Blog Archive

Tuesday, February 12, 2008

திண்டுக்கல்,சென்னை .. மதுரை1965



திண்டுக்கல்லை விடும் நேரம் வந்தது. 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல் வெளிவந்த நேரம்.:)
கேட்க வேண்டுமா சோகத்துக்கு:)
பள்ளி ஓஏடியில் மாண்டிசோரி குழந்தைகள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி(கைதி கண்ணாயிரம் படம்)பாட்டுக்கு வண்ணமயமாக ஆடினார்கள்.
எட்டாம் வகுப்பினர் அடுத்த வீட்டுப் பெண் படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனம்!
பின்னணியில் அப்போது பிரபலமான கம்செப்டம்பர் இசை.
விளையாட்டுப் பந்தயங்கள் நடைபெறும் திடலுக்கு அவ்வப்போது வந்து உற்சாகப் படுத்தும் நாட்கள், மேடையில் பரிசு வாங்கும் நாட்கள் இதைத் தவிர நெருக்கத்தில் பார்க்க முடியாத தலைமை ஆசிரியை
ஒவ்வொருவரையும் சந்தித்து ஆசீர்வதித்தார்.தமிழ்,
கணக்கு, புவியியல், ஆங்கிலம், விஞ்ஞானம் என்று எல்லாப் பாடங்களையும் போதித்த மிஸ்.க்ளாரா ஜேம்ஸ், மிஸ் நவமணி,மிஸ்லீலா செல்லையா,தமிழ் ஆசான் திரு ரெட்டியார் என்று அனைவரும் கூடி அமர்ந்திருக்க, அன்றைக்குப் புதிதாக ஒரு வேடம் நாங்கள் எல்லோரும் புனைந்தோம்.
பழக்கமே இல்லாத பட்டுப் புடவை அணிந்தோம்:)
பதினாறு வயது பொம்மைகள் நிற்பது போல அந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் அது ஒரு பொக்கிஷம்.
இந்ததோழிகளில் சிலரைக்
காலங்கள் கடந்த பிறகுச் சந்திக்க முடிந்தது.
ஒருவர் ரிசர்வ் வங்கியில் பணி செய்கிறார். ஒருவர் ஜில்லா கலெக்டர் ஆனதாகக் கேள்விப்பட்டேன். இன்னோரு
அமைதியான தோழி, கணவன் குழந்தைகள் நலனுக்காகவே பிறவி எடுத்தது போல விருது நகரில் இருக்கிறாள்.
என்னை விட வயதில் சிறியவர்கள் இருவரும் அறிமுகம் ஆனார்கள்.ஒருவர் நம் வலை உலகப் பத்திரிகையாளர் அருணா ஸ்ரீனிவாசன்.
இன்னோருவர் எனது ஓரகத்தியாகவே வந்துவிட்டார்.
அப்போது திண்டுக்கல்லில் கல்லூரி கிடையாது.
அதனால் படிக்க ஆசைப்படுபவர்கள் திருச்சிக்கோ மதுரைக்கோ போக வேண்டும்.
பரீட்சைகள் முடிந்து மதிப்பெண்களும் வந்த பிறகு,
அப்பாவுக்கு என்னை எங்கேயும் அனுப்ப மனமில்லை.
சென்னையிலிருந்த எனக்கு என் முதல் கைக்கடிககரம் கொடுக்க வந்த மாமா அப்பாவுக்கு என்னை நன்றாகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னதால்,
அம்மாவும் நானும் ரயில் ஏறினோம், அது ஒரு ஜூன் மாதம் 19ஆம் தேதி என்று நினைக்கிறேன்.
மறுநாள் அம்மா என்னை அழைத்துக் கொண்டு எதிரரஜ் கல்லூரிக்கு வந்தால் அனேகமாக அட்மிஷன் முடிந்த நிலையில்,
எங்கள் இருவரின் முக தாட்சண்யத்துக்காகவும் ப்ரின்சிபல் மிஸ் .மேத்யூஸ் கடைசி வகுப்பில் இடம் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.:)
அந்த மாதிரி இப்போதெல்லாம் குரூப் இருக்கா என்று கூடத் தெரியாது.
சிபாரிசு எதாவதுஎன்றால் என் ஆங்கில மதிப்பெண்கள் மட்டுமே!!
(தத்துவம்,தர்க்கம்?)
(அட்வான்ஸ்ட் ) ஆங்கிலம், இயற்கை விஞ்ஞானம்(பாடனி சுவாலஜி)
இன்றளவும் எனக்கு இந்தக் குறிப்பிட்ட காம்பிநெஷன் புரியவில்லை.
ஏற்கனவே நிறையப் பேசி பேசி எல்லாரையும் அறுப்பது வழக்கம். இதில லாஜிக் வேறு கேட்கணுமா;)
ரொம்ப நாளைக்கு கண்ணில பட்டவர்களையெல்லாம் ,
வகுப்பில் படிக்கும் வரிகளைச் சொல்லி அவர்களைக் கண்டபடி விரட்டி இருக்கிறேன்:)
அம்மா வழிப் பாட்டி நான் எப்படித் தெருவில் நடக்கிறேன், அக்கம்பக்கம் பார்க்கிறேனா என்றேல்லாம் கணிக்க அவ்வப்போது வீட்டை விட்டு வாசல் வரை வந்து பார்ப்பார். பாவம்.
நமக்கு அப்போது பொது அறிவு ஏன் இப்பவும் போதாது.
சினேகிதியோடு ஒரே போல நடந்து பஸ் நிறுத்தம்.
கையில் புத்தகங்கள், தயிர் சாத டிபன் பாக்ஸ்:)
பாட்டிக்கு கண்மை இடுவது கூடப் பிடிக்காது;))
எப்படியோ நானும் ஒரு வருடம் கல்லூரிக்குப் போனேன்.
நடுவில் அப்பாவை மதுரைப் பசுமலைக்கு மாற்றிவிட்டார்கள்.
மீண்டும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சியான அனுபவம்.
அது என்ன மாயம், ஏன் இந்த உணர்வு எல்லாம் கேட்க முடியாது.
மதுரை,மீனாட்சி,மல்லி,மக்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சின்னவன் சேதுபதி பள்ளியில் சேர்ந்தான்
நானும் வெற்றிகரமாக பியூசியை(இரண்டாம் க்ளாஸ்) முடித்துவிட்டு
மேற்படிப்புக்கு லேடி டோக்கா,ஃபாத்திமா கல்லூரியா என்ற கனவுகளோடு பசுமலைக்கு வந்து சேர்ந்தேன்.
மக்களே!
இனி வருவதெல்லாம் அங்கங்க எழுதி வைத்து இருக்கிறேன்.:))
இதோ லின்க்.
பதினெட்டு வருட வாழ்க்கை உங்களுக்குப் பாகம் பாகமாக வந்து சேர்ந்தது. ஏன் எழுதவேண்டும் என்கிற கேள்வியைவிட,
ஏன் கூடாது? என்ற நினைப்புதான். வரும் அடுத்த தலை முறைக்காக.
தமிழ் படிக்கும் பேரனுக்காக:)
கடந்ததை நினைத்தால் இப்போ வாழும் வாழ்க்கை இன்னும் மதிப்பு கூடும் என்ற நினைவும்தான்.
எதையும் மறக்கக் கூடாதில்லையா...
நன்றி.
மங்களம் சொல்லிடறேன்!!!













22 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

(அட்வான்ஸ்ட் ) ஆங்கிலம், இயற்கை விஞ்ஞானம்(பாடனி சுவாலஜி)
இன்றளவும் எனக்கு இந்தக் குறிப்பிட்ட காம்பிநெஷன் புரியவில்லை.

அட நானும் இதே மாதிரி குருப்தான் அட்வான்ஸுடு ஆங்கிலம், மேத்ஸ் & காமர்ஸ் அதே மாதிரி எனக்கும் ஜூன் 16 ஒரு முக்கிய நாள். அதை அப்புறம் சொல்லுகிறேன்



என்ன வல்லியம்மா சட்டுன்னு மங்களம் பாடிட்டீங்க? நல்லாத்தானே போயிகிட்டு இருந்தது. இன்னும் சிங்கத்தைப் பற்றி ஒன்னுமே சொல்லலை. ஓ அதெல்லாம்
இரண்டாம் அத்தியாயத்தில் வருமா
அட நான்தான் பஷ்டு

துளசி கோபால் said...

என்னப்பா அதுக்குள்ளே மங்களம்.
ஊஹும்....ஒத்துக்க முடியாது, இன்னும் கொஞ்சம் நீட்டினால்தான் ஆச்சு.

பாகம் 2 ன்னு தொடரலாம்:-)

பாச மலர் / Paasa Malar said...

//மீண்டும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சியான அனுபவம்.
அது என்ன மாயம், ஏன் இந்த உணர்வு எல்லாம் கேட்க முடியாது.
மதுரை,மீனாட்சி,மல்லி,மக்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்//

அது என்னவோ இந்த உணர்வு மதுரை என்றதும் வந்து விடுகிறது..கொஞ்ச நாள் இருந்தவர்களுக்குக் கூட..

மலரும் நினைவுகளின் நல்லதொரு பதிவு..

லின்க் சமாச்சாரத்தையும் படித்து விட்டு வருகிறேன்..

பாச மலர் / Paasa Malar said...

//அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.//

இது ஏன் தான் எல்லா அப்பா அம்மாவும் இப்படித்தானோ? என் பெண்ணுக்குக் கல்யாணமாகும் போது நானும் இப்படித்தானோ?

//சரி என்று நிமிர்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.
அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.
அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா//

நியாயமான பயம்..

நல்ல மலரும் நினைவுகள்..

உண்மைத்தமிழன் said...

வல்லியம்மா.. இவ்ளோ சீக்கிரம் டக்குன்னு முடிச்சிட்டீங்களே..

நிறைய எழுதியிருக்கலாம்..

பரவாயில்லை.. உங்களுக்கு சுபமங்களம் உண்டாகட்டும்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.

ஜூன் 16 என்ன நாள்.வைகாசிக் கல்யாண நாள்???
இப்போது, ரிச்சர்ட் செகண்ட் அப்போது படிச்சது ஞாபகம் வரது. கல்லூரியிலும் நல்ல ஆசிரியர்கள்.

அருமையான நாட்கள்:))
சிங்கத்தைப் பத்தி எழுதணும்னால் ஒரு அத்தியாயம் போறாது:00))

இன்னும் கொஞ்சம் பக்குவம் எனக்கு வர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமா துளசி ஆமாம்.

இன்னும் மெகா சீரியலாப் போயிடும்.

இப்பவே ஆளைவிடுனு ஆளுக்கு ஆளு நிம்மதிப் பெருமூச்சு விடறது காதில விழலியா:)
அதுக்கென்னப்பா அப்புறமா எழுதினாப் போகிறது.
டார்ச்சர் சேம்பர் எப்பவுமே இருக்கும்!!
அதென்னப்பா பொதி?? செந்தமிழ் ஃபார் பண்டில்?????

வல்லிசிம்ஹன் said...

பாசமலர் மதுரைக்கு அப்படி ஒரு மகிமை. யாரும் மறக்க முடியாது.
மறுக்கவும் முடியாது.
கொஞ்சநாள்
நிறைய நாளெல்லாம் கணக்கு கிடையாது.:)

வல்லிசிம்ஹன் said...

தமிழன்,
கதையெல்லாம் சுருக்கச் சொன்னால் தான் பிடிக்கும் இதுவே கொஞ்சம் நீட்டி முழக்கிவிட்டேனோனு பயம் வந்து விட்டது.:)0

வல்லிசிம்ஹன் said...

பாசமலர், மாமனாரைப் பார்த்துதான் மாப்பிள்ளை என்று நினைத்துவிட்டேன்:)

பெற்றோர் அதுவும் பெண்ணைப் பெற்றவர்கள் அந்தக் காலத்தில் இப்படித்தான் அர்த்தமில்ல்லாமல் பயந்தார்கள்.
இப்போ எவ்வளவோ நிலைமை மாறிவிட்டது!!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

அடடா, அதுக்குள்ள மங்களமா?.
ஒத்துக்க மாட்டேன்....

அப்படின்னா, உங்களது மதுரை அனுபவங்கள் தனி தொடரா வருமா? :-)

கோபிநாத் said...

\\துளசி கோபால் said...
என்னப்பா அதுக்குள்ளே மங்களம்.
ஊஹும்....ஒத்துக்க முடியாது, இன்னும் கொஞ்சம் நீட்டினால்தான் ஆச்சு.

பாகம் 2 ன்னு தொடரலாம்:-)\\\\

ரீப்பிட்டேய்ய்ய்

சிக்கிரம் மதுரை தொடரை எழுதுங்கள்...உங்கள் அனுபவங்களில் பல படங்கள் இருக்கு அது எல்லாம் எங்களுக்கு வேண்டாமா!!

விரைவில் எழுதுங்கள் வல்லிம்மா ;)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
படம் போட்டுக் கதை சொல்லணுமா:)

சரி செய்யலாம்.மதுரை, திருச்ச்சி,சேலம், கோயம்பத்தூர் என்று போகும் பராவாயில்லையா.!!!

வல்லிசிம்ஹன் said...

மௌலி,
மதுரை அனுபவங்கள் தனியா எழுதணுமா!!!

ம்ம் சொல்லலாம்.
எங்கவீட்டுப்பிள்ளை,பஞ்சவர்ணக்கிளி,
இதயக்கமலம் கல்யாணத்துக்கு முன்னால் பார்த்தேன்.
கலயாணத்துக்கு அப்புறம் மகராசியோ முகராசியோ ஏதோ ஒரு படம் பார்த்தேன்.

டிவிஎஸ் ஹாஸ்பிடலில் எங்கள் முதல் தவப்புதல்வன் பிறந்தான்.
அதே நாளில் அபிஅப்பாவும் மாயவரத்தில் பிறந்தார்:))))

நிறைய இருக்கு. யோசித்து எழுதலாமா:)))

Geetha Sambasivam said...

//சின்னவன் சேதுபதி பள்ளியில் சேர்ந்தான்//

எந்த வருஷம்?

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
1965 ஜூன் மாதம் சேர்ந்தான். அவனுக்கு அப்போது வயது 121/2.

பெயர் என்.ரங்கன்.
உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அங்கே படித்தார்களா...

Geetha Sambasivam said...

//உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அங்கே படித்தார்களா...//

அப்பா அங்கே தான் 82 வரை ஆசிரியராக இருந்தார், அதான் கேட்டேன், 65 என்றால் 64-ல் முதல் வருஷமே அண்ணா முடித்துவிட்டார், தம்பி அப்போ சின்ன கிளாஸ் தான் படிச்சான், அவனுக்குத் தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
உங்க ஆசிரியரா.

இப்பப் புரியறது உங்களோட வார்த்தைகளின் திண்மை.

அப்போ உங்க அண்ணாவுக்கு என் வயசாயிருக்கணும்:)
கணக்கு கணக்கு:)

மெளலி (மதுரையம்பதி) said...

//நிறைய இருக்கு. யோசித்து எழுதலாமா:)))//

இன்னைக்குத்தான் இந்த பதிலைப் பார்த்தேன். கண்டிப்பாக எழுத வேண்டும். அதிலும் டி.வி.எஸ் ஹாஸ்படல், அதன் நிர்வாக சிறப்பு எல்லாம் நீங்க எழுத வேண்டும்.
(நானும் அந்த ஆஸ்பத்திரியில் பிறந்தவந்தான் , அவர்களது ஸ்கூலில் படித்து, அவர்கள் நிர்வாகத்தில் சில காலம் வேலையும் செய்திருக்கிறேன். :) )

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.

டி.வி.எஸ் என்று தனி பதிவு போடணும் அப்போ!!

எங்களுக்கு 1977 வரை இந்த பந்தம் இருந்தது. அனைத்து நன்மைகளையும் கிடைக்கப் பெற்றோம்.

சிங்கமும் சம்பந்தப் பட்டிருக்கிறதனால் சரியாக எழுத வேண்டும்.
முயற்சிக்கிறேன்

Geetha Sambasivam said...

//உங்க ஆசிரியரா.//
எனக்கு ஆசிரியர் இல்லை, வல்லி, என்னோட அப்பா சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். உண்மைதான், என்னோட அண்ணாவுக்குக் கிட்டத் தட்ட உங்க வயசு தான்! :))))))))))))

வல்லிசிம்ஹன் said...

சாரிப்பா.கீதா,
உங்க அப்பா ஆசிரியரானு கேட்டதில,

நடு வார்த்தையைத் தட்டச்சு செய்ய விட்டுப்போச்சு. அதனால் என்ன ஒரு பின்னூட்டம் கூடியது,ஒரு எண்ணம் சேர்ந்தது:)