.
உள்ளத்தில் வலிமை,உடலில் வலிமை இவை இரண்டும் என் மாமியார்,மாமனார் கிட்ட இருந்தது.

அத்தோடு பொறுமை.அம்மாவைப் போல மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம்.
உங்க அறுபதாம் கல்யாணம் நல்லா நடத்திடலாம்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கண்ணன்.
கரைந்தது என்னவோ நிஜம். ஆனாலும் நல்ல நினைவுகளை மட்டும் பொக்கிஷப் படுத்திக் கொண்டால் நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகுத் தண்ணீர் இனிக்குமே அதுபோல சுவையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராதா.
அசை போடுவது எப்பவுமே எனக்குப் பிடிக்கும்.
இப்ப கேட்கணுமா.
more time in hand and people to read(all the friends).
I think I am beginning to live right back from my twenties:)
நன்றிம்மா.

இலவசக்கொத்தனார் said...

போட்டோ இல்லையா? இப்படி எழுதின பின்னாடி அது எதுக்குன்னு எல்லாம் கேட்கக்கூடாது! :))

நானானி said...

நான் என்னவோ உங்க அறுபதாம்கல்யாண வைபோகங்கள் பற்றி
என்று நுழைந்தேன். ஆனால் உங்க மாமனார் 60-ஆம் கல்யாணம் பற்றி அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள், வல்லி! பழையகால விசேஷங்களின்
கோலாகலமே தனிதான்.
நல்ல மணமான, வாசமான கொசுவத்தி!
என்னோட கொசுவத்தியும் புசுபுசு என்று
சுத்தவாரம்பிக்கிறது.

ambi said...

சஞ்சயன் மாதிரி அப்படியே பார்த்த காட்சியை விவரித்து விட்டீர்களே, சூப்பர். :))

வல்லிசிம்ஹன் said...

போட்டோ இருக்கிறதுமா கொத்ஸ்.
நெகடிவ் இல்லை. அதனால எப்படி அதை இங்கே போடறதுன்னு தெரியவில்லை:)
வயசானா மெமரி பவர் நிறைய இருக்கும்:))

வல்லிசிம்ஹன் said...

ஆஹாஆஅ நானானி உங்க ஷஷ்டிஅப்த பூர்த்தி படத்தோட போடுங்க. நல்லா இருக்கும். வெயிட்டிங் வெயிட்டிங்..

வல்லிசிம்ஹன் said...

அம்பி,நாம் யாரும் இன்னும் ரவியோட பாரதக் கதையிலிருந்து வெளில வரலியோ:)
நன்றிம்மா.
சஞ்சயனுக்குப் பெண் நேம் என்ன?சஞ்சயிகானு வச்சுடலாமா:))

கிருத்திகா ஸ்ரீதர் said...

போட்டோ இல்லாட்டியும் மனக்கண் முன்னாடி அத்தனையும் பார்த்த திருப்தி இருக்கு. ரொம்ப நன்றி தெரிஞ்சவங்களா இருக்குமோன்னு மனசு தேட ஆரம்பிக்குது.

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா, இன்னும் எங்க மாமியார்,மாமனார் லவ் ஸ்டோரி விட்டுப் போச்சு.:)
அதையும் எழுதி இருக்கணும்.

இந்தக் குடும்பம் கிட்டத்தட்ட 90 வருடமா இதே தெருவில் தான் இருக்கிறார்கள். நீங்களும் சென்னை மைலாப்பூரா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சென்னைதான் ஆனால் மயிலாப்பூர் இல்லை.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ம்ம்ம் படிக்கும் போதே நினைச்சேன் அப்படி ஒன்னு இருக்கும்னு அதையும் எழுதிடுங்கோளேன்....

Geetha Sambasivam said...

வல்லி, ரொம்பத் தாமதமாய்ப் பார்க்கிறேன் இந்தப் பதிவை, இப்போத் தான் முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், அருமையான காட்சியைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். உங்கள் 60-ம் பிறந்த நாள் பற்றியும் இந்தப் பதிவுலகக் கண்ணன் மூலம் தெரிந்து கொண்டேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு வல்லி.

மெளலி (மதுரையம்பதி) said...

உங்கள் மனதில் பதிந்த நிகழ்ச்சி போல..அப்படியே ஏதோ நேரே பார்க்கற மாதிரி இருந்தது....மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா வரணும். இன்னும் எழுதி இருக்கலாம். நலங்கெல்லாம் வைத்தது. ஒரே சிரிப்பு தான். எப்ப வந்த என்னப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி, வெகு இனிமையான நாட்கள் அவை. மனதில் பதிவதில் அதிசயமே இல்லைம்மா.

manjoorraja said...

முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், தாமதமாக வந்திருக்கிறேன் என பின்னூட்டங்களை பார்க்கும்போதே தெரிகிறது. அருமையான காட்சியைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மஞ்சூர் ராசா,.

முத்தமிழிலும் இதைப் பதியலாம் என்கிற யோசனையே பிறகுதான் வந்தது.
அதனால் நீங்கள் தாமதமாக வந்ததாக எண்ண வேண்டாம்.

இன்னும் நிறைய எழுதலாம்.நேரமும் எண்ணமும் தான் வேண்டும்.:)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//''இப்பத்தான் பிஎஸ் ஹைஸ்கூலில் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள உனக்கு அறுபது ஆகிறதே மாமா'' என்று என் மாமியார் தன் கணவரிடம்,என் மாமனாரிடம்சொல்வதை நான் காதில் போட்டுக் கொண்டது 1972ஆம் வருஷம் புரட்டாசி மாதம்.//

மறக்கமுடியாத வார்த்தைகள்!

உணர்வுகளால் பின்னப்பட்டது!!

அழகான வாழ்வின் அடையாளம்!!!

குழந்தை உணர்வு வெளிப்பட்டிருக்கிறது.

நல்ல பதிவு.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜோதி.

அவர்கள் வாழ்நாட்கள் முழுவதும் அரட்டையும் வாக்குவாதங்களும் மோதுதலும் இருந்தாலும் அந்த நட்பு
கடைசி வரை இருந்தது.
அருமையாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

நன்றிம்மா.

cheena (சீனா) said...

சகோதரி வல்லி,

அறுபதுக்கு அறுபது என்றவுடன் எதிர்பார்த்தது தங்களின் அறுபதை.

மாமனார் மாமியார் அறுபதைப் போட்டு ஜமாய்த்துவிட்டீர்கள்

அருமை அருமை

கோபிநாத் said...

சாரி வல்லிம்மா....கொஞ்சம் லேட்டு ;))


\\கீதா சாம்பசிவம் said...
வல்லி, ரொம்பத் தாமதமாய்ப் பார்க்கிறேன் இந்தப் பதிவை, இப்போத் தான் முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், அருமையான காட்சியைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
\\

தலைவிக்கு சொன்னதற்க்கு ஒரு ரீப்பிட்டே :))

இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல...அப்படியே கூட இருந்தாற்போல் இருக்கு ;)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சீனா,

உங்க பெயர் ரொம்பப் பழக்கப் பட்ட மாதிரி இருக்கே என்று யோசித்தேன்.
பின்ன இருக்காதா. ஒரு மாமா, ஒரு பெரியண்ணா, ஒரு நண்பர்.
இப்ப நீங்க இந்தப் பேரில:)

பெரியவர்களை நினைக்க நினைக்கத் தானே கொஞ்சமாவது பக்குவம் வருகிறது.

அதனால் தான் எழுதினேன். மனம் நிறைந்த நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபிநாத்.
நல்வரவு:)

நானானி said...

வல்லி!
எங்களோட சஷ்டியப்தபூர்த்தி திடீரென்று கொண்டாட முடிவாகி எங்கள் அன்பு தெய்வம் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் நடந்தது. கோவிலுக்குள் என்பதால் படமெல்லாம் எடுக்க அனுமதியில்லை. வெளியில் வந்து ஆசீர்வாதம் வாங்கவும் கொடுக்கவும் நிகழ்ந்தவைகளைத்தான்
படமெடுக்க முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

முருகன் சன்னதியிலா. என்ன ஒரு ஆசீர்வாதம் நானானி.
படம் இல்லாட்டாலும் நல்ல நினைவுகள் தங்இ இருக்கும். அதுதான் முக்கியம்.

Geetha Sambasivam said...

marupadiyum padikka vanthen valli, arumai, rombave arumai! ethanai murai padichalum ninaikkave arumai! romba nanri valli!

வல்லிசிம்ஹன் said...

கீதா, மறுபடியும் நன்றி. இதோ இன்னோரு ஏப்ரில் வந்தாச்சு நமக்கும் எழுத வந்து இன்னுமொரு வருஷம் ஓடிப்போச்சு.
இந்த அன்பும் நட்பும் நீடிக்கணும்.